மேசொபோடோமியா...!!!

இன்றைய ஈராக், துருக்கி,சீரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதி. டைகிரிசு மற்றும் யுபிரடுசு ஆகிய நதிகளின் இடையில் அமைந்த ஒரு வளமான பிரதேசம்.

சுமேரிய நாகரீகம்...பாபிலோனிய நாகரீகம் போன்ற உலகின் தலை சிறந்த நாகரீகங்கள் செழித்து விளங்கிய ஒரு இடம். எனவே தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் முதலில் மேசொபோடோமியாவினை 'மனித நாகரீகத்தின் தொட்டில்' என்று கூறினர். இங்கிருந்து தான் உலகின் பல்வேறு நாகரீகங்கள் தோன்ற தலைப்பட்டன என்றும் அவர்கள் கருதினர்....சிந்து சமவெளி நாகரீகத்தினைக் அவர்கள் கண்டுப்பிடிக்கும் வரை!!! சிந்து சமவெளி நாகரீகம் ஆராய்ச்சியாளர்கள் அது வரை கொண்டு இருந்த கருத்தினை முற்றிலுமாக மாற்றிப் போட்டது.

"சரிங்க இருக்கட்டும்... அதான் அத பத்தியும் குமரிக்கண்டத்தைப் பத்தியும்  முன்னாடியே பாத்தாச்சில...இப்போ மேசொபோடோமியாவுக்கு வாங்க. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த ஒரு நாகரீகம் எப்படி இன்றும் தழைத்து இருக்கும் ஒரு நாகரீகத்தின் கிளையாக இருக்க முடியும்? மேசொபோடமியர்களை தமிழர்கள் என்று எவ்வாறு சொல்லுகின்றீர்கள்...அந்த கதைக்கு வாங்க" என்று கூறுகின்றீர்களா...சரி!!!

மேசொபோடமியர்கள் தமிழர்களா என்று நாம் காண்பதற்கு முன் மேசொபோடமியர்களைப் பற்றி சற்று அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

உண்மையில் மேசொபோடமியர்கள் யார் என்று ஒரு கேள்வி எழும்புமானால் அதற்குரிய விடை 'தெரியவில்லை!!!' என்றே ஆய்வாளர்களிடம் இருந்து வரும். பல்வேறு காலங்களில் பல்வேறு மக்கள் அங்கே வந்து பல நாகரீகங்களை உருவாக்கி விட்டு சென்று இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யார்...எங்கிருந்து வந்தனர்...தெரியவில்லை. முதலில் சுமேரியர்...பின்னர் பாபிலோனியர் என்று பலர் அங்கே ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் அவர்களின் தொடக்கம் ஒருக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இந்நிலையில் தான் நாம் அவர்களது உலகின் தோற்றத்தினைப் பற்றிய நூலினை பற்றி ஆராய வேண்டியிருக்கின்றது.

என்ன...உலகத்தின் தோற்றம் பற்றி இன்னொரு நூலா என்று எண்ணுகின்றீர்களா?. ஒரு சின்ன திருத்தம். ஒரு நூல் அல்ல... இரு நூல்கள்!!!

ஈனும் -மா - எல் - இசு(Enuma-Elis) - எனப்படும் சுமேரிய இலக்கியமும்...
கில்காமேசு (GILGAMESH) - எனப்படும் மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியமும் தான் அவை.

இந்த நூல்கள் தான் இது வரைக் கிடைக்கப்பெற்ற நூல்களிலேயே உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள். மேலும் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் இவ்விரண்டு நூல்களுமே வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப் பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மாந்தனைப் பற்றியும் கூறுகின்றன. இங்கு தான் அறிவாளர்கள் குழம்புகின்றனர்.

ஏன் இந்த நூல்கள் வெள்ளத்தினைப் பற்றிக் கூற வேண்டும்?. மேசொபோடமியா இருக்கும் இடத்தில் இது வரை வெள்ளம் வந்ததுக்கான கூறுகளே இல்லையே. அதுவும் இவர்கள் கூறுவது போல உலகமே அழிந்து போகும் வண்ணம் வெள்ளம் இங்கே வந்து இருப்பதற்கு சாத்தியக் கூறுகளே கிடையாது...பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றிப் பேசுகின்றார்கள் - இது தான் ஆய்வாளர்களின் குழப்பம். இந்தக் கேள்விக்கு இன்றும் விடை தெரியாமல் அவர்கள் நிற்கின்றார்கள்...காரணம் இன்னும் அவர்கள் தமிழின் வழி அந்த கதைகளையும் நாகரீகங்களையும் நோக்க ஆரம்பிக்கவில்லை. சரி தவறில்லை... நாம் ஆரம்பிப்போம்...நமக்குத் தான் தமிழ் அறிந்த மொழி அறிஞர்கள் துணை இருக்கின்றார்களே.

முதலில் கில்காமேசு என்னும் இலக்கியத்தில் இருந்து ஆரம்பிப்போம். இக்கதையின் படி 'யா (Ea)' என்னும் கடவுள் 'ஆதப்பா (Adappa)' என்னும் மனிதனை படைக்கின்றான். அம்மனிதனை கடவுள் தன்மையுடைய ஒருவனாக மாற்ற 'யா' எத்தனித்த பொழுது 'ஆதப்பா' செய்த தவறால் அவன் அவ்வாயப்பினை இழக்கின்றான். பின்னர் மற்ற கடவுள்கள் உலகினை அழிக்க முடிவு செய்த பொழுது 'யா', 'ஊத்-நா-பிசுடம் (Ut. Na- Pishtim)' என்னும் ஒருவனை படகில் ஏற்றி அவனைக் காப்பாற்றுகின்றார். அவ்வாறு பிழைத்த அந்த மனிதனின் மூலம் மனித இனம் மீண்டும் தழைக்கின்றது.நிற்க.

இப்பொழுது விவிலியம் கூறும் உலகப் படைப்பின் கதையை ஒத்து இருக்கும் இந்த கதையில் நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.

முதல் மனிதனின் பெயர் - ஆதப்பா. இந்த பெயருக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று ஆராச்சியாளர்கள் கூறி கொண்டு இருக்கின்றனர். ஆனால் இந்த பெயரினைப் பார்த்த உடன் நமக்கு பொருள் விளங்கி இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

ஆதப்பா - ஆதி அப்பா. உலகின் முதல் மனிதன் தானே அனைவருக்கும் அப்பா. எனவே தான் அவனை ஆதப்பா என்று அந்த இலக்கியம் கூறுகின்றது என்று நாம் கருதலாம்.

அடுத்து 'ஊத்-நா-பிசுடம்' என்றப் பெயரினை நாம் காண வேண்டி இருக்கின்றது. கதையின் படி இறைவனின் எண்ணப்படி படகின் மூலம் பிழைத்தவன் இவன் என்று அறிய வருகின்றோம். ஆனால்  நாம் முன்னர் 'நோவா' வினைக் கண்டது போல் இதுவும் ஒரு காரணிப் பெயரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஊத்-நா-பிசுடம் என்ற சொல் 'ஊற்று -நாவி - பித்தன்' என்றச் சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். 'ஊற்றும் நாவியும்' வெள்ளத்தினையும் படகினையும் குறிக்கும் சொல்லாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் 'ஊத்-நா-பிசுடம்' என்பவன் 'சூர்பாக்(Shurpak)' என்னும் ஒரு ஊரில் இருந்தவன் என்றும் அவ்வூர் ஆற்றங்கரைப் பக்கம் இருந்தது என்றக் குறிப்புகளும் கிடைக்கப்படுகின்றன. இதில் சூர்பாக் என்பது 'சூரிப் பாக்கம்' என்னும் பெயரின் திரிபே என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் அந்தக் கதைகளிலும் சரி மேசொபோடமியா வரலாற்றிலும் சரி காணப்படும் பல பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

உதாரணத்திற்கு, மேசொபோடமியாவின் மாபெரும் நகரங்களின் பெயர்கள் இதோ... 'ஊர் (Ur)'..'ஊருக்(Uruk)'...'உடு(Utu)' (விண்மீன்)'...'நிப்பூர்(Nippur)'...'மாரி(Mari)'...!!! இவை அனைத்தும் எம்மொழிப் பெயர்கள் என்று நாம் அறிவோம். ஆனால் தமிழினை அறியாதக் காரணத்தினால் இப்பெயர்களின் வேரினை அறியாது இன்னும் தவறான திசையில் ஆராய்ச்சிகளை மேற்குலகம் மேற்கொண்டு வருகின்றன.

'யா' என்னும் கடவுள் : மாந்தனைப் படைத்ததும் அவனை அழிவில் இருந்து காப்பாற்றியதும் 'யா' என்னும் கடவுளே என்றே மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியம் கூறுகின்றது. இந்தக் கடவுளை நீர் நிலையினைச் சேர்ந்தக் கடவுளாகவே அந்த இலக்கியம் சிறப்பிக்கின்றது. பத்தி மனிதன், பாதி மீன் என்றவாறே 'யா' போற்றுவிக்கப் பட்டு இருக்கின்றார். வெள்ளத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிய கடவுளை மக்கள் நீரின் வடிவில் கண்டனர் என்றும் நாம் இங்கே கருத வாய்ப்பு இருக்கின்றது. மேலும் குமரிக்கண்டத்தினை ஆண்ட பாண்டியனின் சின்னமும் 'மீன்' என்பதினை நாம் இங்கே நினைவுக் கூற வேண்டி இருக்கின்றது. மேலும் 'யா' என்னும் சொல் தமிழ் சொல்லே என்பதும் கவனிக்கத்தக்கது.

சரி... மேசொபோடமிய கதையினைக் கண்டாயிற்று... அடுத்து சுமேரியக் கதை என்ன கூறுகின்றது என்பதனையும்...அக்கதைகள் கொண்டாடும் கடவுள்களையும்....அக்கதைகளின் உண்மையான வரலாற்றினையும் இனி காண்போம்....

'ஈனும் -மா - எல் - இசு' வின்  பக்கங்கள் காத்து இருக்கின்றன...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 

பி.கு:

இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய மொழி அறிஞர் ம.சோ.விக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருடைய நூல்கள் தமிழர் சமயமும் , குமரிக்கண்டமும் தான் இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய நூல்கள்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு