இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் பொழுது ஒரு வருத்தமான விடயம் கண்ணுக்கு புலனாகின்றது. அப்பக்கங்களில் சில இருட்டடிக்கப்பட்டு இருக்கின்றன. இருண்ட அப்பக்கங்களில் சிலர் மறக்கப்பட்டு கிடக்கின்றனர். சிலர் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். ஏன் சற்று உற்றுப் பார்த்தால் இந்தியாவின் வரலாறே இவ்வாறு பல இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களைக் கொண்டு தான் விளங்குகின்றது.

சரி இருக்கட்டும், இருட்டடிப்பு செய்யப்பட்ட அனைத்துப் பக்கங்களைப் பற்றியும் அவற்றின் காரணிகளைப் பற்றியும் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் நமக்கு இப்பொழுது அவற்றிற்கு நேரமில்லை. காரணம் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களில் இருந்த ஒருவர் இப்பொழுது நம்மை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கின்றார்.

அவர் பெயர் செம்பகராமன் பிள்ளை.

1891 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் பிறந்து 1934 இல் செர்மனியில் மரணம் அடைந்த இவரின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது சற்று பிரமிக்க தான் வைக்கின்றது. அப்படி என்ன செய்து விட்டார் இவர்... காண்போம்!!!.

இன்றைக்கு போராட்டம், சுதந்திர வேட்கை போன்றச் சொற்கள் நம்மிடையே வெறும் வார்த்தைகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துக் கொண்டு வருகின்றன...ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சொற்கள் தான் சிலருக்கு வாழ்க்கையாகவே இருந்து வந்தன...அதுவும் குறிப்பாக இளைஞர்களிடம்...மாணவர்களிடம்!!!

செம்பகராமனும் அப்படி ஒரு மாணவன் தான்...!!!

"வேண்டும் புரட்சி... திறமையான மக்கள் இங்கே நம் நாட்டிலேயே இருக்க அன்னியர்கள் எதற்காக நம்மை ஆள வேண்டும்...அடிமையாய் இருப்பதும் ஒரு வாழ்க்கையா?...இந்த நிலை மாற வேண்டும்...நிச்சயமாய்!!! மாற்றங்கள் தானாக என்றுமே வந்ததில்லை...எனவே நாம் தான் மாற்ற வேண்டும்...சுதந்திரத்தினை வென்றெடுக்க வேண்டும்...வருவாய் தோழனே...கடமைகள் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன" என்று சுதந்திர வேட்கையுடன் இந்தியத் தெருக்களில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த மாணவர்களின் தலைவனாய் இருந்தான் செம்பகராமன்...!!!

"பதினைந்தே வயது சிறுவன் நம்மை எதிர்த்துப் பேசுகின்றான்...செயல் புரிகின்றான்...வெறும் பேச்சாக இருந்தால் கூட விட்டு விடலாம்...ஆனால் இவன் பேச்சு மக்களை கவருகின்றதே...மக்கள் ஒன்று சேருகின்றார்களே...இவனை இப்படியே விட்டால் நமக்கு பின்னால் பிரச்சனைகள் எழலாம்...எனவே இவன் மக்களிடம் பேசுவதற்கு தடை விதிப்பது சரியானதொன்றாக இருக்கும்" என்று எண்ணி ஆங்கிலேய அரசும் செம்பகராமன் பொது இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு தடையினை அறிவித்தது. செம்பகராமனும் ஆங்கிலேய காவல்துறையின் கண்காணிப்பிற்கு கீழ் வந்தான்.

ஆனால் எத்தனை நாள் தான் சுதந்திர வேட்கை அடுக்குமுறைக்கு கட்டுப்பட்டுக் கிடக்கும்...சுதந்திரமாக செயலாற்ற எத்தனித்த செம்பகராமனுக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வருகின்றது... ஒரு ஐரோப்பிய தாவரவியல் அறிஞர் வாயிலாக.

அவர் பெயர் சர். வால்டர் வில்லியம் ஸ்ட்ரிக்லேன்ட்!!! ஆங்கிலேய பரம்பரையினைச் சார்ந்தவராக அவர் இருந்தாலும் அவரது தாயார் செர்மனி நாட்டினைச் சார்ந்தவர். எனவே அவர் அக்காலத்தில் மறைமுகமாக செர்மானிய அரசுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்துக் கொண்டு வந்தார் ஆராய்ச்சி என்றப் பெயரில். அவர் கண்ணில் தான் துடிப்பான இளைஞனான செம்பகராமன் சிக்குகின்றார்.

"ஆங்கிலேயர்கள் ஆளும் நாட்டில் இருந்துக் கொண்டே அவர்களை எதிர்ப்பது கடினமான ஒரு செயல் என்று உனக்குத் தெரியாதா?"

"தெரியும்...ஆனால் அதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை...!!!" என்றான் செம்பகராமன்.

சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"உன்னிடம் வேகமும் விவேகமும் இருக்கின்றது இளைஞனே...ஆனால் ஆங்கிலேயர்களை மீறி நீ போராட வேண்டும் என்றால் அவை மட்டுமே உனக்குப் போதாது... நீ இன்னும் அநேக விடயங்களைக் கற்க வேண்டும்...அதற்கு உனக்குச் சுதந்திரம் வேண்டும்" என்றார்.

அவரை உற்றுப் பார்த்தான் செம்பகராமன்.

"இதனை தாங்கள் என்னிடம் சொல்வதற்கு காரணம்...?"

மீண்டும் சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"பழைய கோட்பாடு தான் இளைஞனே...எதிரிக்கு எதிரி நண்பன்...அது தான் காரணம்" என்றார்.

"புரியவில்லையே...!!!" என்றான் செம்பகராமன்.

"உலகில் ஆங்கிலேயர்களுக்கு பகை நாடுகளும் இருக்கின்றன...அவைகளுக்கு இங்கிலாந்து வீழ வேண்டும்...அவ்வளவே...அதற்காக அவைகள் பல காரியங்களை செய்வதற்கு தயாராக இருக்கின்றன. அந்த நாடுகள் உனக்கு...உன்னுடைய குறிக்கோளுக்கு உதவி நிச்சயமாய் செய்யும்...! உனக்கு உன்னுடைய நாடு விடுதலை அடைய வேண்டும்...எங்களுக்கு இங்கிலாந்தின் செல்வாக்கு குறைய வேண்டும்...அவ்வளவே...!!! இலக்கு ஒன்றாக இருக்கும் பொழுது ஒன்றாக செயலாற்றலாம் தானே... என்ன சொல்கின்றாய்..." என்றுக் கூறி செம்பகராமனின் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்.

யோசித்தான் செம்பகராமன்.

"என்னை இப்பொழுது என்ன செய்ய சொல்லுகின்றீர்...?"

"கிளம்பு...ஐரோப்பா உனக்காக காத்திருக்கின்றது... அறிவை வளர்த்துக் கொள்...அங்கே உனக்கு உதவிகள் செய்ய நண்பர்கள் பலர் இருக்கின்றனர்..."
இதற்கு மேல் சிந்திப்பதற்கு ஒன்றும் இருப்பதுப் போன்று செம்பகராமனுக்குத் தோன்றவில்லை.

அவன் முடிவெடுத்து விட்டான்.

"சரி...கிளம்பலாம்...!!!"

ஸ்ட்ரிக்லேன்ட் அவர்களுடன் கப்பலேறி ஐரோப்பாவினை நோக்கி1908 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் தேதி பயணிக்க ஆரம்பித்தப் பொழுது அவனது வயது 17!!!

முதலில் இத்தாலி...அங்கே ஒரு பட்டப்படிப்பு...பின்னர் சுவிச்சர்லாந்து...அங்கும் படிப்பு...பின்னர் செர்மனி...அங்கும் கல்வி...பட்டம்...சாதாரண செம்பகராமன் ... டாக்டர். செம்பகராமன் ஆகின்றான். ஆனால் படிப்பினை மட்டுமே அங்கே அவன் கவனிக்கவில்லை... சென்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் மத்தியில் கூட்டம் போடுவது...ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினை தோலுரிப்பது... இந்தியர்களின் நியாயமானமான கோரிக்கைகளை உலக மக்களின் முன்னர் கொண்டு சேர்ப்பது போன்ற வேலைகளையும் கல்வியுடன் சேர்த்து அவர் செய்துக் கொண்டு தான் இருந்தார். இவரது இந்தச் செயல்கள் இந்தியாவின் குரலினை உலக மக்களிடையே கொண்டு போய் சேர்த்தன.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பெர்லினில் 'இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி' என்ற ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயலாற்றினார். அந்த இயக்கத்தின் வழி 'ப்ரோ இந்தியா' என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் நடத்தி உலக மக்களின் பார்வைக்கு இந்திய மக்களின் கோரிக்கைகளையும் நியாயங்களையும் கொண்டு சேர்த்தார்.

செயல் வேகம் இருக்கின்றது... அறிவாற்றலும் இருக்கின்றது...அதனுடன் திறமையும் இருக்கின்றது...போதாதா...செர்மனியின் அரசியல் தலைவர்கள் செம்பகராமனின் நண்பர்களாக விருப்பம் கொள்ள, செர்மனியில் செம்பகராமனின் செல்வாக்கு உயர்கின்றது.... செர்மனியின் சக்கரவர்த்தியான கெய்சர் அவர்கள் அவரது நெருங்கிய நண்பனாக கருதும் அளவுக்கு அவனின் செல்வாக்கு உயர்கின்றது. செர்மனியின் சக்கரவர்த்தி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் செம்பகராமனின் ஆலோசனையைக் கேட்கும் அளவு இருந்தது செம்பகராமனின் திறமை.

அத்தோடு அவன் நிற்கவில்லை...உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவன் குரல் எழுப்ப விரும்பினான்... அதற்காக அவன் ஆரம்பித்த இயக்கங்கள் தான் 'ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்' மற்றும் 'கீழ் நாட்டவர் சங்கம்'. இந்த இயக்கங்கள் மூலம் உலகின் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கும் அவன் குரல் எழுப்ப ஆரம்பித்தான்.

இங்கிலாந்தோ அவன் தலைக்கு ஒரு விலை (ஒரு இலட்சம் பொன்) வைத்து உலகம் முழுவதும் காத்துக் கொண்டு இருந்தது...ஆனால் அதனை துளிக் கூட பொருட்படுத்தாது உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டு இருந்தான் செம்பகராமன்... தென் ஆப்பிரிக்கா, பர்மா, அமெரிக்கா, சீனா, எகிப்து...இப்படி பல நாடுகளுக்குச் சென்று அங்கே மக்களுக்காக குரல் எழுப்பினான்.

அமெரிக்காவில் சென்று அங்கிருந்த ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக குரல் எழுப்பினான். அன்று இருந்த அமெரிக்க சனாதிபதியான உட்ரோ வில்சனை நேரில் கண்டு ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக பேசினான். சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய உரிமை என்று எண்ணியே அவன் மனிதத்திற்காக குரல் கொடுத்தான்.

கூடவே இந்தியாவில் இருந்த தலைவர்கள் மற்றும் போராளிகளுடனும் அவன் தொடர்பில் இருந்துக் கொண்டே தான் இருந்தான். போராளிகளுக்கு செர்மனியில் இருந்து ஆயுதங்களை பெற்றுத் தருவது, தலைவர்களின் குரல்களை உலகிற்க்குக் கொண்டுச் செல்வது என்று அவனால் இயன்ற அனைத்தையும் அவன் செய்துக் கொண்டே தான் இருந்தான். இந்தியத் தலைவர்களின் அகிம்சை வழிப் போராட்டத்தினை அவன் ஏற்றுக் கொண்டாலும், ஆயுதங்களுடன் இருக்கும் ஆங்கிலப் படையினர் அவர்களை நொடியில் அடக்கி விடுவர் என்றும் அவன் அறிந்து வைத்து இருந்தான்...அந்த எண்ணத்திலேயே இந்தியாவிற்காக போரிடும் ஒரு படையினையும் அவன் உருவாக்கத் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.

அவன் எதிர்பார்த்தக் காலமும் வந்தது.

1914 ஆம் ஆண்டு...முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பெருகின்றது.

23 வயதான வீரன் செம்பகராமன் தன்னுடைய திட்டத்தினை செயல்படுத்த ஆரம்பிக்கின்றான்.

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு