இன்று நாம் தீபாவளி என்றுச் சொன்னாலே அது ஒரு இந்துப் பண்டிகையாகத் தான் அறியப்படும். அப்பண்டிகையை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிருசுனர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை சிறப்பிப்பதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய நாளை சிறப்பிக்க தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இன்னும் பல காரணம் கூறுகின்றனர்...ஆயினும் கிருசுனர் நரகாசுரனை கொன்றதை சிறப்பிக்கவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்பதே பலரின் நம்பிக்கை.

ஆனால் நம்மில் பலர் அறியாத விடயம் என்னவென்றால் இந்து மக்கள் மட்டுமே கொண்டாடும் ஒரு பண்டிகை அல்ல தீபாவளி...மாறாக சமணர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே தீபாவளி ஆகும். ஆம்...சமணர்களும் தீபாவளியினைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்கள் அத்திருவிழாவை கொண்டாடுவதற்கு வேறு காரணங்கள் வைத்து இருக்கின்றனர். அக்காரணத்தை தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டு...!!!

சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் அவர்கள் பாவாபுரி நகரத்திலே அங்கு கூடி இருந்த மக்களுக்கு அறஉரை செய்துக் கொண்டு இருக்கின்றார். அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கூட்டமும் மெய் மறந்து அவரின் அருகேயே அமர்ந்து இருக்கின்றனர். இரவு முழுவதும் அவரின் உரை தொடர்கின்றது. மக்களும் அவரவர் தம் இல்லங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றனர். உரை முடிந்த உடன் அவ்விடத்திலேயே உறங்கியும் விடுகின்றனர். வர்த்தமான மகாவீரரும் தான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்தவாறே வீடு பேற்றினை அடைந்து விடுகின்றார் (சாதாரண வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் மரணம் அடைந்து விடுகின்றார் அல்லது முக்தி அடைந்து விடுகின்றார்). காலையில் விழித்து எழுந்து மக்கள் மகாவீரர் வீடு பேற்றினை எய்தியதைக் கண்ட உடன் அவர்களின் அரசனுக்குத் தெரிவிக்க, அவ்வரசன் மேலும் சில அரசர்களை அழைத்து ஆலோசனை நடத்தி இறுதியில் உலகிற்கே ஒளிவிளக்காய் திகழ்ந்த மகாவீரரை மக்கள் அனைவரும் நினைவுக் கொண்டு வழிபடுமாறு அவர் வீடு பெற்ற நாளில் (முக்தி அடைந்த நாளில்) மக்கள் அனைவரின் வீட்டிலும் விளக்கினை ஏற்றி வைத்து ஒரு சிறப்பான விழாவாக கொண்டாட வேண்டும் என்ற முடிவினைக் கொண்டு வருகின்றான். அன்று முதல் மக்கள் அனைவரும் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்த அந்த நாளில் வீடுகளில் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர். வரிசையாக தீபங்களை வைப்பதால் 'தீப ஆவலி' அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்றுப் பொருள் பட 'தீபாவளி' என்று அந்தத்தினம் பெயர் பெற ஆரம்பித்தது. மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்தப்படியால் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது. நிற்க.

இதுவே சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்குரிய காரணம் ஆகும்.

இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால் இரு வேறு சமயத்தினர் தீபாவளி என்னும் ஒரே பண்டிகையை வெவ்வேறுக் காரணத்திற்காக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சாரார் இறைவன் அசுரனை அழித்ததை நினைவில் கொள்வதற்காக கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மற்றொரு சாரார் எங்களின் இறுதி தீர்த்தங்கரர் அந்த தினத்தில் வீடு பேற்றினை அடைந்தார் அதனை நினைவில் கொள்ளும் வண்ணம் தான் நாங்கள் கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மேலும் இவ்விருசமயங்களுக்குள்ளே மாபெரும் சண்டைகள் வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றன. அந்நிலையில் தீபாவளி உண்மையிலேயே யாருடைய பண்டிகை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.

மகாவீரரைக் குறித்து நமக்குச் சான்றுகள் கி.மு காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் கி.மு வில் கிருசுனர் என்று ஒரு கடவுள் இருந்ததற்கோ அல்லது அசுரர்கள் என்றச் சாரார் இருந்தமைக்கோ எவ்வித சான்றுகளும் இதுவரைக் கிட்டப்பெற வில்லை. எனவே காலத்தில் சமணர்களின் கதை முந்தியதாக இருக்கின்றது. அப்படி இருக்க இந்து சமயத்தில் புதிதாய் தீபாவளியைக் கொண்டாட வேண்டியத் தேவை யாது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நம்முடைய உதவிக்கு வருகின்றார் ஆராய்ச்சியாளர் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள். அவரின் கூற்றுப்படி


"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!!!" (புத்தகம்: சமணமும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி)


மேலே உள்ள அவரின் கூற்றின் படி இந்து சமயத்தில் சேர்ந்த சமண மக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தம் இந்து சமயத்திற்கு வந்தமையால் அது தீபாவளி என்ற சமணப் பண்டிகையை தத்து எடுத்துக் கொண்டு வெவ்வேறு புராணக் கதைகளை அப்பண்டிகைக்கு கற்பித்துக் கொண்டது என்கின்ற கருத்து வருகின்றது. அக்கருத்து சற்று பொருந்தவும் செய்கின்றது. அதாவது,

சமணர்கள் மகாவீரரை வணங்குகின்றனர். மகாவீரர் இறந்த நாளை தீபாவளியாக அவர்கள் கொண்டாடுகின்றனர். இந்துமக்களுக்கு சமணர்கள் எதிரிகளாக இருந்தால் மகாவீரரும் எதிரியாகத் தான் இருப்பார். எதிரியினை அசுரனாக சித்தரிப்பது என்றுமே நிகழும் ஒன்று தான். எனவே இந்துக்கள் மகாவீரர் இறந்த நிகழ்வை 'கிருசுனர் அசுரனை வென்றார்...அதாவது அந்த தினம் அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான்" என்றுக் கூறி கொண்டாடுகின்றார்கள் என்றும் சிலர் கருதுகின்றனர். அதாவது சமணர்களை பொறுத்தவரையில் அந்த தினத்தில் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்து இருக்கின்றார்...இந்துக்களைப் பொறுத்த வர அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான். பொருத்தமாகத் தோணுகின்றது தானே.

ஆனால் நாம் இங்கே சிந்தித்துப்பார்க்க வேண்டியது என்னவென்றால் அக்காலத்தில் பல விடயங்கள் நல்ல எண்ணங்களுடனேயே செய்யப்பட்டு இருக்கின்றன. அத்தகைய விடயங்கள் பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் உண்மையிலேயே மகாவீரர் இறந்ததைத் தான் அசுரன் இறந்தான் என்று வைணவச் சமயம் கூறுகின்றதா அல்லது அதில் வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டித் தான் இருக்கின்றது.

ஆனால் தீபாவளி என்பது சமணப் பண்டிகை என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமயங்கள் என்றால் என்ன?

அவை கூறுகின்ற முழுமுதற் கடவுளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி, அவ்விறைவனின் கருத்துக்களை மக்கள் அனைவரிடத்தும் கொண்டு சேர்த்து, அம்மக்களை நல்வழியில் நடத்தி இறுதியில் அவர்கள் அனைவரும் அந்த முழுமுதற் இறைவனை சென்று அடையும் வழியினைக் காட்டும் ஒரு வழி...ஒரு நெறி. அது தான் ஒரு சமயமாக இருக்க முடியும். அப்படி இருக்க அப்பேற்பட்ட சமயத்தின் கருத்துக்களை பரப்புவதற்காக இருக்கும் சமய மடங்களின் கடமை என்னவாக இருக்க வேண்டும்?
அவை அந்த சமயத்தின் கருத்துக்களை மக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அச்சமய நெறியினை பின்பற்றுவோர் அனைவருக்கும் பொதுவாக இருந்து உண்மையான பொருளினை அனைவரும் உணர்ந்துக் கொள்ளும் வண்ணம் விளக்க வேண்டும்.

அதாவது இறைவன் இலக்காக இருக்கின்றான்...சமயங்கள் அவனை அடையும் வழியாக இருக்கின்றன...அப்பேற்பட்ட வழியில் மக்கள் தடங்கலின்றி பயணிக்க அங்கே அங்கே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகளாக இந்த மடங்கள் இருக்கின்றன. எந்த ஒரு வழியும் சரி வழிகாட்டிப் பலகைகளும் சரி எவ்வாறு அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டுமோ அதேப் போல் தானே இந்த சமயங்களும் சரி....சமய மடங்களும் சரி...மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்... அதனை விடுத்து ஒரு சிலர் மட்டுமே அச்சமயங்களுக்கும் சரி அந்த மடங்களுக்கும் சரி சொந்தம் கொண்டாடினால் என்ன அர்த்தம்?

இறைவன் அனைவருக்கும் பொதுவானவனாமாம்...ஆனால் அவனை அடையும் வழியினைக் கூறும் சமயங்களும் சரி சமயங்களைக் கட்டிக் காக்கும் மடங்களும் சரி ஒரு சிலருக்கு மட்டுமே சிறப்பாக உரியவனவாம்... அச்சிறப்பினை அவர்கள் பிறப்பிலேயே பெற்று விட்டார்களாம். எப்படி இருக்கின்றது கதை.

ஊரில் ஒரு கிணறு இருக்கின்றது. அதில் அனைவரும் தண்ணி எடுக்கலாம் என்று ஊர் பெரியவர் சட்டம் இயற்றி விட்டார்...ஆனால் ஒரு நிபந்தனை...அந்த கிணறில் அவருடைய வீட்டு வாளியை கொண்டு மட்டுமே தண்ணீரினை பிடிக்க வேண்டும்...அதுவும் அந்த வாளியினை அவருடைய வீட்டில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விடயம் வேறு. இந்நிலையில் அக்கிணறு மக்கள் அனைவருக்கும் உரிய கிணறாக விளங்குமா அல்லது அந்தப் பெரியவரின் வீட்டுக் கிணறாக மட்டுமே விளங்குமா? அவருடைய வீட்டுக் கிணறாகத் தானே விளங்கும். அந்த நிலை தான் இந்து மடங்களிலும். அனைத்து மடங்களும் ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப் பட்டு அந்த சாதியினரை மட்டும் சமயத்தின் பேரினைக் கூறிக் கொண்டு வளர்க்கும் பணியை செம்மையாகச் செய்துக் கொண்டு வருகின்றன.


உதாரணத்துக்கு, நித்யானந்தாவின் கதையையே எடுத்துக் கொள்வோமே. அட அதாங்க நம்ம நித்தியானந்தா மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக தேர்ந்து எடுக்கப்பட்ட கதை தான். வெகு நாட்களாக பத்திரிக்கைகளில் முக்கியமான இடத்தினைப் பிடித்து இருந்த இந்தச் செய்தியில் ஒரு விடயத்தினை நீங்கள் கவனித்து இருப்பீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை இருந்தும் இங்கே அதனைக் கூற நான் விரும்புகின்றேன்.





அதாவது மதுரை ஆதீனத்தில் 'சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ செட்டியார்' ஆகிய மூன்று சாதிகளில் இருந்து மட்டும் தான் அடுத்த ஆதீனம் வர வேண்டும் என்பதே அந்த ஆதீனங்களின் உள்ள விதி. அந்த சாதிகளைத் தவிர வேற சாதி மக்களால் அவர்கள் எவ்வளவு ஆன்மீகச் சிறப்பினைப் பெற்று இருப்பீனும் ஆதினமாக வர முடியாது. "தான் ஒரு சைவ வேளாளர் சமூகத்தினைச் சார்ந்தவன் தான்" என்று நித்தியானந்தா தனது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நிகழ்வை நியாயப்படுத்திய நிகழ்வும் இங்கே நடந்தும் இருக்கத் தான் செய்து இருக்கின்றது.

இந்நிலையில், அதாவது வேறு சமூகத்தினரால் உரிமைக் கொண்டாடப்பட முடியாத அந்த ஆதினங்களை எவ்வாறு அனைத்துச் சமூகத்தினருக்கும் பொதுவான சைவ வைணவ சமயங்களின் கொள்கைகளைக் கட்டிக் காக்கும் மடங்கள் என்று நாம் கூற முடியும்?... அவை சைவ பிள்ளை, முதலியார், செட்டியார் ஆகிய சாதிகளை கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்றன..இந்நிலையில் அந்த மடங்களை அந்த சமூகத்தினரின் மடங்கள் என்றுத் தானே கூற முடியும் அதனைத் தவிர்த்து எவ்வாறு அவை சைவ வைணவ சமய மடங்கள் என்று நாம் கருத முடியும்? இந்த மடங்கள் அனைத்தும் அவை சார்ந்து நிற்கும் சாதியினருக்காக மட்டுமே இயங்கும் அரசியல் நிறுவனங்களாகவே திகழ்கின்றன. மற்றவாறு சைவ சமயத்தின் மீதோ அல்லது இறைவனின் மீதோ உண்மையான பக்தி என்பது வெறும் பேச்சளவில் இவர்களிடையே நின்று விடுகின்றது.


அதனால் தான், சைவ சமயத்தினைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதாக கூறிக் கொள்ளும் இந்த மடங்கள்

௧) இன்று ஆதீனத் தலைமைப் பதவி ஒன்றுக்காக மடாதிபதிகள் கூட்டம் போடும் இவர்களுக்கு, இலங்கையில் இராசப்பக்சே அரசால் இந்துக்களாகிய தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டப் போதும் சரி இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்ட போதும் சரி, சொந்த இனம் அழிகின்றதே என்றும் சரி சொந்தச் சமயக் கோவில்கள் அழிகின்றனவே என்றும் சரி இரத்தம் துடிக்கவில்லை!!!

௨) மலையகத் தமிழர்களாகிய இந்துக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது அத்தமிழர்களுக்காக இவர்களுள் யாரும் குரல் கொடுக்கவில்லை!!!

௩) "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று சட்டம் போட்ட பிறகும் அனைத்து சாதியினரும் கோவில்களில் அருச்சகராக முடியாத நிலை இருக்கின்றது. அந்நிலையை நீக்க இப்படி ஒன்றுகூடி ஒரு தீர்மானம் கூட போடவில்லை"

௪) சாதிக்கலவரங்கள் ஏற்ப்படும் போது எல்லாம் பெரும்பாலும் இந்து மதத்தினைச் சார்ந்த ஏதோ ஒரு சாதிக்காரர் தாம் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே சாதிக் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க இவர்கள் களப்பணி ஆற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பட்ட வரலாறே இவர்களிடம் இல்லை!!!

௫) அண்ணல் அம்பேத்கரின் காலம் முதல் இன்று வரை பெரும்பாலும் சாதி ஏற்றத் தாழ்வு என்னும் கொடிய மன நோயின் தாக்கத்தினால் தான் இந்து சமயத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோர் பிற மதங்களுக்கு மாறுகின்றனர். அந்த மனநோயினைத் தீர்க்க இந்த மடாதிபதிகள் எந்த ஒரு தீர்வினையும் எடுக்க வில்லை.

உண்மையிலேயே இந்து சமயம் மீதும் மக்களின் மீதும் மதிப்பும் அக்கறையும் இருந்து இருக்கும் என்றால் அந்த மடங்கள் மேலே உள்ள விடயங்களுக்காக நிச்சயம் பாடுபட்டு இருந்து இருக்கும். ஆனால் அவ்வாறு அவை நடந்துக் கொள்ளவில்லை. காரணம் எளிது.

இந்த மடங்களுக்கு இந்து சமயங்களின் மீதும் சரி மக்களின் மீதும் சரி, யாதொரு உண்மையான பக்தியும் மரியாதையும் கிடையாது. அவற்றிக்கு அவைகள் சார்ந்து நிற்கும் சாதிகளும் அச்சாதியினரின் மேன்மையுமே முக்கியம். அதற்காகவே சைவ வைணவ சமயங்களை கருவிகளாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் கிட்டிய கணக்கில்லா செல்வத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அந்த மடங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதன் விளைவாகத் தான் இன்று மக்கள் அனைவருக்கும் பொதுவான சைவ சமயமும் வைணவ சமயமும் இன்று சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையான 'இந்துத்துவா (வருணாசிரம கொள்கை)' வை தாங்கிக் பிடிக்கும் சைவ மடாதிபதிகள், வைணவ மடாதிபதிகள், காஞ்சி சங்கர மடம் ஆகியவற்றின் கையில் சிக்கி சீர் அழிந்துக் கொண்டு வருகின்றன. அந்த மடாதிபதிகளுக்கு அவரவர்களின் சாதிகளே முக்கியமே தவிர இந்து மதம் அல்ல. அதனால் தான் அந்த மடங்களில் வேற்று சாதியினர் மடாதிபதிகளாக வர முடியாத நிலை இருக்கின்றது. சாதிகளை மட்டுமே இவர்கள் பார்பதனால் தான் பெரும்பாலான பிற சாதி இந்துக்கள் இன்னலுறும் போது இவர்கள் குரல் தருவதில்லை. அவ்வாறே மெல்ல மெல்ல உண்மையான இந்துச் சமயத்தினை இவர்கள் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே இன்றைய நிலையில் சமய மடங்கள் அனைத்தும் உண்மையிலேயே சமயத்திற்காக இல்லாது குறிப்பிட்ட சாதியினருக்காகவே செயல் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. அவை ஆன்மீக மடங்கள் அல்ல... அரசியல் மடங்கள்!!!

இந்நிலையில் உண்மையிலேயே இறை பக்தியும் சமயத்தின் மீது அக்கறையும் உடைய இந்துக்கள் இத்தகைய சதியினை கண்டுக் கொண்டு அச்சதியில் இருந்து இந்து சமயத்தினை விடுவித்தால் மட்டுமே உண்மையிலேயே ஆன்மீக ஒளி நம்முடைய தேசத்தில் ஒளி வீசும். இனியாவது விழிப்போம்...சாதி ஏற்றத்தாழ்வினை நிலை நிறுத்தி இந்துக்களை அழிக்கும் மடாதிபதிகளை அடையாளம் காண்போம்...!!!சாதி வெறிக் கொண்ட மடாதிபதிகளிடம் இருந்து சைவ சமயத்தினை மீட்டு எடுப்போம். இந்துக்கள் விழிப்படையாதவரை இந்தியா விழிக்காது...இந்துக்கள் வளராத வரை இந்தியா வளராது.

சில கேள்விகள்: ('சங்கர மடம் - தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்' - யாதுமாகி பதிப்பகம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது)

௧) மற்ற மடங்களுக்கும் சங்கர மடங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இந்தியாவில் ஏராளமான மடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மடமும் ஏதோ ஒரு இறைத் தத்துவத்தை முன்னிறுத்துகின்ற மடங்கள். ஜீயர் மடங்கள் இருக்கின்றன. திருவாடுதுறை மடம் திருப்பனந்தாள் மடம் என்று சைவ வைணவ மடங்கள் பல இருக்கின்றன. எல்லா மடத்துக்கும் ஒரு இறைக் கொள்கை உண்டு. அதாவது, முன் முதலாக "இறைவன் ஒருவன் உண்டு" என்பது தான் எல்லா மடத்துக்கும் உடன்பட்ட செய்தி! சங்கரமடத்துக்கு அப்படி கிடையாது. சங்கர மடத்துக்கு வேதம் தான் தெய்வம். உருவ வழிபாடே இல்லாத ஒரு மதம் இந்த சுமார்த மதம். எனவே தான் இவர்கள் யாரும் இன்றைக்கும் எந்தக் கோயிலிலும் அர்ச்சகராக இருக்க முடியாது. சங்கராச்சாரியாருக்கும் காமாட்சியம்மன் கோவிலில் கும்பிடத்தான் உரிமையே தவிர மூலத் திருமேனியைத் தொடுவதற்கோ அர்ச்சனை செய்வதற்கோ எந்த உரிமையும் கிடையாது.

௨) மடங்கள் எல்லாம் சாதி சார்ந்தனவா?

ஆம். தத்துவம் என்று பெயருக்கு வெளியிலே சொன்னாலும் எல்லா மடங்களின் பொருளாதார வளங்களும் ஏதோ ஒரு சாதிக்குரிய சொத்து தான். ஜீயர் மடங்கள் எல்லாம் வைணவப் பிராமணர்களுக்கு உரிய சொத்து. திருவாடுதுறை மடமும், தருமபுர மடமும் சைவ வேளாளர்களின் சொத்து. இது போன்ற வேறு சில சாதியார்கள்- விஸ்வகர்மா போன்றோர் - ஒன்றிரண்டு இடங்களில் மடம் வைத்து இருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் எல்லா சாதியினருக்கும் உள்ள மடம் என்று தமிழ்நாட்டிலே எதுவும் கிடையாது.




கிருத்துவ சமயமும் இசுலாமிய சமயமும் அவைகளின் புனிதநூல்களை மக்கள் அனைவருக்கும் பொதுவாக வைத்து இருக்கும் பொழுது, இந்து சமயம் மட்டும் அது புனித நூல்கள் என்றுக் கூறுவனவற்றை மக்களில் ஒரு சாராருக்கு மட்டுமே உரிய ஒன்றாக வைத்து விட்டு மற்ற மக்களை அந்நூல்களில் இருந்து விலக்கி வைத்து இருக்கின்றது. அதாவது அந்த மக்கள் அந்த சமயத்தினைச் சார்ந்தவர்கள் தானாம்...அதே கடவுளரைத் தான் வணங்குவராம்...அதே பண்பாடு நாகரீகத்தினை உடையவர்கள் தானாம்...ஆனால் அந்த சமயத்து புனித நூல்களை மட்டும் அவர்கள் படிக்கவும் கூடாதாம்...அதனைப் பற்றிக் கேட்கவும் கூடாதாம். வித்தியாசமான சட்டங்களாகத் தான் இருக்கின்றன. ஆனால் இந்த வித்தியாசங்கள் இத்தோடு முற்றுப்பெறவில்லை. இன்னும் பல வடிவங்களில் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்துக்கு,

௧) கோவில் கருவறையில் நுழையவும் பூசை செய்யவும் ஒரு சாரார் மக்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கின்றது.

இதனை எதிர்த்து தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தினைக் கொண்டு வந்து அனைத்து சாதியினரில் இருந்தும் மக்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு அர்ச்சகராக பயிற்சி அளித்து கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு எதாக தயார் செய்து வைத்து இருக்கின்றது. ஆனால் "மற்ற சாதிக்காரன் கோவிலில் பூசை செய்வதா" என்று ஆவேசப்பட்ட ஏற்கனவே கோவிலில் பூசை செய்துக் கொண்டு இருக்கும் சாரார் அச்சட்டத்துக்கு மறுப்பு ஆணையை உச்ச நீதி மன்றத்தில் பெற்று இருக்கின்றனர். உச்ச நீதி மன்றமும் "மக்கள் அனைவரும் சமம்..எந்த தொழிலையும் எவர் வேண்டும் என்றாலும் செய்யலாம்" என்று தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக "அனைத்து சாதியினரும் எவ்வாறு அர்ச்சகராகலாம்...அவ்வாறு ஆகா முடியாது" என்றேக் கூறி தமிழக அரசின் ஆணையை கிடப்பில் போட்டு விட்டது. அதாவது 'யாருங்க சாதிய இப்ப எல்லாம் பார்குறா' என்ற இக்காலத்திலும் ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் தான் கோவிலில் பூசை செய்ய முடியுமாம்...இந்திய உச்ச நீதி மன்றம் சொல்லுகின்றது. எவ்வாறு இருக்கின்றது நீதி...மன்னிக்கவும்...மனு நீதி!!!

௨) கோவிலில் உள்ளே நுழையவே பல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கின்றது.

இது தான் இருப்பதிலே உச்சகட்டம்...ஒரு சமயத்தினைச் சார்ந்தவன் அவனது சமயத்து புனித இடமான கோவில்களுக்குள் நுழைய கூடாதாம். நுழைந்தால் தீட்டாம். மற்ற சமயங்கள் எல்லாம் "ஐயா நீர் பாவம் செய்து இருக்கின்றீர்...எங்கள் இறைவனை உண்மையிலேயே நம்பினீர்கள் என்றால் இறைவன் நிச்சயம் உங்கள் பாவங்களை போக்கி அருள்வார்" என்று கூறிக் கொண்டு இருக்கும் போது, இந்து சமயம் பல மக்களை அவன் பாவம் செய்தவன் ....அவனைக் கண்டாலே தீட்டு என்றுக் கூறி விலக்கி வைத்து இருக்கின்றது. அதுவும் அந்த மக்கள் எதனால் பாவம் செய்தவர்களாக அறியப்படுகின்றர்கள் என்றால் விடையாக நமக்கு கிட்டும் பதில் அவர்கள் பிறப்பிலேயே பாவம் செய்தவர்களாம்...அவர்கள் பிறப்பே பாவமாம். நல்ல கதை அல்லவா. ஒருவன் ஒரு செயலின் மூலம் பாவம் செய்து விட்டான் என்றால் அதற்கு ஏதாவது தண்டனையைப் பெற்றுக் கொண்டு மனம் வருந்தி அந்த பாவத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளலாம். ஆனால் அவன் பிறப்பே பாவம் என்றுக் கூறிவிட்டால், அவன் என்ன செய்வான்?...என்ன தான் செய்ய முடியும்...?

அத்தகைய மக்களை தொட்டாலே தீட்டாகுமாம்... சிலர் பத்து அடி தொலைவுக்குள் வந்தாலே தீட்டாகுமாம்...இன்னும் கொடுமை என்னவென்றால் சிலரை கண்டுவிட்டாலே தீட்டாகுமாம். என்ன கொடுமைங்க இது. ஒரே சமயத்தினைச் சேர்ந்த மக்களை இந்து சமயம் பிரித்து வைத்து இருக்கும் நிலையைக் கண்டீர்களா?

இது தான் இந்து சமயம் கூறும் நியதி. நீ பிறப்பால் தாழ்ந்தவன். நான் பிறப்பால் உயர்ந்தவன். இதனைக் கூறியது இறைவன். இதுவே சட்டம். முடிந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லை.நிற்க.

இந்து சமயத்தின் நூல்களை அச்சமயத்தில் உள்ள மக்கள் பலர் படிக்க முடியாது. உள்ளம் உருகி இறைவனுக்கு பூசை செய்ய முடியாது...ஏன் கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாது...இறைவனையும் காண முடியாது. இந்நிலையில் அம்மக்கள் எவ்வாறு இந்து சமயத்தினைச் சார்ந்தவர்கள் என்றுக் கூற முடியும்?

அவர்களைத் தாழ்த்துவதை விட இந்துச் சமயம் எதையுமே அவர்களுக்கு செய்து விடவில்லையே அந்நிலையில் மற்ற சமயங்கள் "ஐயா...நீங்கள் எங்கள் சமயத்தில் சேர்ந்தீர்கள் என்றால் எங்களின் கோவில்களுக்குள் நீங்கள் வர முடியும்...நீங்களும் நாங்களும் ஒன்றுதான்...நம்மில் எவ்வித ஏற்றத் தாழ்வும் கிடையாது...இதோ இறைவன் அவ்வாறே கூறி இருக்கின்றார்...இதோ எங்கள் புனித நூலில் குறிக்கப்பட்டு இருக்கின்றது பாருங்கள்...பொறுமையாய் படியுங்கள்...படித்து உங்கள் முடிவினைக் கூறுங்கள்..நம்முடைய கடவுள் நம்மை காப்பாற்றுவார்" என்றே அந்த மக்களை அணுகும் போது அம்மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு சமயம் நீ மனிதனாக இருக்க தகுதி இல்லாதவன் என்றுக் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு சமயம் நாம் அனைவரும் ஒன்று தான் என்று கூறி வருகின்றது... இந்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்? மனிதனாக இருப்பீரா இல்லை அடிமையாகவே இருப்பீர்களா?

இந்நிலையில் தான் மக்கள் இந்து சமயத்தில் இருந்து மாற ஆரம்பிக்கின்றனர்...எந்த ஒரு மனிதன் தான் அடிமைத்தனத்திலேயே கட்டுப்பட்டுக் கிடக்க எத்தனிப்பான்? இன்றைய இந்தியாவில் மதம் மாறிய மக்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்களே. அவர்களின் உரிமையை ஏன்...அவர்களும் மனிதர்களே என்ற விடயத்தைக் கூட இந்து சமயம் மறுத்தது...பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?...அவர்களை மனிதனாக பாவித்த சமயங்களுக்கு மாறி விட்டனர். மக்களுக்கு என்றுமே அவர்களைப் புரிந்துக் கொண்டு அவர்களுக்கென இருக்கும் இறைவனே தேவைப் படுகின்றது. இந்நிலையில் அத்தகைய மாற்றங்கள் சமுகத்தில் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இங்கே தான் நாம் இந்த மத மாற்றங்கள் குறித்த இந்து அமைப்புகளின் நிலையினை பார்க்க வேண்டி இருக்கின்றது.

அவர்களும் சரி அவர்களின் சமயமும் சரி ஒடுக்கப்பட்ட மக்களை மனிதர்களாகக் கூட எண்ண மாட்டார்களாமாம் ஆனால் அம்மக்கள் மட்டும் எவ்வித மாற்றுக் கருத்துக்கள் இன்றி அவர்களின் சமயத்திற்கும் சரி கட்டுப்பாட்டுக்கும் சரி ஒடுங்கியே இருக்க வேண்டுமாம்... வேறு சமயங்களுக்கு மாறக் கூடாதாம்... என்ன நியாயம் இது?

அவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு ஒரு காரணமும் இருக்கின்றது...எளிய காரணம் தான்..."ஆள்வதற்கு மக்கள் இருந்தால் தானே ஆள முடியும்...மாறாக மக்கள் அனைவரும் பக்கத்து நாட்டுக்கு சென்று விட்டார்கள் என்றால் இங்கே ஆட்சி எது...அரசன் எது...?" சரி தானே. இந்த ஒரு காரணத்துக்காகத் தான் இந்து அமைப்புகள் சமய மாற்றத்தினை வன்மையாக எதிர்கின்றன. காரணம் கீழே உள்ள மக்கள் அனைவரும் மதம் மாறி விட்டார்கள் என்றால் இவர்கள் 'நாங்கள் உயர் சாதியினர்' என்று எவரிடம் போய் தங்களின் அதிகாரத்தினை செலுத்துவர்?...அவர்களின் கொள்ளைக் கூடங்களான கோவிலுக்கு எவ்வாறு செல்வம் வந்துச் சேரும்? அவர்களின் பிழைப்பு எவ்வாறு ஓடும்? இதுவே தான் அவர்களின் தலையாயக் கவலை...மாறாக கடவுளரின் கருத்துக்களைப் பற்றி அவர்களுக்கு யாதொறுக் கவலையும் இல்லை.

மக்கள் மாறி விட்டால் இவர்களின் (இந்து அமைப்புகள், பிராமணர்கள்) அதிகாரம் செல்லாக் காசாகி விடும். எனவே தங்களின் அதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்ளவும், மக்களை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கவுமே இவர்கள் மதம் மாறாதீர்கள் என்ற பிரச்சாரத்தினை முன் வைக்கின்றனர். அரசியலே இவர்களின் இலக்காக இருக்கின்றதே அன்றி ஆன்மிகம் துளியும் கிடையாது. இதனை அறிந்தே திருமூலர் அக்காலத்திலேயே

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்

என்று கூறி வைத்து விட்டு சென்று விட்டார்.


இந்து சமயம் தங்களுக்கு உரிய உரிமைகளையும் மதிப்பினையும் தரவில்லை என்பதாலேயே தான் மக்கள் மதம் மாறுகின்றனர் (இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் கல்வி பெற்று இருக்கின்றனர் என்றால் அதற்கு கிறுத்துவர்களே முக்கிய காரணம்...இந்து சமயம் அவர்களுக்கு கல்வியினையும் தடை செய்து வைத்து இருந்தது). அவ்வாறு மதம் மாறுவதால் தாங்கள் இழந்த பல உரிமைகளை அவர்கள் மீட்டு எடுத்துத் தான் கொள்கின்றனர். ஆனால் கிருத்துவ அமைப்புகளும் அவர்களின் இலாப நோக்கிலேயே மக்களை கணக்கிடுவதினால், இந்தியாவில் மதம் மாறிய பின்னும் சாதியின் கொடுமைகளில் இருந்து வெளிவர இயலாது மக்கள் இருக்கின்றனர். ஒரு தாழ்த்தப்பட்ட இந்து கிருத்துவத்தில் இணைந்தால் அவன் தாழ்த்தப்பட்ட கிருத்துவனாகவே மாற்றப்படுகின்றான். சாதி ஏற்றத்தாழ்வு என்னும் நோய் இங்கே கிருத்துவத்தையும் பிடித்து இருக்கின்றது.

காரணம் இந்து சமயமும் சரி கிருத்துவ சமயமும் சரி மக்களை வெறும் அரசியல் கருவிகளாகவே பார்கின்றன. கிருத்துவத்தில் மக்கள் சேர்ந்தால் கிருத்துவம் பலம் பெரும்...அதன் மூலமாக அரசியல் செல்வாக்கினை அச்சமயம் அடையும். மாறாக இந்து சமயத்தில் மக்கள் இருந்தனர் என்றால் அவர்கள் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள் தொடர்ந்து ஆதாயம் அடைந்துக் கொண்டே இருப்பார்கள்...அவர்களின் அரசியல் செல்வாக்கும் அவ்வாறே இருக்கும். இதற்காகவே தான் இரு சமயங்களும் மக்களைக் கவரப் பார்க்கின்றன. வேறு ஆன்மீக என்னமோ அல்லது மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற என்னமோ இவ்விரண்டு சமயங்களுக்கும் துளியும் கிடையாது என்பதனை நாம் வரலாற்றில் இருந்து அறிந்துக் கொள்கின்றோம்.

இவ்விரண்டு சமயங்களின் அரசியல் காய் நகர்த்தலில் பாவம் மக்களே பகடைக் காய்களாக ஆக்கப்படுகின்றனர். எப்பொழுதும்!!!

சென்ற பதிவில் இரண்டு விடயங்களைப் பற்றி பார்த்து இருந்தோம்.
௧) கிருத்துவ அமைப்புகள் எவ்வாறு அரசியல் அமைப்புகளாக செயல்படுகின்றன என்றும்
௨) வெறும் பணத்திற்காக சமயத்தினை உண்மையாக நேசிப்பவர்கள் மத மாற்றம் செய்ய மாட்டார்கள் என்றும் கண்டு இருந்தோம்.

இப்பொழுது நாம் இந்தியாவில் 'மத மாற்றத்தில்' தொடர்பினை உடைய மற்றுமொரு சமயமான இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டும். "என்ன இந்து மதம் 'மத மாற்றத்தில்' தொடர்பினைக் கொண்டு இருக்கின்றதா...இந்துக்கள் எங்கே அடுத்த சமய மக்களை மதம் மாற்ற முயற்சிக்கின்றார்கள்...வீணாக வதந்திகளைப் பரப்பாதீர்கள்" என்று கூற வருகின்றீர்களா...சற்று பொறுங்கள். இது ஒரு வட்டம்... கிருத்துவ அமைப்புகள் மக்களை மதம் மாற்றுகின்றன...இந்து மக்கள் மதம் மாறுகின்றனர்...இந்து மதம் மத மாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்து மக்கள் அடுத்த மதத்திற்கு போவதை தடுக்க பார்க்கின்றது. எனவே மத மாற்றத்தோடு இந்து சமய மக்களும் சரி இந்து சமய அமைப்புகளும் தொடர்புக் கொண்டுத் தான் இருக்கின்றன. இப்பொழுது நாம் இந்து மக்கள் ஏன் மதம் மாறுகின்றனர் என்றும் இந்து சமயம் ஏன் அவர்கள் மதம் மாறுவதை தடுக்கப் பார்க்கின்றது என்றும் தான் காண வேண்டி இருக்கின்றது.

எந்த ஒரு சமய மக்களும், அவர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு சமயத்தினை வெறும் பணத்திற்காக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும் நமது கலாச்சாரம் குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒன்றாகும். எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான். அவ்வாறு செல்லவும் அவனது சமுகம் அவனை எளிதில் விடாது.

ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தநிலையிலும் மக்கள் மதம் மாறத்தான் செய்கின்றார்கள். இதன் காரணம் என்னவென்று நாம் இப்பொழுது ஆராய வேண்டி இருக்கின்றது. அட என்னங்க "அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை அவர்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பி மூளைச் சலுவை செய்கின்றார்கள். அதன் விளைவாகவே மக்கள் மதம் மாறுகின்றார்கள்...இதைப் போய் இன்னும் ஆராயணும் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க" என்று கூறுகின்றீர்களா...இப்பொழுது ஒருக் கேள்வி, சமயங்களின் தேவை யாது? அவைகளின் கடமை யாது?

வெறுமனவே காசினை வாங்கிக் கொண்டு பூசை செய்வதா? இல்லை வெறும் மந்திரங்களை மட்டுமே ஓதிக் கொண்டு கல்லுக்கு அபிசேகம் செய்வதா? அவ்வாறு செய்தால் தான் இறைவன் மகிழ்ச்சியாக இருப்பார் என்றக் கருத்தினைப் பரப்புவதா?. ஆம் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் இதோ ஏதோ கேள்விகளை சித்தரான சிவவாக்கியார் உங்களுக்காக எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டு வைத்து விட்டு சென்று இருக்கின்றார்

"`நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

நிற்க.

சமயங்கள் என்பன அவைகள் கூறும் முழுமுதற் கடவுளின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், அம்மக்கள் அக்கருத்துக்களின் வழி அன்பாய் நின்று இறுதியில் அச்சமயங்கள் கூறும் பரம்பொருளை அடைவதற்குரிய வழிகளாக இருக்க வேண்டியவைகளே அன்றி வேறு கொள்கைகளை உடையனவைகளாக இருத்தல் இயலாது. இறைவனை அறியாத நிலையில் இருக்கும் மக்களை, இருட்டில் வழி தெரியாது கடலில் தத்தளிக்கும் படகுகளை எவ்வாறு கலங்கரை விளக்கம் பத்திரமாக ஒளியினைக் காட்டி கரை சேர்க்க உதவுகின்றதோ, அதனைப் போல் அற ஒளிக் காட்டி இறைவனை உணர்ந்து அவனை அடையும் வழியினை காட்டுவதே சமயங்களின் குறிக்கோளாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும்.

கிருத்துவ சமயம் என்றால் கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மக்களை நல்வழி படுத்தி அவர்கள் கிருத்துக் கூறிய நெறிப்படி வாழ செய்ய வேண்டும்.
இசுலாமிய சமயம் என்றால் அல்லாவின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சைவம் சிவனை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.
வைணவம் பெருமாளினை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.

அவ்வாறுக் கூறி மக்களின் அறியாமையை போக்க வேண்டும். மக்களிடத்து ஆன்மீக கருத்துக்களைக் கொண்டுச் சென்று அவர்களைத் தெளிவுற செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க 'எங்கள் சமயத்து மக்கள் அறியாமையில் இருக்கின்றனர்...அதனை மற்ற சமயத்து மக்கள் பயன்படுத்திக் கொண்டு மாற்றி விடுகின்றனர்" என்றுக் கூறுவது உங்கள் சமயத்து கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று நீங்களே ஒப்புக் கொள்வதைப் போலத் தானே இருக்கின்றது. அப்பொழுது தவறு எங்கே இருக்கின்றது. மதம் மாறுபவன் அறியாமையால் மாறுகின்றான் என்றால் அவனை அந்த அறியாமை இருளில் வைத்தது யார்? அந்த அறியாமை இருளைப் போக்காமல் அதனில் குளிர் காய்ந்தது யார்? என்றாவது ஒரு நாள் அவன் அறியாமை நீங்கித் தான் தீர வேண்டி இருக்கின்றது. அந்நிலையில் அவன் அறியாமையை நீங்கள் விலக்கவில்லை என்றால் இன்னொருவன் நீக்குகின்றான் அதனைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்.

இப்பொழுது ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே கூற விரும்புகின்றேன். அலுவலகத்தில் எனது இசுலாமிய நண்பர் ஒருவர் தினமும் குர்ஆனில் இருந்து சில வரிகளைப் படித்து விட்டு வந்து அதனை என்னிடம் கூறி அதற்குரிய விளக்கமும் கூறுவார். நானும் ஆர்வமாக கேட்டுக் கொள்வேன். அச் செயலுக்கு அவர் கூறிய காரணம் "இது எங்களுடைய கடமை...அல்லாவின் கருத்துக்களை படித்து அதனை மக்களுக்கு கூற வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை". அருமையான ஒரு செயல் தான். இறைவனின் கருத்துக்களாக அவர்கள் நம்பும் கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் முயல்கின்றனர். இங்கே தான் நாம் இந்து சமயதினைக் காண வேண்டி இருக்கின்றது...

கிருத்துவர்களின் புனித நூல் விவிலியம் - அக்கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். மேலும் விவிலியத்தினை மக்கள் அனைவரும் படிக்கவும் செய்யலாம். தன்னிடம் விவிலியம் அல்லாத அல்லது விவிலியக் கருத்துக்களை அறியாத ஒரு கிருத்துவனை நீங்கள் காண முடியாது.
இசுலாமியர்களின் புனித நூல் குரான் - குரானின் கருத்துகளையும் மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம்...படிக்கவும் செய்யலாம். அதைப் போன்றே அனைத்து இசுலாமியர்களும் நிச்சயம் குரானை தங்களுடன் வைத்து இருப்பர்.
இப்பொழுது இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம் (சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இந்து சமயத்திற்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை என்றே நாம் மற்ற பதிவுகளில் கண்டுக் கொண்டு வருகின்றோம்...அந்த விடயங்கள் இங்கே தேவை இல்லை என்பதால் அதனை பற்றிப் பார்க்காமல் இந்து சமயத்தினை பற்றி மட்டுமே காண்போம்).

இந்து சமயத்தின் புனித நூல் என்ன?
இக்கேள்விக்கு பெரும்பாலானோர் வேதங்கள் என்றே விடை தருவர்.
சரிப்பா வேதம் என்றால் என்ன? அவற்றில் என்ன கூறி இருக்கின்றது? என்றால் பெரும்பாலான மக்களுக்கு விடை நிச்சயம் தெரியாது. காரணம் விவிலியம் மற்றும் குரான் ஆகிய நூல்களைப் போன்று அனைத்து மக்களும் வேதங்களைப் படித்து விட முடியாது. இந்து சமயத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலருக்கே அவ்வேதங்களை பயிலும் உரிமையை இந்துச் சமயம் வழங்கி இருக்கின்றது. அதுவும் எந்த அடிப்படையில்...பிறப்பின் அடிப்படையில். அதனால் தான் வேதங்கள் என்று அறிந்த மக்களுக்கு வேதங்கள் என்றால் என்னவென்றும் வேதத்தில் என்ன கருத்துக்கள் கூறி இருக்கின்றன என்றும் தெரியாத நிலை இருக்கின்றது. ஒருவேளை ஒரு சாதாரண மனிதன் வேதங்கள் என்ன தான் சொல்லுகின்றன என்று பக்தி ஆர்வத்தில் வேதங்களைப் படித்து விட்டான் என்றால் அவனை என்ன செய்ய வேண்டும் என்றும் இந்து சமயத்தில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்". - மனுநூல் அத்தியாயம் 12, ஸ்லோகம் 4

அருமையான சட்டம் அல்லவா. இந்த சட்டத்தினை நாம் முழுமையாக அறிய வேண்டும் என்றால் சூத்திரன் என்பவன் யார் என்றே நாம் அறிய வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் நம்மில் பலர் அந்தச் சட்டம் சூத்திரன் என்ற ஒருவனைத் தானே கூறுகின்றது அச்சட்டம் நமக்கு பொருந்தாது என்றே எண்ணக்கூடும். அந்த எண்ணம் ஒரு வேளை சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். சரி நாம் ஏன் வீணாக யூகிக்க வேண்டும். சூத்திரன் யார் என்று மனுநூலையே கேட்டுவிடலாமே. அதற்கு முன்னர் இந்து சமயம் மக்களை பிரித்து வைத்து இருக்கும் நான்கு பிரிவுகளை(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) சற்று நினைவில் கொள்வது நல்லதாக இருக்கும். இப்பொழுது மனுநூலைக் காணலாம்..."ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்". - மனு நூல் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம்.

"பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது." - மனுநூல் அத்தியாயம் 2 சுலோகம் 44


மேலே உள்ள வாக்கியங்களின் மூலம் சூத்திரன் என்பவன் பிரமனின் காலில் இருந்து பிறந்தவன் என்றும் அவனைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவரும் பூணூல் பூண்டு இருப்பர் என்றே நாம் அறிந்துக் கொள்ளலாம். எனவே பூணூல் போடாத எவரும் வேதங்களைப் படிக்க கூடாது...படிக்கவும் முடியாது இந்து சமயத்தில். இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் வேதங்களைப் படிக்க இந்து சமயத்தில் அனுமதி இருக்கின்றதா இல்லையா என்று. ஆச்சர்யவசமாக இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் (90%) பேருக்கு இந்து சமயம் அந்த அனுமதியை வழங்கி இருக்கவில்லை. வேதங்களை படிப்பதற்கு மட்டும் என்றில்லை, சூத்திரர்கள் என்ற மக்களுக்கு மேலும் பல அனுமதிகளை இந்து சமயம் வழங்கி இருக்கவில்லை.


"அட என்னங்க வேதங்கள் இறைவன் அருளியவை...எவ்வளவு சிறப்பு மிக்கவை... அவற்றை எவ்வாறு சூத்திரன் படிக்கலாம்...தகுதியானவர் தானே படிக்கலாம்...அடுத்தப் பிறப்பில் அவன் புண்ணியம் செய்து இருந்தான் என்றால் பிராமனாகவோ அல்லது மற்ற வர்ணத்தில் ஒருவனாகவோ பிறந்து வேதங்களைப் படிக்கலாம்" என்று கூறினீர்கள் என்றால், இதோ மீண்டும் சிவவாக்கியார் வருகின்றார் சில கேள்விகளோடு... 
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.


ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!


இதில் வேதத்தையும் யாகத்தையும் கிழிக்கும் அவர், தகுதியானவர் என்று கூறப்படுபவர்களை

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?


நோக்கி கேள்விகளை வீசுகின்றார்...மேலும் அதோடு நிற்காது மறுபிறப்பையும் ஒரு கை பார்க்கின்றார்,


கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே


எனவே மேலே உள்ள வரிகள் மூலம் வேதங்களின் இறவாத்தன்மையும் அத்தகைய வேதங்களை ஒரு சிலர் தான் படிக்கலாம் என்பது ஒரு சிலரின் சதிதான் என்றும் நாம் அறிய முடிகின்றது. சரி இப்பொழுது நாம் அதனுள் செல்ல வேண்டியதில்லை.


கிருத்துவ சமயமும் இசுலாமியச் சமயமும் அவைகளின் புனித நூல்களை அனைவரும் படிக்கலாம் என்றும் அச் சமயங்களின் ஆலயங்களுக்குள் அச்சமயத்தினர் எவர் வேண்டும் என்றாலும் எவ்வித பாகுபாடுமின்றி வரலாம் என்றுமே கூறுகின்றன. ஆனால் இந்துச் சமயமோ புனித நூல்கள் என்றுக் கூறப்படுபவையை ஒரு சிலர் தான் படிக்க வேண்டும் என்றும் மற்ற மக்கள் எவரும் அதனை படிப்பது ஏன்..அதனைப் பற்றிக் கேட்டாலே பாவம் என்றுக் கூறுகின்றது. இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா? இங்கே மறுக்கப்படும் அனுமதி அங்கே கிட்டினால் அவர்கள் செல்வார்களா மாட்டார்களா? கற்பார்கள் தானே...செல்வார்கள் தானே...அதனை நாம் தவறென்று நாம் எவ்வாறு கூற இயலும்.

சரி இன்னும் வேறு சில விடயங்களையும் நாம் இப்பதிவுத் தொடர்பாக காண வேண்டி இருக்கின்றது....

காண்போம்...!!!

நீங்கள் மதம் மாற எவ்வளவு பணம் எதிர் பார்ப்பீர்?

மதம் மாற்றம் வெகு சுலபம் தான். எங்களின் சமய பழக்க வழக்கங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப நீங்கள் மாறிக் கொள்ள வேண்டும். நாங்கள் வணங்கும் இறைவனை நீங்கள் வணங்க வேண்டும். உங்களுடைய பழைய பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவைகள் முற்றிலுமாக புறக்கணித்து எங்களின் கொள்கைகளையே பேண வேண்டும். இந்நாள் வரை நீங்கள் வணங்கிக் கொண்டு இருந்த கடவுளரை இனி வணங்கக் கூடாது... ஏன்...நினைத்துக் கூடப் பார்க்க கூடாது...அவர்கள் இனி உங்களுக்கு அந்நிய கடவுளர் ஆக மாறி விடுவர். ம்ம்ம்...உங்களின் பெயர் மற்றும் உங்களின் குடும்பத்தினரின் பெயரினையும் எங்கள் சமயத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப மாற்றி விட்டால் நலமாக இருக்கும். இன்னும் சில இதரச் சட்டங்கள் இருக்கும்...ஆனால் அவற்றை எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்... இப்பொழுது சொல்லுங்கள்...

நீங்கள் எங்கள் மதத்திற்கு மாற எவ்வளவு பணம் எதிர் பார்ப்பீர்?...

இக்கேள்வியோடு ஒருவர் உங்களை அணுகினால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்.

 "ஆகா...பணம் வருகின்றதே..அது போதாதா..." என்பது உங்களின் பதிலாக இருக்குமா அல்லது "நன்றிகள் ஐயா...இருக்கட்டும்....நாங்கள் வணங்கும் இறைவன் எங்களை நன்றாக வைத்து இருக்கின்றார்... எங்களுடைய பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிப்பாட்டு முறைகள் போன்றியவைகளை வாங்கும் அளவுக்கு இன்னும் இந்த உலகில் பணம் படைத்தவர்கள் தோன்றவில்லை...தோன்றப் போவதுமில்லை. எங்களின் கடவுள் என்றும் எங்களைக் கண்டுக் கொண்டே இருக்கின்றார்...உங்களின் கடவுள் உங்களைக் கண்டுக் கொண்டு இருப்பதைப் போன்றே...எனவே மன்னிக்கவும் நண்பரே...உங்களின் சமயத்திற்கு நாங்கள் மாற வேண்டியத் தேவை என்றுமே எங்களுக்கு அமையாது" என்று இருக்குமா?.

மேலே உள்ள பதில்களில் முதல் வகையான பதில்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவர்களுக்கு பணம் தான் இறைவன். அவர்கள் ஒரு சமயத்தில் இருப்பதும் ஒன்றுத் தான் இல்லாததும் ஒன்றுத் தான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் அந்த சமயத்தில் இல்லாததே அந்த சமயத்திற்கு நல்லதாக அமையும். எனவே அவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியத் தேவை இல்லை. (இதில் ஒரு வகையான விதிவிலக்கான மக்களும் இருக்கின்றனர் அவர்களைப் பற்றி நாம் தனியாகப் பார்க்கலாம்).

இரண்டாவது வகையான பதிலினை உடையவர்களைப் பற்றி நாம் கவலைக் கொள்ள வேண்டியதே இல்லை. அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அவர்களிடம் மதமாற்றம் என்ற ஆயுதம் வேலை செய்வதில்லை. பெரும்பாலான மக்கள் அனேகமாக இந்தப் பிரிவினைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்கின்றனர்.

எனவே மேலே நாம் கண்ட விடயங்கள் மூலம் உண்மையான பக்தியினை உடைய மக்களைக் கொண்ட சமயத்தின் மீது மத மாற்றம் என்றக் கருவி எவ்வித மாற்றத்தினையும் எப்பொழுதிலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதனை அறிந்துக் கொள்ளலாம். அத்தகைய சமயம் மற்றச் சமயதினைக் கண்டு அஞ்ச வேண்டியத் தேவையும் கிடையாது. அவ்வாறு அச்சமயம் அஞ்சும் என்றால் அச்சமயம் அதன் மக்களின் மேல் நம்பிக்கை இன்றி இருக்கின்றது என்றே நாம் அறிந்தும் கொள்ளலாம்.

"தம்பி...கொஞ்சம் பொறுங்க... எந்த அந்நிய மதமும் வெறும் பணத்தினைக் கொடுத்து மக்களை மாற்றுவது கிடையாது... அவர்களின் கடவுளை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, மதக் கருத்துக்களைப் பரப்பி... அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை மூளைச் சலுவைச் செய்து மதம் மாற்றுகின்றனர். அப்பாவி மக்களும் ஏமாறுறாங்க...இதைப் பத்தி பேசாம நீங்க மற்றத பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க" என்று சிலர் வினா எழுப்பலாம். அருமையான கேள்வி. இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக 'மதக் கருத்துக்களைப் பரப்பி'...'மூளைச் சலுவை'...மற்றும் 'அப்பாவி படிப்பறிவில்லாத மக்கள்' ஆகிய சொற்களைப் பற்றியும் நாம் விரிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

மத மாற்றம் என்றாலே இரு மதங்களாவது குறைந்தபட்சம் அச்செயலில் நிச்சயம் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் மத மாற்றம் என்றுக் கூறினாலே கிருத்துவம் அவ்விரு சமயங்களில் ஒன்றாக அமர்ந்துக் கொள்கின்றது. இந்தியாவினைப் பொறுத்த வரை அந்த மற்றொரு சமயம் இந்துச் சமயமாக இருக்கின்றது. எனவே இந்தியாவில் மத மாற்றம் என்றத் தலைப்பினை நாம் காண வேண்டும் என்றால் அவ்விருச் சமயங்களைப் பற்றியும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. முதலில் இன்றைய கிருத்துவச் சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு உண்மைச் சம்பவத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம்... என்னுடைய நண்பன் ஒருவன் படித்து முடித்தும் நீண்ட காலமாக வேலை இல்லாது தேடிக் கொண்டே இருந்தான். மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வேலைக் கிடைத்து விட தனக்கு மட்டும் வேலைக் கிடைக்காத நண்பன் எவ்வாறு இருப்பான்?... ஒரு வித மன வருத்தத்தில் இருப்பான் தானே... அவ்வாறுத் தான் அவனும் இருந்தான். அப்பொழுது தான் அவனுக்கு அந்த அழைப்பு வந்தது. ஒரு கிருத்துவ நிறுவனத்திடம் இருந்து.

"மாதம் 20,000 சம்பளத்தில் வேலை பெற்றுத் தருகின்றோம்...நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்... எங்கள் சமயத்திற்கு மாறி விடுங்கள்...மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" இதுவே அவர்கள் அவனுக்கு தந்த வாய்ப்பு.

"இல்லை...இருக்கட்டும்" இது அவன் அவர்களுக்குத் தந்த பதில். வேலை இல்லாவிடினும் பிரச்சனை இல்லை ஆனால் என்னுடைய நம்பிக்கைகளை நான் விற்க போவதில்லை என்பதே அவனது முடிவாக இருந்தது. நிற்க...
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்த கிருத்துவ அமைப்பு அவனுக்குத் தந்த வியாபார ஒப்பந்தத்தினைப் பற்றியே.

என்ன வியாபார ஒப்பந்தமா என்று எண்ணுபவர்களுக்கு "ஒரு நிறுவனம் ஒருவனுக்கு வேலை தருகின்றேன் ஆனால் நீ என்னில் சேர்ந்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் இடுகின்றது" என்றால் அது வியாபார ஒப்பந்தம் தானே. ஒரு பொருளை இன்ன விலை என்று பேரம் பேசுவது வியாபாரம் தானே. அவ்வாறு பேரம் பேசும் நிறுவனம் வியாபார நிறுவனம் தானே.

அத்தகைய ஒரு வியாபார அமைப்பாகத் தான் கிருத்துவ சமயம் இன்று இருக்கின்றது. கிருத்துவ சமயத்தினை தன வசம் வைத்துக் கொண்டு உலகில் உள்ள மக்களை எல்லாம் ஆளும் எண்ணம் கொண்ட ஒரு அரசியல் மற்றும் வணிக அமைப்பாகத் தான் அது இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது. மாறாக கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மனித நேயம் மக்கள் மத்தியில் செழித்து வளர வழி செய்யும் ஒரு அமைப்பாக அது இயங்கவில்லை. அது ஒரு அரசியல் அமைப்பாக மாறி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த மாற்றம் ஆரம்பித்தது ரோம பேரரசன் கோன்சுடண்டின் என்பவனின் காலமான கி.பி நான்காம் நூற்றாண்டில் இருந்து தான் என்று நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

அக்காலத்தில் தான் கிருத்துவம் அரச சமயமாக அரசியல் சாயம் பூசப் பெறுகின்றது.

சிலுவை அதன் சின்னமாக மாறுகின்றது.

ரோம பேரரசு புனித ரோமப் பேரரசாக மாறுகின்றது. கிருத்துவம் மெதுமெதுவாக அரசியல் கருவியாக மாற ஆரம்பிக்கின்றது.

கோன்சுடண்டினின் காலம் வரை கிருத்துவர்களை வேட்டையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவனின் காலத்துக்கு பின்னர் கிருத்துவர்கள் அல்லாதவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அனைத்தும் அரசியலாக்கப்பட்டது. அரசியலாக்கப்பட்டக் கொள்கைகள் ஏதேனும் உண்மையானக் கொள்கைகளாக இருந்து இருக்கின்றனவா? இல்லைதானே... அவ்வாறே கிருத்துவமும் சரி மாற்றம் காணப்பெற்றது. அவ்வாறு மாறிய கிருத்துவம் தான் இன்று உலகில் நின்றுக் கொண்டு இருக்கின்றது....ஒரு மாபெரும் அரசியல் அமைப்பாக!!!

சிந்தித்துப் பாருங்கள்,

௧) கிருத்துவும் சரி அவரது சீடர்களும் சரி ரோமர்கள் அல்லர். ஆனால் இன்று கிருத்துவர்களின் சமயத் தலைவராக விளங்கும் போப் என்னும் பதவியில் இது வரை அனேகமாக ரோமர்கள்...இன்னும் விரிவாகக் கூற வேண்டும் என்றால் ஐரோப்பியர்களே அமர்ந்து உள்ளனர் பெருமளவில். இதன் மூலம் கிருத்துவ சமயம் உண்மையில் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

௨) யூதனுக்கு யுதனாகவும்...கிரேக்கனுக்கு கிரேக்கனாகவும் கருத்துக்களைப் பரப்புங்கள் என்றக் கிருத்துவின் கொள்கைக்கு மாறாக அனைவருக்கும் ஐரோப்பியர்களாகவே கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்களுக்கே மக்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர்...அரசியல் நலன்களுக்காக.

௩) மற்ற சமய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துக் கொண்டு அதன் வாயிலாகவே மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற கிருத்துவின் கருத்துக்களுக்கு மாறாக மற்ற சமயங்களின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையையும் அவற்றைத் தாழ்வுப்படுத்தும் ஆதிக்க எண்ணத்தையுமே இன்றைய கிருத்துவ சமயம் விதைக்கின்றது.

௪) ஒரே மந்தை...ஒரே மேய்ப்பன் என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளினை விளங்கிக் கொள்ளாமலும், பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தினை உணர்ந்துக் கொள்ளாமலும் பல கடவுளர் இருக்கின்றனர் என்றும் அவர்களை நாம் வணங்கக் கூடாது என்றும் எண்ணத்தினைக் மக்களுள் வளர்க்கின்றனர்.

௫) மேலும் மக்கள் அனைவரும் சமம் என்றக் கருத்தினை மக்களுள் விதைக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்காது ஒரு சாரார் மற்றொரு சாராரினை அடக்கி ஆள்வதற்கே இன்றைய கிருத்துவ சமயம் வழி செய்கின்றது...

அதனால் தான் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்க கிருத்துவர்களால் கொல்லப்பட்ட பொது அதனை கிருத்துவ சமயம் எதிர்க்கவில்லை. அம்மக்கள் அடிமைகளாக துன்புறுத்தப்பட்ட போதும் அவ்வமைப்புகள் வாயினை மூடிக் கொண்டே இருந்தன.

அதனால் தான் மாயன் இன மக்கள் முற்றிலுமாக இசுபானிய காட்டுமிராண்டிகளால்(வீரர்கள் என்று அவர்களை அவர்களே அழைத்துக் கொள்ளட்டும்) அழிக்கப்பட்ட போதும் அவ்வமைப்புகள் வாயை மூடிக் கொண்டு இருந்தன.

இன்னும் பல விடயங்களைக் கூறிக் கொண்டே போகலாம்... சுருக்கமாக கூற வேண்டும் என்றால்....இன்றைய கிருத்துவ சமயம் கிருத்துவின் சமயமே அல்ல. அது ஒரு அரசியல் நிறுவனமாகவே இருக்கின்றது.

ஒரு நிறுவனத்திற்கு என்ன என்ன விடயங்கள் முக்கியமாக வேண்டி இருக்கும்... பண பலம்...? ஆட் பலம்...? இவை இரண்டும் நிச்சயம் தேவைதானே. அவைகளைத்தான் அந்த நிறுவனமும் சேகரித்துக் கொண்டு இருக்கின்றது...தனது அரசியல் செல்வாக்கின் மூலம் பணத்தினை பெற்றுக் கொள்கின்றது... பின்னர் கிருத்துவின் கொள்கைகள் மூலமாகவும் பணத்தின் மூலமாகவும் மக்களிடம் சென்று ஆட் பலத்தினைப் பெற்றுக் கொண்டு தனது அரசியல் செல்வாக்கினை வளர்த்துக் கொள்கின்றது.

மற்றப்படி உண்மையான கிருத்துவின் மீதோ, அவர்தம் கருத்துக்களின் மீதோ அல்லது மக்களின் மீதோ மனித நேயத்தின் மீதோ அவ்வமைப்புகளுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதனைப் போன்று தோன்றவில்லை. அவ்வாறு இருந்து இருந்தால் எப்பொழுதோ தனது செல்வாக்கினை வைத்து உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சமம், உண்மையான செல்வம் கிருத்துவின் அருளே என்றக் கருத்துக்களைத் தான் மக்களின் மத்தியில் அது பரப்பி இருக்கும்...மனித நேயத்தினை விதைத்து இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்கையில் அது இன்று வரையிலும் அவ்வாறு எதையுமே செய்யாது வேடிக்கை மட்டுமே கண்டுக்கொண்டு இருக்கின்றது. அதற்கு ஒரே தேவை மனிதர்களின் எண்ணிக்கை... அதன் மூலம் அதிகாரம்...அதன் மூலம் பணம். அவ்வளவே.

அதனால் தான் இன்று இந்தியாவில் கிருத்துவர்களான பின்னும் 70% மக்கள் தலித் கிருத்துவர்களாகவே அறியப்படுகின்றனர். சில இடங்களில் அவர்கள் தேவாலயங்களுள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றது. இது என்னங்க கொடுமை... இயேசு கிருத்து தாழ்த்தப்பட்டவரா...இல்லை பிற்படுத்தப்பட்டவரா...அல்லது உயர்ந்த சாதியினறாங்க? அவர் அனைத்து மக்களும் சமம் அப்படின்னு சொன்னவர். அவ்வாறு இருக்க அவரை வழிபடுறவங்க மட்டும் பல பிரிவா இருப்பாங்களாம்...சீரிய கிருத்துவர்கள் உயர் சாதியினராம்...அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட கிருத்துவர்களாம்...இந்தப் பிரிவுகளைப் பத்தி விவிலியத்துல எங்கங்க சொல்லி இருக்கு? இதைப் பற்றி போப் விளக்குவாரா?

எனவே இன்றைய கிருத்துவ சமயம் என்பது மக்களை வைத்து அரசியல் லாபத்தினை பார்க்கும் ஒரு அரசியல் அமைப்பாகவே விளங்குகின்றது. அது உண்மையான ஆன்மீக சமயமாக இருந்து இருப்பீன், உலகை மக்கள் அனைவருக்கும் சமமான ஒன்றாக அன்பு நிறைந்து இருக்கும் ஒரு பூங்காவாக வைத்து இருந்து இருக்கும். ஆனால் வருந்தத்தக்க விடயமாக அவ்வாறு அது இல்லை.

சரி... கிருத்துவ சமயம் இன்று மக்களை அரசியல் நோக்கிற்காக பிடிக்கும் ஒரு சமயம் என்றுக் கண்டு இருக்கின்றோம்...இப்பொழுது 'மத மாற்றத்தில்' தொடர்புக் கொண்ட மற்ற சமயமான இந்துச் சமயத்தினை பற்றிப் பார்ப்போம்...!!!

தொடர்புடைய பதிவுகள்:
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
கிருத்துவத்தின் வரலாறு
கிருத்துவமும் திருநீறும்
விவிலியமும் சிவலிங்கமும்
இந்தியாவில் தோமா

சமசுகிருதம் இறைவன் உலகினில் வந்து மக்களுக்காக பலியான செய்தியினைத் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மொழி என்று நாம் சென்ற பதிவினில் கண்டு இருந்தோம். இறைவனே வந்து மக்களுக்காக பலியாகி விட்டதினால் தான் பலி வழிபாட்டினை உடைய சமயங்கள் அனைத்தும் பலியற்ற சமயங்களாக மாறின என்றும் நாம் கண்டு இருந்தோம்.


ஆனால் இங்கே தான் நண்பர்கள் சிலர் ஒரு மாற்றுக் கருத்தினை முன்வைக்கின்றனர். "சமணமும் பௌத்தமும் நீண்ட காலமாகவே இந்திய மண்ணில் நிலை பெற்று இருக்கின்றன. அதுவும் நீங்கள் கூறும் கி.பி முதல் நூற்றாண்டில் பௌத்தம் குறிப்பாக இந்தியா முழுவதுமே பரவி இருக்கின்றது. அந்த சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். அதாவது உயிரினை பலி இடாதீர்கள் என்பதே அந்தச் சமயங்களின் கொள்கை. அவ்வாறு இருக்கும் பொழுது ஏன் அந்தச் சமயங்களின் தாக்கத்தினால் பலி வழிபாடு நின்று இருக்கக் கூடாது. ஒரு தேசத்தில் மக்கள் மத்தியில் ஒரு கருத்து வலுப்பெற்றால் ஆள்பவர்கள் அக்கருத்தினை ஏற்றுக் கொண்டு மக்களை கவருவது என்பது காலம் காலமாக நடக்கும் செயல் தானே. அதனைப் போன்று தான் பௌத்தம் மக்கள் மத்தியில் பரவி இருந்த பொழுது மக்களைக் கவர இந்து சமயம் புத்தத்தின் சிலக் கருத்துக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டது. அப்படியே புத்தனையும் ஒரு அவதாரமாக ஆக்கிக் கொண்டது. அதனால் தான் பலி வழிபாட்டினை உடைய கடவுளர் அனைவரும் பலி இல்லாத கடவுளராக உருமாறி இருக்கின்றனர்." என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது. அதாவது பௌத்த சமயம் மற்றும் சமண சமயங்களின் தாக்கத்தினால் பலி வழிப்பாட்டு முறை பலி இல்லாத வழிபாட்டு முறையாக மாறி இருக்கின்றது என்பதே அவர்களின் கருத்து.


எளிதில் மறுக்க இயலா கருத்துக்கள் தான். காரணம் வரலாற்றில் நாம் அத்தகைய சம்பவங்களை கண்டு இருக்கின்றோம். காண்கின்றோம். காணவும் செய்வோம். மக்கள் அனைவரும் கிருத்துவத்தினை நம்புகின்றார்கள் என்பதனால் கான்சண்டீன் என்ற மன்னன் அரசியல் நோக்கிற்காக கிருத்துவத்தினை அரச சமயமாக ஏற்றுக் கொண்டான் என்பதனை நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம். எனவே தான் ஆதாயம் அடைவதற்காக சமயங்களின் கருத்துக்களை பயன்படுத்துவது என்பது நடக்க இயலாத ஒன்றல்ல. மேலும் புத்தன் இங்கே ஒரு அவதாரமாகவும் ஆக்கப்பட்டு இருக்கின்றான். இந்நிலையில் பௌத்தக் கருத்துக்களை அரசியல் காரணமாக சைவ வைணவ சமயங்கள் எடுத்துக்கொண்டன என்றக் கருத்தினை பலரும் மறுக்க மாட்டார்கள்.


ஆனால் நாம் மறுத்துத் தான் ஆக வேண்டி இருக்கின்றது.


சைவ வைணவ சமயங்களிலும் பௌத்த சமயங்களிலும் காணப்படும் ஒற்றுமைகள் அரசியல் காரணத்தினாலேயோ அல்லது மக்களை ஏமாற்றவோ உருவாக்கப்பட்ட ஒற்றுமைகள் அல்ல. மாறாக இறைவன் ஒருவனே என்பதனை நிலை நிறுத்தவே அத்தகைய ஒற்றுமைகள் இந்தச் சமயங்களில் காணப்படுகின்றன. இதுவே நமது கூற்று. ஆனால் வெறுமனவே கூறிவிட்டால் போதுமா....சான்றுகள் வேண்டாமா நமது கூற்றினை முன் நிறுத்துவதற்கு?... வேண்டும் தானே... எனவே இப்பொழுது நாம் நம்முடைய கருத்துக்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்றே காண வேண்டி இருக்கின்றது.


கி.பி முதல் நூற்றாண்டில் இந்தியா ஒரு மாபெரும் மாற்றத்தினை சந்தித்து இருக்கின்றது என்று நாம் கண்டு வருகின்றோம். ஏன் உலகமே ஒரு மாபெரும் மாற்றத்தினைக் கண்டு இருக்கின்றது என்று தான் நாம் கண்டு வருகின்றோம். சமயங்கள் புதிதாய் தோன்றி இருக்கின்றன. ஏற்கனவே இருந்த பழக்கங்கள் மாறி இருக்கின்றன. பலி வழிபாடு பலியற்ற வழிபாடாக மாறி இருக்கின்றது. "அட என்னங்க...அதான் பௌத்த சமண சமயங்களின் தாக்கத்தினால் தான் பலியற்ற வழிபாடு தோன்றி இருக்கின்றது என்று நாங்கள் கூறிக் கொண்டே இருக்கின்றோம்...அதையே திரும்ப திரும்ப சொல்றீங்களே" என்று என்னும் நண்பர்கள் சற்று பொறுத்துக்கொள்ளவும்...காரணம் அக்காலத்தில் பௌத்தமும் மாறி இருக்கின்றது. சமணமும் மாறி இருக்கின்றது.


ஆம்...கி.பி முதல் நூற்றாண்டில் பௌத்த சமயமும் மாற்றம் கண்டு இருக்கின்றது. சமண சமயமும் மாற்றம் கண்டு இருக்கின்றது. இப்பொழுது இந்த மாற்றங்களைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. முக்கியமாக புத்தத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.


பௌத்த சமயத்தினைப் பற்றி நமக்கு ஓரளவு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது. கௌதம புத்தரால் தொடங்கப்பெற்று, உலக மக்கள் அனைவருக்கும் அன்பினை போதிக்கும் ஒரு சமயம். போதி தர்மரின் சமயம் என்றால் இன்னும் நன்றாக மக்களைச் சென்று அடையும் என்றே எண்ணுகின்றேன். கிருத்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு சமயம், கி.பி முதல் நூற்றாண்டில் ஒரு மாபெரும் மாற்றத்தினைக் காணுகின்றது. புதிய கொள்கைகள் புத்தத்தில் முளைக்கின்றன. அந்நிலையில் பௌத்தம் இரு பிரிவுகளாக பிரிகின்றது. அவை,

௧) ஈனயான பௌத்தம் (Hinayana) அல்லது தேரவாத பௌத்தம் (Theravada) - பௌத்தத்தின் பழையக் கொள்கைகளைப் பெற்று விளங்குவது. சிறிய வாகனம் என்றே பொருள்படுவது. இந்த பிரிவான புத்தத்தின்படி எதுவுமே கடவுளால் படைக்கப்படவில்லை. தன் சொந்த முயற்சியினாலோ அல்லது மற்றவர்கள் வழிநடத்தப்பட்டோ தான் ஒருவன் அனைத்தையும் துறந்த நிலையினை அடைய முடியும்.

௨) மகாயான பௌத்தம் (Mahayana)- புதுக் கொள்கைகளுடன் விளங்கும் பௌத்தம். பெரிய வாகனம் என்றே பொருள்படுவது. இதன் படி அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டன. கடவுள் மனித வடிவம் எடுத்து இவ்வுலகிற்கு வந்தார், வந்து தன்னையே பலியாகக் கொடுத்து மனித குலத்திற்கு மீட்பு கொடுத்தார் என்பதே மகாயான புத்தத்தின் கொள்கைகள் ஆகும். நிற்க.

முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் தான் அல்லவா. பழைய பௌத்தமோ கடவுள் எதையுமே படைக்கவில்லை என்றே கூறுகின்றது...ஆனால் மகாயான பௌத்தமோ அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்றே கூறுகின்றது. மேலும் மகாயான பௌத்தம் இறைவன் உலகில் வந்து மனிதர்களுக்காக பலியான செய்தியினைக் கூறுகின்றது. இது கிருத்துவத்தின் கொள்கையல்லவா?

மேலும் ஆச்சர்யமாக புத்தத்தில் இந்தப் பிரிவுகள் கி.பி முதல் நூற்றாண்டிலேயே ஏற்படுகின்றன. சரி இருக்கட்டும். இப்பொழுது நாம் மகாயான புத்தத்தினைப் பற்றியே காண வேண்டி இருக்கின்றது. காரணம் அதில் புத்தம் மாறி இருக்கின்றது...புத்தர் மாறி இருக்கின்றார். அது ஏன் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.


நமது பயணத்தில் நாம் 'மூ ஒருமைக் கோட்பாட்டினைப்' பற்றி பல முறை கண்டு விட்டோம். ஆனால் இப்பொழுது அதனை நாம் மீண்டும் காண வேண்டி இருக்கின்றது. காரணம் மகாயான புத்தமும் மூ ஒருமைக் கோட்பாட்டினைப் பற்றி ஏதோ கூறுகின்றது... திரிகாயா (Trikaya) என்றப் பெயரில்.


திரிகாயா - புத்தரின் நிலையை விளக்கும் ஒரு கோட்பாடு. இதன் படி புத்தர் ஒருவரே ஆனால் மூன்று நிலையில் திகழ்கின்றார் என்றே பொருள்படுகின்றது. அந்த மூன்று நிலையானது என்னவெனில்,

தர்ம காயா (Dharma kaya) - அறத் திருமேனி
சம்போக காயா (Sambhoga kaya) - இன்பத் திருமேனி
நிர்மாண காயா (Nirmana Kaya) - படைக்கப்பட்ட திருமேனி

இவையே திரிகாயா கோட்பாட்டின் வடிவங்களாகும். ஆச்சர்யமாக இவை கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாட்டினை ஒத்தே இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது,
தர்ம காயா - தந்தையாகிய கடவுளையும்
சம்போக காயா - பரிசுத்த ஆவியையும்
நிர்மாண காயா - மனித உரு எடுத்து வந்த மைந்தனையும் குறிப்பதாகவே இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஈனயான புத்தத்தில் மனிதனாக அறியப்பட்ட புத்தர், கடவுளாக மகாயான புத்தத்தில் அறியப்படுகின்றார்.

"நானே அனைத்திற்கும் மேலான கடவுளாக இருக்கின்றேன். இவ்வுலகினை மீட்கும் படியாகத் தோன்றினேன்" என்று புத்தர் கூறுவதாக மகாயான நூல்கள் கூறுகின்றன என்றே சுசுமிதா பாண்டே (Sushmita Pande) அவர்கள் அவரது 'Birth Of Bhakthi in Indian Religions and art' நூலில் குறிப்பிடுகின்றார்.

மேலும் நாம் இப்பொழுது மகாயானம் கூறும் புத்தரின் கதையையும் கண்டு விடுவது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

அக்கதையின் படி,

"புத்தரின் தாயார் ஆன மாயா அவர்கள் நீண்ட நாட்கள் குழந்தை இன்றி வாடிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு கனவுக் காணுகின்றார். அக்கனவில் விண்ணில் இருந்து ஒரு வெள்ளை யானை அவரது இடுப்பின் வழியாக வயிற்றினுள் செல்வதாக உணருகின்றார். அவர்கள் நாட்டில் வெள்ளை யானை தெய்வத் தன்மை பொருந்தியதாக அறியப்படுவதால் ஏதோ ஒரு செய்தி அவளுக்கு சொல்லப்பட்டு இருப்பதை அவள் அறிகின்றாள். சிறிது நாளில் அவள் கருவும் உருகின்றாள். ஒரு நாள் குழந்தை பிறக்கும் காலம் நெருங்கியவுடன் அவரது தாய் வீட்டிற்கு மாயா பயணிக்கும் பொழுது வழியில் ரதம் ஒரு அழகிய தோட்டத்தில் நிற்கின்றது. அங்கேயே மாயா புத்தரையும் ஈன்று எடுக்கின்றார் (புத்தர் மாயாவின் இடுப்பின் வழியாகவே பிறந்தார் என்பது மகாயான நூல்களின் மூலம் நாம் அறியப்பெறும் ஒன்றாகும்). அவ்வாறு குழந்தை பிறந்த பொழுது வானில் பல அதிசயங்கள் தோன்றுகின்றன. பல அறிஞர்கள் வந்து 'உலகின் ரட்சகன்' மண்ணில் வந்து விட்டார் என்று வந்து வாழ்த்துகின்றனர்." நிற்க. எங்கேயோ கேள்விப்பட்ட கதைப் போன்றே இருக்கின்றது அல்லவா....சற்றே சிந்தித்துப் பார்த்தோம் என்றால் இக்கதை கிருத்துவின் கதையினை ஒத்தே இருப்பதனை அறிந்துக் கொள்ளலாம்.

கிருத்துவும் இயற்கைக்கு மீறிய பிறப்பினை உடையவராக அறியப்பெறுகின்றார்.

புத்தரும் இயற்கைக்கு மீறிய பிறப்பினை உடையவராக அறியப்பெறுகின்றார்.

மேலும் மகாயான புத்தத்தின் காலம் கிருத்துவின் காலத்திற்கு பிந்தைய காலமாக இருப்பதினால் கிருத்துவினைப் பற்றிய கருத்துக்களே புத்தரின் வாயிலாக கூறப்பட்டு உள்ளன என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. அதுவும் நாம் ஏற்கனவே இயேசுவின் இரண்டாம் வருகையினைப் பற்றியும் மைத்ரேய புத்தனைப் பற்றியும் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

"ஆதி புத்தர் மன்னுயிர்களின் பொருட்டு அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் இக்கொள்கை கிருத்துவக் கொள்கையை ஒத்தே உருவாகியுள்ளது" என்றே ஆய்வாளர் ஜெப்ரி பரிந்தர் (Jefferey Parrinder) அவர்கள் அவருடைய 'Avatar and Incarnation' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். நிற்க.

இப்பொழுது ஏன் இந்த ஒற்றுமைகள் என்று பார்த்தோம் என்றால் விடை தோமா என்றே கிடைக்கின்றது. கி.பி முதல் நூற்றாண்டில் கிருத்துவின் கருத்துக்களைச் சுமந்துக் கொண்டு இந்தியா வந்ததாக அறியப்படும் தோமா அன்று இந்தியாவில் பரவி இருந்த சமண புத்த சமயங்களின் சாலைகளையும் சென்று சந்தித்து கருத்துக்களை பகிர்ந்தார். அதன் விளைவே அதுவரை ஈனயான பௌத்தமாக மட்டுமே இருந்த பௌத்தம் கிருத்துவின் கருத்துக்களைப் பெற்று மகாயான பௌத்தமாக மாறுகின்றது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

"ஈனயானத்தினரோடு அயல் நாட்டினரின் தொடர்பு ஏற்பட்டதினால் மகாயானம் உருவாயிற்று" என்று ஆய்வாளர் கே.ரா.சுப்ரமணியன் (K.R.Subramanian) அவர்கள் அவரது 'The Origin of Saivism and its History in the Tamil Land' என்னும் நூலில் கூறுகின்றார்.

மேலும் ஈனயான புத்த நூல்கள் அனைத்தும் பாலி மொழியினிலேயே இருக்கின்றன. ஆனால் மகாயான புத்த நூல்களோ சமசுகிருதத்திலேயே இருக்கின்றன. அதாவது கிருத்துவ கருத்துக்களைச் சுமந்து நிற்கும் புத்தத்தின் நூல்கள் யாவும் சமசுகிருதத்திலேயே இருக்கின்றன. இது நாம் சென்ற பதிவில் கண்ட கருத்தினை வலுபெறச் செய்கின்றது அல்லவா. அதாவது சமசுகிருத மொழி என்ற மொழி இறைவன் மக்களுக்காக உயிர் நீத்தார் என்ற செய்தியினைப் பரப்ப அதாவது கிருத்துவின் கருத்துக்களைப் பரப்ப உருவாக்கப்பட்ட ஒரு மொழி என்பது மகாயான புத்த நூல்கள் அனைத்தும் சமசுகிருதத்தில் இருப்பதன் மூலமும் வலு பெறத்தானே செய்கின்றது.

"பாலி மொழியில் உள்ள புத்த வேத நூல்களின் கருத்துக்களுக்குப் புதியதாய், வேறானதாய் மகாயான வேத நூல்கள் உள்ளன" என்று ஆய்வாளர் ஜெப்ரி பரிந்தர் அவர்கள் அவருடைய 'Avatar and Incarnation' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

நாம் இதுவரைக் கண்ட தகவல்கள் மூலமாக கி.பி முதல் நூற்றாண்டில் புத்தமும் மாறி இருக்கின்றது. கிருத்துவின் கருத்துக்கள் அதனில் காணப்படுகின்றது. இந்நிலையில் அந்தச் சமயங்களின் தாக்கத்தினால் சைவ வைணவ சமயங்களில் பலி வழிபாடு பழியற்ற வழிபாடாக மாறி இருக்கின்றது என்றக் கருத்தினை நாம் மறு ஆய்வு செய்யத் தான் வேண்டி இருக்கின்றது. காரணம் அந்தச் சமயங்களே மாறி இருக்கின்றன.

மேலும் கிருத்துவத்தின் உண்மையான கொள்கையான "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்பதன் படியே புத்தர்களுக்கு புத்தனாகவே இயேசுவின் கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளமையால் மகாயான புத்தத்தில் இயேசுவின் பெயர் காணப்பெறவில்லை ஆனால் கருத்துக்கள் காணப்பெறுகின்றன.

கடவுளுக்கு என்றுமே பெயர் முக்கியமான ஒன்றல்ல... முக்கியம் கருத்துக்கள் தானே!!! அந்நிலையில் அக்காலத்தில் இந்தியாவில் பரவி இருந்த பல்வேறு மக்களின் நம்பிக்கைகளுக்கு ஏற்றார்ப் போல் புதிய கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளன. நிற்க.

இவ்வாறே சமண சமயமும் கி.பி முதல் நூற்றாண்டில் இரு பிரிவுகளாக மாறி உள்ளது.(திகம்பரச் சமணம் (Digambara) - கிருத்துவுக்கு முற்பட்ட காலத்தது...சுவேதாம்பரச் சமணம் (Svetambara) - கிருத்துவுக்கு பிற்பட்ட கால சமணம்) இவற்றைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஏனெனில் இப்பொழுது நமக்காக திருவள்ளுவரும், முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களும் தமிழகத்தின் ஒரு பகுதியான தொண்டை நாட்டில் காத்துக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் வளர்த்த அப்பெருமக்களை நாம் காக்க வைக்கலாமோ? அது தகுமோ? இல்லை தானே. எனவே இப்பொழுதே நாம் அவர்களைச் சென்றுக் காண வேண்டிய கடமை இருக்கின்றது.

காண்போம்...

பி.கு:
1)தொண்டை நாடு என்றால் என்ன என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்காக ஒரு 'சரியாகப் பொருத்துக'.(தமிழ் தேர்வுகளில் இரு மதிப்பெண்களுக்கு உரிய கேள்வி என்றே எண்ணிக் கொள்ளுங்கள்)

                                                                                  ஆ                                                                     
 
1) பாண்டிய நாடு                                     i) வேழம் உடைத்து
2) சோழ நாடு                                            ii) சான்றோர் உடைத்து
3) சேர நாடு                                               iii) சோறுடைத்து
4) தொண்டை நாடு                                iv) முத்துடைத்து

2) புத்தர் போதி மரத்தின் அடியில் ஞானம் அடைந்தார் என்றே நாம் அறிவோம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அறியாத விடயம் என்னவென்றால் போதி மரம் என்பது நமது அரச மரமே அன்றி வேறு மரம் அன்று. அரச மரத்தின் அடியில் புத்தர் ஞானம் அடைந்ததால் அந்த மரம் ஞான மரம் அல்லது போதி மரம் என்று வழங்கப்படலாயிற்று. எனவே அரச மரத்தின் அடியில் புத்தர் வீற்று இருப்பது போன்று படங்களும் சரி சிலைகளும் சரி அமைக்கப்பெற்றன. சரி இப்பொழுது ஒரு கேள்வி...

நம்மிடையே இன்று புகழோடு இருக்கும் கடவுள் ஒருவரும் அரசமரத்தின் அடியிலேயே இருக்கின்றார். யார் அவர்?

(விடையினை சரியாக அறிந்தால் நீங்களும் 'எங்கெங்கு காணினும் ஒற்றுமையடா...எங்கெங்கு காணினும் ஒற்றுமையடா' என்றுக் கூறுவீர்கள் என்றே எண்ணுகின்றேன்).

சமசுகிருதம்....ஒரு அருமையான மொழி!!!

"அட என்னங்க 'தமிழ் தமிழ்' என்றுக் கூறிக் கொண்டு தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் போராடுபவர்கள் எல்லாம் சமசுகிருதத்தினை எதிர்த்துக் கொண்டு இருக்கும் போது நீங்க சமசுகிருதம் அருமையான மொழி அப்படின்னு சொல்றீங்களே...கட்சி மாறிடீங்களா!!!" என்று நண்பர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். சமசுகிருதம் உண்மையிலையே அருமையான மொழி தான். அதில் ஆய்வாளர்களுக்கு மாற்றுக் கருத்துக்களே கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு காலத்தில் சமசுகிருதம் தமிழர்களால் வளர்க்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் திடீர் என்றோ அல்லது காரணம் ஏதும் இன்றியோ தோன்றிவிடவில்லை மாறாக இந்த மாற்றத்திற்கு அடிப்படையாக ஒரு மாபெரும் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலினைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஆனால் இப்பொழுது ஏன் சமசுகிருதத்தினை தமிழர்கள் அன்று வளர்த்தனர்...ஏன் பின்னர் எதிர்கின்றனர்...என்ற இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் சமசுகிருததினைக் காண வேண்டி இருக்கின்றது. காண்போம்...

நாம் ஏற்கனவே சமசுகிருதத்தின் காலம் என்ற பதிவில் சமசுகிருதத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே என்றுக் கண்டு இருந்தோம். நண்பர்கள் பலர் இக்கருத்தினை நிச்சயம் ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் காலம்காலமாக சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி என்றே நாம் நம்பிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...அவ்வாறு தான் நம்மிடையே கருத்துக்களும் பரப்பப்பட்டு இருக்கின்றன. சரி பிரச்சனை இல்லை...இப்பொழுது நாம் சமசுகிருதத்தினைப் பற்றி சற்று உன்னிப்பாகக் காணலாம். அதற்கு முதலில் நாம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

கி.பி காலத்தில் இந்தியாவில் எந்த எந்த மக்கள் எல்லாம் இருந்தார்கள் என்பதனை நாம் முன்னர் கண்ட பதிவுகளில் கண்டு இருக்கின்றோம்.
இதற்கு முன்னர் அந்தப் பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை முதலில் படித்து விட்டால் நலமாக இருக்கும். (ஆரியர் யார், ஆரியர் யார் - 2)

சரி படிச்சிட்டீங்களா...அருமை.

கி.பி முதல் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பல விதமான மக்கள் இருக்கின்றனர் என்று அந்தப் பதிவுகள் வாயிலாக நாம் அறிந்து இருக்கின்றோம். பெர்சியர்கள் இருக்கின்றனர், கிரேக்கர் இருக்கின்றனர்...ரோமர் இருக்கின்றனர்...பார்தியர்கள் இருக்கின்றனர்...குசானர்களும் இருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு மக்கள் இனத்தவர் இங்கே இருக்கின்றனர். பல்வேறு மக்கள் இனத்தவர் இருக்கின்றனர் என்றால் பல்வேறு மொழிகளும் இருக்க வேண்டும் தான் அல்லவா...


அவ்வாறே தான் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் இருக்கின்றன...தமிழ்,பாலி,அரமேயம்,பாரசீகம்(பெர்சியர்களின் மொழி),கிரேக்கம், இலத்தின், அர்த்தமாகதி போன்ற பல மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.இப்பொழுது ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் மேலே நாம் கண்ட அந்த அனைத்து மொழிச் சொற்களையும் சமசுகிருதத்தினில் நம்மால் காண முடிகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் திருவாளர் சார் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் சமசுகிருதமே உலகின் முதல் மொழியாக இருந்து இருக்கலாம் என்ற கருத்தை கூறுகின்றார். அன்று ஆரம்பித்தது தான் சமசுகிருதம் உலகின் முதல் மொழி என்றக் கோட்பாடு.

ஆனால் இந்தக் கருத்தினை சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம் எளிதானதொரு காரணம் தான். சமசுகிருத எழுத்துக்கள் கிடைக்கப் பெரும் முன்னரே மேலே கூறிய அந்த மற்ற மொழிகளுக்கான எழுத்துக்களும் சரி அவை பயன்பாட்டில் இந்த இன மக்களிடம் இருந்தன என்ற சான்றுகளும் சரி மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் சமசுகிருதத்தின் சான்றுகளோ பிற்காலத்திலேயே தான் கிட்டப் பெறுகின்றன. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட ஒரு மொழி என்றே பொருள் தருகின்றது. எனவே மேலே உள்ள அந்த மொழிகளை எல்லாம் இணைத்து ஏன் சமசுகிருதத்தினை மக்கள் உருவாக்கினர் என்று நாம் கருதக் கூடாது...? அந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து செம்மையாக தோன்றிய ஒரு புதிய மொழியாக ஏன் சமசுகிருதம் இருக்க கூடாது? இருக்கலாம் தானே.

அதாவது பல மொழிகள் இருக்கின்றன. அவை முன்னரே இருந்து இருப்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. திடீர் என்று ஒரு புதிய மொழி தென்படுகின்றது...அந்த மொழியில் முன்பு இருந்த மொழியின் எழுத்துக்கள் எல்லாம் தென்படுகின்றன. எனவே முன்பிருந்த மொழிகளை எல்லாம் தொகுத்து இந்த புதிய மொழி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் கருத முடிகின்றது தானே. அதுவும் அந்த புதிய மொழியின் அர்த்தமே செம்மையாக செய்யப்பட்டு இருக்கின்றது என்று இருக்கும் பொழுது நம்முடைய கருத்து வலுபெறத்தானே செய்கின்றது. ஆனால் சான்றுகள் இன்றி நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மேலே உள்ள ஆய்வாளர்களின் கூற்றுக்கு அவர்கள் தரும் சான்றுகள் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வேதங்களையும் வேதாந்தங்களையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. மேலும் சென்றப் பதிவுகளில் அவைகளுக்கும் விவிலியத்தில் இருக்கும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தோம். இப்பொழுது நாம் மேலும் எந்த புதிய விடயத்தினையும் காணும் முன்னர் சில பழைய விடயங்களை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது...

௧) ஒரு கிருத்துவக் கொள்கை -

அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.
 

௨) விவிலியத்தைத் தொகுத்ததில் உள்ள ஒரு கொள்கை -
பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது – எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது – எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.
புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக – கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது – கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.

௩) வேதங்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௪) வேதாந்தங்களுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௫) வேதத்தில் இறைவன் பலியாவது போன்று வரும் செய்திகள். நிற்க.
என்ன அனைத்து விடயங்களையும் ஒரு முறை நியாபகப்படுத்திக் கொண்டு விட்டீர்களா? நன்று. இனி நாம் சுத்தி வளைக்காது நேரே நம்முடைய கருத்துக்கு செல்லலாம்.

மேலே நாம் கண்ட கிருத்துவக் கொள்கையின் மூலம், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகளையும் தத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் அவைகளின் மூலமாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றே நாம் அறிகின்றோம்(இன்று அரசியல் காரணமாக அனைத்து சமயங்களின் கொள்கைகளுமே மாறி விட்டன) அதன் அடிப்படையிலேயே யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தினைப் பற்றிய தொகுதியான பழைய ஏற்பாட்டினை எபிரேய மொழியில் தொகுக்கின்றனர். பின்னர் அந்த நிலப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கிருத்துவின் கருத்துக்களைக் கூற அங்கே பரவலாகக் காணப்பட்ட கிரேக்க மொழியிலே தொகுக்கின்றனர்.

ஆனால் யூதர்களும் கிரேக்கர்களும் மட்டுமே அன்று உலகில் வாழ்ந்த மக்கள் அல்லவே...மற்ற இனத்தவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே. அவர்களுக்கென்று தனி மொழி இருக்குமே. எபிரேயத்தில் யூதர்களுக்கு சொல்லியாயிற்று...யூதர்களுக்கும் சரி கிரேக்கர்களுக்கும் கிரேக்கத்தின் வாயிலாகவே சொல்லியாயிற்று...அந்த நூல்களில் யூதர்களின் பழக்க வழக்கங்களும் சரி கிரேக்கர்களின் வரலாறும் சரி இருக்கின்றன... எனவே அந்த மக்கள் அந்த நூல்களின் உள்ள கருத்துக்களை அவர்களின் வாழ்வோடு இணைத்துக் கொள்வர். ஆனால் மற்ற மக்களுக்கு? அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துக் கொண்டு அவற்றின் வாயிலாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் தானே...அது தானே முறையாக இருக்கும். நிற்க.

இந்நிலையில் தான் நாம் இந்தியாவினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்வேறு மொழிகள் இருக்கின்றது. பல்வேறு மக்கள் பல்வேறு வரலாற்றோடு இருக்கின்றனர். பலி இடும் பழக்கம் அனைவரின் மத்தியிலும் ஒன்றினைப் போலவே இருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களைச் எவ்வாறுச் சொல்வது? எந்த மொழியினில் சொல்வது?

நியாயமான கேள்வி தானே. இக்கேள்விக்கு இரண்டு விதமாக தீர்வினைக் காண முடியும்.

ஒன்று - அனைத்து மொழிகளிலும் கருத்துக்களைப் படைத்து அனைவரிடமும் பரப்பலாம்.

இரண்டு - அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினைப் படைத்து அதன் மூலமாக கருத்துக்களைப் பரப்பலாம்.

இந்த இரண்டு தீர்வுகளில் அக்காலத்தில் இருந்த அறிஞர்கள் இரண்டாவது தீர்வினைத் தேர்ந்து எடுத்ததே இன்று சமசுகிருதம் என்ற மொழி நம்மிடையே இருப்பதற்கு காரணம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆம்...அவர்களின் கூற்றின் படி அக்காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கருத்தினைப் பரப்ப அன்று நிலைவிய மொழிகளான தமிழ்,பாலி,அர்த்தமாகதி,அரமேயம்,கிரேக்கம்,இலத்தின் போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி தான் சமசுகிருதம். அவ்வாறு அது உருவாக்கப்பட்டமையால் தான் அது 'செம்மையாகச் செய்யப்பட்டது' என்று பொருள் தருவதோடு அம்மொழி யாராலும் பேசப்பட்டதாக வரலாறும் கிட்டப்பெறாமல் இருக்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு மொழியினைக் கொண்டு இந்தியாவில் அன்று இருந்த மக்கள் அனைவருக்கும் இறைவனது கருத்துக்களைப் பரப்ப அன்று இருந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் தான் வேதங்களும் வேதாந்தங்களும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அன்று இந்தியாவில் இருந்த மக்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அனைவரிடமும் பல கடவுளர் வழிபாடும் பலி வழிபாடும் ஒன்றினைப் போலவே இருந்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்களாகட்டும் அல்லது பெர்சியர்களாகட்டும் பலி இருந்து தான் இருக்கின்றது. அப்படி இருக்கையில், "இறைவனுக்கு பலியிட்டு நாம் வணங்கிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...ஆனால் இறைவன் நமக்காக பலியாகி விட்டார்... எனவே நாம் பலியிடத் தேவை இல்லை...மாறாக நமக்காக பலியான இறைவனை வேண்டி அன்பினையே போதிப்போம்" என்ற கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் பரப்பத் தான் வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி தொகுக்கப்படுகின்றன.

அதனால் தான் வேதங்களில் பல கடவுளர் இருக்கின்றனர்...பலி இருக்கின்றது...முடிவில் இறைவன் பலியாவதைப் போல் வருகின்றது. வேதாந்தத்தில் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையும் பலி தேவை இல்லை என்ற கொள்கையும் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில் அன்று இருந்த அனைத்து மக்களுக்கும் பொதுவாக வேதங்களைத் தொகுத்தக் காரணத்தினால் தான் வேதங்களில் பெர்சியர்களின் கொள்கைகள், வரலாறு மற்றும் கிரேக்கர்களின் கொள்கைகள் மற்றும் இன்னும் பல கொள்கைகளும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு,

"வேதங்களுள் வழிப்படப்பட்ட இயற்கைப் பொருள்களுள் பழமையானது வானம். இதனுடைய பழம் பெயர் 'தியுஸ்' என்பது. இது கிரேக்க சுஸ் என்பதையும் இலத்தீனில் உள்ள ஜுபிட்டர்ஐயும் ஒத்ததாய் இருக்கின்றது. 'தியுஸ்' என்பது பிதர், தந்தை என்றும், படைப்பவர், ஆற்றல் மிக்கவர் என்றும் கூறப்படுகின்றன. 'தியுஸ் பிதர்' என்னும் வான் தந்தை அல்லது ஒளியின் தந்தை என்பது விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே என்பதையும் ஒளியின் தந்தையே என்பதையும் நினைவுறுத்துகின்றன" என்றே கூறுகின்றார் மாரிஸ் பிலிப்ஸ் என்னும் ஆய்வாளர் தனது 'The Teaching of the vedas' என்னும் நூலில்.

“ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).

மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது ‘ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley – The Myth of the Aryan Invasion of India)’ என்ற தனது புத்தகத்திலே ‘ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய – ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனவே இந்தியாவில் அன்று இருந்த பல்வேறு இனங்களுக்குரிய வரலாறு, பாடல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினைத் அவர்களுக்காகத் தொகுத்து அவர்களின் இறைவன் அவர்களுக்காக பலியானான் என்ற செய்தியை தெரிவித்து பின்னர் இறைவன் ஒருவன் தான் அவன் மக்களுக்காகவே இருப்பவன் என்ற கருத்தினைத் தெரிவிக்கவே வேதங்களும் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்றக் கொள்கைக்கு ஏதாக அம்மக்கள் அவர்களுள் கொண்டு இருந்த இறைப் பெயர்களைக் கொண்டே அம்மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு செல்கின்றனர். அதனால் தான் இயேசு என்ற பெயர் அங்கே காணப்படவில்லை.

காரணம் இறைவனின் பெயர் முக்கியமில்லை கருத்துக்களே முக்கியம் என்ற நிலையில் தான் அன்றைய அறிஞர்கள் கருத்துக்களைத் தொகுக்கின்றனர் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும் முதலில் இருக்கு வேதமே தொகுக்கப்பட்டது என்றும் பின்னரே மற்ற வேதங்கள் தொகுக்கப்பட்டன என்றும் அவர்கள் கூறுகின்றனர். சரி இருக்கட்டும்…!!!
 
இறைவன் உலகிற்கு வந்து மக்களுக்காக பலியானார் என்ற செய்தியினைப் பரப்பவே வேதங்களும் பின்னர் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன, அந்தப் பணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழி தான் சமசுகிருதம் என்ற இந்த கருத்தை நிச்சயம் ஏற்பது கடினமாகத் தான் இருக்கும். இந்நிலையில் இக்கருத்துக்களை வலுப்படுத்துமாறு வேறு சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
 
மேலும் பலி இல்லாத வழிபாட்டு முறைக்கு புத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்களின் தாக்கங்களும் காரணமாக இருக்கலாம் அல்லவா என்றக் கேள்வியும் இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றது அல்லவா…எனவே நாம் அவற்றையும் காணத் தான் வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் இப்பொழுது அந்த சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது…
 
காண்போம்…!!!
 
பின்குறிப்பு:
 
இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவை தமிழர்களால் இறைவன் பலியானதை தெரிவிக்க தொகுக்கப்பட்ட நூல்கள் என்று கூறுகின்றீர்களே அப்படி என்றால் அதில் வரும் நான்கு பிரிவுகள் எவ்வாறு வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருந்தது என்றால், வேதங்களில் இறைவன் மனிதன் நான்கு வர்ணமாக படைத்தான் என்று வரும் பகுதி இடைச் செருகல் என்றே அம்பேத்கர், மாக்ஸ் முல்லேர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்து இருக்கின்றன என்று. அக்காலம் தொடங்கி இந்திய நூல்களில் பல மாற்றங்களும் பல இடைச் செருகல்களும் நிகழ்ந்து இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

என்றோ எரிந்து முடிந்திருந்த
ரோமபுரி
இன்று மீண்டும் எரிகின்றது…எரிவது ரோமாபுரிக்கு புதிதல்ல…!!!
***********************************
தீ அணைக்க கரங்கள் தேடுகின்றேன்
பரிதாபமாய்
அனைத்து கரங்களிலும் பிடில் ஒன்று இசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது…!!!
*************************************
காலங்களில் மரித்த நீரோ
திரும்பி இருந்தான்
நீரோக்களாய்…நெருப்போடு இசையும் எரிக்க ஆரம்பித்தது…!!!
****************************************

சிறுக சிறுக கட்டியிருந்த கூடுகள்
மெதுவாய் எரிகின்றன
பறக்க வழியில்லாத பறவைகளின் சிறகுகளையும் சேர்த்து எரித்துக் கொண்டே…!!!
**********************************************
எரியும் சிறகுகள் அக்னிச் சிறகுகலாம்
என்றே சிலர் இசைத்தனர்
எரியும் சிறகுகளின் ரணம் புரியாது…!!!
*****************************************
நெருப்பு சிரித்துக் கொண்டே நெருங்கியது
தயாரானேன்
சிறகொடிந்த பறவையாய் வாழ்வதை விட…நெருப்பினை எதிர்த்த பறவையாய் வீழ்வது மேல் என்றே!!!
*********************************
ஒரு நொடி அச்சம் விடைப்பெற்றுக் கொள்ள
தோன்றுமாம்
யுகங்களை வெல்லும் வீரம்…!!!
******************************************
நெருப்பு சுடும் அவ்வளவு தானே…
சுடட்டும்
என்றே நிற்க… பரவியது நெருப்பு…!!!
******************************************
என் மேல் அல்ல…
மெதுவாய்…
என்னுள்…!!!
***********************************
நெருப்பின் கரங்கள் தீண்டிட
துயில் களைந்து எழுகின்றான்
என்னுள் ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்திருந்த வீரன் ஒருவன்!!!
***************************************************
ஒவ்வொரு பறவையுள்ளும் ஒவ்வொரு வீரன் எழ
எழுகின்றது ஒரு இனம்
என்றோ அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த விலங்குகளை தகர்த்து எறிந்துக் கொண்டே!!!
******************************************************
உலகின் எல்லையெங்கும் பயணித்த கால்கள்
சோம்பலைத் தொலைக்க
மீண்டும் ஆரம்பிக்கின்றது ஒரு வரலாற்றுப் பயணம்…!!!
*************************************************
மன்னிக்கவும்…இதில் நீரோக்களுக்கு இடம் இல்லை!!!
********

பி.கு:

இந்த இடத்தில் கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளையும் சேர்க்கலாம் போன்று தோன்றியதினால் சேர்கின்றேன்.
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு