“நாய்களுக்கு தனி நாடு கேட்கிறதோ…”
பகைவர்களின் வார்த்தை அச்சம்மூட்டவில்லை செல்வனுக்கு.
“இது எங்கள் நாடு” என்றான்.
திடுக்கிட்டாள் யாழினி.
அக்குரல்…!!!
“செல்வன்…” என்றாள் மெலிதாய்.
தளர்ந்தான் செல்வன்.
“யாழினி …. நீயுமா !!!” என்றெண்ணியே திரும்பினான்.
நம்பிக்கை…தைரியமென அவளிடம் கதைக்க அவனிடம் அந்நொடி ஆயிரம் முக்கியமானவைகளிருந்தன.
அவளுக்கோ ஒன்றுதான்.
காதல்…!!!
“செல்வன்….!!!…..நானும் உன்னை காதலிக்கின்றேன்.!!!” என்றோ அவன் தொடங்கிய கதையை முடித்து வைத்தாள்.
“இப்பொழுதினாலா…???”
.
.
“……..எப்பொழுதினிலும்…!!!”
.
.
.
சிரித்தான்….!!!
.
.
.
சிரித்தாள்…!!!
.
.
.
“சுடு..!!!”
.
.
தொலைவில் எங்கோ இரு பறவைகள் மௌனமாயின!!!
 
பி.கு:
 
55 வார்த்தைகளுள் ஒரு கதையினை எழுத வேண்டும் என்ற போட்டிக்காக எழுதியது.


‘முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்…
     நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!

பின்னர் அவர்கள் பொது உடைமைவாதிகளுக்காக வந்தார்கள்…
    நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!

பின்னர் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வந்தார்கள்…
     நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!

பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்…
    ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!!!’

பசுடோர் நிமொல்லெர் என்னும் செர்மானிய சிந்தனையாளரின் ‘First they came for the jews’ என்னும் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பே இது. ஹிட்லரின் காலத்தில் ஒரு ‘சராசரி’ மனிதனைப் பற்றிய கவிதை. அவன் எந்த ஒரு அநியாயத்துக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லை. காரணம் பயம்…சுயநலம்…அறியாமை என்று எதை வேண்டும் என்றாலும் கொள்ளலாம். அவன் அவ்வாறே இருந்து விட்டால் அவனுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய உலகத்திற்கும் எந்த தீங்கும் வந்து விடாது என்றே அவன் நம்பினான். அந்த நம்பிக்கையிலையே அவன் குருடனாய் நாட்களை கடத்துகின்றான். ஆனால் பயங்கரமான போர் நடந்துக் கொண்டு இருக்கும் போர்க்களத்திலே கண்களை மூடிக் கொள்வதால் மட்டுமே குண்டுகள் நம்மைத் தாக்காது சென்று விடுமா என்ன? அதே போல் அவன் எந்த அநியாயம் தனக்கு நேராது என்று நம்பிக்கொண்டு இருந்தானோ அதே அநியாயம் அவனுக்கு நேரும் பொழுது அவனுக்கு ஆதரவான குரலுக்காக சுற்றியும் அலைகின்றான். ஆனால் பாவம்…புதைக்கப்பட்டவர்கள் பேச மாட்டார்கள் என்பதனை அவன் அறியும் காலமும் வருகின்றது. ‘ஐயகோ…நான் என்று அடுத்தவர்களுக்காக வாய் திறக்க மறுத்தேனோ அன்றே நான் புதைக்கப்பட்டு விட்டேனே… அன்று வராத வார்த்தை இன்று நிச்சயம் பயனில்லை’ என்றவாறே அவனின் முடிவை நோக்கி செல்கின்றான்.

இன்று நம்முடைய நிலையும் அது தான். நம்மை சுற்றிக் கொண்டும் நம்மை இயக்கி கொண்டும் இருக்கும் ஒரு மாபெரும் சதுரங்க ஆட்டத்தினை நாம் உணர மறுக்கின்றோம். அறியாமை சுகமாக இருக்கின்றது….ஆம் அதில் நாம் பயப்பட தேவை இல்லை. கெட்டதினை செய்ய மக்கள் பயந்தக் காலம் போய் இன்று நல்லதினை செய்ய பயப்படும் காலத்தில் அறியாமை நல்லதாக போய் விடுகின்றது. பயம் நம்மை ஆட்டுவிக்கின்றது. என் வாழ்க்கையினை மட்டும் நான் கண்டுக் கொண்டு இருந்தால் எந்த ஒரு பிரச்னையும் எனக்கு வாராது என்ற எண்ணதிலையே நாமும் குருடர்களாக மாறி விடுகின்றோம். சமுக அநீதிகளையும் அக்கிரமங்களையும் கண்டு ‘நம்மளால இத மாத்த முடியுமா…எல்லாம் அடுத்தவன் பார்த்துப்பான்’ என்றே கண் மூடிக் கொண்டு கடந்து விடுகின்றோம்….நாளை அந்த நஞ்சுச் செடிகள் நமது காலையும் சுற்றும் என்ற உண்மையினை அறியாது.

போதும் நண்பர்களே….!!!
பல கதைகள் கேட்டாயிற்று…பல தத்துவங்களும் கேட்டாயிற்று…!!!
நான்கு காளைகள் சேர்ந்து ஒரு சிங்கத்தினை வென்ற கதையும் சரி இன்ன பிற கதைகளும் சரி… இன்று வெறும் கதைகளாகவே போய் விட்டன. அவை சொல்லும் தத்துவங்களை நாம் மறந்து விட்டோம். இவ்வாறே சென்றால் நேற்று ஈழம்…இன்று கூடங்குளம்…நாளை உங்கள் வீடாகவும் இருக்கலாம்!!! உணருவோம்…பயம்தனை விடுத்து நம் உரிமைக்காகவும் உண்மைக்காகவும் அச்சமின்றி குரல் கொடுக்க முயல்வோம். என்றோ முடியப் போகும் நம் வாழ்வுக்கு சற்று அர்த்தம் தர பார்ப்போமே. நம் வாழ்வு பல ஊமைகளுக்கு குரலாகவும், இருட்டில் தவிப்போருக்கு விடியலாகவும் இருக்கட்டுமே. அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நல்ல சமூகத்தினை விட்டு செல்ல தான் எத்தனிப்போமே!!!

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்பதனை உணர்வோமே!!!

கிருத்துவம்...!!!

ஆசிய கண்டத்திலே தோன்றிய மற்றுமொரு சமயம். இயேசு கிருத்துவினால் தோற்றுவிக்கப்பட்டு அவர்தம் பன்னிரு சீடர்களால் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட ஒரு சமயம். இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஏசுவும் சரி அவர்தம் பன்னிரு சீடர்களும் சரி ஆசியாவினைச் சார்ந்தவர்கள். ஆனால் அவ்வாறு ஆசியர்களால் ஆசியாவினில் தோற்றுவிக்கப்பட்ட அந்தச் சமயம் இன்று ஐரோப்பியர்களின் பிடியின் கீழ் உள்ளது. காரணம் எளிது ...அரசியல்!!!

ஆனால் அந்தக் கதைக்குள் நாம் இப்பொழுது செல்லப் போவதில்லை. இப்பொழுது நம்முடைய பயணம் கிருத்துவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொடர்புண்டா என்ற கேள்விக்கு விடையினைத் தேடியே. ஆனால் அதற்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டு இருந்த கேள்விக்கு பதில் கூற வேண்டி இருக்கின்றது.

"'எல் சடை (EL Shaddai)' என்ற சொல்லுக்கு மலையில் வாழும் கடவுள் என்பது தானே பொருள்... எல் சடை அல்லது யாகோவா (Jehovah) என்னும் அந்தக் கடவுளை யாருமே கண்டதில்லையே பின் எவ்வாறு சடை என்பதற்கு முடி என்றும் அக்கடவுள் சிவன் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள்" என்பதே அந்தக் கேள்வி.

இப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு விடையினைத் தேடுவோம்...!!! முதலில் 'எல் சடை' என்னும் பெயரில் இருந்தே தொடங்குவோம்.

'எல் சடை' என்பவர் மலையில் வாழும் கடவுள் என்ற அர்த்தமும் உண்டு. மேலும் எல்லா கதைகளிலும் இறைவன் மலையில் இருந்தே மக்களிடம் பேசியதாகவுமே வருகின்றது. ஏன் அவ்வாறு இருக்கின்றது?... உலகினை கடவுள் படைத்தான் என்றால் அனைத்திலும் அவன் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா... மாறாக அவனை ஏன் பெரும்பாலும் மலையில் இருப்பவனாகவே சித்தரித்து இருக்கின்றனர் என்று எண்ணுகின்றீர்களா? அதற்குரிய விடை தமிழில் இருக்கின்றது.

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி" என்னும் வாக்கியத்தில் இருக்கின்றது.

"அட அது எப்படிங்க மண்ணும் கல்லும் தோன்றுவதற்கு முன் ஒரு இனம் தோன்றி இருக்கும்... இது தமிழன் சும்மா அவன் சுய பெருமைய போற்றுவதற்காக சொன்ன ஒரு கூற்றுங்க அவ்வளவு தான்" என்று பெரும்பாலும் இந்த வாக்கியத்தின் அர்த்தம் தவறாகவே எடுக்கப்பட்டு உள்ளது. இதன் உண்மையான அர்த்தம் தமிழர்களின் வாழ்வின் படிநிலைகளை விளக்குவதாக உள்ளது.

தமிழர்கள் நிலத்தினை ஐந்து வகையாக பிரித்து வைத்து இருக்கின்றனர்.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்.
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - குறிஞ்சி நிலத்துக்கும் முல்லை நிலத்துக்கும் இடையில் தோன்றும் இடம்.

மேலே உள்ள இந்த நில அமைப்புகள் மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர் என்பதனை விளக்கிக் கொண்டு இருக்கின்றது. முதலில் கற்கள் சூழ்ந்த மலையினில் வாழத் தொடங்கிய மனிதன் பின்னர் காடுகளுக்குள் குடியேறி பின்னர் வயல்வெளிகள், கடற்கரை ஓரங்கள் என்று படிப்படியாக தங்களது வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர். மேலும் மனிதன் எவ்வாறு வயல்வெளிகளுக்கும் கடலோரங்களுக்கும் வந்து நகரங்களை அமைத்து வாழ ஆரம்பித்தானோ அன்று தான் பல நாகரீகங்களும் வளரத் தொடங்கின. இதைத் தான் தமிழர்கள் மேலே உள்ள அந்த வாக்கியத்தின் மூலம் விளக்குகின்றனர்.

அதாவது, மற்ற நாகரீகங்கள் வயல்வெளிகளிலும் நகரங்களிலும் மனிதன் வாழக் கற்றுக் கொண்டப் பின்பு தான் தோன்றின ஆனால் தமிழ் நாகரீகமோ, மண் பிரதேசங்களில் அந்த நாகரீகங்கள் தோன்றும் முன்னரே, மனிதன் முதன் முதலில் தோன்றிய மலைகளிலேயே தோன்றி விட்டது. இதைத் தான் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி' என்ற வாக்கியம் விளக்குகின்றது.
 
சரி...இப்பொழுது 'எல் சடை' என்ற பெயரில் சடை என்னும் சொல் எவ்வாறு முடியினைக் குறித்தது என்றுப் பார்ப்போம்.

சடை என்ற சொல் சல் + தை எனும் சொற்களின் தொகுப்பே ஆகும். அதாவது நீண்ட பகுதிகளை சேர்த்து தைப்பது என்னும் அர்த்தத்தில் நீண்டுக் கொண்டே செல்வது என்பதுப் பொருள். இதன் மூலம் இறைவன் முடிவற்றவன் என்பதனை விளக்கவே அவன் சடையன் என்றும் வழங்கப்பெற்றான்.

எனவே அச்சொல்லினைத் தான் சுமேரியாவிலும் மக்கள் பயன் படுத்தி இருக்கின்றார்கள் என்று நாம் கருத முடிகின்றது. ஆனால் சடை எனும் சொல்லுக்கு எபிரேயத்தில் நீண்டு கொண்டு இருக்கும் மலைத் தொடர் என்ற அர்த்தமும் வருகின்றது. எனவே தான் அதனை ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் மலை மேல் உள்ளக் கடவுள் என்று விளக்கம் தருகின்றனர். சரி இப்பொழுது நாம் யூதர்கள் எல் சடை என்னும் கடவுளுக்கு வழங்கிய மற்றுமொரு பெயரினைப் பற்றிப் பார்ப்போம்.

'செகொவா (Jehovah)' என்று இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் தான் அது. இசுரேலியர்கள் தங்களின் கடவுளுக்கு 'யாகோவா (yaahowah)' என்று இட்டப் பெயர் தான் 'செகொவா(Jehovah)' என்று ஆங்கிலத்தில் மருவி நிற்கின்றது. இப்பொழுது நாம் அந்தப் பெயர் எவ்வாறு தமிழ் பெயராக இருக்கின்றது என்பதனைக் காண்போம்.

'யாகோவா' என்றச் சொல்லினை 'யா-கோ-ஆ' என்றும் கொள்ளலாம்.

யா என்றால் தமிழில் நீண்ட நாள் வாழ்கின்ற என்றப் பொருளும் இருக்கின்றது.
கோ - அரசன்
ஆ - தொடக்கம்.

எனவே 'யாகோவா' என்றச் சொல் 'யா-கோ-ஆ' என்றப் பெயரின் திரிபே என்றும் அதன் அர்த்தம் 'தொடக்கத்தில் இருந்தே ஆண்டுக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் அல்லது 'தொடக்கத்தில் இருந்தே வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் கொள்ளலாம்.

மேலும் இந்த பெயர் தோன்றிய வரலாறும் மேலே நாம் கண்டுள்ள பொருளினை மெய்ப்பிப்பது போலவே உள்ளது.

விவிலியத்தில் இறைவனுக்கு யார் 'யாகோவா' என்று பெயர் இட்டது என்பது தெரியவில்லை. அநேகமாக மோசே இப்பெயரினை இட்டு இருக்கலாம் என்றே கருதப் படுகின்றது. விவிலியத்தின் படி மோசே என்பவன் இறைவனுடன் உரையாடும் பொழுது 'இசுரவேல் மக்கள் உங்களின் பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்வது' என்று வினவுகின்றான். அதற்கு இறைவன் 'நானே உனது முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு வழிப்பட்டக் கடவுள்' என்றும் 'நானே இருக்கின்றவன்' என்றும் கூறியதாக இருக்கின்றது.

எனவே மோசே, தன் மூதாதையர்கள் காலத்திலும் சரி தன் காலத்திலும் சரி இருப்பது ஒரே கடவுளே என்ற அர்த்தத்திலும் தொடக்கத்தில் இருந்து அவரே இருக்கின்றார் என்ற அர்த்தத்திலும் அவரை 'யா-கோ-ஆ' என்று பெயர் இட்டு அழைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.

எனவே விவிலியத்தில் வழங்கப்பெறும் இறைவனின் பெயர்களான எல் சடையும் சரி யாகோவா வும் சரி தமிழ் பெயர்களாகவே அமைந்து இருப்பது நமக்கு புலப்படுகின்றது.

சரி...விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள மக்கள் தமிழர்கள் என்றால் தமிழர்களின் வழிப்பாட்டு முறையான கல் வழிபாடு விவிலியத்தில் இருக்க வேண்டுமே?... இருக்கின்றதா என்கின்றீர்களா....!!!

ஆம்...விவிலியத்தில் கல் வழிபாடு/சிவலிங்க வழிபாடு இருக்கவே செய்கின்றது....அதை பற்றி நாம் அடுத்தப் பதிவில் காண்போம்.

தொடரும்....!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19

பி.கு:

ஒவ்வொரு சமயத்தினரும் அவர்கள் வழிபடும் இறைவன் தான் உலகின் முதல் கடவுள் அல்லது ஒரே கடவுள் என்றே கருதுவர். அந்நிலையிலேயே தான் நாம் யாகோவா என்றப் பெயரினைக் காண வேண்டி இருக்கின்றது. அப்பெயர் தமிழ் சொல்லில் இருந்தே வந்து இருக்கின்றது என்பதனைக் காணவே நாம் அதனை இங்கே கண்டு இருக்கின்றோம். அதைத் தவிர்த்து முழு முதற் கடவுளான உலகைப் படைத்த இறைவனுக்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அக்காலத்தில் குல தெய்வ வழிபாட்டு முறையே இருந்ததே அன்றி முழுமுதற் கடவுட் கொள்கை இருக்கவில்லை. யாகோவா என்பது யூதர்களின் குல தெய்வமே அன்றி முழு முதற் கடவுள் அல்ல. இயேசுவிற்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

'எல் (EL)'...!!!

சுமேரியர்களும் பின்னர் யூதர்களும் வழிப்பட்டக் கடவுள்.

இந்தக் கடவுள் உலகினைப் படைத்தக் கதை தான்  'ஈனும் -மா - எல் - இசு' என்னும் நூலில் உள்ளது!!!

ஈனும் - படைத்த
இசு - இசைதல் - செய்தல்
மா - பெரிய

தன்னுடைய செயலால் உலகினைப் படைத்த மாபெரும் கடவுளான 'எல்'லின் கதை என்பதே 'ஈனும் -மா - எல் - இசு' என்ற சொல்லின் அர்த்தம் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் கதையினைப் பொறுத்த வரை இது சுமேரியர்களின் கதை என்ற ஒரு விடயத்தினைத் தவிர மற்ற அனைத்து விடயங்களும் நாம் முன்னர் கண்ட கதைகளை ஒத்தே இருக்கின்றன. முதல் மாந்தன்...வெள்ளம்...வெள்ளத்தில் இருந்து இறைவன் ஒருவனை காப்பாற்றுதல்... என நாம் முன்னர் பாபிலோனிய இலக்கியங்களில் கண்ட அதே நிகழ்வுகள் இதிலும் வருகின்றன. பெயர்கள் மாறி இருக்கின்றன...ஆனால் கதை அதே தான்...கூடவே அதே கேள்விகளும் தான்.

எவ்வாறு வெள்ளத்தினைக் கண்டிராத ஒரு பிரதேசத்தில் வெள்ளத்தினைப் பற்றிய கதைகள் வரலாறாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன?...அதுவும் அனைத்து இலக்கியங்களிலும்...!!! உண்மையிலையே இங்கே வெள்ளம் வந்ததா...இல்லையேல் இவை வெறும் கதைகளா?

மேலே உள்ள இந்தக் கேள்விக்கு இன்னும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் விடைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று நாம் கண்டோம் எனவே அவர்களின் உதவி இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது நமக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் நமது அறிஞர்கள் என்ன சொல்லுகின்றனர் என்பதனை சற்றுக் கண்டுக் கொண்டு வந்து விடுவோம்...!!!

அவர்களின் கூற்றுப் படி 'பெரு வெள்ளம்' என்று அக்கதைகள் குறிப்பிடுவது குமரிக்கண்டத்தின் அழிவையே ஆகும். குமரிக்கண்டத்தினை பெருங் கடல் கொள்ள பிழைத்து வெளியேறிய மக்கள் சிலர் மேற்க்கே சென்று குடி ஏறினர். அவ்வாறு குடியேறிய மக்கள் தங்களின் வரலாற்றினை தாங்கள் உணர்ந்தப் படி கதையாக பதிவு செய்து வைத்தனர். அக்கதைகள் தான் மேலே கூறிய அந்த இலக்கியங்கள். எனவே தான் வெள்ளமே அவ்விடத்தில் தோன்றியிராத பொழுதும், வெள்ளத்தில் இருந்து மக்கள் தாங்கள் மீண்டு வந்த செய்தியை அந்த இலக்கியங்கள் சுமந்துக் கொண்டு இருக்கின்றன என்று அந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.

"அட...இது என்னப்பா வம்பா போச்சி... வெள்ளத்தப் பத்தி அப்ப எவன் பேசுனாலும் அவன் குமரிக்கண்டத்துல இருந்து தப்பிச்சி வந்து இருப்பான் அப்படின்னு சொல்லுவீங்க போல இருக்கே!!!" என்று எண்ணுகின்றீர்களா...

சரி தான். அப்படி என்றால் நாம் மேலும் சில தகவல்களைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னால் ஒரு கேள்வி...!!!

உங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றீர்களா? அங்கே கல் வழிப்பாட்டினைக் கண்டு இருக்கின்றீர்களா? ... கல் வழிபாடு என்றால் சிலையினைச் சொல்லவில்லை... வெறும் கல்... அதனை நட்டி வைத்து வணங்குவார்கள்...அவற்றினைக் கண்டு இருக்கின்றீர்களா?... மேலும் 'நடுகல் வழிபாடு' என்ற ஒன்றையும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

இவை இரண்டும் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இதே பழக்கம் சுமேரியர்களிடமும் பாபிலோனியர்களிடமும் யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது....அதே முறையில்...அதே பெயரில்!!!

'நேர்கல் (Nergal)' - இவன் பாபிலோனியர்களின் போர்க் கடவுளாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். இங்கே தமிழர்கள் போரில் இறந்தவர்களுக்கு 'நடு கல்' நடும் பழக்கம் நம்மில் சிலருக்கு நினைவுக்கு வரலாம்.

மேலும் இதேக் கல் வழிபாடு 'கல்கால் (Gilgal)' என்று எபிரேயச் சமயத்திலும் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இங்கே கல்கால் என்பதும் நேர்கல் என்பதும் தூயத் தமிழ் சொற்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. கற்களை நட்டு வழிபடும் தமிழர் பழக்கங்கள் இதன் மூலம் பாபிலோநியர்களிடமும் சுமேரியர்களிடமும் பின்னர் யூதர்களிடமும் இருந்தது என்பது தெரிய வருகின்றது. இதே போல தமிழர்களின் வழக்கமான ஊர் காவல் தெய்வங்கள் முறையும் அவர்களிடேயே இருந்து இருப்பது அவர்களின் இலக்கியங்கள் மூலம் புலனாகின்றது.

மேலும் சுமேரியர்கள் வழிப்பட்ட சில கடவுள்களின் பெயர்களை நாம் காணும் பொழுது அவை தமிழ் சொற்களை ஒத்து இருப்பதை நாம் அறிய முடிகின்றது...உதாரணம்...அணு (Anu),மருது க(Maruduk), நேர்கல், நின்கல், இன்னானா(Innaana)...!!!

ஆனால் மேலே நாம் கண்ட அந்த பெயர்கள் அனைத்தையும் விட ஒரு பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது....சுமேரியர்கள் வழிப்பட்ட ஒரு இளைய கடவுளின் பெயர் தான் அது...... தமுழ்(Tammuzh) - இது தான் அந்தக் கடவுளின் பெயர்!!!

தமுழ் இளைஞனாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். அவனுக்காக சுமேரியர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் அனைத்தும் கிட்டத்தட்ட நாம் தை திருநாள் கொண்டாடும் காலத்தினை ஒட்டியே அமைந்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...!!! தமிழ் நாட்டில் தமிழை பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டாடிய தமிழர்கள், சுமேரியாவில் தமிழை இளைஞனாக உருவகப்படுத்தி கொண்டாடி இருக்கின்றார்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. அந்த பெயரினைத் தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் மொழிப் பெயர்க்க அறியாது தமுழ் என மாற்றி விட்டார்கள் எனவே தமிழ் கடவுள்....தமுழ் கடவுளாக மாறி விட்டான் என்பதும் அவர்கள் கூற்று.

சரி...இப்பொழுது நாம் 'எல்' என்று வழங்கப்படும் கடவுளினை பற்றி சற்றுப் பார்ப்போம். இந்த 'எல்' என்னும் கடவுள் மலை மேல் வீற்று இருக்கும் கடவுள் என்று அறியப்படுகின்றார். மேலும் இலக்கியங்களில் 'எல் சடை (El Shaddai)' என்றும் எல்லோன் (Elyon) என்றும் குறிக்கப்பட்டு இருக்கின்றார். எல்லோன் என்னும் சொல்லும் தமிழ் சொல்லாகவே இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்தக் கடவுளைத் தான் சுமேரியர்கள் சமயமும் எபிரேயச் சமயமும் வழிப்பட்டு இருக்கின்றன...!!!

சரி...இப்பொழுது ஒரு கேள்வி...'எல்' என்ற இந்தக் கடவுளின் பெயரை நீங்கள் இதற்கு முன்னால் கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா.

என்ன இல்லையா???... கொஞ்சம் யோசிங்க... இன்னும் இல்லையா... சரி அப்படி என்றால் இந்தப் பெயர்களையாவது கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா... மைகேல் (Michael) ,தானியல் (Daniel) ,இசுமாயில் (ismael) ,இசுரேல் (Israel) ,ராபல் (Raphael)...!!!

கேள்விப்பட்டு இருக்கின்றீர்கள் தானே...!!!சரி நல்லது.

இப்பொழுது இன்னொருக் கேள்வி...அருள் முருகன், வேல் முருகன், பால கணேசன், செந்தில் குமரன் போன்றப் பெயர்களைக் கேள்விப் பட்டு இருக்கின்றீர்கள் தானே. இந்தப் பெயர்கள் மக்கள் தாங்கள் வழிப்படும் இறைவனின் பெயரை தங்களின் குழந்தைகளுக்கு வைத்து அழகுப் பார்த்தவை. இறைவனின் பெயரால் குழந்தைகளை அழைப்பது வழக்கம். நம்மிடையே இருக்கும் இந்தப் பழக்கம் சுமேரியர்களிடமும் இருந்து இருக்கின்றது...யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது. எனவே தான் 'எல்' என்று தாங்கள் வழிப்பட்ட இறைவனின் பெயரை வைத்தே தங்களின் குழந்தைகளுக்கு பெயர் இட்டு இருக்கின்றார்கள்.

மைகேல் (மை - கா - எல்) - மை என்பது கருப்பினைக் குறிக்கும் தமிழ் சொல். மேலும் அது உருவமற்ற என்ற அர்த்தத்தினையும் தரும். எனவே உருவமற்ற கடவுள் 'எல்' என்ற அர்த்தத்தில் மைக்கேல் என்ற பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.

இரப்பேல் (இறப் - எல்) - இறத்தல் என்னும் சொல் தணிப்பது அல்லது குறைப்பது என்னும் அர்த்தத்தினையும் தரும். எனவே மக்களின் பிணியினையும் கவலைகளையும் குறைக்கும் கடவுள் 'எல்' என்னும் பொருளில் இப்பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.

மேலும் விவிலியத்தில் ஆதாமின் மகனான அபெல் என்றப் பெயரினையும் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

அபெல் (ஆப் - எல்) - தந்தையாகிய எல் என்னும் கடவுள் என்பதே இந்தப் பெயரின் அர்த்தம் என்கின்றனர் அறிஞர்கள். தன்னுடைய தந்தையான கடவுளின் பெயரையே ஆதி மனிதன் தனது மகனுக்கு வைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.

எனவே எல் என்னும் சொல் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும் அது அறியப்படாத நிலையில் இருக்கின்றது. காரணம் அந்தச் சமயம் இன்று உலகில் இல்லை... யூத மதமும் சுமேரிய மதமும் அழிந்து அதன் இடத்தில கிருத்துவமும் இசுலாமும் வளர்ந்து இருக்கின்றன. யூதப் பெயர்களும் சுமேரியப் பெயர்களும் கிருத்துவப் பெயர்களாகவும் இசுலாமியப் பெயர்களாகவும் மாறி இருக்கின்றன.

ஆனால் என்ன தான் மாறினாலும் சில வழக்கங்கள் மாறவில்லை... அவை கிருத்துவத்தையும் இசுலாமையும் தமிழுடன் இணைத்து கொண்டுத் தான் இருக்கின்றன...!!!

அவை என்ன... காண்போம்!!!!

கிருத்துவம் அழைக்கின்றது...!!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 |


பி.கு:

இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய மொழி அறிஞர் ம.சோ.விக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருடைய நூல்கள் தமிழர் சமயமும் , குமரிக்கண்டமும் தான் இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய நூல்கள்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு