ஊமையின் காதலை கண் தெரியாதவளிடம் எங்ஙனம் உரைப்பது நாஸ்தென்கா…!!!

*

அந்தோ…நாஸ்தென்கா…நாஸ்தென்கா!!!

சுற்றிலும் நீர் இருந்தும்

கடலின் நடுவே தாகத்தோடு நிற்கும் கடலோடியைப் போல்

ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்

ஊமையாய் நிற்கின்றேன் நாஸ்தென்கா…!!!

*

கடலோடியின் தாகம் அறியாது

அவனை மெதுவாக சுமந்துச் செல்லும் கடலினைப் போல்

என் மௌனத்தை அறியாது

என் கைப்பற்றியே என்னை அழைத்துச் செல்கின்றாய் நாஸ்தென்கா நீயும்…!!!

*

தொலைவில் மின்னும் நட்சத்திரங்களாய்

உன் காதல் உன் கண்ணில் மின்னிக்கொண்டு இருக்கின்றது நாஸ்தென்கா…

அதனைக் கண்டவாறே

நானோ தேயும் நிலவாய் அருகே உருகிக் கொண்டிருக்கின்றேன்…

இருவரையும் சுமந்துக் கொண்டு இரவும் கரைந்துக் கொண்டே இருக்கின்றது…!!!

*

ஊமைகளின் வாழ்க்கை கொடுமையானது நாஸ்தென்கா…!!!

காதலிக்கும் கரைக்கு ஆர்ப்பரித்து அலையினை அனுப்பும் கடலும்

தன்னைக் காதலித்து வரும் கடலோடிக்கு மௌனத்தையே தருகின்றது நாஸ்தென்கா….

மௌனத்திற்கு எதிராய் தமிழ் கூட பயன் இல்லையே நாஸ்தென்கா

என் செய்வேன் நாஸ்தென்கா நானும்…ஊமையாவதைத் தவிர.

ஆம் நாஸ்தென்கா…ஊமைகளின் வாழ்க்கை கொடுமையானது தான்!!!

*

ஆம் நாஸ்தென்கா…!!!

இது உன் பெயர் அல்ல தான்…!!!

இருந்தும் பெயர்களை நீ கடந்து நாட்களாகி விட்டன நாஸ்தென்கா…

இன்று

அனைத்துப் பெயர்களும் உன்னையே குறிக்கும் பொழுது

பெயர்களில் என்ன இருக்கின்றது நாஸ்தென்கா…!!!

*

விடை தெரியவில்லை எனக்கு நாஸ்தென்கா…!!!

நீயே சொல்…

ஊமையின் காதலை கண் தெரியாதவளிடம் எங்ஙனம் உரைப்பது நாஸ்தென்கா…!!!

பி.கு:

பியோதார் தாச்தோவஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் என்ற புத்தகத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு சிறு முயற்சி…!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு