தவறினைக் கண்டிக்காமல் இருப்பதும் குற்றம். நல்ல செயல்களை ஆதரிக்காது இருப்பதும் குற்றம்.

ஒரு நாட்டின் மக்கள் எப்பொழுது மேலே உள்ளக் குற்றங்களை தங்களது மனம் உறுத்தாமல் செய்யத் தொடங்குகின்றனரோ அன்று அந்த நாடு தனது அழிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றது. அது எப்பேர்ப்பட்ட நாடாக இருந்தாலும் சரி இந்த விதியிலிருந்து அது தப்புவதில்லை. அந்த நிலையில் அது மக்கள் வாழும் நாடு என்னும் நிலையில் இருந்து மாறி மாக்கள் வாழும் காடு என்ற நிலைக்கு தாழ்ந்து விடுகின்றது.

இன்றைக்கு தமிழகமும் சரி இந்தியாவும் சரி இத்தகைய இக்கட்டான மாற்ற நிலையிலையே உள்ளன. காரணம் பெருன்பான்மையான மக்கள் சிந்திப்பது இல்லை…சிலர் சிந்திக்க முயன்றாலும் அவர்கள் சிந்திக்க விடப்படுவதில்லை. மனதை மயக்கி அறிவினை தாழ்த்தும் மாயை வலையினுள் அவர்கள் சிறு வயது முதலிலேயே சிக்க வைக்கப் படுகின்றனர். அறியாமையே அறிவாக அவர்களுக்கு புகட்டப்படுகின்றது.

இதனால் தான் இன்று இந்தியாவில் சிலர் தவறுகள் செய்கின்றனர். ஒரு சிலர் தவறினை எதிர்த்து போராடுகின்றனர். பலர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். வாழ்கையே அவர்களுக்கு வேடிக்கையாக போய் விடுகின்றது. சில நேரம் பயம் அவர்களை எந்த முடிவும் எடுக்க விடாது தடுக்கின்றது… சில நேரம் சுயநலம்.. பல நேரம் அறியாமை.

பிரச்சனை அந்த வேடிக்கை பார்ப்பவர்களால் தான். இவர்கள் களம் இறங்காததினால் தான் இன்று பல பிரச்சனைகள் முடிவுறாது தொடர்ந்து பிரச்சனைகளாகவே இருந்துக் கொண்டு வருகின்றன. நாட்டின் பிரச்சனைகளை பிறரின் பிரச்சனைகளாகவே பார்க்க கற்றுக் கொண்டு விட்டனர். அடுத்தவனின் வலி இவர்களுக்கு புலப்படுவதில்லை. தாங்கள் உண்ணும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும், உடுத்தும் உடையிலும், செய்யும் தொழிலிலும் அரசியல் கலந்து இருப்பதனை அறியாது, அரசியல் ஒரு சாக்கடை என்றுக் கூறி மேலும் தங்களின் அறியாமையை பெருக்கிக் கொள்கின்றனர்.

தவறுகள் செய்பவர்களுக்கு இது தான் வேண்டும்… பெருவாரியான மக்களின் மௌனம் தான் வேண்டும்!!! அவர்கள் மௌனமாய் இருக்கும் வரை இவர்கள் தாராளமாய் தவறுகள் செய்யலாம். பதவியும் பலமும் இவர்கள் கையில். இந்நிலை இருக்கும் வரை இவர்களை எந்தப் போராட்டமும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் போராட்டக்காரார்கள் நிலை தான் பாவம். இவர்கள் போராடுவது அந்த பெருன்பான்மையான மக்களுக்காகவே. ஆனால் அநேக நேரங்களில் அம்மக்களால் இவர்கள் விரோதிகளாகவே பார்க்கப் படுகின்றனர். காரணம் அவ்வாறே இவர்கள் ஊடகங்களால் முன்னிருதப்படுகின்றனர். ஊடகங்களை மட்டுமே நம்பும் பெருன்பான்மையான மனிதர்களும் இவர்களையும் இவர்களின் போராட்டங்களையும் தேச விரோதச் செயல்களாகவே பார்க்க தலைப்படுகின்றனர்…. உண்மை எங்கோ நடுவில் புதைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாடு அழிவுப் பாதையில் செல்ல ஆரம்பிக்கின்றது.

நண்பர்களே…!!!

நம்முடைய நாடும் இன்று அழிவுப்பாதையில் சென்றுக் கொண்டு இருக்கின்றது. காரணமாய் பல காரணிகள்!!! ஆனால் முக்கியமான காரணி நம்முடைய மௌனம் மற்றும் அறியாமை. இவை இரண்டும் இருக்கும் வரை நாமும் சரி நம்முடைய நாடும் சரி உண்மையான முன்னேற்றத்தினை அடையப் போவதில்லை.

நாம் நம்முடைய நாட்டினை உண்மையிலையே நேசித்தோம் என்றால் முதலில் நம் நாடு சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். அறிந்துக் கொண்டு பின்னர் அப்பிரச்சனைகளை களைவதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

தவறென்றால் எதிர்த்து குரல் கொடுப்போம்.

சரி என்றால் ஆதரித்து குரல் கொடுப்போம்.

மொத்தத்தில் குரல் கொடுப்போம். மெளனமாக மட்டும் இருக்க வேண்டாம்… ஒரு காலம் நாம் மெளனமாக இருக்க வேண்டிய காலம் வரும்… அன்று மெளனமாக திகழலாம். அது வரையிலாவது குரல் கொடுப்போமே. நம் அடுத்த தலைமுறையினருக்கு அமைதியான நல்ல உலகினை விட்டு செல்வதற்கு நம்மால் ஆவன செய்வோமே!!!

முதலில் நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளை பற்றி அறிந்துக் கொள்வோம். இன்று நாளிதழ்களிலும் சரி… தொலைக்காட்சிகளிலும் சரி விவாதப் பொருளாக இருப்பது கூடங்குளம் போராட்டம் தான்.

சிலர் இத்திட்டம் நாட்டிற்க்கு நல்லது என்கின்றார்கள்… சிலர் அதை எதிர்த்து போராடுகின்றார்கள். இதில் யார் சொல்வது உண்மை என்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கூடங்குளப் போராட்டத்தினைப் பற்றி ஒரு இணையப் பக்கத்தினை பகிர்ந்து இருந்தேன். ஆனால் அப்பக்கத்தினை எத்தனைப் பேர் கண்டு இருப்பீர் என்று தெரியவில்லை. எனவே ’கீற்று’ இணையத்தில் வெளிவந்த அந்தப் பதிவின் சில பகுதிகளை இப்பக்கத்தில் இணைக்கின்றேன்.

படியுங்கள்… உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள்… சேர்ந்தே விடை தேடுவோம். அறியாமையில் மட்டும் இனி இருக்க வேண்டாம் நண்பர்களே.

அந்தப் பதிவினை முழுதாகப் படிக்க இந்த இணைப்பை பாருங்கள்.

********************************************************************************************** 
இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?
இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?
************************************************************************************************* 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!
‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?
23)            அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.
  • அணு மின்சாரம் மலிவானது.
  • கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
  • அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
  • நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
  • யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா? 
முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:
ð  அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)
ð  அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.
ð  அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?
ð  நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்? 
2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
ð  இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?
ð  அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?
ð  மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன? 
3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ð  கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?
ð  அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.
ð  இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?
ð  அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்? 
4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
ð  ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?
ð  ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)
ð  ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?
ð  ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?
ð  புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606
5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
ð  இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
ð  ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!
ð  செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).
ð  செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது. 
6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
ð  செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?
ð  யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!
ð  யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்? 
**************************************************************************************************** 
அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா? 
******************************************************************************************************* 
நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?
புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)
**************************************************************************************************** 
சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?
மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது. 
****************************************************************************************************** 
சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?
ð  தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.
ð  தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð  இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
ð  ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð  நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.
ð  தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.
ð  இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.
நன்றி..!!!

சென்ற பதிவில் சித்தர்கள் ஆரியர்களை எதிர்த்தார்கள் என்றுக் கண்டு இருந்தோம். அவ்விடயதினைப் பற்றி விரிவாக நாம் பார்க்க இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்று...









"பேர்கொண்ட பார்ப்பான் பிறான் தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே” (திருமந்திரம்-519)
மேலே உள்ள திருமந்திரப் பாடலில் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பானை' அர்ச்சித்தால், அதாவது அவர்களின் பேச்சினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் தீங்கு வரும் என்றுக் கூறுகின்றார். எளிதான பாடல் தான். ஆனால் இங்கே திருமூலர் யாரையோ 'பேர் கொண்ட பார்ப்பான்' என்று குறிப்பிடுகின்றார். 'பார்ப்பான்' என்ற பெயர் நமக்குத் தெரியும் ... ஆனால் யார் அது 'பேர்க் கொண்ட பார்ப்பான்'. சற்று பார்ப்போம்...

'பார்ப்பான்' 'அந்தணர்' மற்றும் 'ஐயர்' போன்ற சொற்கள் எல்லாம் தூய தமிழ் சொற்கள். இவை இறை பணி செய்பவரையும் அறநெறிப்படி வாழ்பவரையும் குறிக்கும் மதிப்பு மிக்க சொற்கள். ஆனால் காலத்தில் ஆரியர்கள் தமிழ் மக்களுடன் கலந்து, அவர்களது வேத நெறிக் கொள்கையினைப் பரப்பி மக்களை ஏமாற்றி பார்ப்பான், அந்தணர் மற்றும் ஐயர் ஆகிய பெயர்களுக்குள் தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே தூய தமிழ் பெயர்களான அந்தச் சொற்கள் இப்பொழுது பிராமணர்களைக் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டதால் தான் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பான்' என்கின்றார். ஏனெனில் பார்ப்பான் என்றப் பெயரில் பிராமணர்கள் சமுகத்தில் நுழைந்து அவர்களின் வேத நெறிக் கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருந்தனர். எனவே அவர்களின் சொல்லினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் கேடு என்று தான் சொல்லவந்த கருத்தினை திருமூலர் கூறுகின்றார்.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே

சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ. - சிவவாக்கியர்


இறைவனை புரிந்துக் கொள்ளாது மந்திரங்கள் சொல்வதும் கல்லுக்கு பூக்கள் சூடி பூசை செய்வதும் பலனில்லை என்ற மேலே உள்ள சிவவாக்கியரின் இந்தப் பாடலும் ஆரியர்களின் வழிப்பாட்டு முறையினை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் சித்தர்கள் எவ்வளவு முயன்றும் ஆரியர்களின் செல்வாக்கினை சரிக்க இயலவில்லை.


காரணம்...ஆரியர்களின் அரசியல் செல்வாக்கு. காலத்தில் அரசியலும் மதங்களும் ஒன்றாகக் கைகோர்ப்பதை நாம் வரலாறு எங்கிலும் கண்டு வந்து இருக்கின்றோம். தான் ஆட்சியில் இருக்க மதத்தினை ஆயுதமாக பயன்படுத்திய அரசர்கள் பற்றியும் நாம் கண்டு இருக்கின்றோம்... கிருத்துவத்திற்கு எப்படி ஒரு கோன்சன்டைன் மன்னனோ, அவ்வாறே ஆரியர்களுக்கும் சில மன்னர்கள் இங்கே துணைப்போகின்றனர்...பதவிக்காக...பொன்னிற்காக.. மேலும் பல காரணங்களுக்காக!!!
இந்த நிலையில் தான் "அரசியல் செல்வாக்கும் இருக்கின்றது...சமயங்களும் நம் கையில் இருக்கின்றன. ஆனால் இந்தச் சித்தர்கள் மட்டும் தொல்லைக் குடுத்தவாறே இருக்கின்றனரே.இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்" என்று எண்ணி அரசர்களின் உதவியோடு சித்தர்களை வேட்டையாட ஆரியர்கள் ஆரம்பிக்கின்றனர்.


சித்தர்கள் காடுகளுக்கு துரத்தப்படுகின்றனர். காட்டினில் குகைகளில் அவர்கள் பதுங்குகின்றனர். ஆனால் ஆரியர்களுக்கு அதுவும் பொறுக்கவில்லை.

"நம்முடைய கருத்திற்கு மறுக் கருத்தினை சொல்பவன் எவ்வாறு உயிரோடிருக்கலாம்?... தவறாயிற்றே... கொல் அவர்களை...குகையில் பதுங்கி இருந்தார்கள் என்றால் அந்த குகையுடன் சேர்த்தே அவர்களுக்கு சமாதியினை கட்டுங்கள்... அவர்கள் கடவுளின் எதிரிகள்" என்றவாறே குகையில் பதுங்கி இருந்த சித்தர்களை குகையில் வைத்தே கொல்லவும் செய்கின்றனர். சித்தர்கள் இருக்கக் கூடும் என்று எண்ணப்பட்ட குகைகள் எல்லாம் இடிக்கப்படுகின்றன.
தமிழக வரலாற்றில் இந்த நிகழ்வுகள் குகை இடிக் கலகம் என்றே வழங்கப்பெறுகின்றது. இதன் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு. சித்தர்கள் தலைமறைவாகின்றனர். ஆரியர்கள் கேள்விக்கேட்பார் இன்றி மேன்மையினை அடைகின்றனர். பல சித்தர்கள் பாடல்களும் தமிழ் பாடல்களும் அழிக்கப்படுகின்றன.
இந்தக் காலத்திலும் கோவிலில் தமிழே அர்ச்சனை மொழியாக இருக்கின்றது. தமிழ் பாடல்களே இசைக்கப்படுகின்றன. காரணம் இன்னும் சைவக் கோவிலிலும் வைணவக் கோவிலிலும் தமிழர்கள் பொறுப்பில் இருக்கின்றனர்.
சைவக் கோவில்களில் பூசாரிகளாக பறையர்கள் இருக்கின்றனர். வைணவக் கோவிலில் பாணர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இந்த நிலை வெகுக் காலம் நீடிக்க வில்லை. சிதம்பரத்தில் பறையர்களை துரத்தி விட்டு தீட்சிதர்கள் நுழைய அதை எதிர்கின்றார் இறுதி நாயன்மாரான நந்தனார். ஆனால் எதிர்ப்பு பயன் தராது போகவே இறுதியில் நந்தனார் கொலை செய்யப்படுகின்றார். முக்தி அடைந்து விட்டார் என்று அவரின் சரித்திரமும் மூடப்படுகின்றது. இதைப்போலவே பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரும் கொல்லப்பட்டார் என்பதே வரலாற்றுச் செய்தியாகும்.


இவ்வாறு இறுதி நாயன்மாரும் ஆழ்வாரும் காலமாக, எவ்வித எதிர்ப்பும் இன்றி கோயிலுள் அரச மரியாதையுடன் சமசுகிருதம் நுழைகின்றது. தமிழ் வெளியேற்றப்படுகின்றது. சைவ வைணவ மதங்கள் முழுமையாக ஆரியர்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன.வேத நெறியினை போற்றும் நூல்களே முதன்மையாக வைக்கப்படுகின்றன. அவற்றினை முன்வைத்தே கதைகள் பல இயற்றப்படுகின்றன. சாதிப் பிரிவுகள் சமுகத்தின் வேர்களாக ஆக்கப் படுகின்றன.பிரித்தாளும் சூழ்ச்சி நடைமுறைப் படுத்தப்படுகின்றது. சாதிகளுக்கும் சாதிகள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் பிரிக்கப்படுகின்றனர்.

பிரிக்கப்பட்டவர்களுக்குள் வன்மம் விதைக்கப்படுகின்றது. பகை உணர்ச்சிகளும் தான். அவற்றின் இடையே உண்மையான கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. திசை மாறிய ஒரு சமுகம் மலரத் தொடங்குகின்றது.


அன்று வெளியேறிய தமிழ் இன்று வரை வெளியிலேயே காத்துக் கொண்டு நிற்கின்றது. தேவாரமும் திருவாசகமும் இசைக்கப் பட்ட இடங்களில் இன்று புரியாத மந்திரங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

பின்னர் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் இந்த இழிநிலை மாறவில்லை. முகமதியர்கள் வந்தாலும் சரி...ஆங்கிலேயர்கள் வந்தாலும் சரி...தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். காரணம் - அது அவர்களின் இறைவன் வகுத்தது... வேதம் அவ்வாறு தான் சொல்கின்றது. இதை மாற்ற யாருக்கும் உரிமைக் கிடையாது. மக்கள் அவர்களின் அவலங்களுக்குரிய காரணத்தினை அறியாமலேயே காலத்தினை நகர்த்திச் செல்கின்றனர்.


'ஏன்' என்றுக் கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை... ஏனென்றால் வேதமும் மனு தர்மமும் அதைத் தான் போதிக்கின்றன. கேள்விக் கேட்பது இறைக் குற்றம். 'எங்கே வேதம் அவ்வாறு சொல்கின்றதா...அவற்றைக் காட்டுங்கள் நாங்கள் பார்கின்றோம்' என்றால் அவற்றை அவர்கள் பார்க்க முடியாது... படிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். மேலும் உண்மையினை கூறும் நூல்கள் பலவும் மறைக்கப்பட்டு இருந்தன. எனவே படிக்கவும் முடியாது... அவ்வாறு படிக்க எண்ணினாலும் உண்மையானக் கருத்துக்களை படிக்க இயலாது என்ற நிலையில் அறியாமையிலையே மக்கள் அடிமையாக காலத்தினை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்.


மக்களின் அந்த நிலை ஆங்கிலேயர்களின் வருகையினால் மேலும் மோசமாகின்றது. மனுதர்ம சாசுத்திரம் ஆங்கிலேயர்களால் இந்து சமய மக்களுக்கு உரிய சட்டமாக ஆக்கப்படுகின்றது. (இதைப் பற்றி முதல் பதிவில் பார்த்து இருக்கின்றோம்). பின்னர் பெரியார் வருகின்றார்...அம்பேத்கர் வருகின்றார்... மக்களுக்குரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்து நடந்தவை... நடந்துக் கொண்டு இருப்பவை பற்றி நாம் அறிவோம். போராட்டங்கள் இன்று வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

சரி இந்து சமயத்தினைப் பற்றி ஓரளவு பார்த்தாயிற்று. எவ்வாறு தமிழகத்தில் தோன்றிய ஒரு இயக்கம் தமிழினை அடிமைப்படுத்த பயன்பட்டது என்பதினையும் கண்டாயிற்று.

ஆனால் இந்த விடயங்களைக் கொண்டு உலகின் முதல் மனிதன் தமிழன் என்று நாம் கூற முடியாது. உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதினைக் காண நாம் சிந்து சமவெளியில் இருந்து சற்று மேற்கே பயணிக்க வேண்டும்.
எவ்வாறு சிந்து சமவெளிக்கு கீழே வந்து இந்து சமயத்தினைப் பற்றிப் பார்த்தோமோ அதேப்போல் நாம் இப்பொழுது சற்று மேற்கே சென்று சுமேரியர்களையும் மெசொபோடமியர்களையும் அப்படியே கிருத்துவம் மற்றும் இசுலாமிய மதங்களையும் கண்டு கொண்டு வர வேண்டி இருக்கின்றது.


உலகின் முதல் மனிதர்கள் தமிழர்களா?.... என்ன சொல்லுகின்றனர் சுமேரியர்கள்...காணலாம்... அடுத்தப் பதிவில்..!!!

பயணம் தொடரும்...

கி.பி ஏழாம் நூற்றாண்டில் வடக்கே ஆர்ய வர்த்தம் நிலைப்பெற்ற அதே காலக் கட்டத்தில் தெற்கிலேயும் சைவ வைணவ சமயங்களின் வாயிலாக ஆரிய வேள்வி நெறிகள் வளரத் தொடங்கின.

சமணம் மற்றும் புத்த சமயங்களை தனித்து எதிர்க்க திராணி இல்லாது வலுவிழந்திருந்த வேத நெறிக் கருத்துக்கள், சைவம் மற்றும் வைணவ சமயங்களின் வளர்ச்சியோடு இலைமறைக் காயாய் மீண்டும் வளர ஆரம்பித்தன. சைவ வைணவக் கருத்துக்களுடன் வேள்வி நெறிக் கருத்துக்கள் இணைக்கப்பட்டன. இணைத்தே பரப்பவும் பட்டன. வேத நெறிக் கருத்துக்கள் இருந்தமையால் வடக்கேயும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் தோன்றிய இலக்கியங்கள் சமசுகிருதத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வடக்கேயும் பரப்பப் படுகின்றன.

வெகு விரைவில் சைவ வைணவக் கொள்கைகள் வேறு... ஆரிய
வேள்விக் கொள்கைகள் வேறு என்ற நிலை மறைந்து இரண்டுக் கொள்கைகளும் ஒன்றே என்ற நிலை தோன்றலாயிற்று.இந்நிலையில் தமிழர்கள் பின் தள்ளப்படுகின்றனர்...ஆரியர்கள் செல்வாக்கினைப் பெற ஆரம்பிக்கின்றனர்.

"மேன்மையான நிலைக்கு வந்தாயிற்று...நல்லது!!! ஆனால் இந்த நிலை நிரந்தரமல்ல. இப்பொழுதே சில கேள்விகள் நம்முடைய கொள்கைகளைப் பற்றி எழுகின்றன. எனவே நம் நிலை எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறலாம்...ஆனால் மாறக் கூடாது. நாம் உயர்ந்தவர்கள். உயர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி..!!!" என்று ஆரியர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த வழி அவர்களின் கண்ணுக்குப் புலனாகின்றது.

'பிறவி சுழற்சிக் கொள்கை - செய்யும் செயலினைப் பொறுத்தே பிறவிகள்' என்ற புத்த சமணத் தத்துவமே அந்த வழி.

என்ன புத்த சமணத் தத்துவமா?... அச்சமயங்கள் தான் தங்கள் செல்வாக்கினை இழந்து விட்டனவே... பின் எவ்வாறு அவற்றின் கொள்கைகள் இவர்களுக்கு உதவி இருக்க கூடும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்பக் கூடும்.

உண்மைதான்... புத்தமும் சமணமும் தங்களின் செல்வாக்கினை இழந்து தான் இருந்தன. ஆனால் அவற்றின் மறுப்பிறவிக் கொள்கை மட்டும் மக்களிடம் அதன் செல்வாக்கினை இழக்காது நின்று இருந்தது. கடவுள் இல்லை என்ற நிலை கடந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலை வந்தும் மக்கள் மறு பிறவிகளில் நம்பிக்கையினை கொண்டு தான் இருந்தனர்.

அந்த நம்பிக்கை தான் ஆரியர்களுக்கு அவர்கள் தேடிய வழியாய் அமைந்தது. அவ்வழியினை அமைத்துத் தந்தவர் தாம் ஆதி சங்கரர்.

"நாம் உயர்ந்தவர்கள்... ஆனால் எதனால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்றுக் கேட்டால் என்ன சொல்வது... அறிவு, பண்பு, வீரம் மற்றும் பொருள் போன்றக் காரணிகளால் நாம் உயர்ந்தவர் என்றுக் கூறினால் அவற்றில் நம்மைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருக்கின்றனர்... அப்பொழுது அவர்களும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்... நம்முடைய மேன்மை அப்பொழுது கேள்விக்குறி ஆக்கப்படும்...!!! ஆனால் நம்முடைய மேன்மை கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.அதற்கு மேன்மை நம் பிறப்பில் இருக்க வேண்டும். நான் பிறப்பால் உயர்ந்தவன்... நீ உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றால் என் இனத்தில் பிறந்து இருக்க வேண்டும்...இல்லையெனில் மன்னித்துக் கொள் நீ என்னை விடத் தாழ்ந்தவன் தான்...!!! ஆம்..!!! இது தான் சரி... நம் மேன்மையை யாரும் கேள்விக் கேட்காதிருக்க இது தான் சரியான வழி" என்றவாறே 'பிறவிச் சுழற்சிக் கொள்கையினை' தங்களின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார். மாற்றிக் கொள்ள ஆரம்பித்தக் காலாம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு.

"நீ முற்பிறவியில் செய்த செயலின் காரணமாகத் தான் இப்பிறவி. சென்றப் பிறவியில் பல நன்மைகள் செய்து இருந்தால் பிராமணனாகப் பிறப்பாய்... இல்லையெனில் செய்த பாவத்திற்கேற்ப பிறப்பாய்... சத்திரியனாய்... அல்லது வைசியனாய்... அல்லது சூத்திரனாய். இதுவே இறைவனின் நியதி"என்பதே அந்தக் கருத்து. மக்களை பிறப்பிலேயே பிரிக்கும் இந்தக் கருத்து அப்போதைய அரசியல் சூழ்நிலைகளால் நசுக்கப்படாது வளர்க்கப்படுகின்றது. இறைவன் பெயரினைச் சொல்லி மக்கள் தாழ்த்தப்படுகின்றனர். மக்கள் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தோன்றிய சைவ வைணவத் தத்துவங்கள் ஆரியர்களால் திசை மாற்றப்படுகின்றன.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாக நிலை நிறுத்திக் கொள்ள நல்லதொருக் காலக்கட்டமும் அமைகின்றது. அது வரை இருந்த பல விடயங்களுக்கு அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன.

ஆரியர்களின் சட்ட நூலாக இருந்த மனு தர்மம், மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய சாசுத்திரமாக மாற்றப் படுகின்றது. பிராமணர்கள் என்ற சொல்லுக்கு அர்த்தமும் மாற்றப்பட்டு ஒரு புது பிரிவு உருவாக்கப்படுகின்றது.

சிவனைக் வணங்குபவர் - சைவர்.
பெருமாளை வணங்குபவர் - வைணவர். என்ற இந்த இரு மக்கள் பிரிவுகளுக்குள் புதிதாய், 'பிராமணன்' என்ற சொல்லுக்கு அர்த்தம் மாற்றப்பட்டு ஒரு புதிய பிரிவு உருவாகின்றது.
பிராமணன் - நான் பிரமன்.. அதாவது 'நான் கடவுள் (அகம் பிரமாச்மி)' என்றப் பொருள் கொண்ட பிரிவே அது.

இந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப புராணக் கதைகளும் மாற்றப்படுகின்றன. இவை அனைத்தினையும் செய்தவர் ஆதி சங்கரர். இந்தக் கொள்கையினை பரப்ப அவர் ஆரம்பித்த மடங்கள் தான் இன்றைய சங்கர மடங்கள்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆரியர்களுக்கு உதவிய தமிழர்கள் சற்சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்களே இன்றைய உயர்சாதியினர்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாது ஆரியர்களை எதிர்த்த தமிழர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இன்றைய தாழ்த்தப்பட்டோர் இவர்கள் தாம்.

மற்ற தமிழர்கள் எல்லாம் சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்கள் தான் இன்றைய பிற்படுத்தப்பட்டோர்.

மலைக்கு தப்பி ஓடியவர்கள் மலைவாழ் சாதியினராயினர்.

இந்த நிலையில் ஒரு கேள்வி எழலாம்...!!! 'இவர்கள் இவ்வளவு மாற்றங்கள் செய்து இருக்கின்றார்களே... இதனைக் கண்டித்து தமிழகத்தில் ஒருக் கேள்விக் கூட எழவில்லையா' என்று நீங்கள் கேட்கலாம்.

கேள்விகள் எழத்தான் செய்தன... மாற்றுக் கருத்துக்களும் வரத் தான் செய்தன. அந்த கேள்விகளை எழுப்பியவர்களுள் முக்கியமானவர்கள் நம் சித்தர்கள். அதனாலையே அவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் கூறினர்.ஆனால் தமிழகத்தில் அன்று சமசுகிருதம் ஆட்சி மொழியாக இருந்தமையால் (பல்லவர் ஆட்சி காலம்) தமிழ் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. மேலும் அரசியல் செல்வாக்கினால் இந்தக் கருத்துக்கள் மக்களிடையே சென்றடையாது மறைக்கப்பட்டன. சில நூல்கள் அழிக்கப்பட்டன... சில கருத்துக்கள் மாற்றப்பட்டன. இப்படிப்பட்ட காரணிகளால் பல கருத்துக்கள் மக்களிடையே சேராது மறைக்கப்பட்டன.

ஒரு வேளை பல்லவர்களின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்திருக்கும் என்றால் அந்தக் கருத்துக்கள் இன்று நமக்கு கிட்டாமலே போயிருக்கக் கூடும். ஆனால் தமிழகத்தின் பொற்காலமும் வருகின்றது சோழனின் வாயிலாக... இராசஇராச சோழனின் வாயிலாக!!!

தமிழின் அனைத்து இலக்கியங்களும் சமசுகிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமசுகிருதம் வளர்க்கப்பட்டுக் கொண்டு இருந்தக் காலக் கட்டத்தில், இராச இராச சோழனால் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு தமிழ் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது. கோவில்களில் தமிழர்கள் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். தமிழிலேயே இறைவனை வணங்குகின்றனர். தமிழ் பாடல்களே இசைக்கப் படுகின்றன. சித்தர் பாடல்கள் தொகுக்கப்படுகின்றன. சைவ வைணவ இலக்கியங்கள் முழுவதுமாக இயன்ற வரை தொகுக்கப்படுகின்றன.ஆரியர்களின் செல்வாக்கு தமிழகத்தில் குறைய ஆரம்பிக்கின்றது. தமிழ் மேன்மை அடைய ஆரம்பிக்கின்றது.

ஆனால் முழுமையான மேன்மை தமிழ் அடையவில்லை.ஏனெனில் சைவ வைணவ இலக்கியங்களைத் தொகுக்கும் பணியில் ஆரியர்களும் இருந்தனர.

பன்னிரு திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி ஒரு ஆரியர். எனவே தான் சம்பந்தரைப் பற்றி ஆறு பிரபந்தங்கள் பாடிய அவர் அப்பரைப் பற்றி ஒன்றே ஒன்றினை மட்டும் பாடி உள்ளார்.

அதேப் போல் 63 நாயன்மார்களைப் பற்றி பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் நூலில் பெறும் பகுதியை வேள்வி நெறிக் கருத்துக்களை வளர்த்த சம்பந்தருக்கே ஒதுக்கி உள்ளார்.

இது போன்ற செயல்களால் தமிழ் என்ன தான் வளர முயற்சித்தாலும் அதனுடன் இணைந்து இலைமறைக்காயாக வேள்வி நெறிக் கொள்கையும் ஆரியமும் வளர்ந்து கொண்டே வந்தன. முழுமையான வெற்றி கிட்டவில்லை என்றாலும் சோழனின் இந்த முயற்சிகள் காரணமாகத் தான் இன்று தமிழ் இன்னும் தனித் தன்மையுடன் இருக்கின்றது. இல்லையெனில் என்றோ சமசுகிருதத்தில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்ற கருத்தினை மறுப்பதற்கு நமக்கு விடயமே கிட்டாது போயிருக்க கூடும். ஆரியத்தினை எதிர்த்து உண்மையான நெறிகளைக் கூறிய சித்தர்களின் பாடல்களும் கிட்டாமலே போயிருக்க கூடும்.

என்ன ஆரியர்களை சித்தர்கள் எதிர்த்தார்களா?... வேள்வி நெறிகளையும் அவர்கள் எதிர்த்தார்களா என்று கேள்விக் கேட்கின்றீர்களா... அப்படி என்றால் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்றையும் சிவவாக்கியரின் பாடல் ஒன்றையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அடுத்தப் பதிவில் அவற்றினை பார்ப்போம்... அதனுடனே குகை இடிக்கலகம், கோவிலில் சமசுகிருத அர்ச்சனை போன்றவற்றினைப் பற்றியும் பார்ப்போம்.


முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு