சென்ற பதிவினில் மனிதன் என்பவன் இயந்திரமாகப் படைக்கப்படவில்லை என்றும் அவனது முடிவுகளை அவனே எடுக்கும் வல்லமையை அவன் பெற்று உள்ளான் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.


இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சில கேள்விகளையும் காண வேண்டி இருக்கின்றது.

1) இறைவன் மனிதனைப் படைத்தான் சரி. இறைவன் உங்களின் கூற்றின் படி நன்மையே வடிவானவன். அவ்வாறு இருக்கையில் அவன் படைத்த மனிதனும் நல்லவனாகத் தானே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் தீமை எவ்வாறு வந்தது? தீமையைப் படைத்தது யார்?

இறைவனைப் பற்றிப் பேசுகையில் நிச்சயமாய் இக்கேள்வியினை நாம் கடந்து வராது இருக்க முடியாது. எனவே இக்கேள்விக்கு நாம் விடையினைக் காணுவது இங்கே முக்கியமானதொன்றாகின்றது. அதற்கு நாம் இருளையும் வெளிச்சத்தையும் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு இடத்தில் இருள் இருக்கின்றது. அங்கே நாம் ஒளியைக் கொண்டு வந்தால் இருள் மறைந்து விடுகின்றது. அதாவது ஒளி இருந்தால் அங்கே இருள் இருப்பதில்லை. ஒளி இல்லாத இடத்தில் தான் இருள் இருக்கின்றது. அதாவது ஒளி இல்லாத நிலையே இருள் ஆகும்.

எனவே ஒளி-இருள் ஆகியவை இரு வெவ்வேறு பொருட்கள் அல்ல. ஒளி இல்லாத இடத்தில் இருள் இருக்கும். அவ்வளவே.

அதனைப் போன்று தான் நன்மையையும் தீமையும்..எங்கே நன்மை இல்லையோ அங்கே தீமை இருக்கும். நன்மை இல்லாத நிலை அனைத்தும் தீமை ஆகும்.

சமயங்கள் இறைவனை அன்பின் வடிவமாகவே கூறுகின்றன.

சைவம் 'அன்பே சிவம்' என்கின்றது.

கிருத்துவம் 

"நான் உங்களுக்குச் சொல்கின்றேன்; உங்கள் எதிரிகளை நேசியுங்கள்...உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதி உள்ளவர்கள் மேலும் ஒரு சேர மழையைப் பெய்யப் பண்ணுகின்றார்." - மத்தேயு 5:44,45

என்றுக் கூறுகின்றது.

எனவே இறைவன் அன்பின் வடிவாக இருக்கின்றார் என்றே நாம் அறியப் பெறுகின்றோம். இந்நிலையில் அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே இறைவன் இருக்கின்றார். அன்பு எங்கே இல்லையோ அங்கே தீமை இருக்கின்றது. அதாவது தீமை என்று ஒன்று தனியாகக் கிடையாது...அன்பு இல்லாத நிலையே தீமையாகும்.

நாம் சென்றப் பதிவினில் கண்டவாறு மனிதனால் இவ்விரண்டு நிலைகளும் எந்த நிலையை வேண்டும் என்றாலும் தேர்வு செய்ய இயலும். அன்பின் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும்...அன்பிலாத சுயநலப் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும். அவனுடைய அத்தேர்வின் படியே உலகம் அமைகின்றது. அவன் எதனைத் தேர்வு செய்து இருக்கின்றான் என்பதனை இன்றைக்கு உலகம் இருக்கும் நிலையை வைத்தே அறிந்துக் கொள்ளலாம்.

சரி அதனைப் பற்றி மற்றக் கேள்விகளில் விரிவாகக் காணலாம் இப்போதைக்கு தீமையைப்/சாத்தானைப் படைத்தது யார் என்றக் கேள்விக்கு விடை, தீமை/சாத்தான் என்று ஒன்று தனியாகக் கிடையாது...நன்மை/அன்பு/கடவுள்தன்மை இல்லாத நிலையே அது ஆகும். அது ஆணவ நிலை. அன்பு வரும் பொழுது அந்த ஆணவ நிலை ஒடுங்கி விடும்.

2) சரி இறைவன் தீமையைப் படைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்...பின்னர் ஏன் மனிதன் தீய நிலைக்கு சென்றதை இறைவன் கண்டிக்கவில்லை? அவன் தீமை செய்யாது ஏன் தடுக்கவில்லை? எல்லாம் வல்ல இறைவனால் தீமையைத் தடுக்க முடியாதா?

இந்தக் கேள்வியையும் நாம் இறைவனைப் பற்றிப் பேசுகையில் எதிர்கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி இப்பொழுது இதற்கும் விடையினைக் காண முயற்சிப்போம்.

சமயங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை தந்தை-பிள்ளைஎன்ற நிலையிலேயே கூறுகின்றன. இந்நிலையில் இறைவன் மனிதனுக்கு அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகைப் படைத்து தந்து விட்டான். அந்த உலகத்தின் ஆட்சி மனிதனின் கைகளில் இருக்கின்றது.

அவ்வுலகத்தின் ஆட்சியோடு முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் மனிதனுக்கு இறைவன் வழங்கி உள்ளார். காரணம் மனிதனை வெறும் விலங்கினைப் போல் இல்லாது அவரது மகனினைப் போலவே படைத்து உள்ளார்.

அதாவது மனிதனுக்கு சுதந்திரமும் இருக்கின்றது அதே நேரம் ஆட்சிப் புரிய ஒரு உலகமும் இருக்கின்றது. ஆனால் இங்கே தான் மனிதன் தவறு செய்ததாக சமயங்கள் கூறுகின்றன.

முதல் மனிதன் 'இறைவனின் சொல்லினைக் கேட்காமல் அவரது கூற்றினை மீறியதால் இறைவனின் தொடர்பை இழந்து தீமையுள் மூழ்கினான்' என்று கிருத்துவம் கூறுகின்றது.

அதைப் போன்றே சைவ சித்தாந்தமும்

"முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற – திருஉந்தியார் – 41"

""அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்" - சிவஞானபோதம் 1

என்று முதல் மனிதன் பாவத்தில் வீழ்ந்த நிலையைக் கூறுகின்றது. அதாவது சுதந்திரமாக முடிவினை எடுக்கும் வல்லமையை பெற்று இருந்த மனிதன் அன்பிற்கு மாறான முடிவினை எடுத்ததால் தீமையில் விழுந்து நன்மையை விட்டு விலகி விட்டான் என்பதே அவை கூறும் கருத்தாகும்.

இதனைப் பற்றி இன்னும் விரிவாக பார்க்க நாம் விவிலியத்தின் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. விவிலியத்தின் படி இறைவன் உலகைப் படைத்து விட்டு அதன் ஆட்சியை மனிதனிடத்து கொடுத்தார் என்று இருக்கின்றது.

"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." - ஆதியாகமம் 1:27-28

ஆனால் இயேசு வருகையிலோ நிலைமை வேறாக இருக்கின்றது. இயேசுவிடம் சாத்தான், அவர் சாத்தானை வணங்கினால் உலகின் அனைத்து அரசுகளையும் அவருக்குத் தருவேன் என்றுக் கூறுவதனைப் போல் வருகின்றது.

"மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்." - மத்தேயு 4:8-9

இங்கே தான் ஒரு கேள்வி...மனிதனுக்காக இறைவன் படைத்த உலகின் ஆட்சியை எப்படித் தீயது மற்றொருவருக்கு வழங்க முடியும்? ஒரு பொருள் என்னுடைய பொருளாக இருந்தால் தானே என்னால் அதனை மற்றவருக்கு வழங்க முடியும்?

எனவே உலகின் ஆட்சியை சாத்தான் வழங்க வல்லதாக இருக்கின்றது என்றால் உலகின் ஆட்சி யாரிடம் இருக்கின்றது என்றுப் பொருள்? தீமையிடம் அல்லவா இருக்கின்றது என்றுப் பொருள்!!! அது தான் நிலவரம்.

அன்பின் வழி ஆட்சி செய்ய வேண்டிய மனிதன் தீமைக்கு வீழ்ந்ததால் அவனது ஆட்சி இன்று தீமையின் வசம் இருக்கின்றது. மனிதன் அவனது ஆட்சியை தீமையிடம் இழந்து விட்டு நிற்கின்றான். இதனை நாம் இன்றைய உலகினைக் கண்டாலே அறிந்துக் கொள்ளலாம்.

இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்றவர்களும் பேராசை பொறாமை ஆகியத் தீய குணங்களை அடிப்படையாகக் கொண்ட மனிதர்களும் அரசுகளும் தான் இன்று ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

அன்பிற்கு மாற்றாக பயமும் சுயநலமும் இன்று உலகத்தின் அடிப்படையாக இருக்கின்றன. தீமை உலகை ஆண்டுக் கொண்டு இருக்கின்றது.

இது தான் நிலவரம்.

மனிதன் அவனது ஆட்சியினை இழந்து விட்டான். அதனை மீட்டு எடுக்கத் தான் அவன் முயன்றுக் கொண்டு இருக்கின்றான். நிற்க.

இதுவரை மனிதன் அவனது ஆட்சியை இழந்தான் என்றும் இன்று தீமை தான் ஆண்டுக் கொண்டு இருக்கின்றது என்றும் கண்டோம்...இங்கே சில கேள்விகள் எழலாம், இவ்வளவு நடக்கும் பொழுது எல்லாம் உங்க எல்லாம் வல்ல இறைவன் எங்கே சென்றார் என்று....ஏன் இதனை எல்லாம் அவர் அனுமதித்தார் என்று?

அக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நாம் ஒரு சூழலைக் காண வேண்டி இருக்கின்றது.

நமக்கு ஒரு மகன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நல்ல பெற்றோராக நாம் அவனுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து அவனுக்குரிய சுதந்திரத்தையும் அவனிற்கு கொடுத்து வைப்போம். அது தான் கடமை. மேலும் ஒரு பெற்றோராக நமது பிள்ளை நல்லதே செய்வான் என்ற நம்பிக்கையுடனே இருப்போம். அவன் தவறு செய்தால் "தம்பி...நீ செய்வது தவறு" என்று அன்பின் அடிப்படையிலேயே கூறுவோமே தவிர அவனை வெறுக்க மாட்டோம். வேறு வழி இல்லை அவன் நமது பிள்ளை. அவனை நல்வழிக்கு கொண்டு வர நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். ஆனால் நம்முடைய அன்பினை உணர்ந்துக் கொண்டு நல்வழிக்கு வருவதும் வராததும் முற்றிலும் அவனைப் பொறுத்தது. அந்த சுதந்திரம் நாம் அவனுக்கு வழங்கியது. எனவே அவனாக உணர்ந்து திருந்தினால் ஒழிய அம்மாற்றம் நிரந்திரமான உண்மையான மாற்றமாக இருக்காது. நல்ல குணங்கள் அவனுக்கு உள்ளே இருக்கின்றன...நிச்சயம் ஒரு நாள் அவன் திருந்தி வருவான் என்ற நம்பிக்கையுடனே தான் நாம் காத்து இருப்போம்.

அதே நிலைமை தான் இறைவனுக்கும். இறைவனால் நிச்சயம் மாற்ற முடியும்...ஆனால் அதற்காக சுய சிந்தனையையும் சுதந்திரத்தையும் மனிதர்களுக்கு அவன் வழங்கவில்லை...முடிவெடுக்கும் உரிமை நமக்கு இருக்கின்றது. அதனை வைத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்றே அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்...வழி காட்டியவாறே. அவன் காட்டும் வழியினில் போவதும் போகாததும் நமது கைகளிலேயே இருக்கின்றன.

" இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்." -மத்தேயு7:13

எனவே உலகை மாற்ற வேண்டும் என்றால் நாம் கேட்க வேண்டியக் கேள்வி இறைவன் என்ன செய்தான்/என்ன செய்வான் என்பதல்ல...மாறாக சகோதரர்களாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே ஆகும். காரணம் வழிகாட்ட அவன் தயாராக இருக்கின்றான் ஆனால் அன்பின் வழியாக பயணிக்க நாம் தயாராக இருக்கின்றோமா?

சரி இருக்கட்டும்...இன்னும் பல விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கடந்தப் பதிவுகளில் உயிரும் ஆன்மாவும் வேறானவை என்றும் ஆன்மா மாயையால் சூழப்பட்டு இருப்பதினால் இறைவன் உணர்த்தாமல் அதனால் இறைவனை உணர முடியாது என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இங்கே தான் நண்பர்கள் சிலர் சில கேள்விகளை முன் வைக்கின்றனர்.

இறைவன் தான் மனிதனை மாயையினுள் வைத்து இருக்கின்றான் என்றால் மனிதன் தவறு புரிவதற்கு இறைவன் தான் காரணமா? இறைவன் உணர்த்தினால் மனிதன் உணர்ந்துக் கொள்வான் என்றால் ஏன் அனைத்து மனிதர்களுக்கும் உணர்த்தி உலகை இறைவன் நல்வழிப்படுத்தாது இருக்கின்றான்? இந்தக் கேள்விகளுக்குத் தான் நாம் இப்பொழுது விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மனிதனைப் பற்றி இங்கே அறிய வேண்டி இருக்கின்றது.

மனிதன் இந்த உலகம் முழுவதையும் அறிந்துக் கொள்ளவும் அதனைக் கட்டுப்படுத்தி ஆண்டுக் கொள்ளவும் ஆற்றல் பெற்று இருக்கின்றான். மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக மாறாமலே அதனதன் இயல்புகளுடனே வாழ்ந்துக் கொண்டு வர மனிதன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஒருவனால் தனக்காக ஆயிரம் பேரை கொலை செய்யவும் முடிகின்றது அதே நேரம் ஒருவனால் பிறருக்காக தன் உயிரைத் தியாகம் செய்யவும் முடிகின்றது. அதனால் தான் மனிதனை யாராலும் வரையறை செய்ய முடிவதில்லை. ஒரு மனிதன் அவனது சிந்தனைகளின் படியே அமைகின்றான். நிற்க.

இப்பொழுது இந்த எண்ணங்களைப் பற்றியும் சுய சிந்தனையை (ஆங்கிலத்தில் free will) பற்றியுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் மனிதனை இயந்திரமாகவோ அல்லது மற்ற உயிரினங்களைப் போலவோ படைக்கவில்லை...மாறாக அவனை சுதந்திரமான ஒருவனாய் படைத்து அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகையும் தந்துள்ளார். அதாவது மனிதனின் முடிவுகள் மனிதனின் கைகளிலேயே இருக்கின்றன. அவனால் நல்லது செய்யவும் முடியும் தீமை செய்யவும் முடியும். எவற்றை தான் செய்ய வேண்டும் என்கின்ற முடிவினை எடுக்கும் உரிமை மனிதனிடத்தே தரப்பட்டு உள்ளது.

உதாரணத்திற்கு, விவிலியக் கதைகளில் மனிதனைப் படைத்த இறைவன் அவனை ஒரு பழத்தினை உண்ணாதே என்று கூறினார் என்றக் கதை வருகின்றது. ஆனால் அக்கதையின் படி மனிதன் அப்பழத்தை உண்ணுகின்றான். அதாவது இறைவன் கூறியதை மீறுகின்றான். அதற்குரிய உரிமையை அதாவது சுய விருப்பத்தை அவன் பெற்று இருக்கின்றான். இறைவன் அவனுக்கு அந்த உரிமையை வழங்கி இருக்கின்றார்.

மனிதனை படைத்த இறைவன் அவன் முழு சுதந்திரத்தோடு இருக்கும் வண்ணமே படைத்து இருக்கின்றார். மனிதனின் செயல்களை மனிதனே முடிவு செய்யும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பிரச்சனை இங்கே தான் ஆரம்பிக்கின்றது. இதனை ஒரு சிறு கதை மூலம் காணலாம்...

ஒரு தந்தை ஒரு மாபெரும் தோட்டம் ஒன்றினை அமைத்து அதில் பல்வேறு கனி தரும் மரங்கள், விவசாய நிலங்கள் போன்றவைகளை அமைத்து அதனை

"மக்களே...இங்கே உங்கள் அனைவருக்கும் சரி...உங்களுக்கு பின்னர் வர போகும் அனைவருக்கும் சரி போதுமானவைகள் தாராளமாக இருக்கின்றன...அனைவரும் அங்கே சென்று நன்றாக வாழுங்கள்" என்றே தனது மக்களுக்கு தருகின்றார்.

ஆனால் அத்தோட்டத்திற்கு சென்ற மக்களோ, ஒவ்வொருவருடன் பொறாமையும் பேராசையும் கொண்டு சண்டை இட ஆரம்பித்தனர். இங்கே உள்ளது அனைவருக்கும் பத்தாது என்ற எண்ணம் அவர்களின் மனதினில் வளர ஆரம்பித்தது. அதனால் ஒவ்வொருவரை கொலை செய்துக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டும் அத்தோட்டத்தையே நாசமாக்கத் துவங்கினர்.

அவர்களின் இந்தச் செயல்களால் அவர்களுக்கும் சரி அவர்களுக்கு பின் வரக் கூடிய மக்கள் அனைவருக்கும் போதுமானவைகளை தர வல்லமைப் பெற்று இருந்த அந்த தோட்டம் நிலை குலைய ஆரம்பித்தது. பொருட்கள் வீணாகி கொண்டு இருந்தன. மக்கள் அச்சத்துடனும் பேராசையுடனும் நிம்மதி இன்றியே வாழ்ந்துக் கொண்டு இருந்தனர்.

அதனைக் கண்ட தந்தையோ "ஐயகோ...மக்கள் தவறு இழைக்கின்றனரே" என்றே மனம் வருந்தி"மக்களே இங்கே உங்கள் தேவைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றது...அன்புடன் ஒருவருக்கு ஒருவர் நேசம் கொண்டு வாழுங்கள்...பேராசை பொறாமை ஆகியவற்றைக் களைந்து ஒழியுங்கள்...அவைகள் இங்கே தேவை இல்லை" என்றே கூறியும் அவற்றைப் பெரிதாய் கேட்பார் யாரும் இல்லை.

ஒரு சில மக்களுக்கு தந்தையின் கூற்று புரிய ஆரம்பிக்க அவர்கள் மற்றவர்களுக்கு கூற ஆரம்பிக்கின்றனர். "அன்பு தான் தேவை சகோதரர்களே...இங்கே நமக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன...நாம் அச்சம் கொள்ளத் தேவை இல்லை...போதும் என்ற மனதுடன் நன்றாக வாழ்வோம்...நாம் அனைவரும் சகோதரர்கள்" என்றே அவர்கள் கூற ஆரம்பிக்கின்றனர். இருந்தாலும் பெருன்பான்மையான மக்கள் அவர்களின் கூற்றுகளில் உள்ள உண்மையினைப் புரிந்துக் கொள்ளாது தொடர்ந்து பேராசையுடனும் பயத்துடனுமே வாழத் தலைப்படுகின்றனர்.

அனைவரின் தேவைக்கும் அதிகமான பொருட்கள் இங்கே இருக்கின்றன என்ற உண்மையை அவர்களது சுயநலமும் பயமும் மறைத்து விடுகின்றது. அதனாலே அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற எண்ணம் அவர்களும் வேரூன்றி நிற்கின்றது. அதனாலே உலகம் அழிவுப் பாதையில் செல்லத் துவங்குகின்றது.

அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துக் கொண்டு அன்பால் இணைந்து வாழ முடியும் என்ற உண்மை அனைவரின் முன்னேயும் சரி அனைவரின் மனதிற்குள்ளேயும் சரி உலகில் நிற்கின்றது. ஆனால் அதனை ஏற்றுக் கொண்டு அன்பால் உலகை இயக்குவதும் அல்லது ஏற்றுக் கொள்ளாது பயத்தாலும் பேராசையாலும் உலகை அழிப்பது என்ற முடிவு மனிதனின் சுய சிந்தனைக்கே விடப்பட்டு இருக்கின்றது.

சரியானதை தேர்ந்தெடுத்து செய்யும் வல்லமையும் அவனுக்குள் இருக்கின்றது. தவறானதை தேர்ந்தெடுத்து அதனை மேற்கொள்ளும் வல்லமையும் அவனுக்கு இருக்கின்றது. இந்த முடிவுகள் முழுக்க முழுக்க மனிதனின் கைகளிலேயே கொடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும்.

மனிதனுள் நல்லதும் இருக்கின்றது...தீமையும் இருக்கின்றது...அவன் அதனுள் எதனைத் தேர்ந்து எடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே உலகம் அமைகின்றது. நிற்க.

சரி...ஒரு சிறு கதையைப் பார்த்தாயிற்று. ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இங்கே உதவுவதில்லை. ஏனெனில் பல்வேறுக் கருத்துக்கள் பல்வேறு வடிவங்களில் இங்கே உலவிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாம் வெறும் கதைகளை மட்டுமே கூறுவது பெரிய நன்மைகளுக்கு வழி வகுக்காது. இந்நிலையில் தான் நாம் நமது சமயங்களையும் அவைகள் கூறும் கருத்துக்களையும் காண வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அவைகளைக் காணாது பல்வேறுக் கேள்விகளுக்கு நம்மால் விடைகளைக் காண முடியாது.

காண்போம்...!!!

பி.கு:

இத்தலைப்பிற்கு தொடர்புடைய இடுகைகள்...

திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்தக் கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்தக் கருத்துக்களுடன் ஒரு சிறந்தக் கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்று உள்ளார் அவர். அந்தக் கட்டமைப்புக்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் எண் 7 ஆகும். அது என்ன கட்டமைப்பு? அது என்ன எண் 7? காண்போம்…

திருக்குறள் வெண்பா வகையைச் சார்ந்த ஒரு நூலாகும். அதுவும் குறிப்பாக குறள் வெண்பாக்களால் ஆன குறள்களைக் கொண்டு விளங்கும் ஒரு நூல். ‘குறள் வெண்பா’ என்பது இரு அடிகளையேக் கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

திருவள்ளுவர் அத்தகைய குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள் என்னும் நூலாகும். அதாவது ஒவ்வொருக் குரலிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

சரி இப்பொழுது திருக்குறளின் அமைப்பினைப் பார்ப்போம்.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பொழுது அப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம்.

முதலில் அறத்துப்பால்…!!!

இது இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகியப் பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது.

இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள்.

துறவறவியலில் மொத்தம் 13 அதிகாரங்கள்.

ஊழியலில் மொத்தம் ஒரு அதிகாரம்.

எனவே மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34. அதன் கூட்டுத் தொகையாக வருவது 7.

20+13+1 = 34 = 3+4 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

சரி இப்பொழுது பொருட்பாலினைப் பார்ப்போம். பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையாக வருவதும் 7 தான்.

7+0 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

இதனைப் போன்றே தான் இன்பத்துப்பாலிலும்…மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்துக்கு 10 பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

2+5 = 7

எனவே…அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுப் பால்களில் உள்ள குறள்களின் எண்ணிக்கையும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனைப் போன்றே வள்ளுவர் அமைத்து உள்ளார்.

சரி…இப்பொழுது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களின் அதிகாரங்களையும் கூட்டினால் 129 அதிகாரங்கள் வருகின்றன.

34+70+25 = 129

ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டுமே நிறுத்தி விடவில்லை. பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களையும் தந்துள்ளார்.

எனவே இப்பொழுது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை,

129+4 = 133.

அதன் கூட்டுத் தொகையும் 7 தான். மேலும் அதிகாரத்திற்கு 10 குறள்கள் என 1330 குறள்கள் 133 அதிகாரங்களில் இருக்கின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 தான்.

இது தான் வள்ளுவர் திருக்குறளை அமைத்து இருக்கும் கட்டுமான முறையாகும்.

ஒரு குறளுக்கு 7 சீர்கள்.

மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)

அறத்துப்பால் – 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

பொருட்பால் – 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் திருக்குறள் நூலில் யாராலும் எளிதில் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே.

உதாரணத்திற்கு...யாராவது திருக்குறளின் இடையில் குறள்களை சேர்க்க வேண்டும் என்று முயல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

1) அவர்களால் பத்திற்கு குறைவான குறள்களை இடைச்செருகலாக சேர்க்க முடியாது. ஏனெனில் அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்றே வள்ளுவர் அமைத்து உள்ளார். எனவே இடைச் செருகல் செய்ய முயல்வோர் பத்துப் பத்துக் குறள்களாக தான் சேர்க்க முடியும்.

2) அவ்வாறே அவர்கள் பத்து பத்துக் குறள்களாக சேர்க்க எண்ணினாலும் கூட்டுத் தொகையான எண் 7 ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 50 குறள்களை சேர்க்க முயல்கின்றனர் என்றால் மொத்த குறள்களின் எண்ணிக்கை 1380 ஆகி விடும். இதன் கூட்டுத் தொகை எண் ஏழாக வாராது. எனவே இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பது புலனாகி விடும்.

எனவே கூட்டுத் தொகையை மீறி திருக்குறளில் இடைச்செருகல் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 90 குரல்களை தயார் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் 1330+90 = 1420 குறள்கள் = 1+4+2+0 = 7 என்று கூட்டுத் தொகை 7 ஆக வரும்.

3) மேலும் அவர் அப்படியே 90 குறள்களைத் தயார் செய்தாலும், அதனை எந்த அதிகாரங்களுடன் இணைப்பது என்ற கணக்கினையும் காண வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பாலின் கீழ் வகுக்கப்பட்டு உள்ளது. அப்பால்களும் கூட்டுத் தொகை 7 என்ற எண்ணினால் கட்டப்பட்டு உள்ளன.

எனவே இத் தடைகள் அனைத்தையும் கவனித்தப் பின்னரே ஒருவரால் திருக்குரளினுள் இடைச் செருகல் செய்ய இயலும். ஆனால் பொருள் வித்தியாசம் வாராது மாற்றுக் கருத்துக்களை திருக்குறளில் இடைச் செருகலாக இத்தனை தடைகளை மீறி சேர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு செய்து இருந்தால் எளிதில் புலப்பட்டும் விடும்.

எனவே வள்ளுவரின் சாமர்த்தியம் அவரின் கருத்துக்களில் மட்டும் அல்ல அவர் அவரது நூலினை அமைத்த முறையிலும் உள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்.

தொடர்புடைய பதிவுகள்:

தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!!
திருக்குறள் என்ற உலகப் பொதுமறை - ஐந்தவித்தான்

ஊமையின் காதலை கண் தெரியாதவளிடம் எங்ஙனம் உரைப்பது நாஸ்தென்கா…!!!

*

அந்தோ…நாஸ்தென்கா…நாஸ்தென்கா!!!

சுற்றிலும் நீர் இருந்தும்

கடலின் நடுவே தாகத்தோடு நிற்கும் கடலோடியைப் போல்

ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்

ஊமையாய் நிற்கின்றேன் நாஸ்தென்கா…!!!

*

கடலோடியின் தாகம் அறியாது

அவனை மெதுவாக சுமந்துச் செல்லும் கடலினைப் போல்

என் மௌனத்தை அறியாது

என் கைப்பற்றியே என்னை அழைத்துச் செல்கின்றாய் நாஸ்தென்கா நீயும்…!!!

*

தொலைவில் மின்னும் நட்சத்திரங்களாய்

உன் காதல் உன் கண்ணில் மின்னிக்கொண்டு இருக்கின்றது நாஸ்தென்கா…

அதனைக் கண்டவாறே

நானோ தேயும் நிலவாய் அருகே உருகிக் கொண்டிருக்கின்றேன்…

இருவரையும் சுமந்துக் கொண்டு இரவும் கரைந்துக் கொண்டே இருக்கின்றது…!!!

*

ஊமைகளின் வாழ்க்கை கொடுமையானது நாஸ்தென்கா…!!!

காதலிக்கும் கரைக்கு ஆர்ப்பரித்து அலையினை அனுப்பும் கடலும்

தன்னைக் காதலித்து வரும் கடலோடிக்கு மௌனத்தையே தருகின்றது நாஸ்தென்கா….

மௌனத்திற்கு எதிராய் தமிழ் கூட பயன் இல்லையே நாஸ்தென்கா

என் செய்வேன் நாஸ்தென்கா நானும்…ஊமையாவதைத் தவிர.

ஆம் நாஸ்தென்கா…ஊமைகளின் வாழ்க்கை கொடுமையானது தான்!!!

*

ஆம் நாஸ்தென்கா…!!!

இது உன் பெயர் அல்ல தான்…!!!

இருந்தும் பெயர்களை நீ கடந்து நாட்களாகி விட்டன நாஸ்தென்கா…

இன்று

அனைத்துப் பெயர்களும் உன்னையே குறிக்கும் பொழுது

பெயர்களில் என்ன இருக்கின்றது நாஸ்தென்கா…!!!

*

விடை தெரியவில்லை எனக்கு நாஸ்தென்கா…!!!

நீயே சொல்…

ஊமையின் காதலை கண் தெரியாதவளிடம் எங்ஙனம் உரைப்பது நாஸ்தென்கா…!!!

பி.கு:

பியோதார் தாச்தோவஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் என்ற புத்தகத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு சிறு முயற்சி…!!!

உடலும் உயிரும் எவ்வாறு இயங்குகின்றன என்றே நாம் கண்டு வருகின்றோம்...!!!


உலகமும் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. ஒரு பொழுதும் அது ஓய்வுக் கொண்டு இருப்பதில்லை. அதுவும் சிற்றுடலைப் போன்றே பல விதிகளின் படி செம்மையாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய அறிவியல் இதனைப் பற்றித் தான் இயங்கவியல் என்றுக் கூறுகின்றது. உலகம் ஒரு சடப் பொருள் அல்ல...அது இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வுடலுக்கென்று பல்வேறு பணிகள் இருக்கின்றன...அவைகள் செம்மையாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன...எப்பொழுது அப்பணிகளில் பிரச்சனைகள் நிகழ்கின்றதோ அப்பொழுது அதற்கேற்ற பின்விளைவுகள் நிகழப் பெறுகின்றன. இருந்தும் உலகமும் தன்னிச்சையாக மீண்டும் அனைத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளத் தான் செய்கின்றது.

எவ்வாறு ஒரு உடல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றதோ அதனைப் போன்றே உலகும் அதனை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகளைச் செய்யும் வல்லமையைப் பெற்று இருக்கின்றது. இது தான் இயற்கை. இவை அனைத்தும் விதிகளின் படியே நிகழ்கின்றது. ஆனால் சிற்றுடலால் தானாக இயங்க முடியாது. உயிர் இருந்தால் தான் இயங்க முடியும். அதைப் போல் தான் பேருடலான உலகின் நிலையும்.

சிற்றுடலான மனித/உயிரினங்களின் உடல் எவ்வாறு பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றதோ அதனைப் போன்று தான் இந்த பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எவ்வாறு உயிர் இன்றி சிற்றுடலால் இயங்க முடியாதோ அவ்வாறே உயிர் இன்றி பேருடலால் இயங்க முடியாது. சிற்றுடலை இயக்க சிற்றுயிர் இருப்பதனைப் போன்று பேருடலை இயக்க பேருயிர் இருக்கின்றது.

எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே சிற்றுயிர் பேருயிரிடம் கலக்கின்றது.

இந்த இயக்கம் முழுவதும் நெறிப்பட்ட விதிகளின் வழியே நடைப்பெறுகின்றன. உடலின் விதிகளை அறிவதை நாம் மருத்துவம் என்கின்றோம்...பேருடலின் விதிகளை அறிவதை அறிவியல் என்கின்றோம். இங்கே நாம் உடலையும் உயிரையும் பற்றி மட்டுமே கண்டு இருக்கின்றோம். ஆன்மாவைப் பற்றி நாம் காணவில்லை. பிரச்சனை இல்லை இப்பொழுது காணலாம்...!!!

உலகிற்கு என்று உடல் இருக்கின்றது அதனை இயக்கும் உயிரும் இருக்கின்றது என்று நாம் கண்டோம். அதனைப் போன்றே உயிரினங்களுக்கும் உடல் இருக்கின்றது அதனை இயக்கம் உயிரும் இருக்கின்றது என்றும் கண்டோம் சரி. ஆனால் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் சிறப்பாக ஆன்மா என்று ஒன்று இருக்கின்றது என்று கூறுகின்றோமே அது எப்படி என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

இந்த உலகத்தினை நாம் உற்றுக் கவனித்தோம் என்றால் அனைத்து உயிரினங்களையும் கட்டுப்படுத்தி ஆட்சிப் புரியும் வல்லமையை மனிதன் பெற்று இருக்கின்றான் என்பது புலனாகின்றது. அவனது உடல் இயங்கும் முறையினைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அவன் வசிக்கும் உலகம் இயங்கும் முறையைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அதனை மாற்றும் வல்லமையையும் அவன் பெற்று இருப்பதையும் அவனது செயல்களால் அறிய முடிகின்றது.

மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக எப்படி இருந்தனவோ அதனைப் போன்றே தொடர்ச்சியாக இருக்க மனிதன் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றான்...அனைத்தையும் அறிந்துக் கொண்டு, ஆக்கிக் கொண்டு, அழித்துக் கொண்டு...!!!

இந்த வல்லமையை அவன் மட்டும் பெற்று இருப்பதற்கு காரணம் என்று இறை நம்பிக்கையாளர்கள் கூறுவது அவன் ஆன்மாவை பெற்று இருக்கின்றான். உலகையும் உயிர்களையும் படைத்த இறைவன் மனிதனுள் ஆன்மாவை வைத்து இருப்பதன் மூலம் அவனுக்கு இவ்வுலகத்தின் மேலும் உயிர்களின் மேலும் ஆதிக்கத்தை தந்து இருக்கின்றார் என்பதே அவர்களின் கூற்று.
 
//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது சவுலின் கூற்று. (கிருத்துவம்)
 
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் (சைவம்)

அதனால் இவ்வுலகத்தின் விதிகள் அனைத்தையும் தனது முயற்சியால் அறிந்துக் கொள்ளும் வல்லமை மனிதனுக்கு உண்டு...அவனால் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியும் இறைவனைத் தவிர. இறைவனை அவன் அறிய வேண்டும் என்றால் இறைவனாக அவனுக்கு உணர்த்த வேண்டும்...இறைவன் உணர்த்தாமல் மனிதனால் இறைவனை அறிய முடியாது(இங்கு தான் மாயை என்ற ஒன்று வருகின்றது...இதனைப் பற்றி இன்னொரு பதிவில் காணலாம்) . இறைவன் மனிதனுக்கு ஆன்மாவின் மூலமாகத் தான் உணர்த்த முடியும். எப்பொழுது இறைவன் உணர்த்துகின்றானோ அப்பொழுது மனிதன் இறைவனின் அடி நோக்கிச் செல்வான் என்பதே சமயங்களின் கருத்தாகும்.

அதனைப் போன்றே எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே இறைவனின் ஒரு பகுதியான ஆன்மாவும் இறைவனை சென்று அடையும். இது தான் சமயங்களின் கருத்தாகும்.

ஆனால் இக்கருத்துக்கள் வெளி வராத வண்ணம் அனைத்து சமயங்களும் அரசியலால் அடிமைப்படுத்தப் பட்டுக் கிடக்கின்றன. ஆகையால் பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிர்கள் இருக்கா என்று அறிவியல் தேடுமே ஒழிய பிரபஞ்சத்தின் உயிர் என்ன என்று அதனால் தேடல் இயலாது. தன்னுடைய ஐம்புலன்களுக்கு தென்படும் உடலினை ஆய்வு செய்யுமே தவிர அதனால் உயிரைப் பற்றியோ அல்லது ஆன்மாவைப் பற்றியோ அல்லது இறைவனைப் பற்றியோ அறிந்துக் கொள்ள முடியாது.

காரணம் மனிதனால் இறைவன் உணர்த்தினால் மட்டுமே தான் இறைவனை உணர முடியும். அந்நிலையில் இறைவனைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறியதை மனிதனுக்கு கூறி அவனை நல்வழிப் படுத்த வேண்டிய கடமை சமயங்களையும் இறை நம்பிக்கையாளர்களையும் சேருகின்றது. ஆனால் இன்றைக்கு அவைகள் அனைத்தும் அரசியலுக்கு பலியாகி இருப்பதனால் உண்மை மறைந்து தான் இருக்கின்றது.

அட சரிங்க...இறைவன் உணர்த்தினால் ஆன்மா உணர்ந்து விடும் அப்படின்னு சொல்றீங்க சரி...அப்படினா கடவுள் எல்லா மனுசனையும் உணர வச்சிரலாம்ல...ஏன் எப்படி வைக்காம மனுசன் துன்பப்படுறத பார்த்துகிட்டு இருக்காரு? என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது... இங்கே தான் நாம் மாயையைப் பற்றியும் இன்னும் சில விடயங்களைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது...

காணலாம்...!!!

தொடரும்....

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

உடல் உயிர் மற்றும் ஆன்மாவினைப் பற்றியே இப்பதிவுகளில் நாம் கண்டு கொண்டு வருகின்றோம். உயிர் வேறு ஆன்மா வேறு என்றும், ஆன்மா மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் நாம் கூறி இருக்கின்றோம். அதனை முன்னிட்டு நண்பர்கள் சில கேள்விகளையும் மாற்றுக் கருத்துகளையும் முன் வைத்து இருக்கின்றனர். இப்பொழுது நாம் அவற்றிற்குத் தான் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன் முந்தையப் பதிவுகளைப் படித்திராவிடில் படித்து விட்டு தொடர்வது நலமாக இருக்கும். முந்தையப் பதிவுகள்.

 
சரி...இப்பொழுது நண்பர் ஒருவரின் கருத்தினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

//ஆதியில் தோன்றிய அனுவான பரம அனு முதல் பஞ்சபூதங்கள் வரை, அதன் கூட்டு உயிர் வரை அனைத்துமே பரிணாமத்தின் விளைவு தான். ஓரறிவு உயிரி, தன் சுயத் தேவையால் விளைந்திட்ட எண்ணத்தால், வேண்டுதலால் இரறிவாகி அதன் தொடர்ச்சியே 6 அறிவு உயிரியாக பரிணாமம் கொண்டுள்ளது. உயிர் தான் ஆன்மா. அதை எப்படி மறுக்க முடியும்?உயிரின் மீது போர்வைப் போல் போர்த்தி இருப்பது தான் பரிணாமத்தினால் ஏற்பட்ட இன்ப மயக்கம்/ துன்பப் பதிவுகள் தான் உயிரை சுற்றி மாயையாக இருந்து செயல்படுத்துகிறது.//

இது நண்பர் ஒருவரின் கருத்து. இவரின் கூற்றின் படி பரிணாமத்தின் விளைவின் படி தான் உயிர் தோன்றி பல்வேறு அறிவு நிலைகளை எட்டி இருக்கின்றது. அதாவது இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் கூறும் கருத்தினை இவர் கூறி இருக்கின்றார். ஆனால் கூடுதலாக ஆன்மா, மாயை போன்ற கூற்றுகளையும் வேறு கூறி இருக்கின்றார். இங்கு தான் குழப்பமே எழுகின்றது.

அதாவது பரிணாம வளர்ச்சி என்பது இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்திற்கு முற்றிலுமாக மாற்றுக் கருத்தாகும். அது ஒரு நாத்திகக் கொள்கை. இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு கூற்று. அக்கூற்றினைத் தான் இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் சுமந்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் ஆன்மா, மாயை என்பன எல்லாம் இறைவன் தொடர்புடைய விடயங்கள்...இவற்றை பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை உடையவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் பார்வையில் ஆன்மா மாயை போன்றவைகள் எல்லாம் முட்டாள்தனம். வெறும் கற்பனை. அவ்வளவே.

அதாவது இறைவனை நம்புவர்கள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை உலகமும் உயிர்களும் இறைவன் படைத்தது. இறைவனை நம்பாதவர்கள் ஆன்மாவையும் மாயை என்பதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் பரிணாம வளர்ச்சியையும் ஆன்மா மாயை போன்ற விடயங்களையும் இணைத்து நண்பர் தமது கருத்தினை வெளி இட்டு இருப்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

இக்கூற்றினை இறைவனை நம்பும் சமயங்களும் ஏற்றுக் கொள்ளாது...அறிவியலும் ஏற்றுக் கொள்ளாது. இருந்தும் இத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் பரவலாக இருப்பதற்கு காரணம் ஒரு அரசியல்...அதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் காண்பதற்கு முக்கியமான விடயங்கள் சில இருக்கின்றன.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது" என்ற வாக்கியத்தையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் ஏது இருக்கின்றதோ அது நமது உடலிலும் இருக்கின்றது என்பதே.

அண்டம் - உலகம்
பிண்டம் - உடல்
 
ஏன் அவ்வாறுக் கூறுகின்றார்கள்...அது சரியா? என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் பஞ்ச பூதங்களைப் பற்றிக் காண வேண்டி இருக்கின்றது.

இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி இறைவன் உலகை பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின் கூற்றின் படி உலகம் பஞ்ச பூதங்களால் உருவாகி இருக்கின்றது.

உருவாக்கப்பட்டதா அல்லது உருவானதா என்ற விடயத்தில் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பீனும் பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம் இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,

நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்

ஆகிய ஐந்தாகும். இவைகளைக் கொண்டு தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதனை யாரும் அறிவர். எனவே அண்டத்தில் உள்ளன யாவை என்றுக் கண்டால் இவைகள் ஐந்தும் விடையாய் வரும். இவைகளைக் கொண்டே அண்டம் இருக்கின்றது...இவைகளன்றி ஒன்றும் இல்லை. சரி இருக்கட்டும்.

இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்கின்றார்களே அது சரியா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்) உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது. வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம் தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது உடலில் இருக்கின்றது.

நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன. அவைகள் இல்லாது போனால் உடலின் இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து அழிந்து விடும். எனவே நீரும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.

காற்று - உடல் இயங்க காற்று மிக முக்கியமானதொன்றாகும். காற்று இல்லையெனில் சுவாசிக்க முடியாது. சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.

ஆகாயம் - வெற்றிடம். உடலினுள் வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள் போன்றவைகள் உதாரணத்திற்கு. வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.

நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து இருப்பதனைப் போல மனித உடலும் நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது. உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச் சேர்ந்து விடுகின்றது. நிற்க

இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரிகின்றது.

அதாவது,
 
உலகம் - பேருடல் - பெரிய உடல்
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்
 
என்றே நாம் கொள்ளலாம். (இங்கே நாம் உடலைப் பற்றி மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கின்றோம்...உயிர் மற்றும் ஆன்மாவைப் பற்றிக் காணவில்லை என்பதை நினைவிற் கொள்ளவும்)

உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடல் உயிர் எப்பொழுது பிரிகின்றதோ அப்பொழுது பேருடலான உலகத்துடன் கலந்து விடுகின்றது. இதனை அனைவரும் அறிவர். நிற்க

இங்கே தான் நாம் உயிரைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் உடல் ஒரு மாபெரும் மகத்தான இயந்திரம் என்று. பல்வேறு செயல்களை செம்மையாக செய்யக் கூடிய கருவிகள் பல இருக்கின்றன உடலினுள். ஆனால் உயிர் இல்லை என்றால் அவைகள் இயங்குமா என்றால் இயங்காது என்பதே பதிலாக வரும்.

எனவே ஒரு உடல் இயங்க உயிர் இன்றியமையாதத் தேவையாக இருக்கின்றது. உயிர் இருந்தால் தான் உடல் இயங்கி உயிரினம் ஆகின்றது. இந்நிலையில் தான் நாம் உடலின் இயக்கத்தைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
நமது உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றதா இல்லை எப்பொழுதாவது இயங்காது இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்தால் உயிர் உள்ள வரை நமது உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது என்றே பதில் வரும். உண்மையும் அது தான். நாம் அசையாது ஒரு இடத்தில் நின்றாலும் நமது உடல் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நம்முடைய அனுமதியோ கட்டளையோ உடலிற்கு தேவை இல்லை. நாம் உறங்கும் பொழுதும் உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

சரி இயங்குகின்றது...ஆனால் எவ்வாறு இயங்குகின்றது..தாறுமாறாக வரையறை அற்று இயங்குகின்றதா அல்லது ஒரு நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றதா என்றால் உடல் அதற்கென்று இருக்கும் நெறிப்படியே இயங்குகின்றது என்பது புலனாகும். உடலின் எந்தஒரு செயலும் காரணமின்றி அமைவதில்லை என்பதை நாம் கூர்ந்து பார்த்தால் அறிவோம். அதன் இயக்கத்திற்கு என்று ஒரு விதி இருக்கின்றது. அதன் படியே உடல் இயங்குகின்றது.

அவ்விதிக்கு மாறாக ஒரு விடயம் நேர்ந்தால் உடல் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. உதாரணத்திற்கு உடலிற்கு தகாத ஒரு பொருளை நாம் உண்டோம் என்றால் உடல் முதலில் அப்பொருளை வெளியேற்றப் பார்கின்றது அவ்வாறு இயலாத நிலையில் நோய் வாய்ப்படுகின்றது. நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ள தன்னிடம் இருக்கும் கருவிகளை (வெள்ளை அணுக்கள்...இதர இதர) பயன்படுத்த முயற்சிச் செய்துக் கொண்டு தான் இருக்கின்றது. உயிர் அதனை இயக்கிக் கொண்டு இருக்கின்றது. இச்செயல்கள் அனைத்தும் தன்னிச்சையாக நிகழப் பெறுவன. ஆனால் இச்செயல்களை நம்மால் ஓரளவு கட்டுப்படுத்தவும் முடியும்.

எவ்வாறு தகாத பொருளை உட்கொண்டதன் மூலம் உடலின் செயலைப் பாதித்தோமோ அதைப் போன்றே அதனை சரி செய்யவும் நம்மால் சில செயல்களை செய்ய முடியும். அதற்கு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற அவ்விதியினை நாம் அறிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற விதிகளை அறிவதன் பெயர் தான் மருத்துவம். நிற்க.

இப்பொழுது நாம் உடல் என்பது ஒரு அற்புத இயந்திரம் என்றும், உயிர் அதனை இயக்குகின்றது என்றும், அது விதிகளின் படி இயங்குகின்றது என்றும், அவ்விதிகளை நாம் அறிந்துக் கொள்ள முடியும் என்றும், அதன் இயக்கத்தை சீராக்கவும் அல்லது பழுது படுத்தவும் நம்மால் முடியும் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம்.

உயிர் இருக்கும் வரை சிற்றுடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இங்கே தான் நாம் பேருடல் என்று வழங்கப்படும் உலகினைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.
 
காணலாம்...!!!

தொடரும்...

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

நீண்ட இடைவெளிக்கு வருந்துகிறேன். வேறு சில வேலைப் பணிகளின் காரணமாக எழுத முடியாத ஒரு சூழல். சரி இப்பொழுது நாம் மீண்டும் தலைப்பிற்கு வர வேண்டி இருக்கின்றது.

உயிரும் ஆன்மாவும் ஒன்றல்ல...இரண்டும் வேறானவை என்றே நமது முந்தையப் பதிவுகளில் கண்டு இருந்தோம். ஆனால் அக்கூற்றினில் தான் நண்பர்கள் பல சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் கூறி இருந்தனர். இப்பொழுது அக்கருத்துக்களையும் அவற்றிற்குரிய விடைகளையும் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன்னர் முந்தையப் பதிவுகளை இதற்கு முன்னர் படித்து இருக்கவில்லை என்றால் படித்து விடுவது நலமாக இருக்கும்.


அப்பதிவுகளின் வாயிலாக உயிரினங்கள் அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது என்றும், அவற்றை புலன்களின் அடிப்படையில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை தமிழ் அறிவியல் பிரித்து வைத்து இருக்கின்றது என்றும், அதில் ஆறாவது அறிவு என்பது என்ன- அதற்கு உரிய புலன் என்ன என்பதில் குழப்பங்கள் பொதுவாக நிலவுகின்றன என்றும் நாம் கண்டு இருக்கின்றோம்.

சரி...இப்பொழுது ஒரு கேள்வி...!!!

உயிர் இருப்பதை யாராலும் மறுக்க முடியுமா?

இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் சரி இறை நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் சரி உயிர் இருப்பதை அவர்களால் மறுக்க முடியாது. உயிர் உள்ள உயிரினத்திற்கும் உயிர் அற்ற சடலத்திற்கும் உள்ள வேறுபாட்டினை அவர்கள் நிச்சயம் அறிவர். உயிர் இருக்கின்றது என்பதனை அறிவதற்கு இறைவனை அறிய வேண்டும் என்ற கோட்பாடுகள் எல்லாம் கிடையாது. உயிரை அனைவரும் அறிவர்.

அதனால் தான் இறை மறுப்புச் சமயமான சமணமும், இறைவனை அறியாத சமயமான பௌத்தமும் (நாத்திக சமயங்கள்), இறைவனைப் பற்றி எதுவும் அறியாத பொழுதும் உயிரினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து உயிரினங்களும் ஒன்றே என்று தங்களது கோட்பாடுகளைக் கொண்டு விளங்குகின்றன. அச்சமயங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளாது...ஆனால் உயிரினை ஏற்றுக் கொள்ளும்.

அதனால் தான் அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற நிலையில் மனிதன் விலங்காகப் பிறக்கலாம், விலங்கும் மனிதனாகப் பிறக்கலாம் என்ற பிறவிச் சுழற்சிக் கொள்கையை அவைகள் கொண்டு விளங்குகின்றன. காரணம் விலங்குகளுக்கும் உயிர் இருக்கின்றது...மனிதனுக்கும் உயிர் இருக்கின்றது. எனவே மனிதனும் விலங்கும் அடிப்படையில் ஒன்றே என்று அவைகள் கூறுகின்றன.

அச்சமயங்கள் இறைவனை ஏற்றுக் கொள்வதில்லை...அவ்வாறே ஆறாவது அறிவையும் தான். இதைத் தான் நாம் சமண சமயத்தினைச் சார்ந்த பவணந்தி முனிவரின் கூற்றுகளில் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

உயிர் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் அவர் ஆறாவது அறிவை மறுக்கின்றார். மனிதனும் விலங்கும் ஒன்றே என்றும் கூறுகின்றார். தவறில்லை...அவரது சமயத்தின் கோட்பாடே அக்கருத்து தான். ஆனால் மனிதனும் விலங்கும் ஒன்றே என்றுக் கூறும் அவரே மனிதன் விலங்கினைக் காட்டிலும் சிறந்தவன் என்று தமிழின் திணை இலக்கணத்தை வகுக்கும் பொழுது கூறுகின்றார்.

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" நன்னூல் 261

ஏன் இந்த வேறுபாடு என்பதை நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். நிற்க

எனவே உயிரினை அறிவதற்கு இறைவனை அறிய வேண்டும், இறைவன் வழி காட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது. உயிர் இருப்பதை எவர் வேண்டும் என்றாலும் அறிந்துக் கொள்ள முடியும். உயிரை மறுக்க முடியாது.

இங்கே தான் நாம் ஆன்மாவைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. உயிரை ஏற்றுக் கொள்வதனைப் போல் ஆன்மாவை அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. இறை நம்பிக்கையாளர்கள் மட்டுமே ஆன்மாவை நம்புகின்றனர்...ஏற்றுக் கொள்கின்றனர். இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இருக்கும் சமயங்கள் மட்டுமே ஆன்மாவினைப் பற்றிக் கூறுகின்றன.

அதாவது உயிரினை அனைவரும் ஏற்றுக் கொள்வதனைப் போல் ஆன்மாவினை அனைவரும் ஏற்றுக் கொள்வது இல்லை. இதைத் தான் மெய்கண்டார்,

"உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
....
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" - சிவஞானபோதம் 3

என்று கூறி இருக்கின்றார்.

"உளது இலது என்றலின்" - சிலர் ஆன்மா இருக்கின்றது என்கின்றனர்....சிலர் இல்லை என்கின்றனர் என்பதே இதன் பொருள் ஆகும் (விரிவான விளக்கம்)

அதாவது ஆன்மாவினை மறுக்கும் கருத்துக்களும் இருக்கின்றன என்பதனை நாம் மேலே உள்ள சூத்திரத்தின் வாயிலாக அறிந்துக் கொள்கின்றோம். அதாவது உயிரினை ஏற்றுக் கொள்ளும் அனைவரும் ஆன்மாவினை ஏற்றுக் கொள்வது இல்லை.

மேலும் தனது நூலான சிவஞானபோதத்தில்,

"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" - சிவஞானபோதம் 3
"சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது" - சிவஞானபோதம் 4
"இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா" - சிவஞானபோதம் 7

என்று ஆன்மாவை 'ஆன்மா' என்ற சொல்லின் மூலம் குறித்து இருக்கும் மெய்கண்டார்,

"விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு" - சிவஞானபோதம் 5
"காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்" - சிவஞானபோதம் 11

என்ற சூத்திரங்களில் ஆன்மாவைக் குறிக்க 'உளம்', 'உள்ளம்' என்றச் சொற்களை பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆன்மா, உளம், உள்ளம் என்பன வெவ்வேறு பொருளைக் குறிக்கும் சொற்கள் அல்ல...ஒரே பொருளைக் குறிக்கும் வேறு சொற்கள்.

ஆன்மா = உள்ளம் என்ற பொருளிலேயே மெய்கண்டார் தனது சிவஞானபோத நூலினை அமைத்து உள்ளார்.

உயிரும் ஆன்மாவும் ஒன்றே என்ற கருத்தினைக் கொண்டவர்கள் கூட உயிரும் உள்ளமும் வேறு என்பதனை அறிந்து இருப்பர். இந்நிலையில் ஆன்மாவை குறிப்பிட உள்ளம் என்ற சொல்லினை மெய்கண்டார் பயன்படுத்தி இருப்பது உயிரும் ஆன்மாவும் வேறு என்பதை பறைச்சாட்டுகின்றது.

மேலும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்,

"உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்..." - சிவஞானபோதம் 3
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" - சிவஞானபோதம் 8

என்ற சூத்திரங்களின் வாயிலாக ஆன்மாவானது ஐம்புலன்களோடு உடலினுள் இருக்கின்றது என்று.

அதாவது ஆன்மா உடலினுள் இருக்கின்றது என்றுக் கூறும் மெய்கண்டார் அது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அரசாண்டுக் கொண்டு இருக்கின்றது என்றே சேர்த்துக் கூறுகின்றார். இதன் வாயிலாக ஐம்புலன்கள் இல்லாத உயிரினங்களுக்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு இல்லை என்றே நாம் அறியப் பெறுகின்றோம். அதாவது அவ்வுயிரினங்களுக்கு உயிர் இருந்தும் அவற்றிற்கும் ஆன்மாவிற்கும் துளியும் தொடர்பில்லை.

இப்பொழுது எஞ்சி இருப்பது ஐம்புலன்களைக் கொண்ட விலங்குகளும் மனிதர்களும் தான். ஆனால் விலங்குகளுக்கு ஐம்புலன்களைத் தவிர்த்து வேறு சிறப்பு இருப்பதாக கூறப்படவில்லை. மேலும் அவைகளும் மற்ற உயிரினங்களைப் போல அஃறிணை யாகத் தான் தமிழ் இலக்கணத்தால் பிரிக்கப்பட்டு உள்ளன.

மேலும்,

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே." - சிவஞானபோதம் 8

என்ற சூத்திரத்தின் வாயிலாக ஐம்புலன்களின் துணையுடன் செயல்பட்டுக் கொண்டு இருந்த ஆன்மாவிற்கு இறைவன் உணர்த்த, தன்னைப் பற்றி இருந்த மாயையை விட்டு இறைவனின் அடி நாடி ஆன்மா செல்லும் என்று மெய்கண்டார் கூறி இருக்கின்றார்.

நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம், இறைவனை மறுத்த சிலர் தீவிர இறை அடியவர்களாக மாறி இறை சேவை செய்து இருப்பதை...நாயன்மார்கள், ஆழ்வார்கள், அபோசுதளர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனை எண்ணியே இறை சேவைகள் செய்து இருக்கின்றனர்.

"குதிரைகள் வாங்கச் சென்ற மாணிக்கவாசகர்இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறை சேவையை மேற்கொள்ள ஆரம்பித்தார். இயேசுவின் சீடர்களைத் தேடிக் கண்டு பிடித்து கொலை புரியும் பணியினை மேற்க் கொண்டு இருந்த பவுல், தூய பவுலாய் இறை பணியை அவரே மேற்கொண்டு இறுதியில் உயிரைத் துறந்தார்."

இத்தகைய வரலாறு மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது. ஆயிரமாயிரம் காலங்கள் கடந்தாலும் விலங்குகளின் பழக்க வழக்கங்கள் மாறாது இருக்கின்றன. ஆனால் மனிதன் மாறிக் கொண்டே இருக்கின்றான். மேலும் இவ்வுலகம் முழுவதையும் அவன் ஆட்சி செய்யும் வல்லமையும் பெற்று இருக்கின்றான். அவனே இறைவனை மறுக்கவும் செய்கின்றான்...இறைவனுக்காக உயிரையும் கொடுக்கின்றான்.

இதையேத் தான் திருமந்திரத்தில் திருமூலரும்

"பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரிய பேறு இழந்தாரே." - திருமந்திரம் 2090


என்று கூறுகின்றார். அதாவது இறைவனின் அடியினை அடையக் கூடிய மனிதராய் பிறந்து இருந்தும் இறைவனின் அடியினை நாடாது விலங்குகளைப் போல் திரிந்து இறைவனின் அருளினை இழக்கின்றனரே என்றே திருமூலர் மனிதர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

எனவே இந்நிலையில் இறைவன் உணர்த்தி ஆன்மா அவன் அடி நாடி சென்றது என்பதற்கு நாம் மனிதர்களிடம் இருந்து மட்டுமே சான்றுகளைப் பார்க்க முடியும். விலங்குகள் விலங்குகளாகவே இருக்கின்றன. மனிதனால் மட்டுமே இறைவனை உணர முடியும். அதுவும் இறைவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும். அவ்வாறு இறைவன் உணர்த்தி அவனை உணர உதவும் கருவியாய் இருப்பதே ஆன்மா. அதுவே தான் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு. அது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது.

உயிர் அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்பாக இருக்கின்றது. எவ்வாறு உயிர் உடலில் எங்கு இருக்கின்றது என்று சுட்டிக் காட்ட முடியாதோ அவ்வாறே ஆன்மாவையும் உடலில் எங்கு இருக்கின்றது என்று சுட்டிக் காட்ட முடியாது.

எனவே உயிர் வேறு ஆன்மா வேறு என்றே நாம் அறிய முடிகின்றது தானே...!!!

சரி இப்பொழுது மேலும் சில நண்பர்கள் சில விடயங்களைக் குறித்து கேள்விகள் எழுப்பி இருந்தனர்...அவைகளைக் காண முயற்சிக்கலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) சிவஞானபோதத்தின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள,

முந்தையப் பதிவு

சென்ற பதிவினில் ஆறாவது அறிவிற்கு காரணமாக ஆன்மா விளங்கலாம் என்றே கண்டு இருந்தோம். இப்பொழுது அக்கூற்று சரியான ஒன்றா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு ஆன்மா என்றால் என்ன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நமக்கு துணையாய் மெய்கண்டாரின் சிவஞானபோதம் என்ற நூல் நிற்கின்றது. அதன் வழியே கண்டோம் என்றால்,

1) ஆன்மாவானது உடலினுள் இருக்கின்றது
  • "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா"  - சிவஞானபோதம் 3
2) ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது
  • "ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்" - சிவஞானபோதம் 3
  • "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" - சிவஞானபோதம் 8
3) தன்னை அறியாத நிலையில் அது இருக்கின்றது
  •  "....ஆன்மா சகசமலத் துணராது" - சிவஞானபோதம் 4
4) இறைவன் உணர்த்தினால் இறைவனை உணரும் தன்மைக் கொண்டு இருக்கின்றது
  • "....உணர்த்த உணர்தலின்" -சிவஞானபோதம் 3
என்றே நாம் ஆன்மாவைப் பற்றி அறிய முடிகின்றது. இப்பொழுது இதை நாம் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

ஆன்மா என்பது ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் வல்லமைப் பெற்றது என்றே நாம் அறியப்பெறுகின்றோம். ஐம்புலன்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றால் முதலில் ஐம்புலன்கள் இருக்க வேண்டும். சரி தானே. அப்படிப்பார்த்தால்,

ஓரறிவு முதல் நான்கறிவு படைத்த உயிரினங்கள் அனைத்தும் அடிப்பட்டு போய்விடுகின்றன. அவற்றிற்கு ஆன்மா கிடையாது. சரி இப்பொழுது மீதம் இருப்பது ஐந்தறிவு உயிரினங்களும் மனிதர்களும் தான். இவைகளுள் நாம் கண்டோம் என்றால் ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவான ஒரு விடயம். மேலும் மனிதன் விலங்குகளை விட சிறந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான். அனைத்து உயிரினங்களையும் கண்டு அவற்றை ஆளும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான். அவன் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஆனால் வெறும் ஐந்தறிவுப் படைத்த மிருகங்களோ அவை தொடக்கத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறு தான் இன்றும் தொடர்ந்து இருந்துக் கொண்டு வந்து இருக்கின்றன.

இதனை நாம் காணும் பொழுது ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே உள்ளது என்றே அறிந்துக் கொள்ளுகின்றோம். அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விடயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.

அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது...ஆனால் ஆன்மா மனிதனுக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே மனிதனின் மேலாண்மைக்கு வழி வகுக்கின்றது என்றுமே நாம் அறிந்துக் கொள்கின்றோம்.

சரி ஆன்மா உடலினுள் இருக்கின்றது சரி...ஆனால் ஆன்மா செய்யும் செயல் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஐம்புலன்களைப் பற்றி நாம் விவரிக்கத் தேவை இல்லை. ஒவ்வொருப் புலனும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றது. கண் காட்ட உதவுகின்றது. மூக்கு நுகர உதவுகின்றது...இதனைப் போல ஒவ்வொரு புலன்களுக்கும் ஒவ்வொரு செயல்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு செயல்களும் ஒரு அறிவிற்கு காரணமாக இருக்கின்றன.

அவ்வாறு பார்த்தோம் என்றால் ஆறாம் அறிவு என்று ஒன்று இருந்தால் அந்த அறிவிற்கான உறுப்பும் நிச்சயமாக இருக்க வேண்டும் அல்லவா. அந்த உறுப்பினைத் தான் ஆன்மா என்கின்றனர் ஆன்மீகவாதிகள். சரி ஆறாவது அறிவிற்கான உறுப்பு ஆன்மா என்றே இருக்கட்டும், ஆனால் அந்த உறுப்பினால் பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்ற கேள்விக்கு அவர்கள் விடையாய் தருவது,

ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும். அவ்வாறு இறைவனை உணர உதவும் கருவியே ஆன்மா ஆகும் என்பதே அவர்களின் கூற்று.

அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்கு காரணமான ஆன்மாவினால் மட்டுமே இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி...மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா இருக்கின்றது, அதனால் தான் அவர்கள் உயர்திணை என்று தமிழால் உயர்த்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் ஆன்மாவின் வாயிலாக இறைவனை அறிந்துக் கொள்ளலாம் என்றுமே வைத்துக் கொள்வோம்...அப்படி இருக்கையில் மனிதர்களை ஐந்தறிவுப் படைத்த விலங்குகளோடும் தமிழ் அறிவியலில் வைத்து இருக்கின்றனரே...அது ஏன் என்றே கேள்வியை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒருவருக்கு கண் இருக்கின்றது. ஆனால் கண் செயல்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் அவர் ஐந்தாவது அறிவிற்கான உறுப்பினைப் பெற்று இருந்தும் அதன் வழியாகப் பெறக் கூடிய அறிவினைப் பெற இயலாத நிலையில் இருக்கின்றார்.

அதனைப் போன்று தான் மனிதர்களும் ஆன்மாவினைப் பெற்று இருந்தும் அதனை அறியாத நிலையில் ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை அடையாது விலங்குகளைப் போல் ஐந்தறிவினை வைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் அம்மக்களை மாக்கள் என்று தமிழ் அறிவியல் அழைக்கின்றது.

அதாவது அம்மக்களுக்கு ஆறாம் அறிவுக்குரிய ஆன்மா இருக்கின்றது, இருந்தும் அந்த ஆன்மாவானது தன்னை அறிந்துக் கொள்ளாமல் ஐம்புலன்களின் வழியே செயல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனால் இறைவனை அறிந்துக் கொள்ள இயலாத அந்நிலையில் அம்மக்களை மாக்கள் என்ற நிலையில் தமிழ் வைத்து இருக்கின்றது.

ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை பெற்றவர்களையே மக்கள் என்று தமிழ் வழங்குகின்றது.

கண் இருந்ததும் கண் தெரியவில்லை என்றால் அது ஏதாவது நோயாக இருக்கலாம்...இல்லை கண் குறைபாடு உடையதாக இருக்கலாம். ஆனால் ஆன்மா சரியாக வேலை செய்ய வில்லை அதனால் இறைவனை அறிய இயலவில்லை என்றுக் கூறுவது எங்கனம்? ஆன்மா குறை உடையதாக இருக்குமா என்ற கேள்வி இங்கே எழலாம்.

அதற்கு விடையாக ஆன்மீகவாதிகள் கூறுவது என்னவென்றால் ஆன்மாவானது மாயையினால் சூழப் பட்டு இருக்கின்றது (சகசமலம்), அதனாலேயே தான் அது தன்னையும் சரி இறைவனையும் சரி அறியாத நிலையில் இருக்கின்றது.

ஆனால் எப்பொழுது இறைவன் ஆன்மாவிற்கு தன்னை உணர்த்துகின்றானோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்து அவனின் அடிப்பற்றி செல்ல ஆரம்பிக்கும் என்பதே ஆகும். அந்நிலையில் ஆன்மா என்பது மனிதர்களுள் இறைவன் குடி கொண்டு இருக்கும் கோவிலாக மாறும் என்றுமே ஆன்மிகம் பேசுவோர் கூறி இருக்கின்றனர்.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இதனைப் பற்றி விரிவாக காண நாம் சிவஞானபோதத்தைக் காண வேண்டி இருக்கின்றது. அதனைப் பின்னர் காணலாம்.

இப்பொழுது,

ஆன்மாவானது மனிதர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே அவர்களின் ஆளுமைக்கும் ஆறாம் அறிவிற்கும் காரணம் என்றும் ஆன்மாவின் வாயிலாகவே இறைவனை உணர முடியும் என்றுமே அறிந்து இருக்கின்றோம்.

ஆனால் ஆன்மாவானது தன்னையும் இறைவனையும் அறியாத நிலையில் இயல்பாகவே ஆன்மா இல்லை என்றும் இறைவன் இல்லை என்றும் கருத்துக்கள் உலகில் எழுந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எப்பொழுது ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்துக் கொண்டு மெய்யுணர்வுப் பெறும் என்பதே தமிழ் கூறும் ஆன்மவியலின் கருத்து.

இதையேத் தான் மெய்கண்டார்

"ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி" - சிவஞானபோதம் 9


ஐம்புலன்களில் ஒன்றான கண்ணினைக் கொண்டு காண இயலாத இறைவனை ஞானக் கண் கொண்டு காணலாம் என்றும்,

திருவள்ளுவர்,

"ஐயுணர்வு எய்திய கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு" - குறள் 354

என்றும்

"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு" குறள் 352

கூறிச் சென்று உள்ளனர்.

மேலும் சிலர் உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அக்கூற்று தவறென்று தமிழ் அறிவியல் தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது.

உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு.

இந்த விடயத்தைத் தான் தமிழ் அறிவியல் மிகவும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கின்றது. அதனை அறிந்துக் கொள்ளாது உயிரினையும் சரி உடலினையும் சரி ஆன்மாவினையும் சரி தெளிவாக நம்மால் அறிந்துக் கொள்ள இயலாது.

உயிர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருக்கின்றது. ஆன்மா இருக்கும் காரணத்தினால் தான் மனிதனால் மற்ற உயிரினங்களை ஆட்சிப் புரிய முடிகின்றது. ஆன்மா இருப்பதினால் தான் அவனால் மாற்றங்களைப் புரிய முடிகின்றது. ஆன்மா அவனுக்கு சுயமாக முடிவு செய்யும் தன்மையை வழங்குகின்றது. ஆனால் ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளை செய்ய எத்தனிக்கின்றான்...எப்பொழுது இறைவன் அவனுக்கு உணர்த்துகின்றாரோ அப்பொழுது அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான்.

இது தான் தமிழக ஆன்மீகமும் அறிவியலும் கூறும் விடயமாகும்.

ஆனால் இதனை அறியாது வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியல் மனிதன் ஒரு மிருகம் என்றும் அவன் மிருகத்தில் இருந்து பரிணாம மாற்றத்தால் உருவானான் என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றது.

உயிரையும் சரி ஆன்மாவையும் சரி ஐரோப்பிய அறிவியல் இன்னும் ஆராயத் துவங்கவே இல்லை. ஆனால் தமிழிலோ, உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் முற்றுப் பெற்று ஆன்மீகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும் வளர்ந்துக் கிடக்கின்றன. ஆனால் தமிழும் தமிழனும் அடிமைப்பட்டுக் கிடப்பதால் இந்த விடயங்கள் வெளிவராமலே இருக்கின்றன.

ஆன்மாவினைப் பற்றிய அறிவியலான ஆன்மவியல் தமிழிலே மட்டுமே வளர்ந்து இருக்கின்றது. இதனை அறியாது தான் ஐரோப்பிய அறிவியல் இன்னும் உடலினை வைத்துக் கொண்டு குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் அறிவியல் வெளிவரும் வரை அந்நிலையும் சரி அக்கூற்றும் சரி தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்கும்.

அதனை வெளிக்கொணர வேண்டியக் கடமை நமக்கு இருக்கின்றது. முயல்வோம்...!!!

இத்துடன் இத்தொடர் முடிவு பெறுகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி நண்பர்களே...!!!உங்களின் கேள்விகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

3) சிவஞானபோதத்தின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள,

முந்தையப் பகுதி

தமிழ் அறிவியலில் உயிரை புலன்களின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றனர் சரி. தொடு உணர்வு மட்டுமே இருக்கும் உயிர்களை ஓரறிவு உயிர்கள் என்றும் ஐம்புலன்களும் இருக்கும் உயிர்களை ஐந்தறிவு உயிர்கள் என்றும் கூறி உள்ளனர் சரி. ஆனால் மனிதனை மட்டும் ஆறறிவு படைத்த உயிரினமாக கூறி இருக்கின்றனரே...அது ஏன்? அவன் ஆறாவது அறிவினை உடையவன் என்றால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு ஏது? ஆறாவது அறிவு என்றால் என்ன?

இப்பொழுது இக்கேள்விகள் தான் நம் முன்னே நின்றுக் கொண்டு இருக்கின்றன.நியாயமான கேள்விகள் தான். புலன்களின் வழியாக உயிர்களைப் பிரித்து இருக்கின்றார்கள் என்று கூறும் பொழுது ஆறாவது அறிவு என்று ஒன்று உள்ளது என்று நாம் கூறினால் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு எது என்றும் நாம் நிச்சயமாகக் கூறித் தானே ஆக வேண்டி இருக்கின்றது.

சரி இப்பொழுது அக்கேள்விக்கான விடையினைக்காண முயலலாம்.

ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் இருக்கின்றன. மனிதனும் ஐம்புலன்கள் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றான். மற்ற உயிரினங்கள் மாறாது இருக்கும் பொழுது இவன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம் என்று கண்டால் மனிதனுக்கு பகுத்தறியும் தன்மை இருக்கின்றது என்பதே சிலர் கொடுக்கும் விடையாகும்.

அதாவது மனிதனால் நன்மை தீமை என்று பகுத்தறிய முடியும் ஆனால் மிருகங்களால் அவ்வாறு பகுத்தறிய முடியாது, எனவே தான் மனிதன் மிருகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றான் என்றும் அந்த பகுத்தறியும் தன்மையே ஆறாவது அறிவு என்பதுமே இன்று பரவலாகப் பரவி இருக்கும் விடயமாகும்.

ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளாலும் பகுத்தறிய முடியும். ஒரு நாயின் முன்னே மெழுகினால் செய்த ரொட்டியினை நாம் வைத்தோம் என்றால் அது அதனுடைய புலன்களைப் பயன்படுத்தி (முதலில் முகர்ந்து பார்க்கும் பின்னர் நாவினால் சோதித்துப் பார்க்கும்) அந்த ரொட்டி சாப்பிட தகுந்தது அல்ல என்று அறிந்துக் கொண்டு அந்த ரொட்டியினை உண்ணாது நகர்ந்துச் சென்று விடும். அதாவது அதனுடைய புலன்களை பயன்படுத்தி ஒரு பொருளானது தனக்கு நல்லதா இல்லை கெட்டதா என்று பகுத்தறிந்துக் கொண்டு நாயானது சென்று விடுகின்றது.

எனவே பகுத்தறிவு என்பதுமனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதும் அதுவே தான் ஆறாவது அறிவு என்பதும் சரியான ஒரு விடயமாக அமையாது.

இந்நிலையிலேயே தான் உண்மையிலேயே ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லை என்றுக் கூறும் நாத்திக நண்பர்களும் இருக்கின்றனர். அவர்கள் இக்கால அறிவியலை வைத்துக் கொண்டு ஆறாவது அறிவு இல்லை என்று கூறுகின்றனர்.

மனிதனும் ஒரு விலங்கு தான். ஆறாவது அறிவு என்பது எல்லாம் வெறும் கதை என்பதே அவர்களின் வாதமாக இருக்கின்றது.

ஆனால் ஆச்சர்யவசமாக இதே கருத்தைத் தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த பவணந்தி முனிவரும் கூறிச் சென்றுள்ளார்... அவரது தமிழ் நூலான நன்னூலில்!!!

"மெய்ந் நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்று முதலாக் கீழ்க் கொண்டுமேல் உணர்தலின்
ஓர் அறிவாதியா உயிர் ஐந்தாம்" - நன்னூல் 444

என்று உயிர் ஐந்து வகைப் படும் என்று நன்னூலில் கூறி இருக்கும் அவர்,

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

என்று விலங்குகளும் மனிதர்களும் ஐந்தறிவுப் படைத்தவர்கள் என்றே கூறிச் சென்று உள்ளார். அதாவது இவர் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருப்பதை மறுத்து உள்ளார்.

ஆச்சர்யவசமாக இவரும் ஒரு நாத்திகரே!!! நாத்திக சமயமான சமண சமயத்தைச் சார்ந்தவர் இவர்.

சிந்திக்கத்தக்க விடயம் தானே இது.

"மக்கள் தாமே ஆறறிவுயிரே" (தொல்காப்பியம் - 1532)

என்று தொல்காப்பியரால்ஆறறிவு படைத்தவனாகக் கூறப் பெறும் மனிதனை, அவனது ஆறாவது அறிவு என்ற விடயத்தை மறுத்து அவனை ஐந்தறிவு விலங்குகளோடு பவணந்தி முனிவர் கூறி இருக்கின்றார்.

மேலும் தொல்காப்பியரும் "மாவும் மாக்களும் ஐயறிவினவே" என்பதன் வாயிலாக மக்கள் சிலரை விலங்குகளுடனே வைத்து ஒப்பிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் நாம் எவருடையக் கூற்றினை ஏற்றுக் கொள்வது? தொல்காப்பியரின் கூற்றையா அல்லது பவணந்தி முனிவரின் கூற்றையா என்றே நாம் எண்ணிக் குழம்பிக் கொள்ள மனம் இல்லாத தமிழ் அக்கேள்விக்கும் விடையினை சுமந்துக் கொண்டே இருக்கின்றாள்.

ஆம்...தமிழ் உயிரினை புலன்களின் அடிப்படையில் மட்டுமே பிரித்து இருக்கவில்லை. மாறாக திணைகளின் அடிப்படையிலும் பிரித்து தான் வைத்து இருக்கின்றாள்.

தமிழர்களின் திணை இலக்கணம் உயிர்களை இரண்டாகப் பிரிக்கின்றது.

1) உயர்திணை (மனிதர்கள்)
2) அஃறிணை (மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள்)

இப்பிரிவுகள் தமிழில் மட்டுமே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழர்களின் திணை இலக்கணம் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து சிறப்பாகப் பிரித்துக் கூறுகின்றது.

இந்நிலையில் தான் நாம் மீண்டும் பவணந்தி முனிவரைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. காரணம் மனிதர்களை ஐந்து அறிவு உடையவர்கள் என்று கூறிய அவர் தமிழ் திணை இலக்கணத்தை விளக்க வேண்டிய தருணத்தில்

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" நன்னூல் 261

என்று மக்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தி உயர்த்திக் கூறி இருக்கின்றார்.

அதாவது மனிதனுக்கு ஆறறிவு என்ற ஒன்றுக் கிடையாது என்று அவனை ஐந்தறிவு படைத்தவன் என்று விலங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறிய பவணந்தி முனிவர், தமிழின் திணை இலக்கணத்தைக் கூறும் பொழுது மனிதன் விலங்குகளிடம் இருந்து மேலானவன் என்றே கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையுள்ள தொல்காப்பியர் ஆறாவது அறிவு இருக்கின்றது என்றும் அதனை உடையவர்கள் மனிதர்கள் என்றும் கூறிச் சென்று உள்ளார். மேலும் அவரும் சில மனிதர்களை ஐந்தறிவு படைத்த மிருகங்களோடு வைத்தே கூறி உள்ளார்.

நாத்திகரான பவணந்தி முனிவரோ ஆறாம் அறிவை மறுத்து மனிதனும் விலங்கும் ஐந்தறிவு உடையவரே என்றே கூறி இருப்பினும் தமிழர்களின் திணை இலக்கணத்தைக் கூற விழையும் பொழுது மனிதர்களை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்த்திக் கூறி உள்ளார்.

இந்நிலையில் சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

1) மனிதன் விலங்குகளை விட உயர்ந்தவன் என்பதனை இருவருமே ஏற்றுக் கொள்கின்றனர்.
2) தொல்காப்பியர் ஆறாம் அறிவைப் பற்றிக் கூறும் பொழுது அதனை பவணந்தி முனிவர் மறுக்கின்றார்.
3) தொல்காப்பியரும் அனைத்து மனிதர்களும் ஆறாம் அறிவை உடையவர்களாகக் கூறிச் செல்ல வில்லை.

இதனடிப்படையில் நாம் சிந்தித்தோம் என்றால் மனிதன் மற்ற உயிர்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் ஒன்றாக இருந்தாலும் ஆறாம் அறிவைக் குறித்த நிலையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு என்று நாம் கண்டோம் என்றால் ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிவதில்லை என்றே தொல்காப்பியர் கூறிச் சென்று உள்ளார்.

அதாவது ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறிய அவர் அனைத்து மக்களும் ஆறறிவோடு இருக்கின்றனர் என்றுக் கூறவில்லை. சிலரை ஐந்தறிவு நிலையில் தான் வைத்து உள்ளார்.

"அட என்னடா இது...ஆறாவது அறிவு இருக்கு அப்படினு சொல்றாங்க ஆனா எல்லாராலும் உணர முடியாது அப்படின்னு சொல்றாங்க...இவங்க என்னதான் சொல்ல வராங்க" என்று நாம் குழம்புவதை விரும்பாது விடையினை தந்து தான் சென்றுள்ளார் மெய்கண்டார் அவர்கள், அவரது நூலான சிவஞானபோதத்தில்.

"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

என்று உடலினுள் ஆன்மா இருக்கின்றது என்றுக் கூறும் அவர்,

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" சிவஞானபோதம் 8 (விளக்கம்)

என்பதன் வாயிலாக ஆன்மா ஐம்புலன்களோடு வளர்ந்து இருக்கின்றது என்றும்,

"...ஆன்மா சகசமலத் துணராது" சிவஞானபோதம் 4 (விளக்கம்)
"...உணர்த்த உணர்தலின்" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

அந்த ஆன்மாவானது தன்னை அறியாது இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

அதாவது உடலினுள் இருக்கும் ஆன்மாவானது, ஐம்புலன்களுடன் இணைந்து தன்னை அறியா நிலையில் இருக்கின்றது என்பதே அவர் கூறும் கருத்தாகும்.

ஐம்புலன்களுடன் இருக்கின்றது என்றால் நிச்சயம் அந்த உயிரினம் ஐந்தறிவு பெற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறுப் பார்த்தோம் என்றால் விலங்குகளும் மனிதர்களுமே தான் வருகின்றனர். ஆனால் விலங்குகள் வெறும் ஐந்தறிவுப் படைத்தவையாகவே அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் மனிதனோ விலங்குகளை விட உயர்ந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான்.

இந்நிலையில் மனிதனை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து அவனைச் சிறப்பிக்கும் ஆறாவது அறிவு என்பது ஆன்மா தான் என்றே நாம் கருத வாய்ப்பு இருக்கின்றது தானே.

அந்த வாய்ப்பைத் தான் நாம் சிறிது ஆராய வேண்டி இருக்கின்றது.

ஆறாவது அறிவு ஆன்மாவா?

காண்போம்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

இத்தொடரினில் உயிரினையும் உடலினையும் பற்றியே நாம் கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். மேலும் தொடர்வதுக்கு முன்னர் முந்தையப் பகுதியினை படித்து இருத்தல் நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். இணைப்பு இதோ (முதல் பகுதி)

சரி இப்பொழுது பதிவினைத் தொடர்வோம்...!!!


உடல் ஒரு அற்புதமான இயந்திரம் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். பல்வேறுப் பணிகளை செம்மையாக செய்வதற்கு ஏற்றக் கருவிகளை கொண்டே அது அமைந்து இருக்கின்றது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் அதற்கென்று தனிப்பட்ட செயல்கள் இருக்கின்றன. அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்படும் பொழுது உடலின் செயலும் சீராக இருக்கின்றது. மாறாக ஏதேனும் ஒரு உறுப்பு பழுதடைந்து விட்டால் உடலில் அவ்வுறுப்பு செய்ய வேண்டிய பணிகளில் குறை நேர்கின்றது. உடல் தனது முழு திறனுடன் இயங்க முடியாத நிலை வருகின்றது.

உதாரணத்திற்கு, கண்கள் செம்மையாக இயங்கும் பொழுது உடலால் பிற பொருட்களைக் காண முடியும். மாறாக கண்கள் பழுதடைந்து இருந்தால் உடலால் பிற பொருட்களைக் காண முடியாது. நிற்க.

இப்பொழுது ஒரு கேள்வி...

உயிருள்ள உடலுக்கும் உயிரற்ற உடலுக்கும் என்ன வித்தியாசம்?

"அட என்னங்க...உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கும். உயிர் அற்ற உடல் இயங்காது...சில தினங்களுக்குள் மக்கிப் போய் விடும்...இந்த வித்தியாசத்தைக் கூடவா தெரியாமல் இருப்பார்கள்" என்கின்றீர்களா...சரி தான்!!!

உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. உயிரற்றதோ வெறும் சடலமாக இயக்கமின்றி கிடக்கின்றது. இரண்டிலும் உறுப்புகள் இருக்கின்றன...ஆனால் உயிருள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது....உயிரற்ற உடலோ இயங்காமல் அழிந்துக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் ஏன் இந்த வேறுபாடு என்றே நாம் கண்டோம் என்றால் விடை உயிர் என்றே நமக்கு கிட்டுகின்றது.

உயிர் இருக்கும் வரை ஒரு உடல் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. உயிர் இல்லாத உடலோ அதன் இயக்கம் நிற்கப் பெற்று அழியத் துவங்குகின்றது. இதன் மூலம் நாம் அறியக் கூடிய விடயங்கள் என்னவென்றால்,

1) உயிர் உடலினை இயக்கிக் கொண்டும் அழியாது பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றது.
2) உயிர் இன்றி உடல் இயங்குவது இல்லை.
3) உயிரும் உடலும் சேர்ந்தால் தான் உயிரினங்கள் உருவாகப் பெறுகின்றன.

(இதனைப் பற்றி தமிழ் எழுத்துக்கள் அழகாக விளக்கிக் கொண்டு இருக்கின்றன...அவற்றைப் பற்றி அறிய இந்த இணைப்பினைப் பார்க்கவும் (எழுத்துக்களில் அறிவியல்)

உடல் எனும் அற்புதமான இயந்திரத்தை உயிர் இயக்கிக் கொண்டு இருக்கின்றது. அவ்வாறு உடலின் உறுப்புக்களை இயக்குவதன் வாயிலாக உடல் அழியாது இருக்க உயிர் வழி செய்கின்றது.

உணவு செரிக்கப்படல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல், இரத்தம் சுத்தமாக்கப்படல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படல் ஆகிய இயல்பூக்கச் செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் செய்து கொண்டு இருக்கின்றது.

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன...உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிற்கப் பெற்று உடலும் அழியத் துவங்குகின்றது.

இது உயிருள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

நாம் ஏற்கனவே சென்றப் பதிவினில் கண்டு இருக்கின்றோம், தமிழ் அறிவியல் உயிர்களை ஆறு விதமாக (ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் வரை) பிரித்து உள்ளது என்று. இப்பிரிவுகள் அவ்வுயிரினங்கள் கொண்டுள்ள புலன்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு உள்ளன.இந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு.

அந்த உயிர் அவ்வுயிரினங்களின் உடலினை இயக்கியும் பாதுகாத்தும் கொண்டு இருக்கின்றது. மேலும் உயிரின் இயக்கம் ஒவ்வொரு வகையான உயிரினங்களுக்கும் வேறும் படுகின்றது.

அதாவது ஓரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு...ஈரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு. காரணம் அந்த உயிரினங்கள் வெவ்வேறு தன்மையை உடையவை. ஈரறிவு உயிரினம் கூடுதலாக சுவை உணர்வினை தரும் வாயினைப் பெற்று இருக்கின்றது...எனவே அவ்வுயிரினத்தின் உயிர் அந்த புலனையும் இயக்கும் தன்மைப் பெற்றதாக விளங்க வேண்டி இருக்கின்றது. இந்த வேறுபாடு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொருந்தும்.

எனவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருந்தாலும் உயிரின் செயல்பாடுகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப மாறுபடுகின்றது.

உதாரணத்திற்கு கடலில் வாழும் உயிரினங்களின் உடல் நீரில் வாழ்வதற்கு ஏற்பவே அமைந்து இருக்கின்றது. உயிர் அந்த உடலினை இயக்குகின்றது. நீரில் இருக்கும் வரை உடலின் துணைக் கொண்டு உடலினை இயக்குவதற்குரிய ஆற்றலை உயிர் பெற்றுக் கொண்டு உடலினை அழியாது பாதுகாக்கின்றது.

ஆனால் அதே உயிரினம் எப்பொழுது நீரில் இருந்து வெளியேறி தரைக்கு வருகின்றதோ, அப்பொழுது அந்த உயிரினால் உடலை இயக்க முடிவதில்லை. காரணம் தரையில் இருந்து இயங்க அந்த உடலுக்கு ஆற்றல் இல்லை...அந்த உடலின் உறுப்புகளும் தரையில் இயங்குவதற்கு பயன்படுவதில்லை. இந்நிலையில் உயிர், அந்த உடலின் உறுப்புகளை தன்னால் இயன்ற அளவு பயன்படுத்த முயன்றும் பயன் இல்லாததால் இறக்கின்றது. காரணம் உயிர் அதன் சேவைக்கு கொண்டிருந்த கருவிகள் நிலத்தில் பயனற்றுப் போய் விடுகின்றன. நிற்க.

எனவே ஒவ்வொரு உயிரினத்தின் உடலிற்கேற்ப உயிர் இயங்குகின்றது என்றே நாம் அறிகின்றோம். இந்நிலையில் ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால் உடலின் தன்மைகேற்பவே உயிரால் உடலை இயக்க முடியும். ஈரறிவு உயிரினத்தின் உடலில் மூன்றாம் அறிவிற்கான புலனாகிய நாசியினை பயன்படுத்தவோ/உருவாக்கவோ உயிரால் முடியாது. நிற்க.

உடலிற்கேற்ப உயிரின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றது என்றும், ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது இயலாத காரியம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். சரி...இப்பொழுது அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது என்று நாம் கண்டு இருக்கின்றோம். அவை புலன்களுக்கு ஏற்ப ஓரறிவு முதல் ஆறறிவு வரை பிரிக்கப்பட்டும் இருக்கின்றன என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இந்நிலையில் தான் நாம் மனிதனைப் பற்றி பார்க்க வேண்டி இருக்கின்றது.

காரணம் அவனை ஐந்து அறிவுடையவனாகவும் வைத்து இருக்கின்றனர், ஆறறிவு உடையவனாகவும் வைத்து இருக்கின்றனர். மேலும் மனிதனும் ஒரு வகை மிருகம் என்றும் சிலர் கூறுகின்றனர். அது ஏன் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு ஆறாம் அறிவைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

முந்தையப் பதிவு

சூத்திரம் 12 : ஆன்மாவே கோயில்

செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரோடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே.

பதவுரை:

செம்மலர் - சிவப்பு மலர் போன்ற

நோன்தாள் - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவமாகிய நோன்பினில் நிலை நின்ற இறைவனின் திருவடிகளை

சேரல் ஒட்டா - சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நின்ற

அம்மலம் கழீஇ - அக்கொடிய பாவம் கழுவப்பட்டு

அன்பரொடு மரீஇ - என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு

மால் அற - ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு

நேயம் மலிந்து - ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு

அவர் வேடமும் - ஆன்மாவின் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலைப் பெற்ற நிலையில் அது

அரன் - பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன்

ஆலயம் தானும் என - மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து

தொழுமே - இறைவனை வாழ்த்தி வணங்குமே

பொருள்:

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவத்தில் நிலை நின்று சிகப்பு மலர் போன்று விளங்குகின்ற இறைவனின் திருவடிகளைச் சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நிற்கும் கொடிய பாவம் கழுவப்பட்டு, என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு, இறைவனின் புதிய சாயலைப் பெற்று, பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து தன்னை மீட்டு ஆட்கொண்ட இறைவனை வாழ்த்தி வணங்கி இன்புறும்.

இறைவனின் திருவடிகளில் இணைந்த ஆன்மா, மயக்கம் முற்றிலுமாக நீங்கப் பெற்று ஆன்மீக நேயத்தால் நிரப்பப் பெறுகின்றது. அவ்வாறு நிரப்பப்பட்ட ஆன்மா எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பதற்குச் சித்தாந்த சாத்திரத்தின் திருக்களிற்றுப்படியார் பின்வருமாறு கூறுகின்றது.

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான். - திருக்களிற்றுப்படியார் 55


இவ்வாறு அன்பால் அழுது அரற்றி அன்பே அன்பாக அறிவழியும் ஆன்மாவாக, இறைவன் வாழும் திருக்கோயிலாக மாறுகின்றது. அதன் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலாகிய இறை வேடத்தை தாங்கிக் கொள்கின்றது. என்பையும் பிறர்க்கீயும் அன்பனாக மாறுகின்றது. இப்படிப்பட்டவர்களே இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயில்கள் ஆகின்றனர். இறைவனை இடைவிடாது தொழும் பெரும்பேற்றை அடைந்து இறைவனில் இன்புறுகின்றனர். இதனையே இறைவனை உணர்ந்தவர்கள் கூறிச் சென்று உள்ளனர்

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இந்த நிலையே அவர்கள் இடைவிடா இன்பத்தை, இரவா இன்பத்தை அடையும் அதி உயர் நிலையாகும். இவ்வகையில் அடையும் இன்பம் என்றுமே அழிவதில்லை. அந்த இன்பம் இவ்வுலகிலேயே தொடங்குகின்றது.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு