நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப் பதிவினை எழுதுவதால் இப்பதிவிற்குள் போகும் முன் முன்னர் எழுதிய இந்த இரு பதிவுகளைப் படித்து விட்டு வருவது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.


சரி இப்பொழுது நமது பதிவிற்கு வருவோம்.

தொண்டை நாடு என்பது இன்றைய தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், சென்னை, மயிலாப்பூர் ஆகியப் பகுதிகளைக் கொண்டு விளங்கியதே ஆகும். வள்ளுவப் பெருமகனார் மற்றும் முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களான 'பேயாழ்வார்' 'பூதத்தாழ்வார்' மற்றும் 'காரைக்கால் அம்மையார்' போன்றவர்களும் இந்தத் தொண்டை நாட்டில் இருந்தே தோன்றி இருக்கின்றனர். மேலும் ஒளவைப்பாட்டியால் 'தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்றும் சிறப்பாக வழங்கப்பட்ட ஒரு நாடாகும் அது. இத்துடன் தோமா இறுதியாக வாழ்ந்து இறந்த இடமாக அறியப்படும் மயிலையும் தொண்டை நாட்டிலேயே அமைந்து இருக்கின்றது.நிற்க.

நம்முடைய பதிவுகளின் படி இந்தியாவில் தோமா ஆற்றிய இறைப்பணியின் காரணமாகத் தான் சைவ வைணவ சமயங்கள் வளர்ச்சிப் பெற்றன என்று சில கருத்துக்கள் நிலவிக் கொண்டு இருக்கின்றன என்றுக் கண்டுக் கொண்டு இருக்கும் பொழுது, தோமா அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தினைச் சுற்றியே முதல் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி இருப்பது சற்றுச் சிந்தனைக்குரிய விடயமாகத் தான் இருக்கின்றது.

"அட என்னங்க, தோமா இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும் ஆண்டோ கி.பி முதல் நூற்றாண்டு...ஆனால் முதல் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றிய ஆண்டோ கி.பி ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றே கருதப்படுகின்றது. இந்நிலையில் சுமார் நானூறு ஆண்டுகால இடைவெளியில் உள்ள அவர்களை எவ்வாறு ஒன்றிணைக்கின்றீர்கள்?" என்றக் கேள்வி இப்பொழுது இயல்பாகவே எழலாம்.

உண்மைதான் நானூறு ஆண்டுக் கால இடைவெளியில் இருக்கும் மனிதர்களை வெறும் அவர்கள் தோன்றிய இடத்தினை வைத்து மட்டுமே ஒன்றிணைத்துக் கூறுவது சரியானதொன்றாக அமையாது. இந்நிலையில் அவர்களை நாம் ஒன்றிணைத்துக் கூறுவதற்கு மற்றத் தக்கச் சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு சான்றுகள் இருக்கின்றனவா என்று நாம் பின்னர் காண்போம். ஏனெனில் தோமா தமிழகத்தில் மயிலையில் வாழ்ந்த காலம் என்றுக் கூறப்படுகின்ற அதே காலத்தில் அதே ஊரினில் வாழ்ந்த ஒருவர் இப்பொழுது நமக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் வேறுயாருமில்லை 'தமிழகம் வான்புகழ் அடையக் காரணமாயிருந்த வள்ளுவரே அவர்'.

தோமா மயிலையில் வாழ்ந்து இருந்ததாக கூறப்படும் அதே முதல் நூற்றாண்டில் அதே மயிலையில் இருந்து தோன்றியவர் தான் திருவள்ளுவர். இப்பொழுது, தோமா தமிழகத்தில் வாழ்ந்து இறைக் கருத்துக்களை பரப்பினார் என்றால் அவர் வாழ்ந்த அதே காலத்தில் அதே நகரத்தில் வாழ்ந்த வள்ளுவரும் அக்கருத்துக்களைக் கேட்டு இருக்க வேண்டுமே...அவ்வாறு கேட்டு இருந்தால் அக்கருத்துக்கள் அவரது நூலான திருக்குறளினில் இடம் பெற்று இருக்க வேண்டுமே...அவ்வாறு இடம் பெற்று இருந்தால் தானே தோமா மயிலையில் இறைக் கருத்துக்களைப் பரப்பினார் என்று நாம் கருத முடியும். எனவே இப்பொழுது நாம் திருக்குறளில் தோமா பரப்பிய கிருத்துவின் கருத்துக்கள் யாவேனும் இருக்கின்றனவா என்பதனைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் சற்றுக் காணத்தான் வேண்டி இருக்கின்றது.

பொதுவாக இன்றுவரை வள்ளுவரின் சமயம் குறித்து விவாதங்கள் நீண்டுக் கொண்டேத் தான் சென்றுக் கொண்டு இருக்கின்றன. சிலர் அவரை சமண சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். சிலர் அவரை சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். ஆனால் சமீப காலமாக வள்ளுவர் கிருத்துவக் கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தும் நிலவி வருகின்றது. அவ்வாறு அவர்கள் கருதுவதற்கு திருக்குறளில் கிருத்துவின் கருத்துக்களின் தாக்கம் பல தென்படுகின்றன என்ற எண்ணமே முக்கியமானதொன்றாகும். இப்பொழுது அவர்கள் கூறும் அந்த கிருத்துவின் கருத்துகளின் தாக்கங்கள் என்னென்னவென்று நாம் சற்றுக் காணலாம்.

1) திருக்குறளின் பாயிரம் அமைப்பு:

திருக்குறளின் பாயிரத்தில் நான்கு அதிகாரங்கள் உள்ளன,

1) கடவுள் வாழ்த்து
2) வான் சிறப்பு
3) நீத்தார் பெருமை
4) அறன் வலியுறுத்தல்

பொதுவாக அனைத்து தமிழ் நூல்களிலும் முதலில் இறை வணக்கப் பகுதி இடம் பெறுவது இயல்பு. அதன்படியே திருக்குறளிலும் முதலில் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் வருகின்றது. ஆனால் ஆய்வாளர்களைக் குழப்புவது என்னவென்றால் பாயிரத்தில் கடவுள் வாழ்த்து வர வேண்டியது சரி, ஆனால் ஏன் அதனைத் தொடர்ந்து வான் சிறப்பு என்றும் நீத்தார் பெருமை என்றும் அறன் வலியுறுத்தல் என்றும் மூன்று அதிகாரங்களை வள்ளுவர் பாயிரத்தில் சேர்த்து இருக்கின்றார் என்ற ஒரு கேள்வி தான் அது.

இன்று பெரும்பாலும் 'வான் சிறப்பு' என்றால் மழையைச் சிறப்பிக்கும் அதிகாரம் என்றும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொள்பவர்களை குறிக்கும் அதிகாரம் என்றுமே பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் அந்தப் பொருள்கள் முழுமையான அர்த்தத்தினைத் தரவில்லை. காரணம் மழையைச் சிறப்பாக வருணித்து பாயிரத்தில் சேர்க்கும் வழக்கம் நூல் ஆசிரியர்களிடையே இருந்தது இல்லை. சிலர் மழை இல்லாது உலகம் அமையாது அதனால் தான் வள்ளுவர் மழையைச் சிறப்பித்து இருக்கின்றார் என்றும் கூறுவர். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் மழை மட்டுமே உலகில் முக்கியமான ஒரு பொருள் கிடையாது, நிலம், காற்று போன்ற மற்ற விடயங்களும் முக்கியமானவைகளே. எனவே ஏன் வள்ளுவர் மழையை மட்டும் சிறப்பித்து வைத்து இருக்கின்றார் என்று ஒரு கேள்வியும் நிலவிக் கொண்டு இருக்கின்றது.

பின்னர், 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் ஏன் தனியாக துறவு மேற்கொள்பவர்களைப் பற்றி எழுத வேண்டும்?... அதான் அறத்துப்பாலில் 'துறவறம்' என்று தனியாக துறவிற்கே ஒதுக்கி இருக்கின்றாரே பின்னர் ஏன் பாயிரத்திலும் அதனைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்? என்ற ஒரு கேள்வியும் இன்று நிலவிக் கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தான் சில ஆராய்ச்சியாளர்கள் சில புதிய நோக்கினைக் மேலே கூறியுள்ள அந்த அதிகாரங்களுக்கு வழங்கும் பொழுது நாம் அந்த நோக்கினிலும் சற்றுச் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. இப்பொழுது அவர்கள் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம். அவர்களின் கூற்றுப்படி,

'வான் சிறப்பு' என்று பாயிரத்தில் வழங்கி இருக்கும் அதிகாரம் மழையைக் குறிப்பதில்லை மாறாக இறைவனின் அருள்/ பரிசுத்த ஆவியினைக்  குறிக்கின்றது மேலும்,

'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் துறவறம் மேற்கொள்பவர்களைக் குறிக்காது மக்களுக்காக உயிர் நீத்த இயேசுவைக் குறிக்கின்றது மேலும்,

ஒரே இறைவன் மூன்று நிலைகளில் விளங்குவதினால், பாயிரத்தில் வெறும் கடவுள் வாழ்த்தினை மட்டும் வைக்காது இறைவனின் மற்ற நிலைகளையும் விளக்கும்படி 'வான் சிறப்பு' என்று கடவுளின் சக்தியினைப் பற்றியும் 'நீத்தார் பெருமை' என்று மக்களுக்காக பலியான இறைவனின் நிலையினைப் பற்றியும் வைத்துவிட்டு பின்னர் அத்தகைய இறைவன்  வலியுறுத்தும் அறனை  விளக்க 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்தினையும் சேர்த்து பாயிரமாக வைத்து உள்ளார். இதுவே அவர்கள் கூறும் கூற்று.

ஆனால் வழக்கம் போல எந்த ஒருக் கூற்றினையும் சான்றுகள் இன்றி நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்நிலையில் மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகளுக்கு சான்றுகளோ அல்லது விளக்கங்களோ இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

2) வான் சிறப்பு:

பொதுவாக பலரால் இன்று வரை இந்த அதிகாரம் மழையின் சிறப்பினை கூறுவதாகவே எண்ணப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால் இப்பொழுது இது மழையைக் குறிப்பது அல்ல மாறாக கடவுளின் ஆற்றல்/ பரிசுத்த ஆவியினை குறிக்கும் ஒரு அதிகாரம் என்ற கருத்து சிலரால் எழுப்பப்பட்டு உள்ளது. இக்கருத்தினைப் பற்றி நாம் மேலும் காணும் முன்னர் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

i) “கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று.” “பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது.” (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்…சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்) - கா.சு.பிள்ளை (இதன் மூலம் நாம் இறைவனின் சக்தி நீரின் தன்மையோடு குறிக்கப்பட்டு உள்ளதாக கருத்து இருப்பதினை அறிகின்றோம்.)

ii) “கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று.”

"வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க.” - கா.சு.பிள்ளை (இதன் மூலம் 'வான்' என்றச் சொல்லே மருவி விஷ்ணு என்று வந்து இருக்கின்றது என்றும் (வான் - விண் - விண்ணு - விண்டு - விஷ்ணு), விஷ்ணுவும் சக்தியும் ஒன்றே என்றும் அவர்களுக்கு நீரின் தன்மையான நீல நிறமே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதனையும் அறிகின்றோம்)
 
iii) விவிலியத்திலும் பரிசுத்த ஆவியினை நீரின் தன்மையுடைவராகவே குறிப்பிடப்பட்டு உள்ளது.நிற்க

மேலே உள்ள சில விடயங்கள் மூலமாக இறைவனின் சக்தியை நீரின் தன்மையோடு காணும் போக்கு சமயங்களில் இருக்கின்றது என்றே நாம் அறிய முடிகின்றது. மேலும் சில திருக்குறள் ஆய்வாளர்களின் கருத்துக்களும் வான் சிறப்பு என்பது இறைவனின் ஆற்றல்/ கருணை ஆகியவற்றைக் குறிப்பதாகவே கருதுகின்றனர்.

"இறை வாழ்த்துப் அதிகாரத்தில் கடவுளின் பண்பாற்றல்களை எல்லாம் தொகுத்துரைத்த வள்ளுவர், இந்த வான் சிறப்பு அதிகாரத்தில் வெளிப்படையாகவே மழைச் சிறப்பு மட்டும் கூறுகின்றாரானாலும், உண்மையில் அவர் முதற் பொருள் மழையை வருணிப்பதன்று; கடவுளின் கருணை ஆற்றலை வகுத்துரைப்பதேயாகும்." என்றே பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் கூறுகின்றார்.

"கடவுளுடைய தண்ணருளைக் குறிப்பதற்கு, மழையே சிறந்த அறிகுறியாகி இருக்கின்றது. மழைச் சிறப்புக் கூறுதல், திருவருட்சக்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது" என்றே எம். சுப்ரமணிய பிள்ளை அவர்களும் கூறுகின்றார்.

எனவே வான் சிறப்பு என்பது மழையினைக் குறிக்காது மாறாக இறைவனின் அருட்சக்தியினைக் குறிக்கும் ஒன்று என்றக் கருத்தினை நாம் கருதுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சரி இப்பொழுது நீத்தார் பெருமையைப் பற்றிக் காணலாம்.

3) நீத்தார் பெருமை:

இது வரையிலும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொண்டவர்களை பற்றிக் கூறும் ஒரு அதிகாரமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. காரணம் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் அவ்வாறே எழுதி வைத்துச் சென்று உள்ளனர் (அவர்கள் 1000 ஆண்டுகளுக்கு பின்னரே திருக்குறளுக்கு உரை எழுதினர் என்ற விடயமும் இங்கே கருதத்தக்கது). சரி இப்பொழுது நாம் சிலர் 'நீத்தார் பெருமை' என்பது மக்களுக்காக உயிர் நீத்த இறைவனைக் குறிக்கும் அதிகாரம் என்று கூறுகின்றார்கள். அக்கூற்றினைப் பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் தனது குறளில் தேவை இல்லாது எந்த ஒரு வார்த்தையையோ அல்லது அதிகாரத்தையோ அல்லது கருத்தையோ வைத்தது இல்லை.

குறளுக்கு ஏழு வார்த்தைகள்...அவ்வளவே!!! அந்த ஏழு வார்த்தைகளுள் தான் சொல்ல வந்தக் கருத்தினை கூறி இருக்கின்றார். (ஏழு என்ற எண் திருக்குறள் முழுவதிலுமே சிறப்பாக கையாளப்பட்டு இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம்). இப்பொழுது அவ்வாறு அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தையைத் தான் நாம் இப்பொழுது காண போகின்றோம்.

'ஐந்தவித்தான்' என்ற வார்த்தையே அது. பொருளில் ஐம்பொறிகளையும் கடந்தவன் என்று விளங்கும் இந்த வார்த்தையினை வள்ளுவர் இரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தி உள்ளார். ஒன்று கடவுள் வாழ்த்துப் பகுதியில் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்று கூறி உள்ளார், மற்றொன்று 'நீத்தார் பெருமை' பகுதியில் 'ஐந்தவித்தான் ஆற்றல்' என்றுக் கூறி உள்ளார்.

அதாவது ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம் இறைவனையும் சரி நீத்தாரையும் சரி ஒன்றாகவே குறிப்பிட்டு உள்ளார். இது ஏன் என்று சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் துறவினைக் குறிக்கும் அதிகாரங்களில் அவர் எந்த ஒரு இடத்திலும் ஐந்தவித்தான் என்றச் சொல்லினை பயன்படுத்தி இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வக வெளியீடான 'திருக்குறளும் விவிலியமும்' என்னும் நூல் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்னும் தொடரோ கிருத்துவ இறையியற் கொள்கைக்கே மிக ஏற்புடையதாகும். அங்கு அது எவ்வித இடர்ப்பாடுமின்றிப் பொருந்தும் என்றே கூறுகின்றது.

எனவே கருத்துக்கள் இவ்வாறு இருக்கையில் 'நீத்தார் பெருமை' என்பது மனிதனாக வந்து மனிதர்களுக்காக தன்னுயிர் நீத்த இறைவனைக் குறிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது.


மேலும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கடவுள் வாழ்த்தை மூவராகிய முதற் கடவுளரை வாழ்த்தும் வாழ்த்தாக கருதுகின்றார். இதுவும் ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்க்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.   மேலே கண்டுள்ள கருத்துக்கள் மூலம் திருக்குறளில் கிருத்துவ கருத்துக்கள் இருக்கலாம் என்ற சிந்தனையும் ஆராய்ச்சிகளும் நம் சமூகத்தில் இருக்கின்றன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. இதனைப் பற்றி நாம் இன்னும் விரிவாக காணலாம் ஆனால் அது ஒரு ஆராய்ச்சிப் பதிவாக மாறி விடும் என்பதனால் அதனை இப்பொழுது இங்கே காண வேண்டாம் என்றே எண்ணுகின்றேன்.

இப்பதிவின்படி தோமா மறைந்ததாக அறியப்படும் மயிலையில் அவர் வாழ்ந்த அதே காலத்தில் திருவள்ளுவரும் வாழ்ந்து இருக்கின்றார் என்பதும், தோமாவின் கருத்துக்களின் தாக்கம் திருக்குறளிலும் தென்படுகின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதையும் நாம் அறிகின்றோம். நிற்க.

மேலும் சில விடயங்கள் நாம் கவனிக்கத்தக்கவைகளாகவே இருக்கின்றன...

1) திருக்குறளை மொழிப்பெயர்த்து உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் கிருத்துவர்கள்.

2) விவிலியத்திற்கு பின்னர் உலகில் அதிக அளவு மொழிப்பெயர்க்கப் பட்ட நூல் திருக்குறளே ஆகும்.

3) அப்படிப்பட்ட ஒரு நூலினை 'தீக்குறள்' என்றும் அதனை படிக்கக் கூடாது என்றும் இந்தியாவில் உள்ள சிலர் கூறியும் இருக்கின்றனர்.

4) உலகப் பொதுமுறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை பஞ்சம சாதியினை சார்ந்தவராக கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.

"உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா...!!! அங்கே தான் அந்த நிறுவனங்களின்...உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் 'உலகமயமாக்கல்' என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது." இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரமான நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. ஒரு சில பெரிய நாடுகளின் கீழேயே உலகின் பல்வேறு நாடுகள் அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்தன. அந்த பெரிய நாடுகளும் தமக்கு கீழே இருந்த நாடுகளின் இயற்கை வளங்களையும் சரி மனித வளங்களையும் சரி கேட்பார் யாருமின்றி கொள்ளையிட்டுக் கொண்டு வந்தன.

அவ்வாறு கொள்ளையிட்டுக் கொண்டு வந்த நாடுகளின் இடையே நிலவிய பொறாமை போட்டி போன்ற காரணிகளினாலேயே உலகம் அதுவரை கண்டு இராத இரு மாபெரும் யுத்தங்கள் நிகழப் பெற்றன. அவற்றின் முடிவில் அதுவரை அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த நாடுகள் பலவும் சுதந்திரம் அடைய ஆரம்பித்தன. "எங்கள் நாடு இது...எங்களை நாங்களே ஆண்டுக் கொள்கின்றோம்...அந்நியர்களான நீங்கள் வெளி ஏறுங்கள்" என்ற முழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் கேட்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாது அந்த நாடுகளை விட்டு விருப்பமில்லாது வெளியேற ஆரம்பித்தன மற்ற நாடுகள்.

அவைகள் வெளியேறியதற்கு முக்கியமானதொரு காரணம், அவைகள் வெளியேற மறுத்தால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம்...அந்த போர் எவ்வித முடிவுகளைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது...ஏற்கனவே சப்பானில் நிகழ்ந்த அணுக்குண்டு தாக்குதலின் தாக்கத்தினை உலகம் கண்டு இருந்தது. மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகம் இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தது. ஒரு அணி சோவியத் யூனியனின் கீழ் பொது உடைமைக் கொள்கைக்காக திரண்டு இருந்தது. மற்றொரு அணி அமெரிக்காவின் கீழ் முதலாளித்துவக் கொள்கைக்காகத் திரண்டு இருந்தது. இந்நிலையில் எந்த ஒரு நாட்டின் மேலும் மற்றொரு நாடு நேரடியாகத் தாக்குதல் நடத்தினால் மீண்டும் ஒரு மாபெரும் யுத்தம் வெடிக்கும் அபாயம் இருந்துக் கொண்டே இருந்தது. எனவே நேரடியான யுத்தம் என்பது அனைத்து நாடுகளினாலும் இயன்ற அளவுத் தவிர்க்கப்பட்டே வந்து கொண்டு இருந்தது.

ஆனால் இங்கே தான் நாம் ஒரு விடயத்தினை காண வேண்டி இருக்கின்றது. பல நாடுகள் விடுதலைப் பெற்று விட்டன. விடுதலை என்றால்... அந்த நாடுகளை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே ஆண்டுக் கொள்ளலாம்...அந்த நாடுகளின் வளங்களை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு அந்த நாட்டின் மீதோ அல்லது அந்த வளங்களின் மீதோ யாதொரு உரிமையும் கிடையாது. இப்படி இருக்க அது வரை அரசுகளின் உதவியோடு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டிக் கொண்டு வந்த பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய ஒரு சூழல் இக்கட்டினைத் தரும் தானே.

அந்தந்த நாடுகளே அவைகளின் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் இந்த நிறுவனங்கள் எந்த வளங்களைச் சுரண்ட முடியும்? பின்னர் எவ்வாறு கொள்ளை இலாபத்தினை ஈட்டிக் கொள்ள முடியும்? முடியாதல்லவா...அங்கே தான் அந்த நிறுவனங்களுக்கு பிரச்சனை தொடங்குகின்றது. எக்காரணத்தினை முன்னிட்டும் அவைகளுக்கு அவைகள் ஈட்டும் இலாபத்தினையும் சரி அவைகளுக்கு உள்ள அதிகாரத்தினையும் இழக்க மனம் கிடையாது. ஆனால் அனைத்து நாடுகளும் சுதந்திரம் அடைந்தப் பின்பு இவர்களால் அந்த நாட்டின் வளங்களின் மேல் பழையக் காலம் போல் உரிமைக் கொண்டாட சட்டப்படி வாய்ப்பு இல்லாது போய் விட்டது. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்கள் மேல் தாங்கள் செல்வாக்கினைப் பெற வேண்டுமானால்,

1) அந்த நாடுகளை மீண்டும் அடிமைப்படுத்த வேண்டும். அல்லது
2) அந்த நாட்டினை ஆள்பவர்கள் அவர்கள் நாட்டின் வளங்களை எடுத்துக் கொள்வதற்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதியினை வழங்க வேண்டும்.

இவ்விரண்டு வழிகள் மூலமாக மட்டுமே அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்களை அடைய முடியும்.

ஆனால் நாம் முன்னர் கண்டதுப் போல நாடுகளை நேரடியாக யுத்தத்தின் வாயிலாக அடிமைப்படுத்துவது என்பது இயலாத ஒரு காரியமாகவே இருந்தது. காரணம் ஒரு சிறு இராணுவ நடவடிக்கைக் கூட ஒரு மாபெரும் போரினை தொடங்கி வைக்கக் கூடிய வல்லமைப்பெற்று இருந்தது என்று நாம் கண்டோம். அப்படி இருக்க ஒரு நாட்டினை மீண்டும் நேரடியாக அடிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியமாகவே இருந்தது.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளின் வளங்களை அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டினை ஆள்பவர்களே அந்த நிறுவனங்களுக்கு அவர்கள் நாட்டின் வளங்களைத் தர வேண்டும்...ஆனால் கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியப்பட கடினமான ஒன்றாகும். காரணம் அந்த நிறுவனங்களின் தன்மையைக் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் நன்றாக அறிந்து வைத்து இருந்தனர். எனவே அந்த நிறுவனங்களுக்கு மீண்டும் அவர்களின் நாட்டினுள் அனுமதி அவர்கள் வழங்குவது என்பது எளிதில் நடவாததொரு காரியமே ஆகும்.

நிலைமை இப்படி இருக்க யுத்தங்கள் இல்லாது அந்த வளங்களை அந்த நிறுவனங்கள் அடைய வேண்டும் என்றால் வளம் உள்ள அந்த நாடுகளை ஆள்பவர்கள் இந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்களாக இருக்க வேண்டும்...அவ்வாறு இல்லாவிடின் அந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக கொண்டு வரப்பட வேண்டும். இந்த வழிமுறையினைத் தான் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனங்கள் அவற்றின் அரசின் உதவியோடு இரு வழிகளைப் பெருன்பான்மையாக கடைபிடித்து இருக்கின்றன என்பதனை வரலாற்றில் இருந்து நாம் காண முடிகின்றது.

1) மக்களால் தேர்ந்து எடுத்த தலைவர்களை கொன்றோ, அல்லது ஒரு இராணுவ புரட்சியினையோ கலகத்தையோ தோற்றுவித்து தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கி தமக்கு உரித்தான தலைவர்களை ஆட்சியில் அமர வைத்தோ, அந்த நாடுகளின் மேல் தங்களின் பிடியினை அந்த நிறுவனங்கள் உறுதி செய்துக் கொள்கின்றன.

2) ஒரு நாட்டிற்கு அதனால் திருப்பித் தர இயலாத வண்ணம் கடனினை வழங்கி, அதனைக் கடன்கார நாடாக்கி பின்னர் அந்த நாட்டில் இருந்து உரிமையாக வளங்களையும் இன்ன பிற சலுகைகள் மற்றும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றன.

மேலே உள்ள இரு வழிமுறைகளில் நாம் முதலாவது பற்றி ஓரளவு அறிந்து இருப்போம். அதாவது ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் இவற்றைப் பற்றி செய்திகளில் எப்பொழுதாவது செய்திகள் வந்து இருக்கும்...நாமும் கண்டு இருப்போம். ஆனால் அந்த இரண்டாவது வழிமுறைதான் சற்று புதிதாக இருக்கின்றது. கேட்பதற்கு நம் நாட்டில் விளங்கும் கந்து வட்டி முறையினை போன்று தோன்றினாலும் அதெப்படி ஒரு நிறுவனம் ஒரு நாட்டிற்கு கடனினை வழங்கி அந்த நாட்டினை கடன்கார நாடாக்க முடியும்? ஒரு நாட்டினால் அதனால் ஒரு கடனைத் திருப்பித் தர இயலுமா அல்லது இயலாதா என்று அறியாத நிலையிலா கடனினை வாங்க முடியும்? போன்றக் கேள்விகள் எழத் தான் செய்கின்றன.

இக்கேள்விகளுக்குத் தான் ஜான் பெர்கின்ஸ் அவரது நூலில் விடையினைக் கூறுகின்றார்.

அவரின் கூற்றுப்படி இன்று எந்த ஒரு பேரரசும் மற்ற நாடுகளின் மீது நேரிடியாக தங்களது ஆதிக்கத்தை இராணுவத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாது இருக்கும் நிலையில், அந்த பேரரசுகள் அவைகளின் வணிக நிறுவனங்களின் மூலமே அவற்றின் செல்வாக்குகளைப் பெருக்கிக் கொள்கின்றன. அதாவது மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது என்பதும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் முன் வைக்கும் வாதம் ஆகும். அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்றுக் காணப்படுகின்றது என்று அவர் கூறுகின்றார். வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.

இத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு "உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்...மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது...இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன" என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன என்றும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

இன்றைய உலகில் நிகழும் நிகழ்வுகளையும், இவர் இவரது நூலினில் குறிப்பிட்டு இருக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் சற்றுக் கவனிக்கும் பொழுது இவரின் இந்தக் கூற்றானது சரியானதான ஒன்றாக இருக்கக் கூடும் என்றே நாம் எண்ண முடிகின்றது. நிற்க

இன்றைய நிலையில் உலகமயமாக்கல் என்றப் பெயரில் என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றது என்று விரிவாக அறிய விரும்புவோர் நிச்சயமாக இந்த புத்தகத்தினைப் படிக்கலாம். உலகை நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு கோணத்திற்கான சாளரத்தினை இந்தப் புத்தகம் திறந்து வைத்தாலும் வைக்கலாம்.

சில குறிப்புகள்:

1) இந்த நூலினில் இவர் அரசியல்வாதிகளும் பெரு நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்துக் கொண்டு வளங்களைக் கொள்ளைக் கொள்கின்றனர் என்றுக் கூறுகின்றார். இதற்கு ஓர் சான்றாக அவர் என்ரான் என்ற அமெரிக்க மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குதாரராக அமெரிக்க அதிபரான புஷ் இருந்ததையும், அதன் காரணமாக அந்த நிறுவனம் எட்டிய அசுர வளர்ச்சியையும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதே என்ரான் நிறுவனம் இன்னும் சில அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு 1991 இல் இந்தியா எப்பொழுது உலகமயமாக்கல் என்றக் கொள்கையின் வாயிலாக உலக நிறுவனங்களுக்கு தனது கதவினைத் திறந்ததோ அப்பொழுது இந்தியாவிலேயே மிகப் பெரிய மின்சாரத் திட்டத்தினை நிறுவ மகாராஷ்டிராவில் நுழைந்தது.

ஆனால் அந்தத் திட்டம் (தாபோல் மின்சாரத் திட்டம் -Dabhol Power plan) மாபெரும் தோல்வியான ஒன்றாக முடிந்தது. மக்களுக்கு எதிரான வன்முறைகள், திரைமறைவு ஒப்பந்த நடவடிக்கைகள், மின்சாரத்துக்கு அதிகமான விலை நிர்ணயித்தல், சுற்றுச் சூழலை மாசு படுத்தியது உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு என்ரான் நிறுவனத்தின் இந்தத் திட்டம் உள்ளாகி பின்னர் பல கோடி உருபாய் செலவிற்கு பின்னர் கை விடப்பட்டது.

2) திடீர் என்று வளர்ந்த அந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் மோசடிக் குற்றச்சாட்டுகளினால் திவால் ஆனது.

3) அந்த நிறுவனத்திற்காக இந்தியாவில் வாதாடியவர் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

4) வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியல்வாதிகளாக மாறி வணிக நிறுவனங்களுக்காக பாடுப் படுகின்றனர் என்று ஜான் பெர்கின்ஸ் கூறுகின்றார். நம் நாட்டில் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இருந்தவர் தான் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

5) அவரே உள்துறை அமைச்சராக இருந்தப் பொழுது, 'வேதாந்தா' நிறுவனத்திற்கு இலாபம் தரும் கனிம வளங்களை உடைய மலைகளை தருவதற்கு தடையாக இருந்த பழங்குடி மக்களுக்கு எதிராக 'பச்சை வேட்டை'  என்னும் இராணுவ நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஆதரவு தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகள் மூலமாக உலகின் உள்ள வளங்களை எல்லாம் ஒரு சிலத் தனிமனிதர்கள் சுரண்டுவதற்கு அரசியலை வணிக நிறுவனங்கள் பயன் படுத்திக் கொண்டு இருக்கின்றன என்றே நாம் அறிய முடிகின்றது.

இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம் என்ற கேள்வியே நம்முடைய தலைமுறையினரை நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கின்றது.

என்ன செய்யப் போகின்றோம் நாம்?

நேற்று இணையத்தினில் உலாவிக் கொண்டு இருக்கும் பொழுது ஒருச் செய்தியினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் சுருக்கம் இதோ...

"தமிழர் கோவில்களை தமிழர்கள் மீட்டெடுப்பது நல்லதே. இதைக் கடவுள் நம்பிக்கையில்லாத 'தீரா விடமான' திராவிட வேடதாரிகள் செய்வது நகைமுரண். எம்மைப் பொறுத்தவரையில் ஆரியர் எதிரி; திராவிடர் துரோகி. தமிழினத் துரோகிகளிடம் நாம் தொடர்ந்து ஏமாற முடியாது. தமிழ்ச்சாதியாக ஒன்றுபட்டுத் தி.க முன்னெடுக்கும் போராட்டத்தை எதிர்க்க ஆயிரக் கணக்கில் நாம் களம் இறங்குகிறோம்." நிற்க.

"கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்" என்று தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ள போராட்டத்திற்கு எதிராக 'தமிழ் தமிழர் காவல் இயக்கம்' என்ற ஒரு அமைப்பு மேலே உள்ள அறிக்கையை வெளியிட்டு உள்ளதாகவே அந்த செய்தி தெரிவிக்கின்றது. இந்த செய்தியினைப் புரிந்துக் கொள்வதற்கு இன்றைய தமிழக சூழலை சற்று நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இன்று தமிழகத்தில் உள்ள நிலவரத்தினை சற்று நின்று கவனித்தாலே ஒரு விவாதம் மிகவும் தீவிரமாக நடந்துக் கொண்டு இருப்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடியும். "திராவிடம் தான் தமிழை வீழ்த்தியது" என்று ஒரு சாரார் கூறிக் கொண்டு இருக்க மற்றொரு சாரார் "இல்லை...தமிழும் தமிழர்களும் தன்மானத்தோடு நிற்க வழிவகுத்ததே திராவிடம் தான்" என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர். இந்த விவாதத்தினைப் பற்றி நாம் மேலும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் "திராவிடத்தைப்" பற்றியும் "தமிழைப்" பற்றியும் மேலும் சிறிது வரலாற்றினைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவற்றை நாம் இங்கே இப்பொழுது காணப் போவதில்லை. காரணம் இப்பதிவின் நோக்கம் மேலே உள்ள செய்தியில் உள்ள விடயங்ளைப் பற்றிப் பார்ப்பதே ஆகும்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் ஒரு போராட்டத்தினை அறிவிக்கின்றது. அதனை தமிழ், தமிழர் காவல் இயக்கம் என்றொரு அமைப்பு எதிர்க்கின்றது. ஏன் அந்த அமைப்பு எதிர்க்கின்றது என்று கண்டோம் என்றால் நமக்கு விடையாய் கிட்டுவது...

௧) கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆன திராவிடர் கழகத்தினர் தமிழர் கோவில் தொடர்பான போராட்டங்களை நடத்துவது சரியல்ல.

௨) திராவிடர்களை நம்பி நம்பி நாம் ஏமாந்து விட்டோம். எனவே தமிழர்களுக்காக திராவிடம் பேசுவோர் போராட வேண்டியதில்லை.

இவையே அவர்கள் முன் வைக்கும் காரணம். மாறாக திராவிடர் கழகத்தினர் போராடும் காரணத்தை, அதாவது "கோவில் கருவறையில் தமிழர்கள் நுழைய வேண்டும்' என்ற காரணத்தை தவறு என்று அவர்கள் சொல்ல வரவில்லை. மாறாக அந்தக் காரணம் சரியான ஒன்றே என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அதாவது போராட்டம் தேவையான போராட்டம் தான்...ஆனால் அதனை தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் முன் எடுக்க வேண்டியதில்லை, அதாவது "தமிழர்களுக்கு தமிழர்களே போராடிக் கொள்வோம்" என்பதே அவர்களின் வாதம்.

சரி இவர்களின் வாதம் சரி என்றே நாம் வைத்துக் கொள்வோம், அப்படி இருந்தால் இவர்கள் எடுத்த முடிவு எவ்வாறு இருந்து இருக்க வேண்டும்...

"தமிழர்களுக்காக நீங்கள் என்ன போராடுவது...நாங்களே எங்களின் போராட்டங்களை முன் எடுத்துக் கொள்வோம்..." என்றுக் கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் கருவறை நுழைவுக்காக குறித்து இருந்த தேதிக்கு முன்னரே கருவறை நுழைவுப் போராட்டததினை நிகழ்த்தி இருக்க வேண்டாமா? அவ்வாறு நிகழ்த்தி இருந்தால் ஒரே செயலில் இரண்டு வெற்றிகள் பெற்று இருக்க கூடுமே.

௧) கோவிலில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதியினை நாம் பெற்று இருக்கலாம்.

௨) கோவிலின் உரிமையை நாம் நாமே பெற்று விட்டப் பின் திராவிடர் கழகத்தின் போராட்டம் தேவை இல்லாத ஒன்றாக போய் இருக்குமே... அதாவது 24 ஆம் தேதிக்கு முன்னரே கருவறை நுழைவுப் போராட்டததினை தமிழ் கூறும் இயக்கங்கள் நிகழ்த்தி இருந்தால், அதே போராட்டததினை பின்னர் திராவிடர் கழகம் எடுக்க வேண்டிய தேவை யாது? தமிழர்களுக்காக தமிழர்களே வென்று இருப்போமே.

ஆனால் அதனை விடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் எடுக்கும் போராட்டததினை எதிர்த்து மட்டுமே என்ன பயன் கிட்டப் போகின்றது தமிழர்களுக்கு... கோவில் கருவறையுள் பார்ப்பனர்கள் மட்டுமே நுழையும் நிலையே தொடருமே?

அப்படி இருக்க இத்தகைய ஒரு முடிவினை, அதாவது "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" முன் எடுக்கும் போராட்டத்தினை எதிர்க்கும் முடிவினை, எடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு யாது ஒரு நன்மையும் கிட்டாது, இது "அவனும் போராடக் கூடாது...நானும் போராட மாட்டேன்" என்றுக் கூறி தமிழர்களுக்கு கோவில்களுள் அவர்களின் உரிமையை மறைமுகமாக மறுக்கும் ஒரு சதியாகத் தான் காண முடிகின்றது.

மாறாக இதில் தமிழர்களுக்கு இம்மி அளவும் நன்மை இருப்பதாகத் தெரியவில்லை.

செரோக்கே (cherokee) இன முதியவர் சுற்றியும் பார்த்தார்.


இருள் மெதுவாய் படரத் தொடங்கி இருந்தது. அதுவரை காற்றில் விளையாடிக்கொண்டிருந்த புல்வெளிகள் இருளெனும் போர்வையால் மூடப்பெற மெதுவாய் தலை நீட்டிப் பார்க்க ஆரம்பித்து இருந்தன சில நட்சத்திரங்கள்.

“ம்ம்ம்…நேரம் கனிந்து விட்டது” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே தனது குடிலின் அருகே மூட்டப்பட்டு இருந்த நெருப்புக் கோளத்தின் அருகே சென்று அமர்ந்து அவருடைய பேரனை அழைத்தார்.

“செரோக்கே இன இளைஞனே… வாழ்வினைப் பற்றி நீ அறிந்துக் கொள்ள வேண்டிய தருணம் இதோ வந்து விட்டது. வாராய்” என்றார்.

அவரின் அழைப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவாறே ஒரு இளைஞனும் அவரருகே வந்து அந்த நெருப்புக் கோளத்தின் அருகே அமர்ந்தான். இருவருக்கும் போதுமான வெப்பத்தை வழங்கியவாறு நெருப்பு எரிந்துக் கொண்டு இருக்க மௌனமாய் சில நொடிகள் கழிந்தன. மௌனம் அவனுக்கு புதிதல்ல…வார்த்தைகள் அவனுக்கு கற்றுத் தந்ததை விட மௌனமே அவனுக்கு அதிகமாக கற்றுத் தந்து இருக்கின்றது….இதோ இந்த மௌனத்திலும் நெருப்பில் உடையும் சருகுகளும், ஊளையிட்டுக் கொண்டே அவனைக் கடந்துச் செல்லும் தென்றலும் அவனுக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தந்துக் கொண்டு தான் இருந்தன. ஆனால் இன்று அவை அவனுக்கு முக்கியமில்லை. இன்று அவனுக்கு முன்னர் வாழ்க்கை அனுபவத்தின் பாடம் காத்துக் கொண்டு இருந்தது. அதற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அவன் காத்திருக்க தயாராக இருந்தான். அனுபவங்களின் பாடங்கள் அவ்வளவு முக்கியமானவை அவர்களின் இனத்தில்.

“என்னுள் ஒரு யுத்தம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றது….” செரோக்கே இன முதியவர் பேச ஆரம்பித்து இருந்தார்.

“அது ஒரு பயங்கரமான யுத்தம். என்னுள் இரு ஓநாய்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒன்று தீமையானது – கோபம், பொறாமை, பேராசை, துக்கம், வருத்தம், பொய், தாழ்வுமனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, போலிப் பெருமை போன்ற குணங்களின் வடிவாக அந்த ஓநாய் இருக்கின்றது. மற்றொன்று நன்மையானது – அன்பு, நன்றி, கருணை, மகிழ்ச்சி, அமைதி, கொடைத்தன்மை, இறக்கம், உண்மை, நம்பிக்கை, எளிமை போன்ற தன்மைகளின் வடிவாக இந்த ஓநாய் இருக்கின்றது.” முதியவர் மெதுவாக நிமிர்ந்து அவரது பேரனைப் பார்த்தார்.

“அந்த ஓநாய்களின் சண்டை உன்னுள்ளும் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றது இளைஞனே…உன்னுள் மட்டும் அல்ல மக்கள் அனைவருள்ளும் அவை சண்டையிட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.” என்றுக் கூறி விட்டு தனது பார்வையினை தனது பேரனிடம் இருந்து விலக்கி நெருப்பினை பார்க்க ஆரம்பித்தார்.

தனது தாத்தா தன்னிடம் கூறிய விடயத்தினை பற்றி சிந்திக்கலானான் அந்த இளைஞன். அவரின் கூற்றில் இருந்த உண்மையை அவன் அறிந்து
இருந்தான்… காரணம், அவனுடைய மனதினுள் பல நேரங்களில் சில கருத்துக்கள் மோதிக்கொள்வதை அவன் உணர்ந்து இருந்தான்.


“ஆம்…என்னுள் ஓநாய்கள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கின்றன…” அவ்வாறு எண்ணிக் கொண்டு மெதுவாய் புன்னகைத்துக் கொண்டு தனது தாத்தாவை நோக்கினான்… ஒரு கேள்வி அன்றுக் கேட்பதற்கு மீதம் இருந்தது.

“எந்த ஓநாய் வெல்லும் தாத்தா…?”

நெருப்பில் நிலைத்து நின்று இருந்த தனது பார்வையை நிமிர்த்தி தனது பேரனை நோக்கித் திருப்பினார்.


“எந்த ஓநாய்க்கு நீ உணவிடுகின்றாயோ…அந்த ஓநாயே வெல்லும் இளைஞனே…அந்த ஓநாயே வெல்லும்!!!” என்றுக் கூறி அன்றைய பாடம் முடிந்தது என்று சைகையால் தனது பேரனுக்கு அறிவித்து விட்டு தனது குடிலினுள் சென்றார்.

பி.கு:

இது ஒரு செரோக்கே இன செவ்விந்தியர்களின் கதையாகும்.

செவ்விந்தியர்கள் என்பவர்கள் இன்றைக்கு வட அமெரிக்கா என்று வழங்கப்படும் தேசத்தின் பூர்வீகக் குடியினர் ஆவர். இந்தியாவைத் தேடி பயணித்த ஐரோப்பியர்கள் தெரியாது அமெரிக்க கண்டத்திலே கால் வைத்தப் பொழுது அந்த தேசத்தையே இந்தியா என்று எண்ணலாயினர். அவ்வாறே அங்கு இருந்த சிவந்த நிற மனிதர்களை இந்தியர்கள் என்று எண்ணி செவ்விந்தியர்கள் என்று பெயரும் இட்டு விட்டனர். (செவ்விந்தியர் – சிகப்பு + இந்தியர்). ஆனால் தாங்கள் வந்த தேசம் இந்தியா அல்ல என்று அவர்கள் அறிய நேர்ந்ததும் வழக்கம் போல் அந்த இடத்தில் இருந்த மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி அவர்கள் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர் ஐரோப்பியர்கள்.

அவ்வாறு ஐரோப்பியர்கள் அமெரிக்காவை கைப்பற்றியதும் அங்கிருந்த பூர்வீகக் குடியினரைக் கொத்துக்கொத்தாக கொன்று போட்டதும் பலரும் அறியாத சோக வரலாற்றுப் பக்கங்களாகும். அந்த வரலாறு இப்பொழுது நமக்கு முக்கியமில்லை. ஆனால் அவ்வாறு அழிக்கப்பட்ட ஒரு இனம் தான் இந்த செரோக்கே செவ்விந்திய இனம் (முற்றிலுமாக அவர்கள் அழியவில்லை…இன்னும் சில மக்கள் அமெரிக்காவில் வாழ்ந்துக்  கொண்டு தான் இருக்கின்றனர்). அவர்களை அழித்த ஆங்கிலேயர்கள் தான் இன்று அமெரிக்கர்கள் என்று பெயரினைக் கொண்டு முன்னர் செவ்விந்தியர்கள் சுற்றிக் கொண்டு இருந்த இடங்களில் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு