இன்று தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு புறம் ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சொந்த இடத்திலேயே அகதிகளாய் வாழும் நிலை இருக்கின்றது.

மறுபுறமோ, கடலிற்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் உயிர்கள் கேட்பார் எவருமின்றி பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...கூடங்குளத்துப் போராட்டங்களிலும் சரி, முல்லைப் பெரியார், காவேரி நதி நீர்ப் பிரச்சனைகளிலும் சரி தமிழன் அவனது உரிமையினை இழந்தே நிற்கின்றான். வற்றிப் போகும் ஆறுகள், நலிந்துப் போகும் சிறு தொழில்கள், மறைந்துக் கொண்டிருக்கும் தமிழ் கலைகள், வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் விவசாய நிலங்கள் என்று தமிழகம் இன்று ஒரு அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

காரணம் என்னவென்றுப் பார்த்தால் விடையாய் கிட்டுவது - தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஏன் ஒற்றுமை இல்லை என்றுப் பார்த்தால் அதற்கு காரணியாக விளங்குவது சாதிகள்...குறிப்பாக சாதி ஏற்றத் தாழ்வுகள். இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகளின் மூலமாகத் தான் தமிழன் இன்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அவனுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றான்.

இந்த சாதி ஏற்றத் தாழ்வு என்ற ஒரு கொடிய நோய் அவனை பலமாக ஆட்க்கொண்டு இருக்கின்றது. அந்த நோயின் காரணமாக சிலர் தங்களைப் பிறப்பால் உயர்ந்த சாதி என்றுக் கூறி மற்றவர்களை பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று வைத்து இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒன்றாக இருப்பார்கள் என்று நாம் எண்ணினால், அவர்களோ நான் தாழ்த்தப்பட்டவன் தான் ஆனால் இவன் என்னை விடத் தாழ்த்தப்பட்டவன் என்று அவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளாய் பிரிந்து அடுத்தவனை ஒடுக்குவதில் சுகம் கண்டுக் கொண்டு இருக்கின்றனர். அந்தளவு அந்த சாதி ஏற்றத் தாழ்வு என்னும் நோய் இங்கே பரவி இருக்கின்றது.

இப்பொழுது அந்த நோயினைப் பற்றித் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வரலாற்றினைப் பற்றியும் சமயங்களைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு தமிழர்கள் என்பவர்கள் ஒரு தோற்ற இனம்....அதில் மாற்றுக் கருத்தே இல்லை. வெறும் ஈழத்தில் பெற்றத் தோல்வியினை வைத்து மட்டுமே நாம் இதனைக் கூறி விடவில்லை. தமிழர்களின் வரலாற்றினைப் பார்த்தால் இராசேந்திர சோழனின் காலத்திற்குப் பின்னர் மாபெரும் தமிழ் மன்னர்கள் இங்கே எழவே இல்லை. மேலும் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இருந்து தெலுங்குப் பேரரசான விஜயநகர பேரரசின் தமிழகத்தின் பெரும் பகுதி வந்து விட்டு இருந்தது. அதாவது தமிழர்கள் தோற்று இருந்தனர்.

ஒரு போரில் தோற்ற இனத்திடம் என்ன இருக்கும்? அடிமைத்தனம் மட்டுமே இருக்கும். வென்றவர்கள் தோற்றவர்களின் அனைத்து உரிமைகளையும் சரி உடைமைகளையும் சரி எடுத்துக் கொண்டு அவர்களை அடிமையாக்கத்தானே செய்து இருப்பர்? இன்று ஈழத்தில் அவ்வாறு தானே நிகழ்ந்து இருக்கின்றது...தோற்றவர்கள் நிலங்கள், உரிமைகள் என்று அனைத்தையும் இழந்து ஒடுக்கப்பட்டு தானே இருப்பர். சரி இப்பொழுது ஒரு கேள்வி,

இன்று ஈழத்திலே போர் நடந்து முடிந்து இருக்கின்றது. இப்பொழுது அங்கே மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கும்?

முதல் நிலையில் போரில் வென்ற சிங்களவர்கள் இருப்பர்.
இரண்டாம் நிலையில் காட்டிக் கொடுத்த எதிர் அணியினைச் சார்ந்த கருணா போன்றோர் இருப்பர்.
மூன்றாம் நிலையில் 'யார் ஆண்டால் என்ன' என்ற மனநிலையில் இருக்கும் தமிழ் மக்கள் இருப்பர்.
நான்காம் நிலையில் சிங்களவர்களை எதிர்த்து வீரத்துடன் போர் புரிந்த வீரர்கள், தலைவர்கள் இருப்பர்...மிகுந்த ஒடுக்கப்பட்ட நிலையில். இவர்கள் மீண்டும் எழவே கூடாது என்பதில் முதல் நிலையில் இருப்பவர்கள் உறுதியாய் இருப்பர் தானே.

ஈழத்தில் நிலை இவ்வாறு தானே இருக்கின்றது? ஏன்... எங்கு போர் நிகழ்ந்தாலும் நிலை இவ்வாறு தானே இருக்கக் கூடும்? இந்த நிலையில் தான் நாம் விஜயநகர பேரரசின் ஆட்சியினையும் தமிழர்களின் சாதிகளையும் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு போர் நிகழ்ந்து இருக்கின்றது...அதனில் தமிழர்கள் தோற்று இருக்கின்றனர். இந்நிலையில் தமிழர்களின் தலைவர்கள் ஒடுக்கப்பட்டு இருப்பார்களா இல்லையா? தேசத்தினை விட்டு அவர்களின் வம்சம் துரத்தப்பட்டு இருக்குமா இருக்காதா? அவர்கள் நிலையில் தாழ்த்தப்பட்டு இருப்பார்களா இல்லையா?

தாழ்த்தப்பட்டு இருப்பார்கள் தானே...அவ்வாறு தாழ்த்தப்பட்டவர்கள் மீண்டும் எழுந்து வர வாய்ப்பே கிட்டவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களாகத் தானே இருந்து வருவர்..அவர்களின் உடைமைகளும் சரி உரிமைகளும் சரி போனது போனவாறே தானே இருக்கும்?

தெலுங்கர்களிடம் அடிமையாகி உடைமைகளை இழந்த தமிழர்கள் அடுத்து ஆங்கிலேயர்களுடன் அடிமையாகின்றனர்...ஆனால் முன்பிருந்த அதே தாழ்த்தப்பட்ட நிலையில் தான் அவர்கள் இருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலைப் பெறுகின்றனர்...ஆனால் முன்னர் அவர்கள் தெலுங்கர்களிடம் இழந்த உடைமைகளும் சரி பெற்ற தாழ்த்தப்பட்ட நிலையும் சரி மாறவே இல்லை. இந்நிலையிலேயே தான் நாம் இன்று தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அணுக வேண்டி இருக்கின்றது. நிற்க...!!!

இங்கே சில கேள்விகள் எழலாம்...

1) தமிழ் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு இருப்பர் என்றுக் கூறினால்...இன்று தாழ்த்தப்பட்டோராக இருப்பவர்கள் தமிழ் அரசர்களாக இருந்தவர்கள் என்று கூறுகின்றீர்களா?

2) விஜயநகர பேரரசின் காலத்தில் தான் தமிழர்கள் தாழ்த்தப்பட்டனர் என்றால் அதற்கு முன்னர் தமிழகத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளே இல்லையா?

3) இன்று பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் தமிழர்கள் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சேர்ந்தவர்கள் என்றுக் கூறுகின்றனரே அது உண்மையா?

மேலும் பல கேள்விகள் இருக்கலாம்...அக்கேள்விகளுக்கு எல்லாம் இப்பொழுது விடையினைத் தேடுவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதனால் நாம் பல வரலாற்று விடயங்களோடு சாதிய அடிப்படைகளையும் வரலாற்றையும் காண வேண்டி இருக்கின்றது.

உதாரணமாக,

1) விஜயநகர பேரரசுக் காலத்தில் தான் தமிழ் கோவில்களில் இருந்து பெருமளவில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் கருவறையினுள் நுழைகின்றனர் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் பல இருக்கின்றன என்று நமக்குத் தெரியுமா?



 2) பள்ளர், பறையர், சானார், சக்கிலியர் என்ற சாதியினைச் சார்ந்த மக்கள் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்தனர். அதில் சானார் சாதியினைச் சார்ந்த மக்களை பார்க்கத்தகாதவர்களாக வைத்து இருந்தனர்.

அப்படி இருந்த சானார் மக்கள் தான் இன்றைக்கு சமூகத்தில் நாடார் இனமாக திகழ்கின்றனர் என்றுத் தெரியுமா?

இறைவனால் பஞ்சமர் என்று வைக்கப்பட்டு இருந்தால் எவ்வாறு அவர்கள் மாறினர்? மேலும் அவர்களை அவர்கள் சத்திரியர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனரே...அவர்கள் சத்திரியர்களாக இருந்தால் எவ்வாறு பஞ்சமராக ஆக்கப்பட்டனர்?

தமிழர்கள் சத்திரியர்களா?

3) சைவ சமயத்தின் இறுதி நாயன்மாரான நந்தனார் என்பவர் பறையர் குலத்தினைச் சார்ந்தவர் என்பதும் அவர் சைவ சமயத்தின் தலைமைக் கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்தவர் என்றக் குறிப்புகளும், அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றும் இருக்கின்றது என்பதும் தெரியுமா? அதே போல் தான் இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரும் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றும் தெரியுமா?

அவர்களின் இனம் எவ்வாறு தாழ்த்தப்பட்டு பஞ்சம வரிசைக்கு வந்தது?

விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது...!!!

தேடுவோம்...!!!


பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

8 கருத்துகள்:

நல்ல வரலாட்ட்றுப் பதிவு. வாழ்த்துக்கள்

//சைவ சமயத்தின் இறுதி நாயன்மாரான நந்தனார் என்பவர் பறையர் குலத்தினைச் சார்ந்தவர் என்பதும் அவர் சைவ சமயத்தின் தலைமைக் கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்தவர் என்றக் குறிப்புகளும், அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றும் இருக்கின்றது என்பதும் தெரியுமா?//
நந்தனர் சிதம்பரத்தில் பிராமணர்களால் எரியூட்டப்ப்ட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதையே அவர் தாமாகத் தீக்குளித்து சிவலோகம் அடைந்தார் எனக் கூறப்படுவதாகவும், நந்தனார் சிதம்பரம் ஆடவல்லனைத் தரிசித்த வாயில் கதவுகள், தீட்டுப்பட்டதால் இன்றும் அடைபட்டுக் கிடப்பதாகவும் இக்கால தமிழ் ஆர்வலர் ஒருவரின் கட்டுரையில் பார்த்தேன். ஆனால் அதற்கு ஏதாவது இலக்கிய, நூல் அல்லது கல்வெட்டும் ஆதாரங்கள் ஏதாவது'
உண்டா? திருஞரன சம்பந்தரின் தமிழ் வெறியையும், தமிழ்ப்பற்றையும் கண்டு அவரைக்கூட தீயிலிட்டுக் கொளுத்தி விட்டு, தீக்குள் புகுந்து மறைந்தார் என்றார்களாம் இதிலெல்லாம் எந்தளவுக்குஉண்மை இருக்கிறது என்பது தெரியாது.

நீங்கள் சாதியை பற்றிய பதிவு போடுவதின் நோக்கம் என்ன??? மூட நம்பிக்கை, படிப்பறிவு இல்லாமை, ஏமாத்துவது இவைகளின் வெளிபாடே இந்த சாதி மத விசயங்கள்.... இதை தீயில் விட்டு கொளுத்த வேண்டும்..... நீங்கள் இந்த பதிவை முடிக்கும் போது ஒரு சரியான முடிவுரை வுடன் முடிபிரீகள் என்று எதிர் பார்க்கின்றேன்...........

//அப்படி இருந்த சானார் மக்கள் தான் இன்றைக்கு சமூகத்தில் நாடார் இனமாக திகழ்கின்றனர் என்றுத் தெரியுமா?//

இந்த வரலாற்றை பின்பற்றி மற்ற சாதியினர் ஏன் முன்னேற மறுக்கிறார்கள்?

@பழனி.கந்தசாமி அய்யா,

//இந்த வரலாற்றை பின்பற்றி மற்ற சாதியினர் ஏன் முன்னேற மறுக்கிறார்கள்? //

அவர்கள் மறுக்கவில்லை ஐயா...அவர்களுக்கு வழிகள் சரியாகக் காட்டப்படவில்லை என்றே நாம் கூறலாம். இன்றைக்கு இருக்கும் நிலையில் அவர்கள் அரசியலில் பகடைக் காய்களாக அவர்கள் சாதியினைச் சார்ந்தவர்களாலேயே பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதை அவர்கள் உணர்ந்து உண்மையைத் தேடிச் சென்றார்கள் என்றால் நிச்சயம் பழைய மேன்மையை அடைவார்கள்.

@ Viyaasan,

//ஆனால் அதற்கு ஏதாவது இலக்கிய, நூல் அல்லது கல்வெட்டும் ஆதாரங்கள் ஏதாவது'
உண்டா? //

உங்களுக்கு அச்சான்றுகளை தர முயல்கின்றேன் அய்யா.

//ருஞரன சம்பந்தரின் தமிழ் வெறியையும், தமிழ்ப்பற்றையும் கண்டு அவரைக்கூட தீயிலிட்டுக் கொளுத்தி விட்டு, தீக்குள் புகுந்து மறைந்தார் என்றார்களாம்//

திருஞானசம்பந்தரை பற்றி பல கருத்துக்கள் உள்ளன...சைவ சமயத்தினை திசை மாறச் செய்து வேள்வி வழிபாடாக மாற்ற அவர் முயன்றார் என்றும் அவரால் தான் சைவம் தவறான திசையில் சென்றது என்றக் கருத்துக்களும் உள்ளன.

மதுரையில் 8000 சமணர்களான தமிழர்களை அரசனின் உதவியுடன் கழுவேற்றியதற்கு பதிலாக, அத்தமிழ் சமணர்களின் உறவினர்கள் திருஞானசம்பந்தரை எரித்துக் கொன்றனர் என்ற பார்வையும் உண்டு.

தமிழர்கள் சமணர்களா?

சமணம் என்பது ஒரு மதம்...அந்த மதத்தில் தமிழர்களும் இருந்தனர்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு