திருநீறு!!!

என்று சொன்னாலே அது சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கும் ஒரு சொல்லாகவே இன்று இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் சின்னமும் திருநீறு தான் என்று நாம் எவ்வாறுக் கூறுகின்றோம் என்பதனை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் பழைய ஏற்பாட்டினை மீண்டும் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் திருநீறு என்றால் என்ன என்பதனை சற்று சுருக்கமாக பார்த்து விடுவோம்.

திருநீறு என்பது சாம்பலே என்றும், அதனை நெற்றியில் இறைவனை நினைத்து வைத்துக் கொள்வது வழக்கம் என்பதனை நாம் அறிந்து இருப்போம். சாதாரண சாம்பல் இறைவனை நினைத்து இடப் படுவதால் 'திரு' என்னும் சிறப்பு விகுதி பெற்று திருநீறு என வழங்கப்படுகின்றது. சரி இப்பொழுது இப்பழக்கம் விவிலியத்தில் கூறப்பட்டு உள்ளதா என்பதனை நாம் காண்போம்.

பழைய ஏற்பாட்டினில் பல இடங்களில் சாம்பலை மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் மனம் திரும்புதலின் அடையாளமாகவும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்ற விடயம்  பின்வரும் பழைய ஏற்பாட்டுச் செய்திகள் மூலமாக நமக்கு தெரிய வருகின்றது.

"தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினான்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலை மீது கைவைத்து அழுதுக் கொண்டே சென்றாள்." - சாமுவேல் II - 13 -19 

"மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும், புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்."  - எசுதர் 4 : 3 

"இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்." - யோனா 3 : 6 

மேலும் பழைய ஏற்பாட்டினில் திருநீற்றினை எவ்வாறு செய்கின்றனர் என்பதனை பற்றியக் குறிப்புகளும் உள்ளன. அதன் படி

ஒரு பழுதற்ற செங்கிடாரி (ஆடு) ஒன்றினை பலியிட்டு அதன் தோல் தசை இரத்தம் ஆகியவற்றினை சாணியுடன் சுட்டு எரித்து, அவ்வாறு எரிப்பதனால் கிடைக்கும் சாம்பலை ஒரு தூய்மையான இடத்தில் வைக்க வேண்டும். அந்த சாம்பல் மக்களின் பாவத்தினை போக்குவதற்கு பயன் படும். (எண்ணாகமம் : 18 - 1 : 9 )

இந்தச் செய்திகள் வாயிலாக சாம்பலின் பயன்பாடு யூதர்கள் மத்தியில் இருந்தது என்பதனை நாம் அறிய வருகின்றோம். ஆனால் இது வரை நாம் கண்ட செய்திகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டினைச் சார்ந்தவை. இயேசு கிருத்து வருவதற்கு முன்னர் நிலவிய பழக்கங்கள். எனவே இப்பொழுது நம் முன் ஒரு கேள்வி வருகின்றது. இயேசு கிருத்து வந்ததிற்கு பின்னரும் சாம்பலின் பயன்பாடு மக்களிடத்து இருந்து இருக்கின்றதா? புதிய ஏற்பாடு அதனை விளக்குகின்றதா?

ஆம்!!! புதிய ஏற்பாட்டிலும் சாம்பலின் பயன்பாடு வருகின்றது. புதிய ஏற்பாட்டிலும் சாம்பல் மனம் திரும்புதலின் அடையாளமாகவும் பாவத்தினை நீக்கும் சின்னமாகவும் பயன்பட்டு இருக்கின்றது. இதனை பின் வரும் வரிகள் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

"கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்." - மத்தேயு 11 : 21

"வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்." - எபிரெயர் 9 : 13

இந்தச் செய்திகள் மூலமாக சாம்பலினை பயன்படுத்தும் பழக்கம் யூத மக்களிடம் கிருத்துவுக்கு முன்பும் கிருத்துவுக்கு பின்னாலும் இருந்து இருப்பதனை நாம் அறிய முடிகின்றது.

மேலும் அவர்கள் அந்த சாம்பலினை தங்களின் நெற்றியில் இட்டார்கள் என்பதனை விளக்கும் செய்தியும் விவிலியத்தில் இருக்கின்றது.

"ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்." - விடுதலைப் பயணம் 13 : 9 (பழைய ஏற்பாடு)

"மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்." - திருவெளிப்பாடு 14 : 1 (புதிய ஏற்பாடு)

மேற்கண்ட செய்திகள் மூலமாக சாம்பல் அல்லது திருநீற்றின் பயன்பாடு விவிலியத்தில் விளக்கப்பட்டு உள்ளது  என்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்.

ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருக்கலாம். இவை அனைத்தும் வேறு அர்த்தங்கள் தரலாம் என்ற எண்ணமும் இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு தகவல்.

சாம்பலின் பயன்பாடு இன்றும் கிருத்துவர்களின் மத்தியில் இருக்கின்றது. இறைவனை நினைத்து அவர்கள் தங்கள் நெற்றியில் இன்றும் திருநீற்றினை அணிந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். திருநீற்றின் வடிவம் மாறி இருக்கின்றது. ஆனால் அர்த்தம் மாறவில்லை. அதனை அவர்கள் ஒரு புனித நாளாகவே கொண்டாடுகின்றனர்.

இயேசு கிருத்துவின் மரணம் மற்றும் உயிர்த்து எழுதலினை நினைவுக் கூர்ந்து அதற்கென்று நோன்பு மேற்கொள்ளும் காலத்தின் தொடக்க நாளிலேயே தான் அவர்கள் திருநீற்றினை அணிந்துக் கொண்டு சிறப்பிக்கின்றனர்.

அந்த நாள் தான் சாம்பல் புதன்கிழமை என்று வழங்கப்பெறும் திருநீற்றுத் திருநாள் ஆகும். அந்நாளில் தான் கிருத்துவர்கள் இன்றும் அவர்கள் நெற்றியில் திருநீற்றினை சிலுவை வடிவில் அணிந்துக் கொண்டு வழிபடுகின்றனர்.

ஆனால் நாம் சென்ற பதிவில் பார்த்த செய்திகளின் படி சிலுவை என்பது கிருத்துவர்களின் சின்னம் அல்ல என்றும் கி.பி நான்காம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் தான் அரசியல் காரணமாக சிலுவை கிருத்துவர்களின் சின்னமாக ஆக்கப் படுகின்றது என்பதனையும் நாம் அறிந்துக் கொண்டோம். எனவே சாம்பல் புதன்கிழமை என்று வழங்கப்பெறும் நாளில் வெறும் திருநீறே முதலில் கிருத்துவர்கள் பூசிக் கொண்டு இருந்து இருக்க வேண்டும் என்றும் பின்னர் காலத்தில் சிலுவையினை சின்னமாக கொண்டு வந்த பொழுது வெறும் திருநீறு, சிலுவை வடிவமாக மாறி இருக்க வேண்டும் என்றும் நாம் கருத முடிகின்றது.

எனவே கிருத்துவ மக்கள் திருநீற்றினையே தங்களின் சின்னமாக கொண்டு இருந்தனர் என்று நாம் அறிய முடிகின்றது. அவ்வாறே அவர்கள் பயன்படுத்திய அந்த சின்னத்தினைக் கொண்டே தூய தோமாவும் தமிழகம் வருகின்றார்.

சரி கிருத்துவத்தில் திருநீறு பயன் பட்டு இருக்கின்றது சரி... ஆனால் சைவ வைணவ சமயங்களிலும் திருநீறு பயன் படுகின்றதே... ஏன் இந்த ஒற்றுமை என்ற கேள்வி இங்கே இயல்பாகவே எழும்.

அந்தக் கேள்விக்கும் மேலும் பல ஒற்றுமைகளுக்கும் விடை அளிக்க தோமா காத்துக் கொண்டு இருக்கின்றார்.

தோமாவை சந்திப்போம்...!!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23

5 கருத்துகள்:

அருமை

"தோமா - கிருத்துவர்.
கபாலீஸ்வரர் கோவில் - சைவ கோவில்.

இவ்வாறு இருக்க தூய தோமாவை சிறப்பித்து ஒரு சைவ கோவில் கட்டப்பட்டது எதனால்?...."

இக்கேள்வவிக்கு பதில் எங்கே?

//இவ்வாறு இருக்க தூய தோமாவை சிறப்பித்து ஒரு சைவ கோவில் கட்டப்பட்டது எதனால்?...."

இக்கேள்வவிக்கு பதில் எங்கே?//

varum nanbare... innum iru pathivukalil ikkelvikkaana vidai varum!!!

//"தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினான்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலை மீது கைவைத்து அழுதுக் கொண்டே சென்றாள்." - சாமுவேல் II - 13 -19

"மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும், புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்." - எசுதர் 4 : 3

"இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்." - யோனா 3 : 6 //

நீங்கள் கூறிய மேலே உள்ள வரிகளில் மக்கள் சாம்பல்(திருநீறு) பூசிக்கொண்டு இறைவனை வழிபட்டதாக உள்ளதா?

சாம்பல்(திருநீறு) பூசிக்கொண்டு இறைவனை வழிபட்டதாக இல்லை மாறாக சாம்பல் பூசிக்கொண்டார்கள், சாம்பலில் உட்கார்ந்தார்கள் என்றே வருகிறது.

சாம்பல்(திருநீறு) என்பது சின்னமல்ல எப்பொழுதாவது பூசிக்கொள்ளும் ஒரு பொருள் அவ்வளவே.

சாதாரணமாக சின்னமென்பது எப்பொழுதாவது இருக்ககூடியது அல்ல, எப்பொழுதும் இருக்க வேண்டும். உதாரணமாக இந்து மதத்தில் சைவர்கள் திருநீறினை நெற்றியில் படுக்க வைத்து இடுவார்கள். அதை பார்த்த உடனே கூறலாம் இவர் சைவர் என்று... அதே போல் திருநீறினை நெற்றியில் நிற்க வைத்து இடுபவர்களை வைணவர்கள் என்று பார்த்த உடனே கூறலாம். இந்த சைவ-வைணவர் நெற்றியில் திருநீறு இடும் முறையை சின்னமென்று சொல்லலாம். ஏனென்றால் இவர்கள் இறைவனை வழிபடும் நேரத்தில் கண்டிப்பாக இதில் எதாவது ஒரு முறையில் நெற்றியில் திருநீற்றினை இடுவார்கள். எனவே அந்தந்த சின்னத்தை வைத்து இவர்கள் வைணவர்களா? சைவர்களா? என்று கூறிவிடலாம்.

ஆனால் பைபிளில் திருநீற்றினை தினமும் அல்லது தொடர்ந்து உபயோகிப்பதாகவும் இல்லை மற்றும் இறைவனை வழிபடும் நேரத்திலும் உபயோகிப்பதாக இல்லை பிறகு எவ்வாறு திருநீற்றினை கிறிஸ்துவர்களின் சின்னம் என்று கூற முடியும்?

அதெல்லாம் உபயோகிச்சு இருக்காங்க

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு