கிருத்துவம்...!!!

இன்று உலகில் உள்ள மக்களில் அதிகப் பேரால் பின்பற்றக் கூடிய ஒரு மதம். இன்று அதன் பலம், செல்வாக்கு போன்றவற்றினை எண்ணிப் பார்த்தால் வியக்க மட்டுமே செய்ய முடியும். அப்பேர்ப்பட்ட அரசியல் செல்வாக்கினையும் பண பலத்தினையும் ஆன்மீகத்தோடு கொண்டு விளங்கும் ஒரு அமைப்பாக கிருத்துவம் இருக்கின்றது. ஆனால் ஆரம்பக் காலம் முதலே கிருத்துவம் இவ்வாறு பலம் பொருந்திய அமைப்பாக இருந்ததா என்றால் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும். ஆரம்பக் காலத்தில் கிருத்துவத்தின் வளர்ச்சி சீரான ஒன்றாக இருக்கவில்லை.

ஆரம்பக்கால கிருத்துவர்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள்....ரோமர்களின் வாயிலாக. கிருத்துவினைக் கொன்ற ரோமர்கள் அடுத்து கிருத்துவினை பின்பற்றியவர்களை குறி வைக்க ஆரம்பித்தனர்.

"ஐயா வணக்கங்கள்...இயேசுவின் கருத்துக்களை தாங்கள் போதிக்கின்றீர்களா...நல்லது. உங்களின் சேவை முடியும் நேரம் வந்து விட்டது. அதோ உங்கள் இயேசு அலைகின்றார். சென்று வாருங்கள்" என்றவாறே இயேசுவினை பின்பற்றியவர்களை தேடித் தேடி கொன்றுக் கொண்டு இருந்தனர் ரோமர்கள் மற்றும் யூதர்கள்.

இயேசுவின் கருத்துக்களை பரப்ப உலகம் முழுவதும் சென்ற அவரின் சீடர்களில் பலர் ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொரு இடத்தில் கொல்லப்படுகின்றனர். அவர்களுள் சிலர் சிலுவையிலும் அறையப்படுகின்றனர்.

இந்நிலையில்...அதாவது கிருத்துவின் கருத்துக்களும் பரப்பப்பட வேண்டும்...ஆனால் ரோமர்களும் அதனைக் கண்டுக்கொள்ளக் கூடாது என்ற நிலையில் சில ரகசியக் குறியீடுகளை உருவாக்குகின்றனர் அன்றைய கிருத்துவர்கள். அப்படிப்பட்ட ஒரு குறியீடு தான் மீன் சின்னம்.

வரலாற்றுக் கூற்றுகளின் படி கிருத்துவர்கள் ரோமர்களால் வேட்டையாடப் பட்ட பொழுது அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள இந்த மீன் சின்னத்தினையே பயன்படுத்தினர். ஒருவர் மற்றொருவர் கிருத்துவரா என்பதனை அறிந்துக் கொள்ள மீனின் மேல்பகுதி போன்ற தோற்றமுள்ள அரை வட்டத்தினை வரைவார். அதனைக் கண்ட மற்றொருவர் அவரும் கிருத்துவராக இருக்கும் பட்சத்தில் மீனின் அடிப்பகுதியை போன்ற அரை வட்டத்தினை வரைந்து சின்னத்தினை முற்றுப் பெற செய்வர். இவ்வாறே கிருத்துவர்கள் ஆரம்பக் காலத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுக் கொண்டனர்.

மேலும் மீன் சின்னம் பல இடங்களில் கிருத்துவினையும் கிருத்துவர்களையும் குறிக்க பயன்பட்டு இருக்கின்றது.

எடுத்துக்காட்டுக்கு... கிரேக்கத்தில் மீனைக் குறிக்கும் 'இக்தைசு' என்னும் சொல் 'இயேசு கிருத்து கடவுளின் மகன் - மீட்பர்' என்னும் பொருள் தரும் வண்ணம் பயன்பட்டு இருக்கின்றது.

ரோமர்களின் சுரங்கக் கல்லறைகளில் இயேசு கிருத்து மீன் சின்னத்தில் குறிக்கப்பட்டு உள்ளார்.

இன்னும் பல இடங்களில் கிருத்துவுக்கு பின் பட்ட காலத்தில் மீன் சின்னம் கிருத்துவர்களை குறிக்க பயன்பட்டு இருக்கின்றது. நிற்க.

இங்கே நாம் இந்த மீன் சின்னத்தைத் சற்று உற்று கவனிக்க வேண்டியிருக்கின்றது. வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே இந்த சின்னம் மக்களின் வாழ்வோடு இணைந்து வந்து இருக்கின்றது. நம்முடைய கூற்றின் படி குமரிக்கண்டதினை ஆண்ட பாண்டியனின் சின்னமாகவும் பின்னர் சுமேரியர்கள், மேசொபோடமியர்கள் வணங்கிய கடவுளின் வடிவமாகவும் மீன் இருந்து இருக்கின்றது. இந்த மீன் சின்னமானது பண்டைய மக்களின் பண்பாட்டினில் தொடர்ச்சியாக பயனில் இருந்து உள்ளது என்ற விடயம் இங்கே கவனிக்கத்தக்கது.

சரி இப்பொழுது மீண்டும் நாம் வரலாற்றுக்கு வருவோம். ரோமர்கள் கிருத்துவர்களை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இருந்தும் கிருத்துவம் மக்களின் மத்தியில் செல்வாக்கினை பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

சில கிருத்துவர்கள் ரோமர்களின் அச்சுறத்தல் காரணமாக வேறு நாடுகளுக்கு செல்லுகின்றனர். அவ்வாறு பிழைப்பதற்காக கிளம்பிய கிருத்துவர்கள் சிலர் இந்தியாவுக்கும் வருகின்றனர். இந்தியா என்றால் தமிழகத்தில் உள்ள சேர நாட்டுக்கு (தமிழகத்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வணிக தொடர்பு பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது என்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்). அவ்வாறு குழுக்களாய் தமிழகம் வந்த கிருத்துவர்கள் சேர நாட்டிலையே தனி குழுவாக தங்கி விடுகின்றனர். இவர்கள் பிழைப்பதற்காக வந்தவர்களே அன்றி மதத்தினை பரப்புவதற்கோ அல்லது எந்த ஒரு ஆன்மீக விடயமாகவோ வந்தவர்கள் அல்ல. இவர்களே சீரியக் கிருத்துவர்கள் எனப்படுபவர். இவர்கள் தமிழகம் வந்தக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்றே கருதப்படுகின்றது.

இவ்வாறு பலர் பல நாடுகளுக்கு சென்றாலும் கிருத்துவம் அடக்குமுறையை எதிர்த்து வலுவாய் வளருகின்றது. ஒரு கட்டத்தில் நாட்டில் பெருன்பான்மையான மக்கள் கிருத்துவர்களாக இருப்பதை ரோம அரசன் கான்சண்டீன் உணருகின்றான். தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்களின் எண்ணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...அதாவது கிருத்துவத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிந்துக் கொள்ளுகின்றான்.

பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள என்ன காரியம் வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்பது நாம் அறிந்த/ நேரில் காணுகின்ற ஒரு விடயம் தானே. ரோம அரசன் மட்டும் அந்த விதிக்கு விதி விலக்கா என்ன.

அவனும் மாறுகின்றான். அது வரை தானும் மற்ற ரோமபுரி மன்னர்களும் எதிர்த்து வந்த கிருத்துவத்தினை அரச மதமாக ஏற்றுக் கொள்கின்றான். கிருத்துவம் அரச அரியணை ஏறுகின்றது. அது வரை இல்லாத பல பழக்கங்கள் கிருத்துவத்தில் இணைக்கப்படுகின்றன. காரணம் மக்களை ஈர்க்க வேண்டும். அவ்வாறு ஈர்த்தால் தான் மதமும் வளரும் அதனை முன்னிட்டு அந்த தலைவர்களும் வளருவார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட பழக்கங்களுள் சில,

௧) மரியாள் வணக்கம்.
௨) சிலுவை சிறப்பிக்கப்படுதல்
௩) அரசர், பிரபுக்கள் மற்றும் பணக்காரர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றக் கொள்கை.


இந்தக் கொள்கைகள் எல்லாம் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னால் வரை அதாவது கான்சண்டீன் மன்னன் எப்பொழுது கிருத்துவத்தை அரச மதமாக எற்றுக்கொள்கின்றானோஅதற்கு முன்னர் வரை கிருத்துவத்தில் கிடையாது. அக்காலத்தில் சிலுவை என்பது ஒரு கொலைக் கருவி. அவ்வளவே!!!.

அவ்வாறு கிருத்துவம் அரசியல் சாயம் பூசப் பெறுகின்றது. இது நடப்பது கி.பி நான்காம் நூற்றாண்டில். அன்று ஐரோப்பிய அரசியலோடு ஒன்று இணைந்த கிருத்துவ மதம் இன்று வரை வெளிவர இயலாது அவ்வரசியலோடு பிண்ணி பிணைந்துக் கொண்டு நிற்கின்றது.

இதுவே ஐரோப்பிய கிருத்துவத்தின் வரலாறு.

சரி வரலாறு இருக்கட்டும். கிருத்துவர்களின் சின்னம் சிலுவை அல்ல என்று சொல்லுகின்றீர்களே அப்படி என்றால் கிருத்துவர்களின் சின்னம் என்ன? கிருத்துவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கினார்கள்? தோமா எவ்வாறு வணங்கினார்... முன்னர் கண்டது போல் மீன் தான் கிருத்துவர்களின் சின்னமா? போன்ற கேள்விகள் எழுகின்றனவா...!!! சரி அக்கேள்விக்கான விடையினைக் காண்போம்.

இல்லை மீன் என்பது ஒரு அடையாளம். அவ்வளவே. இறைவனைக் குறிக்க பயன்பட்ட ஒரு சின்னம் அவ்வளவே. இவ்வாறுக் கூறுவதினால் மீன் சின்னத்தின் மதிப்பினை குறைத்து எண்ணி விடாதீர்கள்...அனைத்து நாகரீகங்களிலும் இச் சின்னம் பயன்படுத்தப் பட்டு இருக்கின்றது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கிருத்துவர்கள் இறைவனை நினைத்து வணங்க பயன்படுத்திய சின்னம்... திருநீறு!!! ஆம்... இன்று சைவர்களும் வைணவர்களும் பூசிக் கொண்டு இருக்கின்றோமே அதே திருநீறு தான்!!!

"என்ன இந்துக்களின் சின்னத்தை கிருத்துவர்களின் சின்னம் என்றுக் கூறுகின்றாயா!!! தெளிவாகத் தான் இருக்கின்றாயா... எதற்கும் ஒரு அளவு வேண்டும்..." என்றும், இதனைத் தாண்டியும் பல எண்ணங்கள் தோன்றுகின்றனவா....

சற்றுப் பொறுங்கள்... இதனை நான் சொல்லவில்லை.

விவிலியம் தான் அவ்வாறு கூறுகின்றது.

என்ன விவிலியத்தில் திருநீற்றினைப் பற்றியச் செய்தி இருக்கின்றதா...என்கின்றீர்களா.

அக்கேள்விக்கான விவிலியத்தின் கூற்றினை அடுத்த பதிவில் காணலாம்.

பயணிப்போம்....!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு