கபாலீசுவரர் கோவில்...!!!

சைவ சமயத்தின் முதல் கோவில் என்ற பெருமையுடன் இன்று மயிலையில் நின்று கொண்டு இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கோவில். ஆனால் நாம் முந்தையப் பதிவுகளில் பார்த்தபடி இக்கோவில் ஆரம்பத்தில் இருந்தே மயிலையில் இருந்து இருக்கவில்லை மாறாக இன்றைய சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் தான் இக்கோவில் இருந்தது என்றும் கி.பி 16 நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்துகேசியர்களால் இந்த கோவில் இடிக்கப்பட்டு பின்னர் இன்று இருக்கும்  மயிலையில் மீண்டும் கட்டப்பட்டு உள்ளது என்று அறிகின்றோம்.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.

௧) ஏன் போர்துகீசியர்கள் இக்கோவிலை இடிக்க வேண்டும். அவர்களுக்கு தேவாலயம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என்றால் வேறு இடமா கிடைக்கவில்லை?

இக்கேள்விக்கு விடையாய் நமக்கு வரலாறு தரும் பதில் - தோமாவின் கல்லறை. ஆம். தோமாவின் கல்லறையின் மேல் கபாலீசுவரர் கோவில் கோவில் கட்டப்பட்டு இருந்தமையால், ஒரு கிருத்துவ துறவியின் கல்லறையின் மேலே வேறு சமயத்தினரின் கோவில் இருப்பதா என்று எண்ணியே அவர்கள் இக்கோவிலை இடித்து வேறு இடத்தில் கட்டுகின்றனர். பதிலாக அந்த கிருத்துவ துறவியினை சிறப்பிக்க ஒரு தேவாலயத்தினையும் கட்டுகின்றனர். அது தான் இன்றைய சாந்தோம் தேவாலயம்.

சரி...இப்பொழுது நம் முன் இருக்கும் விடயங்களை சற்று உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கின்றது.

கபாலீசுவரர் கோவில் - சைவ சமயத்தின் முதல் கோவில். இதற்கு முந்தைய கோவில்கள் என்று எதுவும் கிடையாது.
தோமா - இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர். கிருத்துவர்.

அப்படியிருக்க தோமாவை சிறப்பிக்க அவரின் கல்லறையின் மேல் முதல் சைவ சமயக் கோவிலை எழுப்பக் காரணம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கு விடையாய் நாம் முந்தையப் பதிவுகளில் தோமா கிருத்துவின் கருத்துக்களை இந்தியா கொண்டு வந்தார் என்றும் அக்கருத்துக்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றும் அதனால் அவரை சிறப்பிக்கவே அக்கோவில் கட்டப்பட்டது என்பதை கண்டோம். ஆனால் அக்கருத்தினை நாம் சான்றுகள் இன்றி நிரூபிக்க முடியாது. காரணம் வேதங்களில் இருந்தே சைவமும் வைணவமும் தோன்றின என்றக் கருத்துக்கள் இன்று மக்களிடையே பரவி இருக்கின்றது. எனவே இப்பொழுது நாம் நம்முடைய கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றுக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் ஒரு கருத்தினை தெளிவாக நாம் கண்டுக் கொள்வது நல்லது.

வேதங்களில் கோவில் வழிபாட்டு முறை பற்றி எந்தொரு தகவலும் இல்லை. கோவில் வழிபாட்டு முறை வேத முறை அல்ல.(வேதங்களைப் பற்றி நாம் மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்).

சரி. இப்பொழுது நாம் சான்றுகளைத் தேடுவோம். அதற்கு நாம் முதலில் இயேசுவினைக் காண வேண்டி இருக்கின்றது.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் எங்கு வைத்து சிலுவையில் அறையப்பட்டார் என்பதே. வரலாற்றின் படி இயேசு கல்வாரி அல்லது கல்கொதா என்ற மலையில் வைத்தே கொல்லப்படுகின்றார். இங்கே நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு விடயம் என்னவென்றால் கல்வாரி அல்லது கல்கொதா என்றால் 'கபாலத்தின் இடம்' அல்லது 'கபாலம் இருக்கும் இடம்' என்றே பொருள் தருவது தான். மேலும் விவிலியத்தின் படியும் இந்தச் செய்தியினை நாம் அறிகின்றோம்.

" கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது," - மத்தேயு 27 :33
"கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்." - லூக்கா 23 : 33

எனவே கபாலம் போன்றுக் காணப்படும் மலையில் இயேசு கிருத்து உயிர் துறந்தார் என்று நாம் அறிகின்றோம். ஒரு வேளை இந்த செய்தியின் மூலமாகவே முதல் சைவ சமயத்தின் கோவிலுக்கு கபாலீசுவரர் கோவில் என்று பெயர் வந்து இருக்கலாமா?

ம்ம்ம்... செல்லாது செல்லாது!!! கபாலம் அப்படின்னு பெயர் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதுமா...அத வச்சி என்னனாலும் சொல்லலாமா என்று சொல்லுகின்றீர்களா. சரி தான். மேலும் கபாலம் என்ற சொல் பொருந்தி வந்தாலும். ஈசுவரன் என்ற பெயர் இடிக்கின்றதே. இக்கோவில் இயேசுவினைக் குறிக்க கட்டப்பட்ட ஒன்று என்றால் ஈசுவரனுக்கும் இயேசுவுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. நல்ல வேளை நம்முடைய இந்த கேள்விக்கு நீண்ட காலம் பதிலினைத் தேட வைக்காது விடையினை அதோ நம்முடைய மகாகவி பாரதியார் அவர்களே கொண்டு வந்துக் கொண்டு இருக்கின்றார்.

"ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;" - என்று இயேசுவினைப் பற்றிய தனது கவிதையில் குறிப்பிடுகின்றார்.

அதாவது இயேசுவினைக் குறிக்க ஈசன் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கின்றார். ஏன் பாரதி அவ்வாறு குறிப்பிடுகின்றார் என்று கண்டால், எபிரேயத்தில் 'ஜோசுவா' என்று இருக்கும் பெயர் ஆங்கிலத்தில் 'ஜீசஸ்' என்றும் அரபியில் 'ஈசா' என்றும் ஒலித் திரிபு பெற்று இறுதியில் தமிழில் ஈசன் என்றும் இயேசு என்றும் ஒழி மாற்றம் பெற்று வந்து இருக்கின்றது என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எபிரேயம் - ஜோசுவா
ஆங்கிலம் - ஜீசஸ்
அரபி - ஈசா
தமிழ் - ஈசன்/இயேசு

அவர்கள் கூற்றுக்கு உறுதுணையாய் இருப்பது போல ஈசன் என்ற பெயர் கிருத்துவுக்கு முந்தைய காலத்தில் எங்கும் பயன்பட்டு இருக்கவில்லை.

எனவே ஈசன் என்ற சொல் இயேசுவினைக் குறிக்கும் என்றால் கபால மலையில் உயிர் துறந்து பின்னர் மக்களுக்காக உயிர்தெழுந்த வந்த இயேசுவினையும் (ஈசன்) சிறப்பித்து 'கபாலீசுவரன் கோவில்' கட்டப்பட்டது என்றும் நாம் கருத முடிகின்றது.

அட ஒரு பக்கத்து கதையை மட்டும் கேட்டு தீர்ப்பு எழுதுனா எப்படிங்க...இந்து சமயத்தின் கருத்தையும் கேளுங்கள்...அதையும் பார்த்து தானே நாம் முடிவு செய்ய முடியும் என்று கூறுகின்றீர்களா... சரி தான். இப்பொழுது இந்து சமயம் கூறும் கதையினைக் காண்போம்.

புராணங்களின் படி சிவனும் பார்வதியும் ஒன்றாய் இருந்த பொழுது அதை பிரமன் கண்டுக்கொண்டே இருந்தாராம். அதைக் கண்டு சிவன் சினமுற்று பிரமனின் ஒரு தலையைக் கொய்து விட்டாராம். அதற்கு பரிகாரமாக பிரமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூசைகள் செய்து சிவனின் கோபத்தை தனித்தாராம். இது தான் புராணத்து கதை. இன்னும் பல கதைகள் இருக்கின்றன. ஆனால் பிரமனின் கபாலத்தினை ஈசுவரன் கொய்ததால் கபாலீசுவரன் கோவில் என்று இக்கோவில் பெயர் பெற்றது என்பதே முக்கியமான புராணக் கதை. இப்பொழுது இந்தக் கதையினை ஆராய்வோம்.

சென்ற பதிவுகளில் பிரமன் பெருமாளின் மகன் என்பதனைக் கண்டோம். மேலும் சைவ வைணவத் தத்துவங்களின் படி சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான்.

நில்லுங்கள் நில்லுங்கள்...சிவனும் விஷ்ணுவும் ஒன்றா... என்று கேட்பவர்களுக்கு இதோ முதல் ஆழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரின் பாடல்.

"தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து."

இப்பாடல் மூலம் சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான் என்பது தெளிவாகின்றது. எனவே இந்நிலையில் பிரமன் சிவனுக்கும் மகனாகின்றார். எனவே புராணக் கதையின் படி தன் தந்தை தன் தாயுடன் இருப்பதை பிரமன் காண்பதாக வருகின்றது (இப்படி எல்லாம் இருந்தா பெரியார் என்ன சின்ன குழந்தை கூட பிரமனை கல் எடுத்து அடிக்கும்...அடிக்கணும்). இப்பொழுது இது கடவுளுக்கு பொருந்திய செயலா என்று நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. நிச்சயம் இல்லை. இக்கதை இறைவனுக்கு சிறப்பினை அளிப்பதாக இல்லை. ஆனால் இக்கதை முதலில் இவ்வாறு இருக்க வில்லை என்றும் பின்னரே மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் கருத்துப்படி தந்தை இறைவன் தன்னுடைய மகனின் சாவுக்கு காரணமாக இருக்கின்றார். ஆனால் மகனோ இறந்தாலும் மீண்டும் உயிர்தெழுந்து வருகின்றார். இதை உணர்த்தவே பிரமன் சிவன் அவர்களை வைத்து இந்தக் கதை கூறப்பட்டதாகவும். பின்னர் கதைகள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதை சற்று விரிவாக பார்ப்போம்.

பிரமன் - சிவனின் பிள்ளை. இவர் படைப்புக் கடவுளாக கூறப்பட்டு உள்ளார். உயிர்களின் படைப்புக்கு இவரே காரணம். ஆனால் அதிசயத்தக்க விதத்தில் இவ்விடயம் கிருத்துவுடனும் ஒத்து போகின்றது.

விவிலியத்தில் படைப்புக்கு காரணமாக இயேசுவே கூறப்பட்டு உள்ளார்.

"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" - யோவான் 1 : 3

ஆய்வாளர்களின் கருத்துப்படி இயேசுவினாலையே படைப்புகள் தோன்றின என்பதை உணர்த்தவே பிரமன் என்ற உருவகம் தோற்றுவிக்கப்பட்டது. சரி இப்பொழுது மீண்டும் கதைக்கு வருவோம்.

சிவன் தன் மகனாகிய பிரமனின் தலையை கொய்கின்றார். பொதுவாக ஒருவரின் தலையைக் கொய்தால் அவர் மரணம் அடைவார். ஆனால் இங்கே பிரமன் மரணம் அடையவில்லை. காரணம் அவருக்கு வேறு தலைகள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே அவர் உயிர் பிழைத்து இருக்கின்றார்.

எனவே சிவனால் மரணமடைய வேண்டிய பிரமன் மரணம் அடைய வேண்டிய நிலை வந்தும் உயிர் கொண்டு இருக்கின்றான். அதாவது சாவை வென்று இருக்கின்றான். இயேசுவைப் போல....இயேசுவாக!!! இந்தக் கதை தான் பிற்காலத்தில் பலவாறாக திரிபு படுத்தப்பட்டு உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே மரணம் அடைய வேண்டிய கடவுள் தன் தந்தையின் அருளால் மரணத்தை வென்று உயிர்தெழுந்த விடயத்தை சிறப்பிக்கவே கபாலீசுவரர் கோவில் கட்டப்பட்டது என்ற கருத்தினையே இந்துக் புராணமும் கூறுகின்றதை நாம் அறிகின்றோம். சுருக்கமாக கூற வேண்டின் இயேசுவின் கதையையே பிரமனை வைத்து கூறப்பட்டு இருக்கும் புராணமும் கூறுகின்றது.

எனவே இயேசுவின் கருத்துக்களை இந்தியாவுக்கு கொண்டு வந்த தோமாவின் கல்லறையில் அவரைச் சிறப்பிக்க அவரின் செய்திகளின் அடிப்படையில் அமைந்த சைவ சமயத்தின் முதல் கோவிலை கட்டுகின்றனர் மக்கள்.

ஆனால் காலப்போக்கில் சைவ வைணவ அர்த்தங்களும் மாற்றப்பட, கிருத்துவமும் மாற்றப்படுகின்றது. எனவே இரண்டும் தங்களின் ஒற்றுமைகளை மறந்து இரு வேறு சமயங்களாக தோன்றுகின்றன. இந்நிலையில் தான் போர்துகீசியர்கள் கபாலீசுவரர் கோவிலை இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தை கட்டுகின்றனர். இதுவே ஆய்வாளர்களின் கருத்து.

சரி சைவ சமயத்தின் முதல் கோவிலின் வரலாற்றினைக் கண்டாயிற்று. பிரமனையும் கண்டாயிற்று. எவ்வாறு அவை இயேசுவுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் நாம் கண்டு இருக்கோம். ஆனால் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கலாம். காரணம் வேதங்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றே நமக்கு கூறப்பட்டு உள்ளது. நாமும் அதைத் தான் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களை சற்று கண்டு கொண்டு வந்துவிட வேண்டி இருக்கின்றது.

சைவ வைணவ சமயங்கள் என்றால் என்ன? சைவ வைணவ சமயங்களுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா?

காண்போம்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28

பிள்ளையார்...!!!

சிவன் பார்வதியின் மூத்தப் பிள்ளை. இறைவனின் பிள்ளை ஆன இவர் தமிழால் மரியாதைக்குரிய 'ஆர்' விகுதிப் பெற்று பிள்ளையார் ஆகின்றார்.

அதாவது தமிழில் எவ்வாறு 'ன்' என்பது ஆணைக் குறிக்கும் விகுதியாக இருக்கின்றதோ அதே போல் 'ஆர்' விகுதி என்பது ஒருவரை மரியாதையாக குறிக்க பயன்படுகின்றது...

தந்தை + ஆர் - தந்தையார்.
தாய் + ஆர் - தாயார்.

அதேப்போல் இறைவனின் பிள்ளை என்ற சிறப்பு காரணத்தால் அந்தப் பிள்ளைக்கு 'ஆர்' விகுதி வழங்கப்பட்டு அவர் பிள்ளையார் ஆகின்றார்.

பிள்ளை + ஆர் - பிள்ளையார்.

சரி இலக்கணம் போதும். இனி நாம் விநாயகரின் கதைக்கு வருவோம்.

புராணங்களின்படி விநாயகர் பார்வதியால் அவர் உடலில் இருந்த அழுக்கினைக் கொண்டு மனித உருவில் உருவாக்கப்படுகின்றார். பின்னர் ஒரு கட்டத்தில் சிவனை இவர் பார்வதியின் பொருட்டு எதிர்க்க வேண்டி வர சிவனால் தலை வெட்டப்பட்டு வீழ்கின்றார். அதனைக் கண்டு வருந்திய பார்வதி கடுஞ் சினம் கொண்டு தேவர்களுக்கு எதிராக எழ, பார்வதியின் சினத்தினை நீக்க ஒரு யானையின் தலையை விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு மீண்டும் சிவன் உயிர் தருகின்றார். மேலும் இனி என்னை நோக்கி வருபவர் யாராக இருந்தாலும் உன்னைக் கண்ட பின் தான் என்னைக் காண முடியும் என்ற வரமும் விநாயகருக்கு சிவன் வழங்குவதாக புராணம் நீள்கின்றது.நிற்க.

மேலே உள்ள கதையின் படி தனது தந்தையின் கையாலேயே மரணமுற்று பின் மீண்டும் தன் தந்தையாலேயே உயிர் பெறுகின்றார் பிள்ளையார். அதாவது அவரின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவரின் தந்தையினாலேயே நிகழ்கின்றது. இப்பொழுது நாம் இதைப் போன்ற கதைகள் அதாவது ஒரு கடவுள் இறந்து மீண்டும் உயிர்தெழுந்த கதை உலகில் வேறு எங்காவாது இருக்கின்றதா என்று நோக்கினால், ஆம் இருக்கின்றது என்பதே பதிலாக வருகின்றது.

அந்தக் கதையின் நாயகர் - இயேசு கிருத்து. இவரும் இவரின் தந்தையின் ஆணைப்படியே பலியாகி பின் மீண்டும் தன் தந்தையின் அருளாலேயே உயிர் பெற்று எழுவதாக இவரின் கதை நீள்கின்றது.

அதாவது இரண்டு பேருமே கடவுளின் பிள்ளைகள். இருவருமே தங்களது தந்தையால் மரணத்தை தழுவுகிறார்கள். பின்னர் மீண்டும் தங்கள் தந்தையின் அருளாலே உயிர்த்து எழுகின்றார்கள்.

ம்ம்ம்...ஆச்சர்யமான ஒற்றுமை தான். ஆனால் இருவரும் ஒருவர் தான் என்று நாம் கருத இந்த ஒரு ஒற்றுமை நிச்சயம் பற்றாது. எனவே வேறு ஏதாவது ஆதாரங்கள்...ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்று நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் தான் அவ்வை பாட்டியார் நம்முடைய துணைக்கு வருகின்றார் அவரின் விநாயகர் அகவல் நூலினை ஏந்திக் கொண்டு.

இதோ அவரின் நூலில் உள்ள ஒரு பாடல்.

"குருவடி வாகிக் குவலயந் தன்னில்
  திருவடி வைத்துத் திறமிது பொருளென
  வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
  கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே"


இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை 'குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்' என்று கூறுகின்றார். ஆச்சர்யமாக இதுவும் இயேசு கிருத்துவின் கதையோடு பொருந்துகின்றது.

இயேசுவின் கதைப்படி அவர் மக்களின் பாவத்தினைப் போக்க இவ்வுலகில் பிறந்து பின்னர் அவர்களுக்காக உயிர் துறந்து மக்களின் பாவத்தினை களைந்தார். மேலே அவ்வையாரும் இதைப் போன்ற ஒரு விடயத்தையே கூறுகின்றார். அதுவும் கோடு ஆயுதத்தின் மூலம் மக்களின் பாவத்தினை போக்கினார் என்றும் கூறி இருக்கின்றார். அது என்ன கோடு ஆயுதம்... ஆய்வாளர்களின் கூற்றினைக் காண்போம்.


சிலுவையில் அறைந்து மக்களைக் கொள்வது என்பது ரோமர்களின் பழக்கம். இப்பழக்கம் இந்தியாவில் கிடையாது.
சிலுவைகளில் மக்களைப் பலியிடும் பழக்கம் இந்தியாவில் என்றுமே இருந்தது கிடையாது. எனவே சிலுவையைப் பற்றி இங்கே மக்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்ப்பு கிடையாது. எனவே தான் சிலுவையை (அது கோடுகளின் வடிவமாகத் தானே இருக்கின்றது) கோடு ஆயுதம் என்றே அவ்வை குறித்து இருக்கின்றார் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இயேசு மக்களின் பாவம் நீக்க சிலுவையில் பலியானதையே விநாயகர் அகவலில் அவ்வையார் அவ்வாறு விநாயகரை வைத்து குறிப்பிட்டு இருக்கின்றார் என்று நாம் கருத முடிகின்றது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ம்ம்ம்... இரண்டு கதைகளும் ஒத்து தான் போகின்றன. ஆனால் இதோடு நாம் நின்று விடாத படி மேலும் சில விடயங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

உதாரணத்துக்கு விநாயகரின் புராணக் கதையிலே அவர் பார்வதியின் உடலில் இருக்கும் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. உலகினையே படைத்த அன்னையானவள் அவளின் அன்புப் புதல்வனை அவள் உடலின் அழுக்கினைக் கொண்டா உருவாக்குவாள்? வேறு வழியே பார்வதி தேவிக்கு இருந்து இருக்காதா என்ன என்ற கேள்வி இயல்பாக எழும் தானே. ஆச்சர்யமாக இந்தக் கேள்விக்கு பதில் விவிலியத்தில் இருந்து வருகின்றது.

"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்." - II கொரியந்தியர் (5 : 21)


மேலே உள்ள வரியின்படி இறைவன் மனிதர்கள் யாவரும் நேர்மையுள்ளவர்களாக மாற ஒரு பாவமும் அறியாத அவரின் பிள்ளையை மனிதர்களுக்காக பாவம் ஆக்கினார் என்று இருக்கின்றது. அதாவது மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் அவர்களுக்காக இறைவனின் மகன் சுமப்பதாக விவிலியம் விவரிக்கின்றது. இதையே தான் நம்முடைய புராணக் கதையும் மறைமுகமாக பிள்ளையார் பார்வதியால் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறுகின்றது.

மேலும் விவிலியத்தில் 'என் வழியாகவே இறைவனை அடையலாம்' என்று இயேசு கூறுவதாக வருகின்றது. இங்கு நம் புராணங்களிலும் விநாயகரை வழிப்பட்ட பின்பு தான் தன்னிடம் வர முடியும் என்று சிவன் கூறியதாக இருக்கின்றது.

இவ்வளவு ஒற்றுமைகள் எதேச்சையாக தோன்றி இருக்குமா? அல்லது உண்மையிலையே நம்முடைய புராணக் கதைகளுக்கு உள் அர்த்தங்கள் வேறு இருக்கின்றனவா... நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது.

சரி...விநாயகர் தான் இயேசு என்றால் பின்னர் எதற்காக யானைத் தலையுடன் அவர் காட்சி அளிக்கின்றார் என்ற கேள்வியும் இங்கே எழும்பலாம். இந்தக் கேள்விக்கான விடைக்கும் நாம் மீண்டும் இயேசுவை காண வேண்டி இருக்கின்றது.

இயேசு உயிர் துறக்கும் வரை இருந்த நிலை வேறு. சாதாரண மனிதனாக அவர் இருந்தார்.
உயிர் பெற்று எழுந்தப் பின்பு இருந்த நிலை வேறு. தெய்வத் தன்மையுடன் அவர் திகழ்கின்றார். இந்த இரண்டுத் தன்மைகளுக்கும் வேற்றுமைகள் உண்டு.

அந்த வேற்றுமைகளை வெளிப்படுத்தவே,

உயிருடன் இருந்த விநாயகர் - மனித வடிவாகவும்
இறந்து உயிர்தெழுந்த பின் - யானைத் தலையுடனும் இருக்கின்றார்.

அதாவது இறக்கும் முன் அவர் இருந்த நிலை வேறு...இறந்து மீண்டும் உயிர் பெற்ற பின்பு அவர் இருந்த நிலை வேறு. இதனையே புராணக் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் விலகிச் சென்று உள்ளனர். ஆனால் காலப்போக்கில் அந்தப் புராணக் கதைகளுக்கு வேறு அர்த்தங்கள் கற்ப்பிக்கப்பட்டு அவை நிலை தாழ்த்தப்பட்டன என்பது சோகமான வரலாறு.

சரி அந்த கதை இப்பொழுது நமக்குத் தேவை இல்லை. இப்பொழுது நாம் இயேசுவே விநாயகராக நம்முடைய மண்ணில் குறிக்கப்பட்டு இருக்கலாம் என்று பார்த்தோம். இறைவனின் ஒரு பிள்ளையை பார்த்தாயிற்று. இன்னும் மூன்று பேர் மீதம் உள்ளனர். காண்போம்.

முருகா... குமரா ... வேலவா !!!!

தொடரும்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |

பி.கு:

விநாயகரைக் குறித்த தகவல்கள் எந்த சங்க இலக்கியங்களிலும் சரி இயேசுவுக்கு முந்தைய கால நூல்களிலும் சரி கிடைக்கப் படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. மேலும் இதுவரை கி.பி 5 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் விநாயகரின் சிலைகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

"செல்வனின் தங்கை நன்றாக நடனமாடினான்.
செல்வன் அவன் தங்கையின் நடனத்தை மகிழ்ச்சியுடன் கண்டு கொண்டு இருந்தாள்."

மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியான வாக்கியங்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.

காரணம்... அந்த வாக்கியங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான விகுதிகள் தவறாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

விகுதிகளா...அப்படி என்றால் என்ன? என்பவர்களுக்காக விகுதிகளை சற்று பார்த்து விடுவோம்.

விகுதி என்பது ஒரு சொல்லின் பொருளை தெளிவாக குறிக்க அச்சொல்லின் இறுதியில் சேர்க்கப்படும் ஒரு சொல். உதா - 'ன்' 'ள்' 'ஆர்'

தமிழ் இலக்கணத்தின் படி,
ஆண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ன்'. எடு: அவன், வந்தான்,நடந்தான்,முருகன்...
பெண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ள்'. எடு: அவள்,ஓடினாள்,ஆடினாள்...

ஆணுக்குரிய விகுதி பெண்ணுக்கு வாராது. அதேப் போல் பெண்ணுக்குரிய விகுதியும் ஆணுக்கு வாராது. எப்பொழுது இந்த விகுதிகள் மாறுகின்றனவோ அப்பொழுது அச்சொல் தவறான ஒன்றாக மாறுகின்றது. இந்நிலையில் தான் நாம் மேலே உள்ள வாக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

செல்வனின் தங்கை, 'ன்' என்ற ஆண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றாள்.
செல்வனோ, 'ள்' என்ற பெண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றான்.
ஒரு ஆண் விகுதி பெண்ணுக்கும், பெண் விகுதி ஆணுக்கும் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இவை தமிழ் இலக்கண முறைப்படி தவறான வாக்கியங்களாகும்.

சரி இப்பொழுது நாம் இதன் அடிப்படையில் நம்முடைய கதைக்கு வருவோம்.

அம்மன் - பெண் தெய்வம். ஆனால் ஆண்களுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.
பெருமாள் - ஆண் தெய்வம். ஆனால் பெண்ணுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.

ஏன் இந்த வேறுபாடு? விகுதிகளை மாற்றிக் கூறுவது தவறென்று அறியாத சிலர் தெரியாது இந்த பெயர்களை இட்டு விட்டார்களா? அல்லது அவர்கள் இந்தப் பெயர்களை இட்டதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதனை நாம் இப்பொழுது ஆராய்ந்து பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சென்ற பதிவில் பார்த்த சில விடயங்களை மீண்டும் காண வேண்டி இருக்கின்றது.

சென்ற பதிவில் நாம் கண்டபடி,

சைவம் என்பது ---> சிவன், அம்மன், முருகன் பிள்ளையார் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.
வைணவம் என்பது ---> சிவன் , பெருமாள், பிரமன் ஐயப்பன் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.

இங்கே நாம் நோக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,

சிவனுக்கு அம்மன் மூலமாக இரு குழந்தைகள் இருக்கின்றனர். அதேப்போல் பெருமாளின் மூலமாகவும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் எவ்வளவு தான் புராணக் கதைகளில் தேடினாலும் பெருமாளுக்கு என்று தனியே குழந்தைகள் இருப்பதாக செய்திகள் இல்லை. சைவ வைணவ சமயங்களில் காணப்படும் பிள்ளைக் கடவுள்கள் அனைவரும் தந்தை சிவனாகவே காணப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் தான் நாம் கிருத்துவ தத்துவத்தையும் காண வேண்டி இருக்கின்றது. சென்ற பதிவில் கண்டவாறு கிருத்துவம் இறைவனை 'தந்தை நிலை', 'பரிசுத்த ஆவி நிலை' மற்றும் 'பிள்ளை நிலை' என்ற மூன்று நிலைகளில் வைத்தே கூறுகின்றது.

இப்பொழுது ஒரு கேள்வி.

மூன்று பேர்களைக் கொண்ட ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்த குடும்பத்தில் தந்தை இருக்கின்றார்...பிள்ளையும் இருக்கின்றார்...அப்படி என்றால் இடையில் விடப்பட்டு உள்ள அந்த இன்னொருவர் யார்?

அன்னை என்பதே விடையாக இருக்கும் தானே.

எனவே இதன் அடிப்படையில் 'தந்தை தாய் மகன்' என்பதே இயல்பான உறவு என்றுக் கொண்டு 'தூய ஆவி' என்பது ஒரு பெண் தான் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் விவிலியத்தின்படி மரியாளுக்கு தூய ஆவியின் மூலம் குழந்தை உருவாவதால், ஒரு ஆணின் மூலமே ஒரு பெண்ணுக்கு குழந்தை உண்டாக முடியும் என்ற கருத்தின் படி தூய ஆவியை ஆணாக வேறு சிலர் கருதுகின்றனர்.

ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வேறுபாடுகளே சைவ வைணவப் சமயங்களின் பிரிவின் அடிப்படைக் காரணமாகும்.

அதாவது தூய ஆவியை பெண்ணாக கருதி 'தந்தை - தாய் - பிள்ளை (சிவன் -அம்மன்-முருகன்/பிள்ளையார்)' என்ற உறவின் அடிப்படையில் சைவம் வளருகின்றது. அதற்கு மாறாக தூய ஆவியை ஆணாகக் கொண்டு 'தந்தை -தந்தை-பிள்ளை(சிவன்-பெருமாள்-பிரமன்/ஐயப்பன்)' என்ற உறவின் அடிப்படையில் வைணவம் வளருகின்றது.

இங்கே தூய ஆவி ஆணா இல்லை பெண்ணா என்று தெளிவாக கூற முடியாததால் அவ்விரு குணங்களுமே தூய ஆவிக்கு உண்டு என்றுக் கருதி,

அம்மன் - பெண் கடவுள் தான் ஆனால் ஆண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ன்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும்
பெருமாள் - ஆண் கடவுள் தான் ஆனால் பெண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ள்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அம்மனும் பெருமாளும் வேறுவேறு அல்லர் என்பதை கூற நமது புராணக் கதைகளில் இருவரும் அண்ணன் தங்கையாக குறிக்கப்பட்டு உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

 

மேலும் சைவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி அம்மன் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் என்று வழங்கப்படுகின்றது. அதேப்போல் வைணவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி பெருமாள் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அரிஅரன் என்று வழங்கப்படுகின்றது. இவ்விரண்டு வடிவத்திலும் வலப் பகுதி ஒன்றாகவே கூறப்பட்டு இருப்பதும் இடப்பகுதி மட்டும் மாற்றிக் கூறப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்க விடயங்களாகும்.

அதேப்போல் கிருத்துவத்தில் தூய ஆவி கடவுளின் ஆற்றல் என்று வழங்கப் பெறுவதும் இங்கே அம்மன் 'சக்தி' என்று வழங்கப் பெறுவதும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய ஒரு விடயமாகவும் உள்ளது.

சரி...பெருமாளையும் அம்மனையும் பற்றி சற்று கண்டாயிற்று. இப்பொழுது இன்னொரு கேள்விக்கு பதில் நாம் காண வேண்டி இருக்கின்றது.

கிருத்துவின் கருத்துக்கள் தான் நம் மண்ணிலும் வளர்ந்து உள்ளன என்றால் ஒரு குழந்தை வழிப்பாட்டு முறை தானே இங்கே இருக்க வேண்டும். கிருத்துவக் கொள்கைகள் படி இறைவனுக்கு ஒரு குழந்தை தானே. அனால் இங்கேயோ பிள்ளையார், முருகன், பிரமன் மற்றும் ஐயப்பன் என்று நால்வர் இருக்கின்றார்களே?... இதற்கு என்ன விளக்கம் என்று கேட்கின்றீர்களா....

நல்ல கேள்வி தான்...இதற்குரிய விடையையும் நாம் தேட வேண்டி இருக்கின்றது...தேடுவோம்...!!!

வினைத் தீர்க்கும் விநாயகர் நமக்காக முதலில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

தொடரும்...!!!



முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |


மூவொரு கடவுள் கோட்பாடு...!!!

கிருத்துவ சமயத்தின் அடிப்படை தத்துவம். இதன்படி ஒரே கடவுள் மூன்று விதமான தன்மைகளில் தோன்றுகின்றார் என்று கிருத்துவம் கூறுகின்றது. இதனை சற்று விரிவாக பார்க்கலாம்.

கிருத்துவத்தின் படி ஒரே கடவுள் மூன்று வகையான நிலையில் இருக்கின்றார். அதாவது...

தந்தை நிலை - பரம பிதா.
பரிசுத்த ஆவி நிலை.
மகன் நிலை - இயேசு.

இதுவே கிருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.

மேலும் இறைவன் மனித வடிவில் மனிதர்களுக்காக வந்தார் என்ற அவதாரக் கோட்பாடும், பாவ மன்னிப்பு கோட்பாடும் கிருத்துவத்தின் மற்ற முக்கிய தத்துவங்களாகும். நிற்க.

இப்பொழுது நாம் கிருத்துவின் கருத்துக்கள் தான் சைவ வைணவ சமயங்களாக மாறி இருக்கின்றன என்று கூறினால் அச்சமயங்களில் கிருத்துவத்தின் அடிப்படை தத்துவங்களான மூவொருக் கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட வில்லை என்றால் சைவ வைணவ சமயங்கள் கிருத்துவ கருத்துக்களின் அடிப்படையில் எழுந்தவை என்ற கருத்து பொய்த்து விடும். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களின் கோட்பாடுகளை கண்டு விட வேண்டிய தேவை இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் மூவொரு கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் இருக்கின்றனவா...காண்போம்!!!

சைவ வைணவ சமயங்களைப் பற்றி நாம் அறிந்துக் கொள்வதற்கு முன்னர் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் சைவம் மற்றும் வைணவம் என்ற மதங்கள் இரண்டாக பிரிந்து இருக்கவில்லை. இரண்டும் இணைந்து சைவம் என்றே இருந்தன. பிற்காலத்தில் தான் வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து செல்கின்றது. இது வரலாறு.

சரி இப்பொழுது அந்த சமயங்களைப் பற்றி நாம் காண்போம்.

சைவம் - சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டது.
வைணவம் - பெருமாளை முழுமுதல் கடவுளாக கொண்டது.

இவ்விரு சமயங்களிலும் அவதாரக் கோட்பாடுகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வைணவத்தில் பெருமாளின் அவதாரங்களாக பத்து அவதாரங்கள் குறிக்கப்பட்டு உள்ளன. அதிலும் மனித உரு எடுத்து வந்த அவதாரங்களும் இருக்கின்றன.

அதே போல் சைவத்திலும் முருகன் மனித உரு எடுத்து உலகிற்கு வந்ததாக அவதாரக் கதைகளும் உள்ளன.

ஆனால் மீண்டும் இந்த அவதாரக் கதைகளுக்கான சான்றுகள் வேதங்களிலோ அல்லது கிருத்துக்கு முற்பட்ட கால இலக்கியங்களிலோ காணப்படவில்லை. சில கதைகள் உதாரணமாக இராமாயணக் கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்டாலும் அதற்குரிய சான்றுகள் இது வரை கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் தனி ஒரு பதிவில் காண்போம்.நிற்க.

இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களில் மூவொருமை கடவுள் கோட்பாடு இருக்கின்றதா என்று நாம் காண்போம்.

நாம் ஏற்கனவே மேலே கண்டுள்ளோம் சைவம் என்பது சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும் வைணவம் என்பது திருமாலை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும். ஆனால் அந்த சமயங்கள் அவர்கள் இருவரை மட்டும் வணங்குவதோடு நிற்கவில்லை. அந்த சமயங்கள் அவர்களின் குடும்பத்தினை வழிபடுவதாகவும் இருக்கின்றன.
சைவ மதம் சிவனை வழிபடுவதோடு நில்லாமல் அம்மனையும் முருகன்/விநாயகரையும் சேர்த்து வழிபடும் ஒரு மதமாக இருக்கின்றது.

அதாவது,

தந்தை - சிவன்
தாய் - அம்மன்
பிள்ளை - முருகன்/பிள்ளையார்.

அதேப்போல் வைணவமும் பெருமாளின் குடும்பத்தினை வழிபடும் ஒரு சமயமாக இருக்கின்றது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிவன் வைணவத்திலும் வணங்கப்படுகின்றார்.

அதாவது வைணவத்தின் படி வணங்கப்படும் கடவுள்கள்,

சிவன்
திருமால்
பிரமன்.

இவர்களைத் தான் நாம் மும்மூர்த்திகள் என்று வழங்குகின்றோம். அதாவது சிவன் - அழிக்கும் கடவுள்.
திருமால் - காக்கும் கடவுள்.
பிரமன் - படைப்புக் கடவுள் என்றே நாம் அறிந்து இருக்கின்றோம்.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் படைப்புக் கடவுளாக கூறப்படும் பிரமன் - திருமாலின் மகனாக கூறப்பட்டுள்ளார்.

திருமால் கனவு காண்பதாகவும் அதிலிருந்து பிரமன் தோன்றியதாகவும் நமது புராணக் கதைகள் நீள்கின்றன. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக குறிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக தொப்புள் கொடி உறவு என்பது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள உறவு தான். அவ்வாறு இருக்க ஆணான பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு ஏன் தொப்புள் கொடி உறவாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

மேலும் புராணக் கதைகளில் விஷ்ணு பல இடங்களில் பெண் உருவம் எடுப்பதாக கதைகள் வருகின்றன. மேலும் சிவனும் பெருமாளும் இணைந்து ஐயப்பன் தோன்றுவதாகவும் நமது கதைகள் இருக்கின்றன. அதாவது

தந்தை - சிவன்
தாய் - பெருமாள்
பிள்ளை - ஐயப்பன்.

ஆனால் இந்தக் கதைகள் அனைத்திலும் சிவன் ஆணாகவே குறிக்கப்பட்டு உள்ளார். பெருமாள் ஆணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஏன் இந்த வேறுபாடு என்றும் இந்தக் கதைகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமோ என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

மேலும் நாம் இதுவரை கண்ட விடயங்கள் அனைத்திலும் தந்தை தாய் மகன் ஆகிய மூன்று கடவுள்களை வழிபடும் பழக்கம் இருப்பதை கண்டு இருக்கின்றோம். இந்த பழக்கங்கள் கிருத்துவம் கூறும் மூவொருக் கடவுள் கோட்பாட்டினை ஒத்து இருப்பதையும் நாம் காணுகின்றோம். இந்நிலையில் கிருத்துவம் கூறும் கோட்பாடும் சைவ வைணவ சமயங்களில் காணப்படும் கோட்பாடுகளும் ஒன்றா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு நாம் முதலில் அம்மனையும் பெருமாளையும் பற்றி காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...புராணங்கள் அழைக்கின்றன.

தொடரும்....!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |  

பி.கு:

இவை ஆராய்ச்சி முயற்சியே. சில புத்தகங்களில் நான் படித்த தகவல்களை வைத்தே எழுதப்படும் ஒரு தொடர் முயற்சியாகும். எனவே ஏதாவது தகவல்களில் தவறு இருக்கின்றது என்று தாங்கள் கருதினாலும் சரி மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் சரி தயைக் கூர்ந்து தெரிவியுங்கள். உங்களின் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படுகின்றன.

கி.பி 52...!!!

தூய தோமா இந்தியா வந்ததாக சொல்லப்படும் காலம்.

கிருத்துவின் கருத்துக்களைப் பரப்புவதற்காக கடல் கடந்து தமிழகத்தின் மேற்கு பகுதியை வந்தடைந்து, பின்னர் இந்திய தேசம் முழுவதும் தனது பணியை மேற்கொண்டு இறுதியில் தமிழகத்தில் மயிலையில் சிலரால் கி.பி 72 ஆம் ஆண்டில் கொல்லப்படுவதாக நீள்கிறது இவரது வரலாறு. இது தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுபவர்கள் கூறும் கூற்று.

இதனை மறுப்பவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.

"ரோம மன்னன் ஆகசுடசு காலத்து நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன சரி...இந்தியாவின் வட பகுதியில் கொண்டாபோரசு என்ற அரசன் ஆண்டான். அதுவும் சரி. ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுவது எவ்வாறு சரியாகும். அசோகர் பௌத்தத்தை பரப்பினார் என்றால் அதற்கு சான்றாய் இந்தியா முழுவதும் பௌத்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அதைப் போலவே தோமாவும் கிருத்துவின் கருத்துக்களைப் பரப்ப வந்தார் என்றால் கிருத்துவின் கருத்துக்கள் இங்கே காணப்பட வேண்டுமே. அவ்வாறுக் காணப்பட்டால் தானே அவர் வந்தார்...சேவை செய்தார் என்றுக் கூற முடியும். அவ்வாறு சான்றுகள் இல்லாமல் எவ்வாறு தோமா இந்தியா வந்தார் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?" என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது.

நியாயமான கேள்விதான். தோமா இந்தியா வந்து இருந்தால் கிருத்துவின் கருத்துக்களும் அவருடனே வந்து இருக்க வேண்டுமே. இந்தியாவினில் பரவி இருக்க வேண்டுமே. அவ்வாறு இருந்தால் தானே தோமா இந்தியா வந்தார் என்றுக் கூற முடியும்.

எனவே இப்பொழுது நாம் இந்தியாவில் தோமா கொண்டு வந்த கிருத்துவின் கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை காண வேண்டி இருக்கின்றது.

முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தபடி சிலுவை கிருத்துவர்களின் சின்னம் அல்ல. மாறாக திருநீறே அவர்களின் சின்னம் என்று நாம் கண்டு இருந்தோம்.

இந்நிலையில் சில கேள்விகள் இயல்பாகவே எழலாம்...!

இந்துக்களும் திருநீற்றினை இடுகின்றார்கள்...அதே முறை தான் கிருத்துவத்திலும் இருக்கின்றது. ஏன் இந்த ஒற்றுமை? ஒரு வேளை இரண்டு மதங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? இல்லையெனில் எதேச்சையாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் உருவான இரு மதங்களில் ஒரே மாதிரியான பழக்கம் தற்செயலாக உருவாகி இருக்குமோ?

இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நமது இலக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கிருத்துக்கு முற்பட்ட காலத்து தமிழ் இலக்கியங்களிலும் சரி, சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று பெரும்பாலானோரால் நம்பப்படும் வேதங்களிலும் சரி திருநீற்றினைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. கிருத்துக்கு பிற்பட்ட தமிழ் இலக்கியங்களில் திருநீற்றினைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன ஆனால் கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் இது வரை திருநீரைக் குறிக்கும் செய்திகள் காணப்படவில்லை.

அதைப்போலவே சிவலிங்கத்துடன் நந்தி இணைந்து இருப்பது போல் உள்ள வழிப்பாட்டு முறையும் கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களிலும் சரி வேதங்களிலும் சரி காணப்படவில்லை. ஆனால் அத்தகைய வழிபாட்டு முறை விவிலியத்தில் குறிக்கப்பட்டு இருப்பதை நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

சிவலிங்கம்/கல் வழிபாட்டு முறை கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களில் பல கிடைத்தாலும் நந்தி/கன்றுக்குட்டி உடன் இருப்பது போன்ற வழிபாட்டு முறை கிருத்துக்கு பிந்தைய கால இலக்கியங்களிலேயே காணப்படுகின்றது.

இங்கே தான் நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது. விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள வழிபாட்டு முறைகள் இன்று சைவ வைணவ சமயங்களில் பழக்கத்தில் உள்ளன. ஆனால் சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று கூறப்படும் வேதங்களிலோ அந்த வழிப்பாட்டு முறைகளைப் பற்றிய குறிப்புகளே இல்லை, மேலும் கிருத்துவுக்கு முற்பட்ட கால இலக்கியங்களில் அந்த பழக்க வழக்கங்கள் இந்தியாவினால் நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் இது வரை கிட்டவில்லை.

அப்படி இருக்கையில் விவிலியத்தில் காணப்படும் அந்த பழக்க வழக்கங்கள் எவ்வாறு இந்திய சமயங்களில் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் ஆராயும் பொழுது தான் அந்த இணைப்பு அவர்களின் கண்ணுக்கு புலப்படுகின்றது.

அந்த இணைப்பு தான் - தோமா!!!

ஆம். தோமா இந்தியாவுக்கு வந்தார் என்று கூறப்படும் காலத்திற்கு பின்னரே மேலே நாம் கண்ட வழிபாட்டு முறைகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலே நமக்கு கிடைக்க பெறுகின்றன. அவை சைவ இலக்கியங்களாக இருக்கட்டும் வைணவ இலக்கியங்களாக இருக்கட்டும் அனைத்தும் தோமாவின் காலத்திற்கு பின்னரே உருவானவைகளாகவே இருக்கின்றன.

எனவே தோமா கொண்டு வந்த கருத்துக்களின் படி தான் மேலே நாம் கண்ட வழிபாட்டு பழக்க வழக்கங்கள் இந்தியாவினுள் தோற்றம் பெற்றன என்று நாம் கருத முடிகின்றது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதாவது அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் சிவலிங்க/கல் வழிபாடு தெற்கில் இருந்து சிந்து சமவெளியை அடைந்து பின்னர் மேற்கே சென்று யூதர்களின் பழக்கமாகவும் மாறுகின்றது. பின்னர் அதேப் பழக்கம் கிருத்துவுக்கு பின்னால் தனது மாறுபட்ட நிலையில் தோமாவின் வாயிலாக இந்தியா வந்தடைகின்றது...!

அவ்வாறு வந்த கருத்துக்களும் பழக்க வழக்கங்களும் தான் சைவ வைணவ சமயங்களாக வளர்ந்தன என்றும் அவர்கள் கருதுகின்றனர். நிற்க.

வில்லங்கமான கூற்று தான்....இல்லையா!!! ஆனால் இந்தக் கூற்றினை முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை ஏனெனில் அனைத்து சைவ வைணவ இலக்கியங்களும் சரி அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் சரி எல்லோரும் தோமா இந்தியாவுக்கு வந்த காலத்திற்கு பின்னரே தான் தோன்றி இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் என வழங்கப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அனைவருமே தோமா மறைந்ததாக கூறப்படும் மயிலையை சுற்றி உள்ள இடத்தில இருந்தே தோன்றி உள்ளனர். மேலும் திருவள்ளுவரும் அதே காலத்தில் திருமயிலையில் தோன்றி இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் ஒற்றுமைகளாக இருக்கலாம் அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக இருக்கலாம். அதனை அறிந்துக் கொள்ள நாம் கிருத்துவ மதத்தின் கொள்கையையும் காண வேண்டும்...சைவ வைணவ மதங்களின் கொள்கைகளையும் காண வேண்டும்.

காண்போம்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |  

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு