நீங்கள் மதம் மாற எவ்வளவு பணம் எதிர் பார்ப்பீர்?

மதம் மாற்றம் வெகு சுலபம் தான். எங்களின் சமய பழக்க வழக்கங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப நீங்கள் மாறிக் கொள்ள வேண்டும். நாங்கள் வணங்கும் இறைவனை நீங்கள் வணங்க வேண்டும். உங்களுடைய பழைய பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவைகள் முற்றிலுமாக புறக்கணித்து எங்களின் கொள்கைகளையே பேண வேண்டும். இந்நாள் வரை நீங்கள் வணங்கிக் கொண்டு இருந்த கடவுளரை இனி வணங்கக் கூடாது... ஏன்...நினைத்துக் கூடப் பார்க்க கூடாது...அவர்கள் இனி உங்களுக்கு அந்நிய கடவுளர் ஆக மாறி விடுவர். ம்ம்ம்...உங்களின் பெயர் மற்றும் உங்களின் குடும்பத்தினரின் பெயரினையும் எங்கள் சமயத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப மாற்றி விட்டால் நலமாக இருக்கும். இன்னும் சில இதரச் சட்டங்கள் இருக்கும்...ஆனால் அவற்றை எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்... இப்பொழுது சொல்லுங்கள்...

நீங்கள் எங்கள் மதத்திற்கு மாற எவ்வளவு பணம் எதிர் பார்ப்பீர்?...

இக்கேள்வியோடு ஒருவர் உங்களை அணுகினால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்.

 "ஆகா...பணம் வருகின்றதே..அது போதாதா..." என்பது உங்களின் பதிலாக இருக்குமா அல்லது "நன்றிகள் ஐயா...இருக்கட்டும்....நாங்கள் வணங்கும் இறைவன் எங்களை நன்றாக வைத்து இருக்கின்றார்... எங்களுடைய பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிப்பாட்டு முறைகள் போன்றியவைகளை வாங்கும் அளவுக்கு இன்னும் இந்த உலகில் பணம் படைத்தவர்கள் தோன்றவில்லை...தோன்றப் போவதுமில்லை. எங்களின் கடவுள் என்றும் எங்களைக் கண்டுக் கொண்டே இருக்கின்றார்...உங்களின் கடவுள் உங்களைக் கண்டுக் கொண்டு இருப்பதைப் போன்றே...எனவே மன்னிக்கவும் நண்பரே...உங்களின் சமயத்திற்கு நாங்கள் மாற வேண்டியத் தேவை என்றுமே எங்களுக்கு அமையாது" என்று இருக்குமா?.

மேலே உள்ள பதில்களில் முதல் வகையான பதில்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவர்களுக்கு பணம் தான் இறைவன். அவர்கள் ஒரு சமயத்தில் இருப்பதும் ஒன்றுத் தான் இல்லாததும் ஒன்றுத் தான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் அந்த சமயத்தில் இல்லாததே அந்த சமயத்திற்கு நல்லதாக அமையும். எனவே அவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியத் தேவை இல்லை. (இதில் ஒரு வகையான விதிவிலக்கான மக்களும் இருக்கின்றனர் அவர்களைப் பற்றி நாம் தனியாகப் பார்க்கலாம்).

இரண்டாவது வகையான பதிலினை உடையவர்களைப் பற்றி நாம் கவலைக் கொள்ள வேண்டியதே இல்லை. அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அவர்களிடம் மதமாற்றம் என்ற ஆயுதம் வேலை செய்வதில்லை. பெரும்பாலான மக்கள் அனேகமாக இந்தப் பிரிவினைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்கின்றனர்.

எனவே மேலே நாம் கண்ட விடயங்கள் மூலம் உண்மையான பக்தியினை உடைய மக்களைக் கொண்ட சமயத்தின் மீது மத மாற்றம் என்றக் கருவி எவ்வித மாற்றத்தினையும் எப்பொழுதிலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதனை அறிந்துக் கொள்ளலாம். அத்தகைய சமயம் மற்றச் சமயதினைக் கண்டு அஞ்ச வேண்டியத் தேவையும் கிடையாது. அவ்வாறு அச்சமயம் அஞ்சும் என்றால் அச்சமயம் அதன் மக்களின் மேல் நம்பிக்கை இன்றி இருக்கின்றது என்றே நாம் அறிந்தும் கொள்ளலாம்.

"தம்பி...கொஞ்சம் பொறுங்க... எந்த அந்நிய மதமும் வெறும் பணத்தினைக் கொடுத்து மக்களை மாற்றுவது கிடையாது... அவர்களின் கடவுளை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, மதக் கருத்துக்களைப் பரப்பி... அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை மூளைச் சலுவைச் செய்து மதம் மாற்றுகின்றனர். அப்பாவி மக்களும் ஏமாறுறாங்க...இதைப் பத்தி பேசாம நீங்க மற்றத பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க" என்று சிலர் வினா எழுப்பலாம். அருமையான கேள்வி. இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக 'மதக் கருத்துக்களைப் பரப்பி'...'மூளைச் சலுவை'...மற்றும் 'அப்பாவி படிப்பறிவில்லாத மக்கள்' ஆகிய சொற்களைப் பற்றியும் நாம் விரிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

மத மாற்றம் என்றாலே இரு மதங்களாவது குறைந்தபட்சம் அச்செயலில் நிச்சயம் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் மத மாற்றம் என்றுக் கூறினாலே கிருத்துவம் அவ்விரு சமயங்களில் ஒன்றாக அமர்ந்துக் கொள்கின்றது. இந்தியாவினைப் பொறுத்த வரை அந்த மற்றொரு சமயம் இந்துச் சமயமாக இருக்கின்றது. எனவே இந்தியாவில் மத மாற்றம் என்றத் தலைப்பினை நாம் காண வேண்டும் என்றால் அவ்விருச் சமயங்களைப் பற்றியும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. முதலில் இன்றைய கிருத்துவச் சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு உண்மைச் சம்பவத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம்... என்னுடைய நண்பன் ஒருவன் படித்து முடித்தும் நீண்ட காலமாக வேலை இல்லாது தேடிக் கொண்டே இருந்தான். மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வேலைக் கிடைத்து விட தனக்கு மட்டும் வேலைக் கிடைக்காத நண்பன் எவ்வாறு இருப்பான்?... ஒரு வித மன வருத்தத்தில் இருப்பான் தானே... அவ்வாறுத் தான் அவனும் இருந்தான். அப்பொழுது தான் அவனுக்கு அந்த அழைப்பு வந்தது. ஒரு கிருத்துவ நிறுவனத்திடம் இருந்து.

"மாதம் 20,000 சம்பளத்தில் வேலை பெற்றுத் தருகின்றோம்...நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்... எங்கள் சமயத்திற்கு மாறி விடுங்கள்...மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" இதுவே அவர்கள் அவனுக்கு தந்த வாய்ப்பு.

"இல்லை...இருக்கட்டும்" இது அவன் அவர்களுக்குத் தந்த பதில். வேலை இல்லாவிடினும் பிரச்சனை இல்லை ஆனால் என்னுடைய நம்பிக்கைகளை நான் விற்க போவதில்லை என்பதே அவனது முடிவாக இருந்தது. நிற்க...
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்த கிருத்துவ அமைப்பு அவனுக்குத் தந்த வியாபார ஒப்பந்தத்தினைப் பற்றியே.

என்ன வியாபார ஒப்பந்தமா என்று எண்ணுபவர்களுக்கு "ஒரு நிறுவனம் ஒருவனுக்கு வேலை தருகின்றேன் ஆனால் நீ என்னில் சேர்ந்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் இடுகின்றது" என்றால் அது வியாபார ஒப்பந்தம் தானே. ஒரு பொருளை இன்ன விலை என்று பேரம் பேசுவது வியாபாரம் தானே. அவ்வாறு பேரம் பேசும் நிறுவனம் வியாபார நிறுவனம் தானே.

அத்தகைய ஒரு வியாபார அமைப்பாகத் தான் கிருத்துவ சமயம் இன்று இருக்கின்றது. கிருத்துவ சமயத்தினை தன வசம் வைத்துக் கொண்டு உலகில் உள்ள மக்களை எல்லாம் ஆளும் எண்ணம் கொண்ட ஒரு அரசியல் மற்றும் வணிக அமைப்பாகத் தான் அது இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது. மாறாக கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மனித நேயம் மக்கள் மத்தியில் செழித்து வளர வழி செய்யும் ஒரு அமைப்பாக அது இயங்கவில்லை. அது ஒரு அரசியல் அமைப்பாக மாறி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த மாற்றம் ஆரம்பித்தது ரோம பேரரசன் கோன்சுடண்டின் என்பவனின் காலமான கி.பி நான்காம் நூற்றாண்டில் இருந்து தான் என்று நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

அக்காலத்தில் தான் கிருத்துவம் அரச சமயமாக அரசியல் சாயம் பூசப் பெறுகின்றது.

சிலுவை அதன் சின்னமாக மாறுகின்றது.

ரோம பேரரசு புனித ரோமப் பேரரசாக மாறுகின்றது. கிருத்துவம் மெதுமெதுவாக அரசியல் கருவியாக மாற ஆரம்பிக்கின்றது.

கோன்சுடண்டினின் காலம் வரை கிருத்துவர்களை வேட்டையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவனின் காலத்துக்கு பின்னர் கிருத்துவர்கள் அல்லாதவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அனைத்தும் அரசியலாக்கப்பட்டது. அரசியலாக்கப்பட்டக் கொள்கைகள் ஏதேனும் உண்மையானக் கொள்கைகளாக இருந்து இருக்கின்றனவா? இல்லைதானே... அவ்வாறே கிருத்துவமும் சரி மாற்றம் காணப்பெற்றது. அவ்வாறு மாறிய கிருத்துவம் தான் இன்று உலகில் நின்றுக் கொண்டு இருக்கின்றது....ஒரு மாபெரும் அரசியல் அமைப்பாக!!!

சிந்தித்துப் பாருங்கள்,

௧) கிருத்துவும் சரி அவரது சீடர்களும் சரி ரோமர்கள் அல்லர். ஆனால் இன்று கிருத்துவர்களின் சமயத் தலைவராக விளங்கும் போப் என்னும் பதவியில் இது வரை அனேகமாக ரோமர்கள்...இன்னும் விரிவாகக் கூற வேண்டும் என்றால் ஐரோப்பியர்களே அமர்ந்து உள்ளனர் பெருமளவில். இதன் மூலம் கிருத்துவ சமயம் உண்மையில் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

௨) யூதனுக்கு யுதனாகவும்...கிரேக்கனுக்கு கிரேக்கனாகவும் கருத்துக்களைப் பரப்புங்கள் என்றக் கிருத்துவின் கொள்கைக்கு மாறாக அனைவருக்கும் ஐரோப்பியர்களாகவே கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்களுக்கே மக்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர்...அரசியல் நலன்களுக்காக.

௩) மற்ற சமய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துக் கொண்டு அதன் வாயிலாகவே மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற கிருத்துவின் கருத்துக்களுக்கு மாறாக மற்ற சமயங்களின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையையும் அவற்றைத் தாழ்வுப்படுத்தும் ஆதிக்க எண்ணத்தையுமே இன்றைய கிருத்துவ சமயம் விதைக்கின்றது.

௪) ஒரே மந்தை...ஒரே மேய்ப்பன் என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளினை விளங்கிக் கொள்ளாமலும், பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தினை உணர்ந்துக் கொள்ளாமலும் பல கடவுளர் இருக்கின்றனர் என்றும் அவர்களை நாம் வணங்கக் கூடாது என்றும் எண்ணத்தினைக் மக்களுள் வளர்க்கின்றனர்.

௫) மேலும் மக்கள் அனைவரும் சமம் என்றக் கருத்தினை மக்களுள் விதைக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்காது ஒரு சாரார் மற்றொரு சாராரினை அடக்கி ஆள்வதற்கே இன்றைய கிருத்துவ சமயம் வழி செய்கின்றது...

அதனால் தான் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்க கிருத்துவர்களால் கொல்லப்பட்ட பொது அதனை கிருத்துவ சமயம் எதிர்க்கவில்லை. அம்மக்கள் அடிமைகளாக துன்புறுத்தப்பட்ட போதும் அவ்வமைப்புகள் வாயினை மூடிக் கொண்டே இருந்தன.

அதனால் தான் மாயன் இன மக்கள் முற்றிலுமாக இசுபானிய காட்டுமிராண்டிகளால்(வீரர்கள் என்று அவர்களை அவர்களே அழைத்துக் கொள்ளட்டும்) அழிக்கப்பட்ட போதும் அவ்வமைப்புகள் வாயை மூடிக் கொண்டு இருந்தன.

இன்னும் பல விடயங்களைக் கூறிக் கொண்டே போகலாம்... சுருக்கமாக கூற வேண்டும் என்றால்....இன்றைய கிருத்துவ சமயம் கிருத்துவின் சமயமே அல்ல. அது ஒரு அரசியல் நிறுவனமாகவே இருக்கின்றது.

ஒரு நிறுவனத்திற்கு என்ன என்ன விடயங்கள் முக்கியமாக வேண்டி இருக்கும்... பண பலம்...? ஆட் பலம்...? இவை இரண்டும் நிச்சயம் தேவைதானே. அவைகளைத்தான் அந்த நிறுவனமும் சேகரித்துக் கொண்டு இருக்கின்றது...தனது அரசியல் செல்வாக்கின் மூலம் பணத்தினை பெற்றுக் கொள்கின்றது... பின்னர் கிருத்துவின் கொள்கைகள் மூலமாகவும் பணத்தின் மூலமாகவும் மக்களிடம் சென்று ஆட் பலத்தினைப் பெற்றுக் கொண்டு தனது அரசியல் செல்வாக்கினை வளர்த்துக் கொள்கின்றது.

மற்றப்படி உண்மையான கிருத்துவின் மீதோ, அவர்தம் கருத்துக்களின் மீதோ அல்லது மக்களின் மீதோ மனித நேயத்தின் மீதோ அவ்வமைப்புகளுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதனைப் போன்று தோன்றவில்லை. அவ்வாறு இருந்து இருந்தால் எப்பொழுதோ தனது செல்வாக்கினை வைத்து உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சமம், உண்மையான செல்வம் கிருத்துவின் அருளே என்றக் கருத்துக்களைத் தான் மக்களின் மத்தியில் அது பரப்பி இருக்கும்...மனித நேயத்தினை விதைத்து இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்கையில் அது இன்று வரையிலும் அவ்வாறு எதையுமே செய்யாது வேடிக்கை மட்டுமே கண்டுக்கொண்டு இருக்கின்றது. அதற்கு ஒரே தேவை மனிதர்களின் எண்ணிக்கை... அதன் மூலம் அதிகாரம்...அதன் மூலம் பணம். அவ்வளவே.

அதனால் தான் இன்று இந்தியாவில் கிருத்துவர்களான பின்னும் 70% மக்கள் தலித் கிருத்துவர்களாகவே அறியப்படுகின்றனர். சில இடங்களில் அவர்கள் தேவாலயங்களுள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றது. இது என்னங்க கொடுமை... இயேசு கிருத்து தாழ்த்தப்பட்டவரா...இல்லை பிற்படுத்தப்பட்டவரா...அல்லது உயர்ந்த சாதியினறாங்க? அவர் அனைத்து மக்களும் சமம் அப்படின்னு சொன்னவர். அவ்வாறு இருக்க அவரை வழிபடுறவங்க மட்டும் பல பிரிவா இருப்பாங்களாம்...சீரிய கிருத்துவர்கள் உயர் சாதியினராம்...அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட கிருத்துவர்களாம்...இந்தப் பிரிவுகளைப் பத்தி விவிலியத்துல எங்கங்க சொல்லி இருக்கு? இதைப் பற்றி போப் விளக்குவாரா?

எனவே இன்றைய கிருத்துவ சமயம் என்பது மக்களை வைத்து அரசியல் லாபத்தினை பார்க்கும் ஒரு அரசியல் அமைப்பாகவே விளங்குகின்றது. அது உண்மையான ஆன்மீக சமயமாக இருந்து இருப்பீன், உலகை மக்கள் அனைவருக்கும் சமமான ஒன்றாக அன்பு நிறைந்து இருக்கும் ஒரு பூங்காவாக வைத்து இருந்து இருக்கும். ஆனால் வருந்தத்தக்க விடயமாக அவ்வாறு அது இல்லை.

சரி... கிருத்துவ சமயம் இன்று மக்களை அரசியல் நோக்கிற்காக பிடிக்கும் ஒரு சமயம் என்றுக் கண்டு இருக்கின்றோம்...இப்பொழுது 'மத மாற்றத்தில்' தொடர்புக் கொண்ட மற்ற சமயமான இந்துச் சமயத்தினை பற்றிப் பார்ப்போம்...!!!

தொடர்புடைய பதிவுகள்:
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
கிருத்துவத்தின் வரலாறு
கிருத்துவமும் திருநீறும்
விவிலியமும் சிவலிங்கமும்
இந்தியாவில் தோமா

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு