சமயங்களைப் பற்றிய நமது ஆராய்ச்சிப் பயணத்தில் பல பதிவுகளைக் கடந்தாயிற்று...இந்த பயணத்தில் நாம் இன்னும் பயணிக்க சில தகவல்களை அறிந்துக் கொண்டால் நல்லது என்று எண்ணியே இந்தப் பதிவு.

முதலில் சைவ சமயத்தினையும் வைணவ சமயத்தினையும் பற்றி சைவரான திரு. கா.சு.பிள்ளை அவர்கள் என்ன சொல்கின்றார் என்றுக் கண்டு விடுவோம்.

1) "நம்மாழ்வார் காலத்தில் திருநீறே இருசமயத்திற்கும் (சைவம் வைணவம்) பொது அடையாளமாக இருந்தது. 'கரிய மேனி மிசை வெளிய நீறு', 'நீறு செவ்வே யிடக்காணில் நெடுமாலடி யார் என்றுத் துள்ளும்" முதலிய நம்மாழ்வார் வாக்கியங்களுள் நீறு என்பது திருநீற்றினைக் குறிப்பது போலும்." - (இதன் மூலம் திருநீறே முதலில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவான அடையாளமாக இருந்தது என்றக் கருத்து இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

2) ஒரு காலத்தில் ஆறு சமயங்களுக்கும் பொதுவாகக் கடவுளின் அருவுருவாகிய சிவலிங்க வழிபாடு விளங்கிற்று. தமிழர் கருத்தே தந்திரங்களில் உள்ளது. வடநாட்டுத் தந்திரங்களிளுள் ஒன்றாகிய லிங்கார்ச்சன தந்திரத்துள், ஒருவன் கணபதி மதத்தையாவது, கௌமார மதத்தையாவது சைவ சமயத்தையாவது வைணவ சமயத்தையாவது சாத்தேய மற்றும் செளர மதத்தையாவது தழுவி ஒழுகினாலும் முதலில் சிவலிங்க பூசை செய்து விட்டு தன் இட்ட தேவதையை வழிபட வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆதலில் ஒரு பெரும் சமயத்துள் ஆறு பகுதிகளாகவே ஆறு சமயங்களும் விளங்கின என்பது ஊகித்தற்பாலது.

3) "இப்பொழுதும் சிவன் கோவில்களில் திருமால், சக்தி, முருகன், பிள்ளையார், கதிரவன் முதலியோருக்கு உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவிலில் திருமால் சயனித்து இருக்கும் இடத்தில் சிவலிங்கம் காணப்படுகின்றது. பிற்காலத்தில் வைணவம் தனி மதம் ஆகி விடவே பெருமாள் கோவில்களில் சிவ வடிவங்களைக் காண்பது அரிதாயிற்று."

4) வங்காள நாட்டில் காளி கோவில்களில் எல்லாம் சிவலிங்கம் காணப்படுகின்றது.

(மேலே உள்ள வரிகள் மூலம் அனைத்து சமயங்களும் ஒரு சமயத்தில் இருந்து பிரிந்தனவையே என்றும் அவை அனைத்துக்கும் பொதுவாய் சிவலிங்க வழிபாடு இருக்கின்றது என்றக் கருத்தினை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. கூடுதலாக வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து சென்று இருக்கும் ஒரு சமயம் என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

சரி..இப்பொழுது சிவனைப் பற்றி அவர் என்ன கூறுகின்றார் என்றுக் காண்போம்...!!!

1) சிவலிங்க வழிபாடு தந்திரங்களில் முதல் இடம் பெற்று உள்ளது.

2) "கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று." "பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது." (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்...சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்)

3) "சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்ட போது எங்கும் நிறைத்து விளங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள் காரணமாம் என்றக் கொள்கை எழுந்தப் போது சிவசக்தி அருள் எனவும் தாய் எனவும் வழங்கப்பட்டது." (இதில் இருந்து சக்தி என்பது இறைவனின் ஆற்றலே என்றும் அவ்வாற்றலைத் தான் பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கின்றனர் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிய முடிகின்றது.)

4) "கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று."

5) வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க."

6) "கடவுளுடைய ஆற்றலே விஷ்ணு எனக் கொள்ளப்பட்டமையால் பெருமான் என்றச் சொல் சக்தியைக் குறிக்கும் ளகர முடிபோடமைந்து திருமாலைக் குறித்தல் காண்க." (அதாவது 'பெருமாள்' என்றப் பெயர் இறைவனின் சக்தியைக் ஆண் வடிவமாகக் குறிக்கும் பெயர் என்றே அவர் கூறுகின்றார்)

7) அம்மையின் ஆண்வடிவமே திருமால் என்று சிவ ஆகமங்கள் கூறும்.

(இதில் இருந்து பெருமாள்/விஷ்ணு/அம்மன் என்றப் பெயர்கள் இறைவனின் ஆற்றலையும் அருளையும் குறிக்கும் பெயர்களே அன்றி அவை தனிக் கடவுளர் அல்லர் என்றக் கருத்தும் இங்கே இருக்கின்றது என்று நாம் அறிகின்றோம். எனவே அம்மன் என்பது ஒரு உருவகமே என்றால் சிவனுக்கும் அம்மனுக்கும் பிறந்த குழந்தைகளாக அறியப்படும் முருகனும் பிள்ளையாரும் யார்? மேலும் விஷ்ணுவும் இறைவனின் ஆற்றலைக் ஆண்வடிவமாகக் குறிக்கும் உருவகம் தான் என்றால் விஷ்ணுவின் பிள்ளையான பிரமனும் ஐயப்பனும் யார்? ஏன் அந்தக் கதைகள்...உருவகங்கள் வந்தன என்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது தானே.)

சரி...திருமால்/விஷ்ணு என்பது இறைவனின் ஆற்றலின் உருவகமே என்றால் விஷ்ணுவின் அவதாரங்களாக அறியப்படும் கடவுளரைப் பற்றி திரு.கா.சு.பிள்ளை என்னும் சைவர் என்ன கூறுகின்றார் என்று நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

1) "கடவுளின் சக்தி உலகத்தைப் பரிபாலிப்பது போல அரசர்களும் தம்முடைய ஆற்றலால் உலகைப் பரிபாலித்தலின் கடவுட் சக்தியின் ஆண்வடிவமாகிய திருமாலின் இனம் என்று அரசர்களைச் சொல்லுதல் வழக்கமாயிற்று."

2) இராமன் வழிபாடு வீர வணக்கத்தைச் சார்ந்ததே ஆகும். இராமன் சிறந்த அரசனாய் விளங்கினமையால் அவன் திருமாலின் அவதாரமாகக் கருதப்பட்டான்.

3) இராமன் அரச குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த திருவாளர் ம.ச.இராமசாமி ஐயர் முதலியோர் அக்குடும்பம் தமிழ் அரசர் குடும்பம் என்றே துணிந்தனர். இராமனுக்கு கரு நிறம் கூறப்படுதல் அதற்கு ஒரு சான்றாம் என்ப.

(இதன் மூலம் அவதாரங்கள் என்பனவும் உருவகங்களே என்றக் கருத்து இருக்கின்றது என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

சரி இப்பொழுது அவர் இந்து மதத்தினைப் பற்றி என்ன கூறுகின்றார் என்றும் கண்டு விடலாம்..

௧) இந்துக்களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லாருக்கும் ஒரு மதம் இருப்பதாக எண்ணி இந்து மதம் என்ற பெயரைத் தோற்றுவித்தனர். தற்காலத்தில் வடமொழி வேதத்தை பிரமாணமாகக் கொண்ட வைதீகர்கள் தங்கள் மதமே இந்து மதம் என்று பேசுபவராய் அம்மதமே இந்திய நாட்டில் உள்ள எல்லா மதங்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன் வந்து உள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானிய மதம், அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்து மதம் என்று ஒன்று உண்டு எனலாம். ஆனால் அவ்வாறு மதங்கள் இல்லாதது போல இந்து மதம் என்ற ஒரு மதமும் கிடையாது.

௨) வேதத்தையும் சிமிருதியையும் பிரமாணமாகக் கொண்ட மதம் இந்து மதம் என்றால் அது இந்தியாவில் உள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமே அன்றி இந்தியர் அனைவருக்கும் பொதுவான ஒரு மதமாகாது.

௩) ஆதலால் வடமொழி வேதத்தின் வேறான சிறந்த பிரமாணங்களுடைய தமிழ் சைவ வைணவர்கள் தங்கள் சமயங்களை இந்து மதம் என்று கூறுதல் அறிவுக்குப் பொருந்துவதில்லை.

(இதன் மூலம் இந்து மதம் என்பது வேறு சைவ வைணவ சமயங்கள் என்பது வேறு என்றும் வேதங்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பில்லை என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

மேலும் இப்பொழுது கோவில்களில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு இருக்கின்றன என்றும் அவர் கூறுகின்றார். அவற்றைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

௧) இக்கோவில்களில் உள்ள (சைவ வைணவ கோவில்கள்) ஆரியச் சார்புகள் யாவை எனில் தமிழ் குருக்கள் தம்மை ஆரியராய் எண்ணிக் கொள்வதும் வருணவரம்புகள் பற்றி இன்னின்னார் இன்ன இடத்தில நிற்க வேண்டும் என்பதும் தாழ்த்தப்பட்டவருக்கு இடம் இல்லாமையும் பரிசாரகம் முதலிய தொண்டுகள் சுமார்தராற் செய்யப்படுவதும் வடமொழி வேதபாராயணம் முதலியவைகளும் வேதச் சார்பான ஓமச் சடங்கும் ஆம் என அறிக.

௨) 'பிற்போக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நாயனார் கொள்கைப்படி வருணவரம்புகள் ஒழிய வேண்டும்.

௩) தொண்டுகள் யாவற்றிக்கும் பூசனை செய்வதற்கும் பிறப்புத் தடை இருத்தல் கூடாது.

(இதன் மூலம் இன்று கோவில்களுள் பிறப்பின் காரணமாக பிரிவினைகள் இருப்பது வேதக் கொள்கைகளால் என்றும் அவை சைவ வைணவ கொள்கைகளுக்கு மாறான கொள்கைகள் என்றும்...வருணங்கள் எனப்படுபவை தமிழர்களுக்கு உரியன அல்ல என்றும் அவை சைவ வைணவத்திற்கு உரியன அல்ல என்றும் அவை ஒழிக்கப் பட வேண்டும் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

இக்கருத்துக்கள் திரு.கா.சு.பிள்ளை அவர்களின் கருத்துக்கள் மட்டுமே ஆகாது...இன்னும் பல அறிஞர்கள் இதே கருத்தினைக் கூறி இருக்கின்றனர். ஏற்றும் இருக்கின்றனர். மேலும் அனைத்திந்திய தமிழர் சமய மாநாட்டிலும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.

இப்பொழுது நாம் எவ்வாறு சைவ வைணவ சமயங்கள் வேத சமயத்தினால் (வைதீக சமம்) ஆட்கொள்ளப்பட்டன என்று மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுவதனைக் காண வேண்டி இருக்கின்றது.

1) குறுகிய நோக்கும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக சமயம் தென்னாட்டில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. ஒதுக்கப்பட்ட இந்த மதம் புத்த சமண சமயங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டு என்றால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் தமிழர் வழிபட்டு வரும் திராவிட சமயத்துடன் வைதீக சமயத்தையும் சேர்த்துக் கொண்டு பொது மக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. அதாவது வைதீக மதம் திராவிட மதத்தின் தெய்வங்கள் ஆகிய சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது.

2) ஏற்றுக் கொண்டதோடு நில்லாது திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது.

(இதன் மூலம் சைவ வைணவத்தில் தொடர்பு இல்லாத வைதீக சமயம் அது பிழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சைவ வைணவத்தோடு இணைந்துக் கொண்டு பின்னர் அச் சமயங்களையே மாற்றியது என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது)

எனவே சுருக்கமாகக் காண வேண்டும் என்றால்,

௧) சைவ வைணவ சமயங்களுக்கும், வேதங்களுக்கும் சரி வருணவரம்புகளுக்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை.

௨) இன்று கோவில்களில் சைவ வைணவ சமயங்களுக்கு மாறான வேதக் கொள்கைகள் பெருமளவுக் காணப்படுகின்றன. அதற்கு காரணம் வைதீக சமயம் சைவ வைணவ சமயங்களை தன் கட்டுக்குள் வைத்து இருப்பது தான்.

௩) அம்மன்/விஷ்ணு என்பது கடவுளின் ஆற்றலின் உருவகமே. அதேப் போல அவதாரங்களும் உருவகங்களே.

௪) சைவ சமயமே பின்னர் பல்வேறு சமயமாக பிரிந்துச் சென்று இருக்கின்றது. வைணவமும் சைவமும் ஒன்றே. வைணவர்களின் சின்னம் முதலில் திருநீராகத்தான் இருந்து இருக்கின்றது.

௫) சைவ வைணவ சமயங்களுள் சாதி ஏற்றத் தாழ்வுக்கும் தீண்டாமைக்கும் எந்த ஒரு இடமோ அல்லது தொடர்போ கிடையாது.

தொடரும்...!!!

இன்றைய தேதியில் இந்தியா ஒரு மாபெரும் சந்தை. கணக்கிடப்பட முடியாத அளவுக்கு பணம் கொழிக்கும் ஒரு மிகப் பெரிய சந்தை. அதனால் தான் இன்றைக்கு உலகின் பல்வேறு நிறுவனங்களும் இந்தச் சந்தையில் நுழைந்து பணம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு துடியாய் துடித்துக் கொண்டு இருக்கின்றன...அதற்காக அவை எந்தச் செயலை செய்வதற்கும் தயாராக இருக்கின்றன. ஆனால் இங்கேதான் சில பெரிய பிரச்சனைகள் அவர்களுக்குக் காத்து இருக்கின்றது.

௧) அவர்களின் பொருட்களுக்கு இங்கே உண்மையிலேயே தேவை கிடையாது.
௨) அவர்களின் பொருட்களை விட சிறந்த பொருட்கள் இங்கே ஏற்கனவே அனைவருக்கும் பொதுவாக கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் அவர்கள் என்ன தான் இந்தியச் சந்தையினுள் நுழைந்தாலும் அவர்களின் பொருட்களுக்கு இங்கே சந்தைக் கிடைக்குமா என்பது ஒரு மாபெரும் கேள்விக்குறியே? இந்நிலையில் தான் அந்த நிறுவனங்கள் மிகவும் கேவலமான வழிமுறையினை கையாள ஆரம்பிக்கின்றன...!!!

உதாரணத்துக்கு, கருப்பு என்பது ஒரு நிறம்...இந்தியர்களின் இயல்பான நிறமே கருப்பு தான்...நமது கடவுளர் அனைவரும் கருப்புத் தான். இந்த நிலையில் நமக்கு வெள்ளை நிறமாக வேண்டும் என்ற தேவையோ அல்லது எண்ணமோ எழ வாய்ப்புகளே இல்லை. ஆனால் அத்தைகைய எண்ணங்கள் நம்மிடம் இல்லை என்றால் பன்னாட்டு அழகுச் சாதனப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் எவ்வாறு இங்கே வந்து அவற்றின் கடையை விரித்து பணம் பார்க்க முடியும் ?...அவைகளின் பொருளுக்குத் தான் இங்கேத் தேவையே இல்லையே. இந்நிலையில் தான் அவை மனரீதியான தாக்குதலைத் தொடங்குகின்றன...அமைதியாய்...தெளிவாய்!!!

"கருப்பு என்பது நிறம் அல்ல...அது அவமானம்...வெள்ளை என்றால் தான் அழகு...!!! வெள்ளை உயர்ந்தது...கருப்புத் தாழ்ந்தது... நீங்கள் வெள்ளையாக இருந்தால் தான் மற்றவர்கள் உங்களைக் காண்பார்கள்...விரும்புவார்கள்...மேலும் அப்பொழுது தான் உலகமே உங்களைப் பார்க்கும்" என்றச் செயய்தியினைக் கொண்ட விளம்பரங்கள் மூலமாக கருப்பான மக்களிடம் முதலில் தாழ்வு மனப்பான்மைக்கான விதையை மெதுவாய் அவர்கள் விதைக்கின்றனர். பின்னர் அணைத்து விதமான ஊடகங்களிலும் வெள்ளை நிறம் கொண்டவர்களையே முன்னிலைப் படுத்தி விதைத்த அந்த விதையை மெதுவாக வளர்க்கின்றனர். ஒரு நிலையில் "ஐயோ நாம் கருப்பாக இருக்கின்றோமே" என்ற ஒரு எண்ணத்தை மக்களுள் வர வைத்தப் பின் "நீங்கள் கருப்பாக இருக்கின்றீர்களா...பிரச்சனை இல்லை...இதோ எங்கள் நிறுவனத்தின் களிம்பினை வாங்கி பூசிநீர்கள் என்றால் நான்கே வாரங்களின் சிகப்பழகு மிளிரும்...இதோ இதை அமெரிக்காவில் மைகேல் ஜாக்சன் பூசுகின்றார்கள்...சப்பானில் சாக்கிசான் பூசுகின்றார்கள்" என்றுக் கூறி மக்களின் அந்த தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டே தங்களின் வணிகத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஒருவனின் மனதினைப் பற்றிய எந்த ஒரு அக்கறையும் இல்லாது வெறும் பணத்தினை மட்டுமே குறியாகக் கொண்டே அவர்கள் இயங்குகின்றனர். இந்த ஈன செயலைச் செய்வதற்கு அவர்கள் தனியொரு அமைப்பையே வைத்துத் தான் செயல்லாற்றுகின்றனர். இன்றைய வியாபார நிர்வாகப் படிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் இத்தகைய செயல்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன.

1991 ஆண்டில் தான் அன்றைய நிதி அமைச்சராக இருந்த திரு.மண் மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் நுழையலாம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வருகின்றார். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அதுவரை இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண் தான் உலக அழகிப் பட்டத்தினைப் பெற்று இருக்கின்றார். ஆனால் திரு.மண் மோகன் சிங் அவர்கள் எப்பொழுது அந்தச் சட்டத்தினை இயற்றினாரோ, அடுத்த எட்டு வருடங்களுக்குள் இந்தியாவுக்கு ஆறு விருதுகள் உலக அழகிப் போட்டிகளில் கிடைத்து இருக்கின்றது. அசாத்தியமான சாதனை தான் அல்லவா. இந்தியா பன்னாட்டு அழகுச் சாதன நிறுவனங்களை இந்தியாவினுள் நுழைய அனுமதித் தந்து இருக்கின்றது...அதனைத் தொடர்ந்து அழகிப் போட்டிகளில் இந்திய பெண்கள் வரிசையாக வெற்றிப் பெற்று இருக்கின்றனர். இவ்விரண்டு சம்பவங்களும் எதேச்சையாக நிகழ்ந்த சம்பவங்களா அல்லது இவ்விரண்டுக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினுள் முதல் முறையாக அந்நிய அழகுச் சாதனப் பொருள்கள் நுழைகின்றன...அனால் அவற்றை வாங்க வேண்டியத் தேவை இங்கே யாருக்குமே கிடையாது. அந்நிலையில் அந்தப் பொருள்களை பயன்படுத்திய பெண்களை உலகமே கண்டு வியப்பது போலும் அவர்கள் அந்தப் பொருள்களை பயன்படுத்திய ஒரே காரணத்தினால் உலகப் புகழ் அடைந்து விட்டது போன்றும்...அவர்களையே ஆண்கள் அனைவரும் விரும்புவது போலும் தோற்றத்தினை உருவாக்கி, அக்கருத்தை 'உலகமே வியக்கும்' அந்தப் பெண்களின் வாயிலாகவே பரப்பினால், மற்றப் பெண்களின் மனம் சற்று அலைக்கழியுமா கழியாதா?...அலைபாயும் தானே... நம்மளும் அந்தப் 'உலகப் புகழ்' பெண்களைப் போல் ஆக மாட்டோமா என்றும் 'இப்படியே இருந்து விட்டோம் என்றால் ஆண்கள் யாரும் நம்மை விரும்ப மாட்டார்களோ?' என்ற எண்ணம் அவர்களுக்குள்ளும் வரும் தானே. அவ்வாறு வந்தால் அவர்களும் அந்த அழகுச் சாதனப் பொருட்களை வாங்க ஆரம்பிப்பர் தானே. அவ்வாறு அவர்கள் வாங்க ஆரம்பித்தால் யாருக்கு லாபம்...வாங்குபவர்களுக்கா அல்லது அந்த அழகுச் சாதன நிறுவனத்துக்கா? அழகுச் சாதன நிறுவனத்திற்குத் தானே.

 அவ்வாறே தான் நடந்தது. உலக அழகி பட்டம் பெற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட அழகுச் சாதனப் பொருட்களைச் சுமந்துக் கொண்டே இந்தியாவில் வலம் வரத் தொடங்கினர். அவர்களை மையமிட்டே அனைத்து ஊடகங்களும் நஞ்சை 'அதாவது வெள்ளை தான் அழகு என்றக் கருத்தை' மக்களிடம் பரப்ப ஆரம்பித்தன. இறுதியாக எந்த மக்கள் அழகுக்காக ஒரு நயா பைசாக் கூட செலவழிக்காது இருந்தனரோ அவர்களே செலவழித்தால் தான் அழகினைப் பெற முடியும் என்று எண்ணி அந்த அழகுப் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இன்றைக்கு எந்த ஒரு பெண்ணின் கைப்பையை எடுத்துப் பார்த்தாலும் அதில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையும் பொருட்களுமே சொல்லும் அந்த வணிக நிறுவனங்கள் பெற்ற வெற்றியை...அது தான் அவர்களுக்கு வேண்டும்...அது தான் அவர்களின் வணிகம். மனம் முக்கியமில்லை...பணமே முக்கியம். இந்தக் கேடுக் கேட்ட பிழைப்பிற்கு பெரிய பெரிய படிப்புகள் வேற!!!

மேலும் இவ்வாறு அந்த நிறுவனங்கள் இந்தியாவில் வேர் ஊன்ற ஆரம்பித்த காலத்தில் அவர்கள் சந்தடிச் சாக்கில் செய்த மற்றொரு முக்கியமானக் காரியம், அதுவரை இங்கே மக்கள் கொண்டு இருந்த அழகுப்படுத்திக் கொள்ளும் வழக்கங்களை மாற்றியது தான். அதையும் ஊடகங்களின் துணைக் கொண்டே செம்மையாக அந்த நிறுவனங்கள் சாதித்துக் கொண்டன. உதாரணத்துக்கு 20 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் மஞ்சள் பூசிக் கொள்வது வழக்கம். மஞ்சளில் பல்வேறு நலன்கள் இருக்கின்றன. ஆனால் மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்கள் எல்லாம் நாகரீகமற்றவர்கள் என்றும் பட்டிக்காடுகள் என்றும் எண்ணம் தோன்றுவதுப் போல செய்திகளையும் விளம்பரங்களையும் பரப்பி இன்றைக்கு மஞ்சள் என்றாலே ஒருவித இளக்காரமான பார்வையோடு மக்கள் காணும் வண்ணம் செய்து விட்டார்கள். அவ்வாறு கருத்தினையும் பார்வையையும் அவர்கள் விதைத்து விட்டதினால் நம் முன்னோர்கள் கொண்டு இருந்து முறைகள் மற்றும் ஞானம் ஆகியவற்றில் இருந்து நம்மை நாமே துண்டித்துக் கொள்ளுமாறு ஒரு நிலை இங்கே உருவாக்கி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களுக்கு பின்னர் நம்முடைய முன்னோர்கள் இம்முறையை இயல்பாகவே இலவசமாக பின் பற்றி வந்தனரோ அந்நிலையையே நாம் பெரும் காசினைக் கொடுத்து அந்நிய நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

இதுவே அவர்களின் தந்திரம்....!!! அது வரை இருந்த பழக்கங்கள் அனைத்தும் தவறானவை என்றும் அந்த நிறுவனங்களின் பொருள்கள் தான் சிறந்தவை என்ற எண்ணத்தினை மனரீதியான தாக்குதல்கள் மூலம் மக்களின் மனதினில் பதித்துவிட்டு அதன் மூலம் காசினைப் பார்ப்பது தான் அந்த நிறுவனங்களின் திட்டம். அப்பாவி மக்கள் அந்த நிறுவனங்களின் சதியினை உணர மாட்டார்கள். எனவே அவர்களைச் சொல்லிக் குறை இல்லை. ஆனால் இந்த அரசாங்கங்கள், அதற்குமா தெரியாது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடியே இந்த வணிக நிறுவனங்கள் காசு பார்கின்றன என்று? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் இப்படியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் தங்களின் மக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு அடுத்தவனின் லாப வெறிக்காக ஆட்படுவதை? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. ஆனால் நம்முடைய அரசாங்கங்கள் வேடிக்கைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றன...இல்லை இல்லை அவையும் அந்த வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களிடம் இருந்துக் கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கின்றன...காரணம் அவை தான் மக்களுக்கான அரசாங்கங்கள் இல்லையே...!!!

ஏற்கனவே நான் உயர்ந்தவன் நீ தாழ்த்தப்பட்டவன் என்று மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஊட்டி அதன் மூலம் அதிகாரத்தையும் செல்வதையும் பெற்று ஆண்டுக் கொண்டு இருக்கும் ஒரு அரசாங்கமான இந்திய அரசாங்கத்துக்கு, மற்றுமொரு நிறுவனம் வந்து ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருப்பவனை மேலும் தாழச் செய்வது என்பது லாபம் தானே...தாழ்ந்து இருக்கும் காரணங்கள் வேண்டும் என்றால் வேறாக இருக்கலாம்...ஆனால் முடிவு....தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவே இருக்கின்றான். இதுவே அவர்களுக்கு வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்களை எப்பொழுதும் எவரும் கேள்விக் கேட்க முடியாது. இந்நிலையிலேயே நமது அரசாங்கமும் அந்நிய நிறுவனங்களின் இந்த மனிதத் தன்மை அற்ற செயலை ஊக்குவிக்கத் தான் செய்கின்றன.

இந்நிலையில் தங்களிடம் இருக்கும் வைரத்தினை அறியாமையினால் வெறும் கல்லுக்கு மாற்றாக விற்று விட்டு பிழைப்பைத் தேடி அலையும் வணிகரைப் போலவே நம்முடைய மக்களும் அவர்கள் கொண்டு இருந்த நல்ல பழக்கங்களை சதிக்கு இரையாக்கி விட்டு இன்று மன அமைதி இன்றி அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் விரோத அரசாங்கமும் அமைதியாக அவர்களின் திண்டாட்டத்தில் குளிர் காய்ந்துக் கொண்டு இருக்கின்றது.

ஒரு கேள்வி?

உங்களுக்கு உங்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா அல்லது மற்றவர்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா? யாரை நீங்கள் அதிக அக்கறையுடன் பேணிக் காப்பீர்கள்?

"அட என்னங்க இது ஒரு கேள்வி? அவரவர்களுக்கு அவர் அவர் குழந்தைகள் தானே முக்கியம். அவர்களைத் தானே அவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் அன்பாக வளர்ப்பர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்கின்றீர்களா....ம்ம்ம்...சரி தான் நீங்கள் சொல்வது...ஆனால் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடக்காமல் தன்னுடைய குழந்தைகளை பசியோடு வீதியில் விட்டுவிட்டு மற்ற வீட்டுக் குழந்தைகளை அனைத்து வித ஊடச்சத்துக்களுடன் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றதே... அந்த நிகழ்வினைப் பார்க்கும் பொழுது தான் எனக்கு அந்த சந்தேகம் வருகின்றது. ஏன் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கின்றன?. இப்பொழுது இதனைப் பற்றி விரிவாகப் பார்க்க சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

சம்பவம் 1:

நண்பர் ஒருவருக்கு முதுகில் திடீரென்று கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏன் எதனால் அவை வந்தன என்றுத் தெரியவில்லை ஆனால் அவர் என்ன முயன்றும் அவை போன பாடில்லை. இறுதியில் ஒரு தோல் நிபுணரிடம் சென்றுக் காட்டலாம் என்றே முடிவு செய்து நிபுணர் ஒருவரிடம் சென்றுக் காட்டினார். அந்த நிபுணரும் அந்த கரும் புள்ளிகளை ஆராய்ந்து விட்டு 'இது ஒன்றும் இல்லை...சரியாகி விடும்...இந்த களிம்பினை மட்டும் போடுங்கள்' என்றுக் கூறி ஒரு களிம்பினையும் அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவனும் சிறிது நாட்கள் அந்தக் களிம்பினை பயன்படுத்திப் பார்த்தான்...களிம்பு தீர்ந்ததே தவிர அந்தக் கரும் புள்ளிகள் மட்டும் மறையவே இல்லை. மீண்டும் அவன் அந்த நிபுணரிடம் செல்ல இம்முறை வேறு ஒரு களிம்பினைக் கொடுத்து அனுப்பினார் அந்த நிபுணர். களிம்பு மாறியது...ஆனால் விளைவு மாறவே இல்லை. கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருந்தன. என்னடா இது என்று எண்ணியவாறே அவன் வேறொரு மருத்துவரை அணுக, மருந்தாக மற்றுமொரு களிம்பு கிட்டியது. அவ்வளவே... ஆனால் கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டேத் தான் இருந்தன. இந்நிலையில் என்ன செய்வதென்றே தெரியாது அவன் முழித்துக் கொண்டு இருந்த பொழுது தான் அவனுடைய பாட்டியிடம் பேசும் வாய்ப்பு அவனுக்கு ஒரு முறைக் கிட்டியது. அப்பொழுது அவனுடைய அந்தக் கரும் புள்ளிகளைப் பற்றி அவனுடைய பாட்டியிடம் அவன் கூற, உடனே அவனது பாட்டி "சில வேப்ப இலைகளை நன்றாக அரைத்து ஒரு பசை மாதிரி செய்து அதனை முதுகில் தேய்த்து வா...கரும் புள்ளிகள் சரியாகி விடும்...வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை" என்றே அறிவுரை வழங்கி இருக்கின்றார். அவனும் அவ்வாறே செய்ய மூன்றே தினங்களில் கரும் புள்ளிகள் மறைந்து விட்டன.


சம்பவம் 2:

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்காக நண்பர்களைக் காணச் சென்று இருந்தேன். அப்பொழுது நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக தனது வலது நெஞ்சுப் பகுதியில் வாயுத் தொல்லை இருந்துக் கொண்டே இருப்பதாகவும், மருத்துவர்கள் 'அது பலருக்கும் இருப்பது தான்...பிரச்சனை இல்லை' என்றே கூறி அனுப்பியதாகவும் மற்றொரு நண்பரிடம் கூறிக் கொண்டு இருந்தார். அதனைக் கேட்ட அந்த நண்பர் "அட.. இது தான் பிரச்சனையா...ஒரே நிமிசம் பொறு...எங்க அப்பா இத சரி செஞ்சிடுவாரு" என்றுக் கூறி விட்டு அவரின் தந்தையை அழைத்து வரச் சென்றார்.

"டேய்...என்னடா...!!! அவங்க அப்பா விவசாயி தானடா அப்புறம் எப்படிடா அவருக்கு மருத்துவம் தெரியும்?" என்றே நான் கேட்க..."தெரியும் மச்சி... விவசாயி தான் ஆனா வர்மக் கலையும் அவருக்குத் தெரியும்,,,ஏற்கனவே இப்படி பல பேருக்கு அவரு வைத்தியம் பார்த்து இருக்கார்" என்பதே விடையாக வந்தது. 'வர்மம்' என்றச் சொல் காதினில் விழவே ஆர்வமாக அடுத்து நடக்க இருந்த நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் வந்த நண்பரின் தந்தையார் வீட்டுக்கு முன்னர் ஒரு இருக்கையை கிழக்கே பார்க்கும்படி வைத்து விட்டு அந்த உடல் சரி இல்லாத நண்பரை அதிலே அமர வைத்தார். அந்த நண்பரும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது போல் அந்த இருக்கையிலே அமர்ந்து இருக்க மெதுவாக அந்த நண்பரின் கழுத்துப் பகுதியில் அழுத்த ஆரம்பித்தார் அவர். ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை...'அட வர்மம்னா இவ்வளவு தானா' என்று நான் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே திடீர் என்று நண்பரின் கழுத்துப் பகுதியில் ஓர் இடத்தில அவர் அழுத்தம் கொடுத்து அழுத்த அவ்வளவு தாங்க...'ஒரு நிமிசம் கண்ணு ரெண்டும் உள்ள போயி..கழுத்து தொங்கிடுச்சி....அப்படியே அவன் உடலும் ஒரு உலுக்கு உலுக்க...' பதறித் தான் போனேன் சற்று. ஆனால் அடுத்த நிமிசமே தலையை சற்று அசைத்தவாறு இயல்பான நிலைக்கு அந்த நண்பன் திரும்பி விட்டான்...ஆனால் அவன் கொடுத்த பாவனையை வைத்துப் பார்த்தால் ஏதோ மறு உலகைப் பார்த்து விட்டு வந்தவன் போலவே இருந்தது.

'இனிமே அந்த பிரச்சனை இருக்காது தம்பி...சரி பண்ணியாச்சி' என்றுக் கூறி விட்டு கிளம்ப ஆரம்பித்த அவரிடம் சற்று பேச்சிக் கொடுக்க ஆரம்பிக்க 'அவனின் இரத்தக் குழாயில் காற்று சிறிது இருந்தது என்றும், அதனால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயினை சிறிது நேரம் அடைத்துவிட்டு காற்றினை வெளியே எடுத்ததாகவும்...மூளைக்கு சென்ற இரத்த ஓட்டத்தினை அடைத்ததினால் தான் மூளைக்கு இரத்தம் செல்லாமல் அவனின் உடல் சற்று உலுக்கியதாக்கவுமே' அவர் கூறினார்...மேலும் இது ஆபத்தான வழிமுறை இல்லையா என்றதுக்கு 'இம்முறையினை தெளிவின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது...நன்கு பயிற்சிப் பெற்றவர்களே இதனை செய்ய வேண்டும்... எனக்கு பயிற்சி இருப்பதினால் நான் செய்தேன்...நான் அழுத்திய நரம்பிற்கு பதிலாக வேறு நரம்பினை அழுத்தி இருந்தால் உயிர் போயிருக்கும்... எனவே இம்முறைக்கு பயிற்சியும் கவனமும் மிக முக்கியம்..." என்றுக் கூறிவிட்டு அவர் புகைப் பிடித்துக் கொண்டே சென்று விட்டார்.

சம்பவம் 3:

கைதராபாதினில் நான் பணிக்கு சேர்ந்த புதிதில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவம். முதல் முறையாக பணிக்கு சேர்ந்து இரு வாரங்களே ஆகி இருந்தன. புதிய ஊர்...புதிய வகை உணவுகள் என்பதினால் உடல் ஒத்துழைக்காமல் காய்ச்சல் வந்து விட்டது. இருந்தும் அப்பொழுது பணிக்குரிய பயிற்சிகள் ஓடிக்கொண்டு இருந்தமையால் விடுப்பு எடுக்க முடியாத ஒரு நிலையில் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். காய்ச்சல் சற்று அதிகமாக, மதியவேளை உணவினையும் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ஏற்கனவே குன்றி இருந்த உடல் நலம் மேலும் குன்றலாயிற்று. அந்நிலையில் நிச்சயம் மருத்துவரைப் போய் பார்த்து தான் ஆக வேண்டும் என்ற நிலை வர "புதிய ஊரில்...எவர் எப்படிப்பட்ட மருத்துவர் என்று யாருக்குத் தெரியும்...எனவே பிரச்சனை இல்லாமல் இருக்க பெரிய மருத்துவமனைக்கே செல்லலாம்" என்று 'இமேஜ்' மருத்துவமனை என்ற ஒரு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர்(அது என்னவோ தெரியலைங்க பெரிய மருத்துவமனைனா நல்ல மருத்துவமனை அப்படினும் சின்ன மருத்துவமனைனா ஏதோ சராசரியா மருத்துவம் பார்க்கும் இடங்கள் அப்படினும் எண்ணங்கள் எப்படியோ நம்மில் பதிந்து தான் விடுகின்றன...). அதுவரை பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து பழக்கம் இல்லை ஆதலால் 'நம்ம ஊர்ல 30 ரூபா வாங்குவாங்க...இங்க மிஞ்சிப் போனா 100 ல இருந்து 150 ரூபாகுள்ளத் தான் வாங்குவாங்க என்று எண்ணியே சென்றேன். ஆனால் என்னுடைய அந்த எண்ணம் எவ்வளவு தவறான எண்ணம் என்று அடுத்த சில நொடிகளில் நான் உணர்ந்துக் கொண்டேன். உள்ள நுழைந்ததும் 'அங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே நமக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டும் என்றும் அதற்கு 400 ரூபாய் கட்டணம் என்றும் அவர்கள் கூற வாழ்க்கையிலேயே மருத்துவரைப் பார்க்காமலேயே மருத்துவத்திற்காக 400 ரூபாய் தண்டம் அழுதேன். சரி காச வாங்கிடானுங்க...மருத்துவமாவது ஒழுங்காப் பார்பானுங்க என்று எண்ணிக் கொண்டே மருத்துவரைக் காணச் சென்றேன்(நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் அந்த மருத்துவர் பெயர் என்னுடைய பெயராக இருந்ததே)...!!!

ஆனால் அந்த மருத்துவரும் சாதரணமாக அனைத்து மருத்துவரும் செய்யும் சோதனைகளைச் செய்து விட்டு 'உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் கம்மியான நிலையில் இருக்கின்றது...இரண்டு நாட்கள் நீங்கள் இங்கேயே சேர்ந்து மருத்துவம் பார்த்துக் கொண்டால் தான் நல்லது..." என்றுக் கூற அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது (பேரக் கெடுக்குரானுங்க மை லார்ட்..)..."ஏன்டா...எவனா இருந்தாலும் உடம்பும் சரியில்லாம சாப்பாடும் சாப்பிடாம இருந்தானா அவனுக்கு இரத்த அழுத்தம் கம்மியாத் தான்டா இருக்கும்...அதுக்கு என்னவோ அடுத்த நாளே சாவப் போற மாதிரி ஏத்தி விடுறீங்களேடா" என்று மனதினுள் எண்ணிக் கொண்டு "இல்லைங்க இருக்கட்டும்...மாத்திரை மட்டும் கொடுங்க" என்றுக் கூறி மாத்திரை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்(மாத்திரைக்கு தண்டம் 100 ரூபாய் ...). அதாவது எந்த ஒரு உருப்படியான மருத்துவமும் பார்க்காமல் வெறும் 50 ரூபாய் செலவழித்து இருக்க வேண்டிய இடத்தில நான் செலவழித்த தொகை 500. ஆனால் நான் பரவாஇல்லை....நீண்ட நாட்களுக்கு பின்னர் என்னுடைய தோழி ஒருவர் காய்ச்சலுக்காக அதே மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார்...அவரிடமும் இதேக் கதையினைக் கூறி மருத்துவமனையில் ஒரு நாள் சேரச் சொல்லி இருக்கின்றனர். அவரும் சேர்ந்து இருக்கின்றார். இறுதியில் அவர் கட்டியத் தொகை வெறும் 25000 ரூபாய் மட்டுமே!!! இதில் இருந்து நாம் அந்த மருத்துவமனை உண்மையில் எதன் மேல் அக்கறையோடு இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம் தானே. சரி இருக்கட்டும். இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம்.

மேலே நாம் கண்ட மூன்று சம்பவங்களும் உண்மைச் சம்பவங்களே. வெவ்வேறு சம்பவங்களாக இருப்பீனும் அவைகள் கூறும் செய்திகளை நாம் உற்று நோக்கத்தான் வேண்டி இருக்கின்றது இன்றைய சூழலில்.

முதல் சம்பவத்தில், எளிமையான மருத்துவமுறை நம்மை சுற்றியும் பரவிக் கிடக்கின்றது என்ற விடயம் இருக்கின்றது. வேப்ப மரம் இல்லாத ஊரினை நாம் தனியொரு படை அமைத்துத் தான் தேட வேண்டும் தமிழகத்தில். அவ்வளவு எளிதாக ஒரு மாபெரும் மருத்துவக் களஞ்சியம்/கருவூலம் நம்மிடையே காலம் காலமாக நின்றுக் கொண்டுத் தான் இருக்கின்றது. ஆனால் அதன் பயனைப் பற்றிய அறிவினை மட்டும் நாம் மறைந்துக் கொண்டு இருக்கின்றோம்...அல்லது சிலரால் மறக்கடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றோம். வேம்பு தான் என்றில்லை இன்னும் பல அறிய செல்வங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டே இன்று கிடக்கின்றன.
இரண்டாவது சம்பவத்தில், நாம் அழிந்தே விட்டது என்று என்னும் கலைகள் இன்னும் கிராமப் புறங்களில் இன்னும் உயிர் கொண்டு இருப்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. ஆனால் அவை அழிந்துக் கொண்டு வருகின்றன...வேகமாக!!! வர்மத்தின் சில கூறுகளை நண்பனின் தந்தை அவர்கள் அறிந்து வைத்து இருக்கின்றார். ஆனால் என்னுடைய நண்பனுக்கோ அதனைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஆவல் இருக்கின்றதா என்றும் தெரியவில்லை. மேலும் அத்தகைய கலைகளுக்கு மிக முக்கியம் முறையான பயிற்சியும் மேற்பார்வையும் கவனமுமே...அவை மூன்றும் இருந்தால் தான் அந்தக் கலை முறையாக வளரும்....காரணம் அவை நுண்ணியக் கலைகள்.

மூன்றாவது சம்பவத்தில் நாம் நம்முடைய நாட்டில் இன்று இருக்கும் மருத்துவர்களின் நிலையையும் மருத்துவமனைகளின் நிலையையுமே காணுகின்றோம். அனைத்தும் வியாபார நிறுவனங்களாக மாறி நீண்ட காலம் ஆகின்றன. அவற்றின் ஒரே குறி பணம்....பணம் மட்டுமே. உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் காசாக்கும் ஒரு மனிதாபிமானம் இல்லாத இயந்தரங்களாகி விட்டனர் அங்கே அனைவரும். அட உண்மைதாங்க, நாம் நேசிக்கும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் அந்நிலையில் 'அவரைக் காப்பாற்ற முடியாது என்று நன்கு அறிந்த நிலையிலும்' மருத்துவர்கள் "ஒரு 10 சதவீத வாய்ப்பு இருக்குங்க ஆனால் ரொம்ப செலவாகும்" என்றுக் கூறி விட்டால் நம்முடைய மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா அல்லது "ரொம்ப செலவாகும்" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா?


மனம் உள்ளவர்களின் மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற ஒன்றையே பிடித்துக் கொண்டு எதிர்பார்க்க ஆரம்பித்து விடும்....அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் பரவாஇல்லை "வாய்ப்பு இருக்கின்றது என்றுக் கூறிவிட்டார்கள்" என்றே ஒருவர் காத்து இருக்க ஆரம்பித்து விடுவார் (10 சதவீத வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியதற்காக 20 லட்சம் கடன்பட்டு நிற்பவர்களின் கதையினை நான் அறிந்து இருக்கின்றேன்). அவரின் அத்தகைய உன்னதமான உணர்ச்சியையும் நம்பிக்கையையும் வெறும் காசுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டத்தினையே இன்றைய மருத்துவ உலகில் நாம் பார்க்க முடிகின்றது. ஒன்று உணர்ச்சிகளின் மூலம் பணம் பார்கின்றது...இல்லையெனில் பயத்தின் மூலம் பணம் பார்கின்றது....இதுவே இன்றைய ஆங்கில மருத்துவ உலகின் கொள்கை..வழி எவ்வழியாக இருந்தாலும் பரவாஇல்லை...பணம் வந்தாக வேண்டும். அவ்வளவே அவைகளின் நீதி...அவ்வளவே அவற்றின் எண்ணம்!!! நிற்க.


 
சில வைத்திய முறைகள் செலவே இன்றி மேலும் பக்க விளைவுகள் ஏதுமின்றி எளிதான வகையில் இருக்கின்றன...ஆனால் அவை எல்லாம் மக்களின் மத்தியில் பரவலாக அறியப்பெறாமல் இருக்கின்றன...இன்னும் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால் அவை அழிந்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றிக்கு பதிலாய் மிகுந்த செலவுகளும் எதிர்பாராத பக்க விளைவுகளும் கிட்டப்பெரும் மருத்தவ முறைகள் பரவலாகப் பரவி இருக்கின்றன...அம்முறைகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் மழையில் தோன்றியக் காளான்கள் போல் அங்கங்கே முளைத்த வண்ணம் இருக்கின்றன. இன்று மருத்தவம் என்றாலே ஆங்கில மருத்துவம் தான் என்ற நிலை.

இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது....ஒரு வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு வைத்திய முறையோ செழித்து வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஏன் நிலைமை இவ்வாறு இருக்கின்றது என்பதனை அறிய நாம் இந்தக் கேள்விக்கு விடையினைக் காணத் தான் வேண்டி இருக்கின்றது...நம்முடைய வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருப்பதால் ஆங்கில வைத்திய முறை வளருகின்றதா...அல்லது நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு வளருகின்றதா?..இக்கேள்விக்கு நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு தான் ஆங்கில வைத்திய முறை வளருகின்றது என்பதே பதிலாக வரும்.

அது எவ்வாறு அழிக்கின்றது...அதனை தடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை அடுத்தப் பதிவில் காணலாம்...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு