மு.கு:
நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் படித்தக் கதை இது. நீண்ட நாட்களாகவே இதனை மொழிப்பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துக் கொண்டே இருந்தது. இன்ற நேரம் கிட்டியமையால் மொழிபெயர்த்து உள்ளேன். இப்பொழுது அந்தக் கதைக்குச் செல்லலாம்…!!!

ஒரு கடனின் கதை:

அழகிய கிராமம் அது.

பசுமையான புல்வெளிகள், நீரோடைகள், வயல்கள் என்று எந்த ஒரு வளத்திற்கும் குறைவில்லாத கிராமம் அது. மேலும் அன்பே உருவான மக்களும் அக்கிராமத்தில் வசித்து வந்தனர். அமைதியான வாழ்க்கை மகிழ்ச்சியான தருணங்கள் என்றே சென்றுக் கொண்டு இருந்த அந்த மக்களின் வாழ்வில் திடீர் என்று அவர்கள் எதிர்பார்க்காத ஒரு சோதனை பொருளாதார நெருக்கடி என்ற வடிவில் வருகின்றது. எப்படி வந்தது எதனால் வந்தது என்று தெரியவில்லை, இருந்தும் அந்த ஊரில் ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு கடன் பட்டு இருக்கின்றனர்.

விடுதிக்காரர் தனது விடுதிக்கு வாங்கிய காய்கறிகளுக்காக மளிகைக் கடைக்காரரிடம் கடன்பட்டு இருக்கின்றார். மளிகைக் கடைக்காரரோ விவசாயியிடம் கடன்பட்டு இருக்கின்றார். அந்த விவசாயியோ தனது மகளுக்காக வாங்கிய உடைக்காக துணித் தைப்பவரிடம் கடன்பட்டு இருக்கின்றார். அந்தத் துணித் தைப்பவரோ நூலும் துணியும் வாங்கியதற்காக நூல் விற்பவருக்கு கடன்பட்டு இருக்கின்றார். அந்த நூல் விற்பவரோ, தனது இல்லத்தில் நிகழ்ந்த விழாவிற்கு வந்து இருந்த உறவினர்களை விடுதியில் தங்க வைத்த செலவிற்காக விடுதிக்காரரிடம் கடன்பட்டு இருந்தார்.

இவ்வாறு ஊரே ஒருவரிடம் ஒருவர் கடன் பட்டு இருக்கும் நிலையில் தான் அந்த ஊருக்கு சுற்றுலாப் பயணி ஒருவர் வருகின்றார். அவருக்கு தங்குவதற்கு இடம் வேண்டி இருப்பதினால் நேராக விடுதிக்கு சென்று “விடுதிக்காரரே வந்தனங்கள்…!!! நான் உங்கள் ஊரில் சில நாட்கள் தங்கிச் செல்லலாம் என்று எண்ணி உள்ளேன். ஆனால் தங்குவதற்கு வேறு இடங்கள் இல்லாததால் உங்களின் விடுதியில் தங்கலாமா என்று சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன். நான் சிந்திப்பதற்கு காரணம் பொதுவாக நான் தூய்மையான இடங்களிலேயே தங்குவேன், ஆனால் உங்களின் விடுதி தூய்மையாக இருக்கின்றதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே முதலில் உங்களின் விடுதியைக் கண்டுவிட்டு பின்னர் நான் இங்கே தங்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகின்றேன். இதோ முன்பணமாக 100 உருபாயினைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களின் விடுதியினைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஒருவேளை எனக்கு பிடிக்கவில்லை என்றால் திரும்பி வந்து இந்த முன்பணத்தினைப் பெற்றுக் கொள்கின்றேன்…இதில் உங்களுக்கு சம்மதமா” என்று விடுதிக்காரரிடம் கேட்டார்.

விடுதிக்காரருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு வாடிக்கையாளர் வந்து இருக்கின்றார். எனவே மகிழ்ச்சியுடன் “வந்தனங்கள் ஐயா…எனக்குச் சம்மதமே…தாராளமாய் நீங்கள் அறைகளைப் பாருங்கள்…அவ்வாறு உங்களுக்கு அறைகள் பிடிக்க வில்லை என்றால் நிச்சயமாக திரும்பி வரும் பொழுது தங்களின் முன்பணத்தினைப் பெற்றுக் கொள்ளுங்கள்…ஆனால் உங்களுக்கு அறைகள் பிடிக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.” என்றுக் கூறி அந்தப் பயணியிடம் இருந்து முன்பணத்தினைப் பெற்றுக் கொண்டார். அந்தப் பயணியும் முன்பணத்தினை தந்து விட்டு அறைகளைப் பார்வையிடுவதற்காக சென்றார்.

பணத்தினை வாங்கிக் கொண்ட விடுதிக்காரர் நேராக மளிகைக் கடைக்காரரிடம் சென்று தான் அவருக்கு கொடுக்க வேண்டியக் கடனான 100 உருபாயினைத் தந்து அடைக்கின்றார். அந்த மளிகைக் கடைக்காரரும் உடனடியாக விவசாயியிடம் சென்று தான் அவருக்குத் தர வேண்டியத் தொகையான 100 உருபாயினைத் தந்து தனதுக் கடனை அடைக்கின்றார். அவ்வாறே அந்த விவசாயியும் தான் துணித் தைப்பவருக்குத் தர வேண்டியத் தொகையினை உடனடியாக சென்று தருகின்றார். அவ்வாறே துணித் தைப்பவரும் நூல் விற்றவருக்கு தான் பட்டு இருந்த கடனாகிய 100 உருபாயினை அடைக்க, இறுதியில் நூல் விற்பவரும் தான் விடுதிக்காரருக்கு தர வேண்டியத் தொகையான 100 உருபாயினை சென்று தந்து அடைக்கின்றார். இவ்வாறு ஊரில் உள்ள அனைவரும் அவர்களின் கடனினைத் தீர்த்து விடுகின்றனர்.

அந்நேரத்தில் விடுதியினை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிய அந்தப் பயணி தனக்கு அறைகள் பிடிக்கவில்லை என்றுக் கூறி தான் முன்பணமாக கொடுத்து இருந்த 100 உருபாயினை விடுதிக்காரரிடம் இருந்துப் பெற்றுக் கொண்டு தங்குவதற்கு வேறு ஏதாவது இடம் கிடைக்குமா என்றுத் தேடக் கிளம்புகின்றான். விடுதிக்காரரும் மகிழ்ச்சியுடன் அவனது முன்பணத்தினை திருப்பி தந்து அவனை வழி அனுப்பி வைக்கின்றார்.

இவ்வாறு அந்த ஊர் மக்கள் புதிதாக எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்யவில்லை…எந்த ஒரு செல்வதையும் ஈட்டவும் இல்லை…ஆனால் அனைவரும் அவர்களின் கடன்களில் இருந்து விடுபட்டு எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயார் ஆயினர்.

பி.கு:

இது ஒரு கதை தான். ஆனால் இந்தக் கதை அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் சமூகத்திற்கே பொருந்தும்.

உலகமே ஒரு கிராமம் என்று கூறப்படும் இன்றைய காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தனியாக உணருகின்றனர். மனக் குழப்பங்கள், பயங்கள், நிச்சயமற்றத் தன்மைகள் அனைத்துச் சமூகங்களிலும் நிறைந்தே காணப்படுகின்றன. பல கோடிக்கணக்கான மக்களை வறுமையில் வாட வைத்துக் கொண்டு அவர்களின் வறுமையின் மூலம் கிட்டும் சுகபோகங்களில் சிலர் மூழ்கிக் கொண்டு இருக்கின்றனர். அடுத்தவர்களின் நலம் குறித்த சிந்தனைகளே இல்லாத ஒரு சமுகம் வேகமாக வளர்க்கப்பட்டு வந்துக் கொண்டு இருக்கின்றது. வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கின்றது...மாறாக அதனை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் போன்ற கேள்விகளும் எண்ணங்களும் இன்று வீணாகப் போய் விட்டன. முடிவில் அர்த்தமில்லா வாழ்கையே மிஞ்சி இருக்கின்றது. இருக்கும் வரையும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்...அதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்...யாரைப் பற்றியும் நாம் சிந்திக்கத் தேவை இல்லை என்ற நிலையே இன்று பெரும்பாலானோரில் நிலவுகின்றது. அந்நிலையில் சகோதுரத்துவம், அன்பு, நேசம், சக உயிர்களுக்கான மதிப்பு இவை யாவும் குழித் தோண்டிப் புதைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே நாட்டில் இன்று பல்வேறு பிரச்சனைகளும் முளைத்து உள்ளன.

பொதுவாகவே நமது நாடும் சமூகமும் குடும்ப முறையினை அடிப்படையாகக் கொண்டு விளங்குபவை. ஊருக்குள் ஒவ்வொருவனுக்கும் ஆயிரம் உறவுகள் இருக்கும்...மாமா, மச்சான்,அக்கா, அத்தை,....இன்னும் பல. இந்நிலையில் ஒருவனுக்கு ஏதாவது மனக் கவலைகள் வந்தாலோ அல்லது வேறு ஏதேனும் கவலைகள் வந்தாலோ அக்கவலைகளைக் கேட்கவும் காதுகள் பல காத்திருக்கும், அவன் கவலைப் போக்க சாய்ந்துக் கொள்ள தோள்களும் பல காத்து இருக்கும். அங்கே அவன் தனியாக விடப்பட்டு இருக்க மாட்டான். ஆனால் வளர்ந்த நாடுகள் என்றுக் கருதப்படும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அத்தகைய அமைப்பு கிடையாது. அங்கே ஒவ்வொருத்தனும் அவனவனுக்காகவே வாழ வேண்டி இருக்கின்றது. அந்த நிலையில் ஒருவனுக்கு மனக் கவலை வந்தது என்றால் அதற்குரிய மருந்துகள் அங்கே கிடைப்பதில்லை. காலப்போக்கில் அங்கே சரியான மருந்துகள் இன்றியே மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. அதன் விளைவாகவே, தொடர் கொலைகாரர்கள், குழந்தைகளைக் கொல்வோர், ஆசிரியர் அடித்ததால் ஆத்திரப்பட்டு துப்பாக்கியினை எடுத்துக் கொண்டு போய் பள்ளியில் இருக்கும் பலரைக் கொல்வோர் போன்றவர்கள் அங்கே சமுகத்தில் தோன்றுகின்றனர். அவர்கள் இயந்திரமயமான ஒரு வாழ்வு முறையின் விளைவாக விளைந்த இதரப் பொருட்களே ஆவர்.

வருத்தகரமான விடயமாக அத்தகைய வாழ்க்கை முறை இன்று நமது தேசத்தில் வேகமாக பரவி வருகின்றது. இயந்தரமயமான வாழ்வையே நம்மில் பலர் இன்று வாழ்ந்து வந்துக் கொண்டு இருக்கின்றோம். நமக்கு அவ்வாழ்வில் விருப்பம் இருக்கின்றதா இல்லையா என்பதனைப் பற்றி அக்கறை எடுக்க இங்கே எவரும் இல்லாத நிலையில் நம் மேல் திணிக்கப்பட்டுள்ள அந்த வாழ்வினையே தான் நாம் வாழ வேண்டி இருக்கின்றது. வாழ்வதே பெரும் போராக இருக்கும் இந்த நிலையில், வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நம்மில் விதைக்கப்படுகின்றது...அதனைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்க வைக்கப்படுகின்றோம்...மாறாக எப்படி வாழ வேண்டும் என்ற ஒரு கேள்வியினை நம்முடைய சமுகம் இன்று எழுப்புவதே இல்லை...நீதி நூல்களும், அற நூல்களும் காலாவதி ஆகி வருடங்கள் பல கடந்து விட்டன. இந்நிலையில் தான் ஆசிரியரைக் கத்தியால் குத்தும் மாணவனையும், ஏழு வயதுச் சிறுமியை காமப் பொருளாக பார்க்கும் மனிதனையும், குழந்தைகளைக் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் மனிதனையும் நமது சமுகம் விளைவிக்க ஆரம்பித்து இருக்கின்றது. இது தொடக்கம் தான். இப்பொழுது தானே நமது சமுகம் இயந்திரமயமான ஒன்றாக மாறி விளைவுகளைத் தர ஆரம்பித்து இருக்கின்றது...இன்னும் காலங்கள் ஓட ஓட அதன் கனிகளை நாம் இன்னும் நன்றாகவே அனுபவிப்போம். இதனை கடந்த இருபது ஆண்டுகளில் நமது நாட்டின் நிலையினைக் கண்டாலே தெள்ளத் தெளிவாக புலனாகும்.

இருபது வருடங்களுக்கு முன்னர் கடன் வாங்க வேண்டும் என்றாலே ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கும் சமூகம், இன்று கடன் வாங்குவதை சர்வ சாதாரணமான ஒன்றாகவே கருதுகின்றது. இன்றைய தேதிக்கு குணநலன்கள் முக்கியத்துவம் இழந்து விட பொருட்கள் அவற்றின் இடத்தினை பிடித்துக் கொண்டு இருக்கின்றன. அதன் விளைவே இன்று கடனில் வாங்கிய வண்டி, கடனில் வாங்கிய வீடு, கடனில் வாங்கிய தொலைக்காட்சி என்று கடனிலேயே பலரது வாழ்க்கை மூழ்கி இருக்கின்றது. அவ்வாறு கடனில் இருப்பதையும் பெருமையாகக் கருதும் நிலையே இன்று சமூகத்திலும் இருக்கின்றது. "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற தத்துவம் இன்று "பொன் செய்யும் மருந்தா அதுவே போதும்" என்ற தத்துவமாக மனதில் மாறி உள்ளது. "பொன் செய்யும் மருந்து இருந்தால்...எவ்வளவு பொருள்கள் வாங்கலாம்...செல்வம் கொட்டுமே" என்ற எண்ணமே மேலோங்கி இருக்கின்றது. எனவே நமது சமூகம் மாறி இருக்கின்றது. அந்த மாற்றம் நன்மைக்கா அல்லது தீமைக்கா என்பது அதன் விளைவுகளிலாலேயே நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

இன்று ஒரு பெண்ணிற்கு நிகழ்ந்த வருத்தகரமான செயலுக்கு அச்செயலைச் செய்தவர்களை தூக்கில் போடு என்றக் குரல்கள் அதிகமாக எழுகின்றன. ஊடகங்களும் அக்குரல்களின் எழுச்சிக்கு பின்னால் அவர்களின் ஆதாயத்துக்காக இருக்கின்றனர். இந்த நிலையைத் தான் நாம் இப்பொழுது சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு நெருப்பு எரிந்துக் கொண்டு இருக்கின்றது. அதில் நான் எனது விரலினை வைக்கின்றேன். சுடுகின்றது. வலிக்கின்றது. 'ஐயையோ வலிக்கின்றதே...ஏ விரலே...! உன்னால் தானே நான் வலிக்கு ஆளானேன். உன்னை வெட்டாது விட மாட்டேன்...அவ்வாறு வெட்டினால் தான் மற்ற விரல்கள் இனிமேல் தீயினைத் தொடாது' என்று எண்ணி அவ்விரலினை வெட்டி விடுகின்றேன். ஆனால் சற்று நேரத்திற்கு பின்னர் வலி மறக்க மீண்டும் மற்றொரு விரலினை தீயில் வைத்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது. மீண்டும் வைக்கின்றேன்...மீண்டும் வலி...மீண்டும் அதே தண்டனை. பின்னர் அவ்வாறே தொடர்ந்து எண்ணம் எழ வரிசையாக அனைத்து விரல்களும் வெட்டப்படுகின்றன...பின்னர் கைகள்...பின்னர் கால்கள் (கையைத் தான் முன்னரே வெட்டியாச்சே அப்புறம் எப்படி கால வெட்டுனீங்க அப்படின்னு எல்லாம் குறுக்கு கேள்வி கேட்கப்படாது). ஆனால் இன்னும் நெருப்பினை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் பிழை எங்கே இருக்கின்றது? விரல்களிலா? அல்லது என் எண்ணத்தினிலா? எண்ணத்தினில் தானே பிழை இருக்கின்றது. விரல் என்பது எனது உடலில் உள்ள வெறும் ஒரு உறுப்பு. எனது எண்ணத்தின் படியே அது வேலைகளைச் செய்கின்றது. அப்படி இருக்க எனது எண்ணத்தினால் நெருப்பினில் விரலினை வைத்து விட்டு, பின்னர் விரல் தவறு செய்து விட்டது என்றுக் கூறி விரலினை வெட்டுவது என்பது சரியான தீர்வாகவா அமையும்? அது சரியான தீர்வு என்றால் இறுதியில் நெருப்பினில் நான் ஒட்டு மொத்தமாக எரிந்து மரணிக்கும் நிலையிலேயே அந்தத் தீர்வு என்னைக் கொண்டு போய் விடும். மாறாக நான் நெருப்பு சுடும் அதனைத் தொடக் கூடாது என்ற அறிவினையும் எண்ணத்தையும் பெற்றே இருக்க மாட்டேன். எனவே பிரச்சனை எங்கே இருக்கின்றது, எனது விரலிலா அல்லது எனது எண்ணத்திலா?

எண்ணத்தில் தானே. அப்படி என்றால் தீர்வாக நான் விரலினை வெட்ட வேண்டுமா அல்லது தீ சுடும்...அது எனது உடலிற்கு தொட்டால் தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணத்தினை எனது மனதில் ஏற்ற வேண்டுமா? மனதில் தானே அந்தக் கருத்தினை ஏற்ற வேண்டும்...அது தானே சரியானத் தீர்வாக அமையும். அதனை விடுத்து விரல்களில் வெட்டுவதில் அர்த்தம் ஏதேனும் இருக்கக் கூடுமா என்ன?

மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டு ஒரு சமூகத்திற்கும் பொருந்தும். ஒரு சமூகமும் ஒரு உடலினைப் போல் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது...அதன் பல்வேறு பகுதிகளாக பல்வேறு மக்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். தனி மனிதர்களுக்கு என்று தனி சிந்தனைகள் இருந்தாலும் ஒரு சமுகத்தின் சிந்தனை மற்றும் எண்ணமானது அதில் வசிக்கும் பெரும்பாலானோரின் சிந்தனையாகவே இருக்கின்றது என்பது நம்முடைய சமூகத்தினைக் கண்டாலே விளங்கும். இதைத் தான் ஒவ்வையார் அவர்கள் 'ஏ நிலமே...நல்ல மக்கள் எங்கே வசிக்கின்றார்களோ அங்கே நீ நல்ல நிலமாக இருக்கின்றாய்....மக்கள் எவ்விடம் தீமையானவர்களாக இருக்கின்றார்களோ அங்கே நீ தீய நிலமாக இருக்கின்றாய்...மக்களைப் பொறுத்தே உன்னுடைய குணம் அமையப்பெருகின்றது' என்றே முன்னரே கூறிச் சென்று விட்டார். எனவே பொதுவாக ஒரு சமுகத்தில் உள்ள பெருவாரியான மக்களின் சிந்தனைக்கேற்பவே அந்த சமூகத்தின் சிந்தனையும் இருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே அந்த சமூகத்தில் பல்வேறு நிகழ்வுகளும் நிகழ்கின்றன.

இந்நிலையில் சமூகத்தில் ஒரு தவறு நிகழ்கின்றது என்றால் அது ஒரு தனிப்பட்ட மனிதனின் சிந்தனையினால் நிகழ்ந்ததா அல்லது அந்தச் சமூகத்தின் சிந்தனையினாலேயே நிகழ்ந்ததா என்றே நாம் முதலில் ஆராய வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஆராய்ந்து, அந்த தவற்றின் அடிப்படைக் காரணத்தினைக் கண்டுப்பிடித்து அதனைக் களையும் வண்ணம் நமது செயல் இருந்தால் மட்டுமே அந்தத் தவறு பிற்காலத்தில் மீண்டும் நேராத வண்ணம் நம்மால் தடுக்க இயலும். உதாரணத்திற்கு ஒருவன் சாதி வெறியின் காரணமாக மற்றொருவனை கொலை செய்து விடுகின்றான். இந்நிலையில் இங்கே அடிப்படை பிரச்சனை யாது? ஒருவன் கொலை செய்ததா? அல்லது சாதி வெறியா? எதற்கு நாம் தீர்வினைக் காண வேண்டும்? அவன் கொலை செய்து விட்டான், அது தான் பிரச்சனை என்று எண்ணி அவனைத் தூக்கில் போட்டு விட்டால் பிரச்சனை முடிந்து விடுமா? வேறு சாதிக் கொலைகளே நடக்காது போய் விடுமா? இல்லைதானே...அங்கே அடிப்படைப் பிரச்சனையே சாதி வெறி, அந்த பிரச்சனை இருக்கு வரை கொலைகளும் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கும்...எனவே அதனைத் தீர்க்காது விட்டுவிட்டு ஒருவனைத் தண்டிப்பதன் மூலம் நாம் தற்காலியமான தீர்வையே தேடிக் கொள்பவர்களாக ஆவோமே அன்றி உண்மையிலேயே அந்தப் பிரச்சனைகளை தீர்த்து இருக்க மாட்டோம்.

அந்த நிலையிலேயே தான் நாம் சமூகத்தில் எழும் பிரச்சனைகளைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. அதாவது பிரச்சனையின் அடிப்படைக் காரணம் யாது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. இப்பொழுது அந்த டெல்லி பெண்ணுக்கு நிகழ்ந்த வருத்தகரமான விடயத்தினையே எடுத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சம்பவங்களில் நிச்சயமாக இது முதல் சம்பவம் கிடையாது. நிச்சயமாக இது இறுதிச் சம்பவமும் கிடையாது. இந்த பதிவினை நான் எழுதிக் கொண்டு இருக்கும் நிமிடத்திலையே நமது நாட்டினில் எங்காவது ஒரு மூலையில் பெண்ணிற்கு எதிரான சம்பவம் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கலாம். எனவே இப்பிரச்சனை ஒட்டுமொத்த சமூகத்தில் நிலவும் பிரச்சனை. அப்படிப்பட்ட பிரச்சனைக்கு தனி நபர்களை பலியிடுவதன் மூலம் தீர்வு கிட்டி விடுமா? அவர்களைத் தூக்கில் இட்டுவிட்ட பின் பெண்கள் தைரியமாக இரவு வேளைகளில் தனியாக பயணிக்கும் நிலைமை வந்து விடுமா? இல்லை பெண்கள் தொடர்ந்து வேறுவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டித் தான் வருமா? நிச்சயமாக பெண்கள் வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டித் தான் வரும். காரணம் நமது சமூகத்தின் நிலை அவ்வாறே இன்று இருக்கின்றது. அதனை மாற்றாது உண்மையான மாற்றங்கள் என்று எதுவும் வாராது. இன்றைய சமூகத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்,

1) மட்டைப் பந்து விளையாட்டில், விளையாட்டிற்கு நடுவில் எதற்காக பெண்களின் நடனம் தேவைப்படுகின்றது. வீரர்களை ஊக்கு விற்பதற்காகவா?

2) திரைப்படங்களில் பெண்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது. ஐந்து பாடல்கள், ஓர் இரண்டு காட்சிகள்...அவ்வளவே. நடிப்பதற்காக அவர்கள் பெரும்பாலும் திரைப்படத்தில் இடம் பெறுவதில்லை என்றே நான் நினைகின்றேன். எங்கோ படித்த ஒரு வாசகம் நினைவிற்கு வருகின்றது. 'திரைப்படத்தில் நாங்கள் சிரிக்க வேண்டும் என்று நகைச்சுவைக் காட்சிகளை வைக்கின்றீர்...சிரிக்கின்றோம்...!சோகமாக வேண்டும் என்று உணர்வுப்பூர்வமான காட்சிகளை வைக்கின்றீர்...அழுகின்றோம்! உணர்ச்சிக் கொந்தளிக்க வேண்டும் என்பதற்காக வீரக் காட்சிகளை வைக்கின்றீர்...வீராவேசம் கொள்கின்றோம்...பின்னர் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றையா கவர்ச்சிக் காட்சிகளையும் ஆபாசக் காட்சிகளையும் வைக்கின்றீர்?'

3) பத்திரிக்கைகள், காட்சி ஊடகங்கள், வார இதழ்கள் போன்றவைகள் பெண்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகின்றன என்பதனை நாம் நன்றாக அறிவோம். ஒருவன் ஒருவித வாசனைத் திரவியம் பூசுவானாம் உடனே அதில் பெண்கள் மயங்கி அவன் பின்னர் வர ஆரம்பித்து விடுவராம்...எப்படி...பெண்களைக் குறித்து நல்ல பார்வைகளை தருகின்றார்கள் அல்லவா.

4) 'அடிடா அவள...வெட்றா அவள' போன்ற வரிகள், 'கள்ள உறவுகளை' அடிப்படையாக வைத்த கதைகள் இன்று நமது சமூகத்தில் நிறைந்து இருக்கின்றன. அப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து நாம் எந்த மாதிரியான மரங்கள் விளையும் என்று எதிர்பார்க்கலாம்?.

மேலே நாம் கண்டுள்ளது எல்லாம் இன்று நம்மில் இருக்கும் பிரச்சனைகள். ஆனால் இப்பிரச்சனைகள் மட்டுமே பிரச்சனைகள் அல்ல. 'உடன் கட்டை' ஏறுதலை எதிர்த்து போராட்டம், 'தோள் சீலை' போராட்டம், 'சொத்தில் உரிமை' போராட்டம் என்று பல போராட்டங்கள் பெண்களின் நலனுக்காக கடந்த காலத்திலும் நிகழ்ந்து தான் இருக்கின்றன. எனவே பெண்களுக்கு எதிரான செயல்கள் என்பது சமூகத்தில் நஞ்சினைப் போல் நீண்டக் காலமாக பரவி இருக்கும் ஒரு விடயம் என்பதனை நாம் அறிந்துக் கொள்கின்றோம். அந்த நஞ்சினை தனி நபர்களைப் பலிக் கொள்வதன் மூலம் மட்டும் நீக்கி விட முடியாது.

அட என்னங்க 'அப்படினா தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனைத் தரக் கூடாதுன்னு சொல்றீங்களா? தண்டனைகள் அதிகமாக இருந்தால் தான் தவறுகள் குறையும். அப்படினா தான் அவன் பயப்படுவான்' என்று கூறுகின்றீர்களா. உங்களுக்கு ஒரு கேள்வி.

அரசாங்கம் ஒரு தவறினைச் செய்கின்றது. அதனை நாம் எதிர்த்து கேள்விக் கேட்க வேண்டும். அந்தக் கேள்வியினை கேட்க நீங்கள் இன்று பயப்படுவீர்களா அல்லது பயப்பட மாட்டீர்களா? அரசினைக் கேள்விக் கேட்க முன்னே வரும் தைரியம் நம்மிடையே இருக்கின்றதா இல்லை பயம் நம்முள் இருக்கின்றதா? பயம் தானே பெருன்பான்மையாக இருக்கின்றது. உதாரணத்திற்கு மும்பை சம்பவத்தையே எடுத்துக் கொள்வோம். சமூக இணையத்தளத்தில் தங்களது கருத்தினை வெளியிட்ட இரண்டு பெண்களை அந்த மாநிலத்து காவல்துறை கைது செய்தனர். ஒரு சனநாயக நாட்டினில் கருத்தினை வெளியிடுவது என்பது ஒருவரது அடிப்படை உரிமை. அப்படிப்பட்ட உரிமையை அரசாங்கம் நம்மிடம் இருந்து பறிக்கின்றது. அந்நிலையில் நாம் அதனை எதிர்த்தோமா? நம்மில் எத்தனைப் பேர் அந்த செய்திக்கு கண்டனங்களைத் தெரிவித்து இருப்போம்? அந்த கண்டனங்களை தெரிவிக்காது நம்மளைத் தடுத்தது எது? அந்த பெண்களுக்கு உதவக் கூடாது என்ற எண்ணமா அல்லது இதனால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமா என்கின்ற பயமா? பயம் தானே நம்மளைத் தடுத்தது.

தீய செயல்களைத் தடுக்கும் என்று எண்ணப்படும் பயம் நல்லச் செயல்களையும் தடுக்கின்றதே. அப்படி இருக்க இதனை எவ்வாறு சமூகத்தில் விதைப்பது?

பயம் என்பது இரு பக்கமும் கூரான கத்தியைப் போன்றது. அதன் ஒரு பக்கத்தை நாம் பிடித்துக் கொண்டு அடுத்தவன் மீது செலுத்தப் பார்க்கின்றோம். அடுத்தவனோ அதனை மற்றொரு பக்கத்தில் இருந்து பிடித்து நம் மீது செலுத்தப் பார்கின்றோம். இந்நிலையில் எவன் வலுவாக இருக்கின்றானோ அவனே வெல்வான் என்று நம்மால் கூற இயலுமே அன்றி சரியானது வெல்லும் என்று நம்மால் கூற இயலாதே.

உதாரணத்திற்கு, அரசாங்கம் என்றுமே மக்களைக் கண்டு, அது வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் பயந்துக் கொண்டே இருக்கும். அதுவும் இன்று இணையத்தினைக் குறித்து அது மிகுந்த அச்சத்தினைக் கொண்டே இருக்கின்றது. எனவே இணையத்தினை முடக்க தன்னால் இயன்றவற்றை அது பயத்துடனே செய்ய ஆரம்பிக்கின்றது.

அதாவது அதன் புறம் இருந்து சட்டம் என்ற அழுத்தம் கொடுத்து பயம் என்னும் கத்தியை நம் மீது திணிக்கின்றது.

அந்த செயலுக்கு நாம் அனைவரும் ஒன்றாக இருந்து, ஒற்றுமை மற்றும் உரிமை என்ற அழுத்தத்தினை வைத்து தடுத்தோம் என்றால் பயம் என்ற கத்தி இப்பொழுது அரசாங்கத்தின் மீது பாய ஆரம்பிக்கும்...அரசும் அந்தச் சட்டத்தினை திரும்பப் பெற்றுக் கொள்ளும். மாறாக நாம் அரசுக் கொடுக்கும் அழுத்தத்திற்கு பயந்தோம் என்றால் இணையச் சுதந்திரம் பறிபோய் விடும்.

எனவே பயம் என்ற ஒன்றின் மூலம் நேர்மை வெல்லும் என்று நம்மால் கூற முடியாது...மாறாக எது வலிமையுள்ளதாக இருக்கின்றதோ அதுவே வெல்லும். இது எதில் கொண்டு போய் விடும் என்றால் 100 ரூபாய் திருடுகின்றவனை உயிர் போக்கும் வரை அடிக்கும் சமூகம், கோடிக்கணக்கில் முழுங்கியவனைக் கண்டு பயப்படும் நிலையிலேயே கொண்டு போய் விடும். பயத்தினால் பக்க விளைவுகள் பல எழுகின்றன. பயம் நம்மை ஒரு சராசரி மனிதனாகவே வைத்து இருக்கும்.

எனவே பயத்தினை சமூகத்தில் விதைக்க வேண்டும்,அவ்வாறு விதைத்தால் தான் சமூகம் நல்லதொரு சமூகமாக மாறும் என்ற எண்ணம் ஒரு நிகழ்வுக்கு சரியானதொன்றாக அமைந்தாலும் முற்றிலும் அது சரியானதொன்றாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.

"அப்படி என்றால் தண்டனைகளே வேண்டாம் என்று சொல்லுகின்றீர்களா?" என்ற எண்ணம் இங்கேத் தோன்றும். தண்டனைகள் என்பவை செய்த தவறுக்கு வழங்கப்படுபவை. அவை அந்த மனிதனை அவன் செய்தது தவறு என்று உணரச் செய்து இனி அந்த தவறுகளைச் அவன் செய்யாது இருக்கும் வண்ணம் அவனை சிந்திக்க வைக்க வேண்டும். அதுவே தண்டனைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் தண்டனைகளை விட முக்கியமான ஒரு விடயம் என்ன தெரியுமா? அந்தத் தவறுகளே நிகழாத வண்ணம் சமூகத்தின் சிந்தனையை சீராக வைக்கும் கல்வி மற்றும் சிந்தனைகளை அந்தச் சமூகத்தில் பரப்பச் செய்வதே ஆகும் அது. அதுவே உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கும்.


இன்றைய நிலையில் சமூகம் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. உயிர்கள் உலகெங்கிலும் தேவை இல்லாது வாடிக் கொண்டு இருக்கின்றன. உலகத்தில் மக்கள் அனைவரும் சேர்ந்து அனைவரும் மகிழ்ச்சியாய் வாழவே முடியாது...ஒருவர் வாழ வேண்டும் என்றால் மற்றொருவர் வாட வேண்டும் என்ற நிலையே இன்று சமூகத்தில் பரவி இருக்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சமூகத்தின் எண்ணங்கள் மேலான எண்ணங்களாக இல்லை. அவ்வாறு இருக்க இன்று டெல்லியில் நடந்த நிகழ்விற்கு மரண தண்டனையைத் தர வேண்டி குரல் கொடுப்போர் சற்றுச் சிந்தித்துப் பார்க்க தான் வேண்டி இருக்கின்றது...

1) டெல்லியில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் குடி போதையின் காரணமாக நிகழ்ந்து இருந்தால் நாம் தவறு இழைத்தவனை மட்டும் தண்டிக்க வேண்டுமா அல்லது அதற்கு காரணமான குடியினையும் தண்டிக்க வேண்டுமா?

2) ஆங்கிலம் பேச இயலவில்லை என்று தாழ்வு மனப்பான்மையில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துக் கொள்கின்றானே, அங்கே அவனது தாழ்வு மனப்பான்மையை தண்டிக்க வேண்டுமா அல்லது அந்த தாழ்வு மனப்பான்மையைத் தூண்டிய சமூகத்தின் சிந்தனையை தண்டிக்க வேண்டுமா?

3) அந்த மாணவனின் உணர்ச்சியை புரிந்துக் கொள்ளாது அவனை மதிப்பெண்களை நோக்கி துரத்திய ஆசிரியரை என்ன செய்வது? அல்லது மாணவர்கள் எவ்வகைப் பட்டவர்களாக இருந்தாலும் பரவா இல்லை ஆனால் அவர்கள் அனைவரும் மதிப்பெண்கள் எடுத்தே ஆக வேண்டும் என்று அந்த ஆசிரியரை கட்டாயப்படுத்திய கல்லூரியின் மேலாளரை என்ன செய்வது? அல்லது அவர்களை எல்லாம் கல்லூரி நடத்த அனுமதி தந்த அமைச்சரை என்ன செய்வது?

4) ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையினை உருவாகிய அரசை என்ன செய்வது?

இவை சில உதாரணங்களே. மேலே உள்ள அனைத்து விடயங்களும் சிலரைத் தண்டிப்பதால் மட்டும் மாறி விடுமா? மாறாது தானே.

எனவே "தண்டனைகளை அதிகமாக்க வேண்டும்" என்றக் குரல்களை விட "தவறுகளே நிகழப் பெறாத சமூகத்தினை உருவாக்குவோம்...அதற்குரிய சிந்தனையை நல்ல விடயங்களைப் பரப்புவோம்...நல்லவர்களே...நல்லதே நிறைந்து இருக்கும் ஒரு உலகத்தினைப் படைப்போம்" என்ற குரல்கள் எழுவதே இன்றையக் காலத்தின் தேவையாக இருக்கின்றது. அப்படிப்பட்ட குரல்களும் செயல்களுமே இன்றைய சமூகத்தினை உண்மையிலேயே மாற்றும் வல்லமைக் கொண்டவைகளாக இருக்கும். சகோதரத்துவம், சக உயிர்களிடம் மதிப்பும் மரியாதையும், நேசம் போன்ற குணங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும்.

"அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை" என்றும் "நமக்கு பிறர் எதை செய்யக் கூடாது என்று நாம் நினைக்கின்றோமோ அதனை நாம் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது" போன்ற கருத்துகளை, நல்ல எண்ணங்களை நாம் இன்று மண்ணில் விதைக்க வேண்டி இருக்கின்றது. அக்கருத்துக்களை நாம் உண்மையிலேயே நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக அன்று நமது சமூகம் மீண்டும் நல்ல சமூகமாக மலர ஆரம்பிக்கும்.

என்று நாட்டில் நல்ல மக்கள் அதிகமாக இருக்கின்றார்களோ அன்று அந்த நாடு நல்ல நாடாக மாறும். எனவே நாம் தற்காலியமான தீர்வுகளை நாடாது "நோய் நாடி நோய் முதல் நாடி" என்ற வள்ளுவனின் குரளிற்கேற்ப பிரச்சனைகளின் அடிப்படைக் காரணிகளை கண்டு அறிந்து அவற்றைத் தீர்க்கும் முயற்சிகளினில் நாம் இறங்க வேண்டும். அவ்வாறு இறங்கினோம் என்றால் தான் பிரச்சனைகளை உண்மையிலேயே நாம் களைந்தவர்களாவோம்.

இதோ இன்று அமெரிக்காவைப் பாருங்கள். அங்கே பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு நிகழ்வது என்பது அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வாகி விட்டது. இப்பொழுது அதற்கு தீர்வாய் சில நிறுவனங்கள் எதனைக் கொண்டு வந்து இருக்கின்றன தெரியுமா... துப்பாக்கி குண்டுத் துளைக்காத பள்ளிப் பைகள் மாணவர்களுக்காக. இது சரியானத் தீர்வா?

பிரச்சனை ஒரு பள்ளிப் பயிலும் பையனின் கைகளுக்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பதா...இல்லை அந்தத் துப்பாக்கியினைக் கொண்டு மற்ற மாணவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற அவனது எண்ணமா? அல்லது மற்ற மாணவர்களிடம் குண்டுத் துளைக்காத பைகள் இல்லை என்பதா? எது பிரச்சனை? எதற்கு நாம் தீர்வினைக் காண வேண்டும்?

அந்தத் தெளிவு இல்லாத வரை நம்முடைய உணர்ச்சிகளை வைத்து சிலர் ஆதாயம் அடைவார்களே அன்றி மாற்றம் என்பது நடைமுறையில் வெறும் கனவாகவே இருக்கும்.

ஆனால் அத்தகைய மாற்றம் என்பதனை அடைவது கடினமே, காரணம் நல்லக் கருத்துக்களைப் பரப்ப முயற்சி செய்யலாம், நன்மையை செய்தால் நன்மைக் கிட்டும் என்ற நிலையினை கொண்டு வரவும் முயற்சி செய்யலாம் தான், அனைவரும் ஒற்றுமையாய் அன்புடன் இணைந்து சமூக மாற்றத்திற்கு சிறிதளவு பாடுபடலாம் தான்....ஆனால்...!!!

அந்த 'ஆனால்' க்கு பின்னர் நம்மில் ஒவ்வொருவரும் சொல்ல ஒவ்வொரு காரணம் நிச்சயம் இருக்கும். அந்த காரணம் நிச்சயமாக முக்கியமானதொரு காரணமாகவே இருக்கும். ஆனால் அந்தக் காரணத்தின் காரணமாகவே நம்முடைய சமூகத்தில் உண்மையான மாற்றம் என்பது கடினமான ஒன்றாகவே இருக்கும்.

என்ன செய்யப் போகின்றோம் நாம்?

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தயைக் கூர்ந்து அக்கருத்துக்களைத் தெரிவிக்கவும். அவை என்னுடைய கருத்துக்களை மேலும் சீர்ப் படுத்திக் கொள்ள உதவும்.நன்றி!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு