நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப் பதிவினை எழுதுவதால் இப்பதிவிற்குள் போகும் முன் முன்னர் எழுதிய இந்த இரு பதிவுகளைப் படித்து விட்டு வருவது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.


சரி இப்பொழுது நமது பதிவிற்கு வருவோம்.

தொண்டை நாடு என்பது இன்றைய தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், சென்னை, மயிலாப்பூர் ஆகியப் பகுதிகளைக் கொண்டு விளங்கியதே ஆகும். வள்ளுவப் பெருமகனார் மற்றும் முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களான 'பேயாழ்வார்' 'பூதத்தாழ்வார்' மற்றும் 'காரைக்கால் அம்மையார்' போன்றவர்களும் இந்தத் தொண்டை நாட்டில் இருந்தே தோன்றி இருக்கின்றனர். மேலும் ஒளவைப்பாட்டியால் 'தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்றும் சிறப்பாக வழங்கப்பட்ட ஒரு நாடாகும் அது. இத்துடன் தோமா இறுதியாக வாழ்ந்து இறந்த இடமாக அறியப்படும் மயிலையும் தொண்டை நாட்டிலேயே அமைந்து இருக்கின்றது.நிற்க.

நம்முடைய பதிவுகளின் படி இந்தியாவில் தோமா ஆற்றிய இறைப்பணியின் காரணமாகத் தான் சைவ வைணவ சமயங்கள் வளர்ச்சிப் பெற்றன என்று சில கருத்துக்கள் நிலவிக் கொண்டு இருக்கின்றன என்றுக் கண்டுக் கொண்டு இருக்கும் பொழுது, தோமா அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தினைச் சுற்றியே முதல் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி இருப்பது சற்றுச் சிந்தனைக்குரிய விடயமாகத் தான் இருக்கின்றது.

"அட என்னங்க, தோமா இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும் ஆண்டோ கி.பி முதல் நூற்றாண்டு...ஆனால் முதல் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றிய ஆண்டோ கி.பி ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றே கருதப்படுகின்றது. இந்நிலையில் சுமார் நானூறு ஆண்டுகால இடைவெளியில் உள்ள அவர்களை எவ்வாறு ஒன்றிணைக்கின்றீர்கள்?" என்றக் கேள்வி இப்பொழுது இயல்பாகவே எழலாம்.

உண்மைதான் நானூறு ஆண்டுக் கால இடைவெளியில் இருக்கும் மனிதர்களை வெறும் அவர்கள் தோன்றிய இடத்தினை வைத்து மட்டுமே ஒன்றிணைத்துக் கூறுவது சரியானதொன்றாக அமையாது. இந்நிலையில் அவர்களை நாம் ஒன்றிணைத்துக் கூறுவதற்கு மற்றத் தக்கச் சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு சான்றுகள் இருக்கின்றனவா என்று நாம் பின்னர் காண்போம். ஏனெனில் தோமா தமிழகத்தில் மயிலையில் வாழ்ந்த காலம் என்றுக் கூறப்படுகின்ற அதே காலத்தில் அதே ஊரினில் வாழ்ந்த ஒருவர் இப்பொழுது நமக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் வேறுயாருமில்லை 'தமிழகம் வான்புகழ் அடையக் காரணமாயிருந்த வள்ளுவரே அவர்'.

தோமா மயிலையில் வாழ்ந்து இருந்ததாக கூறப்படும் அதே முதல் நூற்றாண்டில் அதே மயிலையில் இருந்து தோன்றியவர் தான் திருவள்ளுவர். இப்பொழுது, தோமா தமிழகத்தில் வாழ்ந்து இறைக் கருத்துக்களை பரப்பினார் என்றால் அவர் வாழ்ந்த அதே காலத்தில் அதே நகரத்தில் வாழ்ந்த வள்ளுவரும் அக்கருத்துக்களைக் கேட்டு இருக்க வேண்டுமே...அவ்வாறு கேட்டு இருந்தால் அக்கருத்துக்கள் அவரது நூலான திருக்குறளினில் இடம் பெற்று இருக்க வேண்டுமே...அவ்வாறு இடம் பெற்று இருந்தால் தானே தோமா மயிலையில் இறைக் கருத்துக்களைப் பரப்பினார் என்று நாம் கருத முடியும். எனவே இப்பொழுது நாம் திருக்குறளில் தோமா பரப்பிய கிருத்துவின் கருத்துக்கள் யாவேனும் இருக்கின்றனவா என்பதனைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் சற்றுக் காணத்தான் வேண்டி இருக்கின்றது.

பொதுவாக இன்றுவரை வள்ளுவரின் சமயம் குறித்து விவாதங்கள் நீண்டுக் கொண்டேத் தான் சென்றுக் கொண்டு இருக்கின்றன. சிலர் அவரை சமண சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். சிலர் அவரை சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். ஆனால் சமீப காலமாக வள்ளுவர் கிருத்துவக் கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தும் நிலவி வருகின்றது. அவ்வாறு அவர்கள் கருதுவதற்கு திருக்குறளில் கிருத்துவின் கருத்துக்களின் தாக்கம் பல தென்படுகின்றன என்ற எண்ணமே முக்கியமானதொன்றாகும். இப்பொழுது அவர்கள் கூறும் அந்த கிருத்துவின் கருத்துகளின் தாக்கங்கள் என்னென்னவென்று நாம் சற்றுக் காணலாம்.

1) திருக்குறளின் பாயிரம் அமைப்பு:

திருக்குறளின் பாயிரத்தில் நான்கு அதிகாரங்கள் உள்ளன,

1) கடவுள் வாழ்த்து
2) வான் சிறப்பு
3) நீத்தார் பெருமை
4) அறன் வலியுறுத்தல்

பொதுவாக அனைத்து தமிழ் நூல்களிலும் முதலில் இறை வணக்கப் பகுதி இடம் பெறுவது இயல்பு. அதன்படியே திருக்குறளிலும் முதலில் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் வருகின்றது. ஆனால் ஆய்வாளர்களைக் குழப்புவது என்னவென்றால் பாயிரத்தில் கடவுள் வாழ்த்து வர வேண்டியது சரி, ஆனால் ஏன் அதனைத் தொடர்ந்து வான் சிறப்பு என்றும் நீத்தார் பெருமை என்றும் அறன் வலியுறுத்தல் என்றும் மூன்று அதிகாரங்களை வள்ளுவர் பாயிரத்தில் சேர்த்து இருக்கின்றார் என்ற ஒரு கேள்வி தான் அது.

இன்று பெரும்பாலும் 'வான் சிறப்பு' என்றால் மழையைச் சிறப்பிக்கும் அதிகாரம் என்றும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொள்பவர்களை குறிக்கும் அதிகாரம் என்றுமே பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் அந்தப் பொருள்கள் முழுமையான அர்த்தத்தினைத் தரவில்லை. காரணம் மழையைச் சிறப்பாக வருணித்து பாயிரத்தில் சேர்க்கும் வழக்கம் நூல் ஆசிரியர்களிடையே இருந்தது இல்லை. சிலர் மழை இல்லாது உலகம் அமையாது அதனால் தான் வள்ளுவர் மழையைச் சிறப்பித்து இருக்கின்றார் என்றும் கூறுவர். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் மழை மட்டுமே உலகில் முக்கியமான ஒரு பொருள் கிடையாது, நிலம், காற்று போன்ற மற்ற விடயங்களும் முக்கியமானவைகளே. எனவே ஏன் வள்ளுவர் மழையை மட்டும் சிறப்பித்து வைத்து இருக்கின்றார் என்று ஒரு கேள்வியும் நிலவிக் கொண்டு இருக்கின்றது.

பின்னர், 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் ஏன் தனியாக துறவு மேற்கொள்பவர்களைப் பற்றி எழுத வேண்டும்?... அதான் அறத்துப்பாலில் 'துறவறம்' என்று தனியாக துறவிற்கே ஒதுக்கி இருக்கின்றாரே பின்னர் ஏன் பாயிரத்திலும் அதனைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்? என்ற ஒரு கேள்வியும் இன்று நிலவிக் கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தான் சில ஆராய்ச்சியாளர்கள் சில புதிய நோக்கினைக் மேலே கூறியுள்ள அந்த அதிகாரங்களுக்கு வழங்கும் பொழுது நாம் அந்த நோக்கினிலும் சற்றுச் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. இப்பொழுது அவர்கள் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம். அவர்களின் கூற்றுப்படி,

'வான் சிறப்பு' என்று பாயிரத்தில் வழங்கி இருக்கும் அதிகாரம் மழையைக் குறிப்பதில்லை மாறாக இறைவனின் அருள்/ பரிசுத்த ஆவியினைக்  குறிக்கின்றது மேலும்,

'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் துறவறம் மேற்கொள்பவர்களைக் குறிக்காது மக்களுக்காக உயிர் நீத்த இயேசுவைக் குறிக்கின்றது மேலும்,

ஒரே இறைவன் மூன்று நிலைகளில் விளங்குவதினால், பாயிரத்தில் வெறும் கடவுள் வாழ்த்தினை மட்டும் வைக்காது இறைவனின் மற்ற நிலைகளையும் விளக்கும்படி 'வான் சிறப்பு' என்று கடவுளின் சக்தியினைப் பற்றியும் 'நீத்தார் பெருமை' என்று மக்களுக்காக பலியான இறைவனின் நிலையினைப் பற்றியும் வைத்துவிட்டு பின்னர் அத்தகைய இறைவன்  வலியுறுத்தும் அறனை  விளக்க 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்தினையும் சேர்த்து பாயிரமாக வைத்து உள்ளார். இதுவே அவர்கள் கூறும் கூற்று.

ஆனால் வழக்கம் போல எந்த ஒருக் கூற்றினையும் சான்றுகள் இன்றி நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்நிலையில் மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகளுக்கு சான்றுகளோ அல்லது விளக்கங்களோ இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

2) வான் சிறப்பு:

பொதுவாக பலரால் இன்று வரை இந்த அதிகாரம் மழையின் சிறப்பினை கூறுவதாகவே எண்ணப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால் இப்பொழுது இது மழையைக் குறிப்பது அல்ல மாறாக கடவுளின் ஆற்றல்/ பரிசுத்த ஆவியினை குறிக்கும் ஒரு அதிகாரம் என்ற கருத்து சிலரால் எழுப்பப்பட்டு உள்ளது. இக்கருத்தினைப் பற்றி நாம் மேலும் காணும் முன்னர் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

i) “கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று.” “பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது.” (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்…சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்) - கா.சு.பிள்ளை (இதன் மூலம் நாம் இறைவனின் சக்தி நீரின் தன்மையோடு குறிக்கப்பட்டு உள்ளதாக கருத்து இருப்பதினை அறிகின்றோம்.)

ii) “கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று.”

"வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க.” - கா.சு.பிள்ளை (இதன் மூலம் 'வான்' என்றச் சொல்லே மருவி விஷ்ணு என்று வந்து இருக்கின்றது என்றும் (வான் - விண் - விண்ணு - விண்டு - விஷ்ணு), விஷ்ணுவும் சக்தியும் ஒன்றே என்றும் அவர்களுக்கு நீரின் தன்மையான நீல நிறமே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதனையும் அறிகின்றோம்)
 
iii) விவிலியத்திலும் பரிசுத்த ஆவியினை நீரின் தன்மையுடைவராகவே குறிப்பிடப்பட்டு உள்ளது.நிற்க

மேலே உள்ள சில விடயங்கள் மூலமாக இறைவனின் சக்தியை நீரின் தன்மையோடு காணும் போக்கு சமயங்களில் இருக்கின்றது என்றே நாம் அறிய முடிகின்றது. மேலும் சில திருக்குறள் ஆய்வாளர்களின் கருத்துக்களும் வான் சிறப்பு என்பது இறைவனின் ஆற்றல்/ கருணை ஆகியவற்றைக் குறிப்பதாகவே கருதுகின்றனர்.

"இறை வாழ்த்துப் அதிகாரத்தில் கடவுளின் பண்பாற்றல்களை எல்லாம் தொகுத்துரைத்த வள்ளுவர், இந்த வான் சிறப்பு அதிகாரத்தில் வெளிப்படையாகவே மழைச் சிறப்பு மட்டும் கூறுகின்றாரானாலும், உண்மையில் அவர் முதற் பொருள் மழையை வருணிப்பதன்று; கடவுளின் கருணை ஆற்றலை வகுத்துரைப்பதேயாகும்." என்றே பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் கூறுகின்றார்.

"கடவுளுடைய தண்ணருளைக் குறிப்பதற்கு, மழையே சிறந்த அறிகுறியாகி இருக்கின்றது. மழைச் சிறப்புக் கூறுதல், திருவருட்சக்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது" என்றே எம். சுப்ரமணிய பிள்ளை அவர்களும் கூறுகின்றார்.

எனவே வான் சிறப்பு என்பது மழையினைக் குறிக்காது மாறாக இறைவனின் அருட்சக்தியினைக் குறிக்கும் ஒன்று என்றக் கருத்தினை நாம் கருதுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சரி இப்பொழுது நீத்தார் பெருமையைப் பற்றிக் காணலாம்.

3) நீத்தார் பெருமை:

இது வரையிலும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொண்டவர்களை பற்றிக் கூறும் ஒரு அதிகாரமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. காரணம் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் அவ்வாறே எழுதி வைத்துச் சென்று உள்ளனர் (அவர்கள் 1000 ஆண்டுகளுக்கு பின்னரே திருக்குறளுக்கு உரை எழுதினர் என்ற விடயமும் இங்கே கருதத்தக்கது). சரி இப்பொழுது நாம் சிலர் 'நீத்தார் பெருமை' என்பது மக்களுக்காக உயிர் நீத்த இறைவனைக் குறிக்கும் அதிகாரம் என்று கூறுகின்றார்கள். அக்கூற்றினைப் பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் தனது குறளில் தேவை இல்லாது எந்த ஒரு வார்த்தையையோ அல்லது அதிகாரத்தையோ அல்லது கருத்தையோ வைத்தது இல்லை.

குறளுக்கு ஏழு வார்த்தைகள்...அவ்வளவே!!! அந்த ஏழு வார்த்தைகளுள் தான் சொல்ல வந்தக் கருத்தினை கூறி இருக்கின்றார். (ஏழு என்ற எண் திருக்குறள் முழுவதிலுமே சிறப்பாக கையாளப்பட்டு இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம்). இப்பொழுது அவ்வாறு அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தையைத் தான் நாம் இப்பொழுது காண போகின்றோம்.

'ஐந்தவித்தான்' என்ற வார்த்தையே அது. பொருளில் ஐம்பொறிகளையும் கடந்தவன் என்று விளங்கும் இந்த வார்த்தையினை வள்ளுவர் இரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தி உள்ளார். ஒன்று கடவுள் வாழ்த்துப் பகுதியில் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்று கூறி உள்ளார், மற்றொன்று 'நீத்தார் பெருமை' பகுதியில் 'ஐந்தவித்தான் ஆற்றல்' என்றுக் கூறி உள்ளார்.

அதாவது ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம் இறைவனையும் சரி நீத்தாரையும் சரி ஒன்றாகவே குறிப்பிட்டு உள்ளார். இது ஏன் என்று சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் துறவினைக் குறிக்கும் அதிகாரங்களில் அவர் எந்த ஒரு இடத்திலும் ஐந்தவித்தான் என்றச் சொல்லினை பயன்படுத்தி இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வக வெளியீடான 'திருக்குறளும் விவிலியமும்' என்னும் நூல் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்னும் தொடரோ கிருத்துவ இறையியற் கொள்கைக்கே மிக ஏற்புடையதாகும். அங்கு அது எவ்வித இடர்ப்பாடுமின்றிப் பொருந்தும் என்றே கூறுகின்றது.

எனவே கருத்துக்கள் இவ்வாறு இருக்கையில் 'நீத்தார் பெருமை' என்பது மனிதனாக வந்து மனிதர்களுக்காக தன்னுயிர் நீத்த இறைவனைக் குறிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது.


மேலும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கடவுள் வாழ்த்தை மூவராகிய முதற் கடவுளரை வாழ்த்தும் வாழ்த்தாக கருதுகின்றார். இதுவும் ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்க்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.   மேலே கண்டுள்ள கருத்துக்கள் மூலம் திருக்குறளில் கிருத்துவ கருத்துக்கள் இருக்கலாம் என்ற சிந்தனையும் ஆராய்ச்சிகளும் நம் சமூகத்தில் இருக்கின்றன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. இதனைப் பற்றி நாம் இன்னும் விரிவாக காணலாம் ஆனால் அது ஒரு ஆராய்ச்சிப் பதிவாக மாறி விடும் என்பதனால் அதனை இப்பொழுது இங்கே காண வேண்டாம் என்றே எண்ணுகின்றேன்.

இப்பதிவின்படி தோமா மறைந்ததாக அறியப்படும் மயிலையில் அவர் வாழ்ந்த அதே காலத்தில் திருவள்ளுவரும் வாழ்ந்து இருக்கின்றார் என்பதும், தோமாவின் கருத்துக்களின் தாக்கம் திருக்குறளிலும் தென்படுகின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதையும் நாம் அறிகின்றோம். நிற்க.

மேலும் சில விடயங்கள் நாம் கவனிக்கத்தக்கவைகளாகவே இருக்கின்றன...

1) திருக்குறளை மொழிப்பெயர்த்து உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் கிருத்துவர்கள்.

2) விவிலியத்திற்கு பின்னர் உலகில் அதிக அளவு மொழிப்பெயர்க்கப் பட்ட நூல் திருக்குறளே ஆகும்.

3) அப்படிப்பட்ட ஒரு நூலினை 'தீக்குறள்' என்றும் அதனை படிக்கக் கூடாது என்றும் இந்தியாவில் உள்ள சிலர் கூறியும் இருக்கின்றனர்.

4) உலகப் பொதுமுறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை பஞ்சம சாதியினை சார்ந்தவராக கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.

"உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா...!!! அங்கே தான் அந்த நிறுவனங்களின்...உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் 'உலகமயமாக்கல்' என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது." இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரமான நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. ஒரு சில பெரிய நாடுகளின் கீழேயே உலகின் பல்வேறு நாடுகள் அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்தன. அந்த பெரிய நாடுகளும் தமக்கு கீழே இருந்த நாடுகளின் இயற்கை வளங்களையும் சரி மனித வளங்களையும் சரி கேட்பார் யாருமின்றி கொள்ளையிட்டுக் கொண்டு வந்தன.

அவ்வாறு கொள்ளையிட்டுக் கொண்டு வந்த நாடுகளின் இடையே நிலவிய பொறாமை போட்டி போன்ற காரணிகளினாலேயே உலகம் அதுவரை கண்டு இராத இரு மாபெரும் யுத்தங்கள் நிகழப் பெற்றன. அவற்றின் முடிவில் அதுவரை அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த நாடுகள் பலவும் சுதந்திரம் அடைய ஆரம்பித்தன. "எங்கள் நாடு இது...எங்களை நாங்களே ஆண்டுக் கொள்கின்றோம்...அந்நியர்களான நீங்கள் வெளி ஏறுங்கள்" என்ற முழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் கேட்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாது அந்த நாடுகளை விட்டு விருப்பமில்லாது வெளியேற ஆரம்பித்தன மற்ற நாடுகள்.

அவைகள் வெளியேறியதற்கு முக்கியமானதொரு காரணம், அவைகள் வெளியேற மறுத்தால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம்...அந்த போர் எவ்வித முடிவுகளைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது...ஏற்கனவே சப்பானில் நிகழ்ந்த அணுக்குண்டு தாக்குதலின் தாக்கத்தினை உலகம் கண்டு இருந்தது. மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகம் இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தது. ஒரு அணி சோவியத் யூனியனின் கீழ் பொது உடைமைக் கொள்கைக்காக திரண்டு இருந்தது. மற்றொரு அணி அமெரிக்காவின் கீழ் முதலாளித்துவக் கொள்கைக்காகத் திரண்டு இருந்தது. இந்நிலையில் எந்த ஒரு நாட்டின் மேலும் மற்றொரு நாடு நேரடியாகத் தாக்குதல் நடத்தினால் மீண்டும் ஒரு மாபெரும் யுத்தம் வெடிக்கும் அபாயம் இருந்துக் கொண்டே இருந்தது. எனவே நேரடியான யுத்தம் என்பது அனைத்து நாடுகளினாலும் இயன்ற அளவுத் தவிர்க்கப்பட்டே வந்து கொண்டு இருந்தது.

ஆனால் இங்கே தான் நாம் ஒரு விடயத்தினை காண வேண்டி இருக்கின்றது. பல நாடுகள் விடுதலைப் பெற்று விட்டன. விடுதலை என்றால்... அந்த நாடுகளை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே ஆண்டுக் கொள்ளலாம்...அந்த நாடுகளின் வளங்களை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு அந்த நாட்டின் மீதோ அல்லது அந்த வளங்களின் மீதோ யாதொரு உரிமையும் கிடையாது. இப்படி இருக்க அது வரை அரசுகளின் உதவியோடு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டிக் கொண்டு வந்த பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய ஒரு சூழல் இக்கட்டினைத் தரும் தானே.

அந்தந்த நாடுகளே அவைகளின் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் இந்த நிறுவனங்கள் எந்த வளங்களைச் சுரண்ட முடியும்? பின்னர் எவ்வாறு கொள்ளை இலாபத்தினை ஈட்டிக் கொள்ள முடியும்? முடியாதல்லவா...அங்கே தான் அந்த நிறுவனங்களுக்கு பிரச்சனை தொடங்குகின்றது. எக்காரணத்தினை முன்னிட்டும் அவைகளுக்கு அவைகள் ஈட்டும் இலாபத்தினையும் சரி அவைகளுக்கு உள்ள அதிகாரத்தினையும் இழக்க மனம் கிடையாது. ஆனால் அனைத்து நாடுகளும் சுதந்திரம் அடைந்தப் பின்பு இவர்களால் அந்த நாட்டின் வளங்களின் மேல் பழையக் காலம் போல் உரிமைக் கொண்டாட சட்டப்படி வாய்ப்பு இல்லாது போய் விட்டது. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்கள் மேல் தாங்கள் செல்வாக்கினைப் பெற வேண்டுமானால்,

1) அந்த நாடுகளை மீண்டும் அடிமைப்படுத்த வேண்டும். அல்லது
2) அந்த நாட்டினை ஆள்பவர்கள் அவர்கள் நாட்டின் வளங்களை எடுத்துக் கொள்வதற்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதியினை வழங்க வேண்டும்.

இவ்விரண்டு வழிகள் மூலமாக மட்டுமே அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்களை அடைய முடியும்.

ஆனால் நாம் முன்னர் கண்டதுப் போல நாடுகளை நேரடியாக யுத்தத்தின் வாயிலாக அடிமைப்படுத்துவது என்பது இயலாத ஒரு காரியமாகவே இருந்தது. காரணம் ஒரு சிறு இராணுவ நடவடிக்கைக் கூட ஒரு மாபெரும் போரினை தொடங்கி வைக்கக் கூடிய வல்லமைப்பெற்று இருந்தது என்று நாம் கண்டோம். அப்படி இருக்க ஒரு நாட்டினை மீண்டும் நேரடியாக அடிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியமாகவே இருந்தது.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளின் வளங்களை அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டினை ஆள்பவர்களே அந்த நிறுவனங்களுக்கு அவர்கள் நாட்டின் வளங்களைத் தர வேண்டும்...ஆனால் கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியப்பட கடினமான ஒன்றாகும். காரணம் அந்த நிறுவனங்களின் தன்மையைக் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் நன்றாக அறிந்து வைத்து இருந்தனர். எனவே அந்த நிறுவனங்களுக்கு மீண்டும் அவர்களின் நாட்டினுள் அனுமதி அவர்கள் வழங்குவது என்பது எளிதில் நடவாததொரு காரியமே ஆகும்.

நிலைமை இப்படி இருக்க யுத்தங்கள் இல்லாது அந்த வளங்களை அந்த நிறுவனங்கள் அடைய வேண்டும் என்றால் வளம் உள்ள அந்த நாடுகளை ஆள்பவர்கள் இந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்களாக இருக்க வேண்டும்...அவ்வாறு இல்லாவிடின் அந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக கொண்டு வரப்பட வேண்டும். இந்த வழிமுறையினைத் தான் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனங்கள் அவற்றின் அரசின் உதவியோடு இரு வழிகளைப் பெருன்பான்மையாக கடைபிடித்து இருக்கின்றன என்பதனை வரலாற்றில் இருந்து நாம் காண முடிகின்றது.

1) மக்களால் தேர்ந்து எடுத்த தலைவர்களை கொன்றோ, அல்லது ஒரு இராணுவ புரட்சியினையோ கலகத்தையோ தோற்றுவித்து தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கி தமக்கு உரித்தான தலைவர்களை ஆட்சியில் அமர வைத்தோ, அந்த நாடுகளின் மேல் தங்களின் பிடியினை அந்த நிறுவனங்கள் உறுதி செய்துக் கொள்கின்றன.

2) ஒரு நாட்டிற்கு அதனால் திருப்பித் தர இயலாத வண்ணம் கடனினை வழங்கி, அதனைக் கடன்கார நாடாக்கி பின்னர் அந்த நாட்டில் இருந்து உரிமையாக வளங்களையும் இன்ன பிற சலுகைகள் மற்றும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றன.

மேலே உள்ள இரு வழிமுறைகளில் நாம் முதலாவது பற்றி ஓரளவு அறிந்து இருப்போம். அதாவது ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் இவற்றைப் பற்றி செய்திகளில் எப்பொழுதாவது செய்திகள் வந்து இருக்கும்...நாமும் கண்டு இருப்போம். ஆனால் அந்த இரண்டாவது வழிமுறைதான் சற்று புதிதாக இருக்கின்றது. கேட்பதற்கு நம் நாட்டில் விளங்கும் கந்து வட்டி முறையினை போன்று தோன்றினாலும் அதெப்படி ஒரு நிறுவனம் ஒரு நாட்டிற்கு கடனினை வழங்கி அந்த நாட்டினை கடன்கார நாடாக்க முடியும்? ஒரு நாட்டினால் அதனால் ஒரு கடனைத் திருப்பித் தர இயலுமா அல்லது இயலாதா என்று அறியாத நிலையிலா கடனினை வாங்க முடியும்? போன்றக் கேள்விகள் எழத் தான் செய்கின்றன.

இக்கேள்விகளுக்குத் தான் ஜான் பெர்கின்ஸ் அவரது நூலில் விடையினைக் கூறுகின்றார்.

அவரின் கூற்றுப்படி இன்று எந்த ஒரு பேரரசும் மற்ற நாடுகளின் மீது நேரிடியாக தங்களது ஆதிக்கத்தை இராணுவத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாது இருக்கும் நிலையில், அந்த பேரரசுகள் அவைகளின் வணிக நிறுவனங்களின் மூலமே அவற்றின் செல்வாக்குகளைப் பெருக்கிக் கொள்கின்றன. அதாவது மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது என்பதும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் முன் வைக்கும் வாதம் ஆகும். அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்றுக் காணப்படுகின்றது என்று அவர் கூறுகின்றார். வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.

இத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு "உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்...மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது...இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன" என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன என்றும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

இன்றைய உலகில் நிகழும் நிகழ்வுகளையும், இவர் இவரது நூலினில் குறிப்பிட்டு இருக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் சற்றுக் கவனிக்கும் பொழுது இவரின் இந்தக் கூற்றானது சரியானதான ஒன்றாக இருக்கக் கூடும் என்றே நாம் எண்ண முடிகின்றது. நிற்க

இன்றைய நிலையில் உலகமயமாக்கல் என்றப் பெயரில் என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றது என்று விரிவாக அறிய விரும்புவோர் நிச்சயமாக இந்த புத்தகத்தினைப் படிக்கலாம். உலகை நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு கோணத்திற்கான சாளரத்தினை இந்தப் புத்தகம் திறந்து வைத்தாலும் வைக்கலாம்.

சில குறிப்புகள்:

1) இந்த நூலினில் இவர் அரசியல்வாதிகளும் பெரு நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்துக் கொண்டு வளங்களைக் கொள்ளைக் கொள்கின்றனர் என்றுக் கூறுகின்றார். இதற்கு ஓர் சான்றாக அவர் என்ரான் என்ற அமெரிக்க மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குதாரராக அமெரிக்க அதிபரான புஷ் இருந்ததையும், அதன் காரணமாக அந்த நிறுவனம் எட்டிய அசுர வளர்ச்சியையும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதே என்ரான் நிறுவனம் இன்னும் சில அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு 1991 இல் இந்தியா எப்பொழுது உலகமயமாக்கல் என்றக் கொள்கையின் வாயிலாக உலக நிறுவனங்களுக்கு தனது கதவினைத் திறந்ததோ அப்பொழுது இந்தியாவிலேயே மிகப் பெரிய மின்சாரத் திட்டத்தினை நிறுவ மகாராஷ்டிராவில் நுழைந்தது.

ஆனால் அந்தத் திட்டம் (தாபோல் மின்சாரத் திட்டம் -Dabhol Power plan) மாபெரும் தோல்வியான ஒன்றாக முடிந்தது. மக்களுக்கு எதிரான வன்முறைகள், திரைமறைவு ஒப்பந்த நடவடிக்கைகள், மின்சாரத்துக்கு அதிகமான விலை நிர்ணயித்தல், சுற்றுச் சூழலை மாசு படுத்தியது உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு என்ரான் நிறுவனத்தின் இந்தத் திட்டம் உள்ளாகி பின்னர் பல கோடி உருபாய் செலவிற்கு பின்னர் கை விடப்பட்டது.

2) திடீர் என்று வளர்ந்த அந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் மோசடிக் குற்றச்சாட்டுகளினால் திவால் ஆனது.

3) அந்த நிறுவனத்திற்காக இந்தியாவில் வாதாடியவர் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

4) வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியல்வாதிகளாக மாறி வணிக நிறுவனங்களுக்காக பாடுப் படுகின்றனர் என்று ஜான் பெர்கின்ஸ் கூறுகின்றார். நம் நாட்டில் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இருந்தவர் தான் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

5) அவரே உள்துறை அமைச்சராக இருந்தப் பொழுது, 'வேதாந்தா' நிறுவனத்திற்கு இலாபம் தரும் கனிம வளங்களை உடைய மலைகளை தருவதற்கு தடையாக இருந்த பழங்குடி மக்களுக்கு எதிராக 'பச்சை வேட்டை'  என்னும் இராணுவ நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஆதரவு தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகள் மூலமாக உலகின் உள்ள வளங்களை எல்லாம் ஒரு சிலத் தனிமனிதர்கள் சுரண்டுவதற்கு அரசியலை வணிக நிறுவனங்கள் பயன் படுத்திக் கொண்டு இருக்கின்றன என்றே நாம் அறிய முடிகின்றது.

இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம் என்ற கேள்வியே நம்முடைய தலைமுறையினரை நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கின்றது.

என்ன செய்யப் போகின்றோம் நாம்?

நேற்று இணையத்தினில் உலாவிக் கொண்டு இருக்கும் பொழுது ஒருச் செய்தியினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் சுருக்கம் இதோ...

"தமிழர் கோவில்களை தமிழர்கள் மீட்டெடுப்பது நல்லதே. இதைக் கடவுள் நம்பிக்கையில்லாத 'தீரா விடமான' திராவிட வேடதாரிகள் செய்வது நகைமுரண். எம்மைப் பொறுத்தவரையில் ஆரியர் எதிரி; திராவிடர் துரோகி. தமிழினத் துரோகிகளிடம் நாம் தொடர்ந்து ஏமாற முடியாது. தமிழ்ச்சாதியாக ஒன்றுபட்டுத் தி.க முன்னெடுக்கும் போராட்டத்தை எதிர்க்க ஆயிரக் கணக்கில் நாம் களம் இறங்குகிறோம்." நிற்க.

"கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்" என்று தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ள போராட்டத்திற்கு எதிராக 'தமிழ் தமிழர் காவல் இயக்கம்' என்ற ஒரு அமைப்பு மேலே உள்ள அறிக்கையை வெளியிட்டு உள்ளதாகவே அந்த செய்தி தெரிவிக்கின்றது. இந்த செய்தியினைப் புரிந்துக் கொள்வதற்கு இன்றைய தமிழக சூழலை சற்று நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இன்று தமிழகத்தில் உள்ள நிலவரத்தினை சற்று நின்று கவனித்தாலே ஒரு விவாதம் மிகவும் தீவிரமாக நடந்துக் கொண்டு இருப்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடியும். "திராவிடம் தான் தமிழை வீழ்த்தியது" என்று ஒரு சாரார் கூறிக் கொண்டு இருக்க மற்றொரு சாரார் "இல்லை...தமிழும் தமிழர்களும் தன்மானத்தோடு நிற்க வழிவகுத்ததே திராவிடம் தான்" என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர். இந்த விவாதத்தினைப் பற்றி நாம் மேலும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் "திராவிடத்தைப்" பற்றியும் "தமிழைப்" பற்றியும் மேலும் சிறிது வரலாற்றினைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவற்றை நாம் இங்கே இப்பொழுது காணப் போவதில்லை. காரணம் இப்பதிவின் நோக்கம் மேலே உள்ள செய்தியில் உள்ள விடயங்ளைப் பற்றிப் பார்ப்பதே ஆகும்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் ஒரு போராட்டத்தினை அறிவிக்கின்றது. அதனை தமிழ், தமிழர் காவல் இயக்கம் என்றொரு அமைப்பு எதிர்க்கின்றது. ஏன் அந்த அமைப்பு எதிர்க்கின்றது என்று கண்டோம் என்றால் நமக்கு விடையாய் கிட்டுவது...

௧) கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆன திராவிடர் கழகத்தினர் தமிழர் கோவில் தொடர்பான போராட்டங்களை நடத்துவது சரியல்ல.

௨) திராவிடர்களை நம்பி நம்பி நாம் ஏமாந்து விட்டோம். எனவே தமிழர்களுக்காக திராவிடம் பேசுவோர் போராட வேண்டியதில்லை.

இவையே அவர்கள் முன் வைக்கும் காரணம். மாறாக திராவிடர் கழகத்தினர் போராடும் காரணத்தை, அதாவது "கோவில் கருவறையில் தமிழர்கள் நுழைய வேண்டும்' என்ற காரணத்தை தவறு என்று அவர்கள் சொல்ல வரவில்லை. மாறாக அந்தக் காரணம் சரியான ஒன்றே என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அதாவது போராட்டம் தேவையான போராட்டம் தான்...ஆனால் அதனை தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் முன் எடுக்க வேண்டியதில்லை, அதாவது "தமிழர்களுக்கு தமிழர்களே போராடிக் கொள்வோம்" என்பதே அவர்களின் வாதம்.

சரி இவர்களின் வாதம் சரி என்றே நாம் வைத்துக் கொள்வோம், அப்படி இருந்தால் இவர்கள் எடுத்த முடிவு எவ்வாறு இருந்து இருக்க வேண்டும்...

"தமிழர்களுக்காக நீங்கள் என்ன போராடுவது...நாங்களே எங்களின் போராட்டங்களை முன் எடுத்துக் கொள்வோம்..." என்றுக் கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் கருவறை நுழைவுக்காக குறித்து இருந்த தேதிக்கு முன்னரே கருவறை நுழைவுப் போராட்டததினை நிகழ்த்தி இருக்க வேண்டாமா? அவ்வாறு நிகழ்த்தி இருந்தால் ஒரே செயலில் இரண்டு வெற்றிகள் பெற்று இருக்க கூடுமே.

௧) கோவிலில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதியினை நாம் பெற்று இருக்கலாம்.

௨) கோவிலின் உரிமையை நாம் நாமே பெற்று விட்டப் பின் திராவிடர் கழகத்தின் போராட்டம் தேவை இல்லாத ஒன்றாக போய் இருக்குமே... அதாவது 24 ஆம் தேதிக்கு முன்னரே கருவறை நுழைவுப் போராட்டததினை தமிழ் கூறும் இயக்கங்கள் நிகழ்த்தி இருந்தால், அதே போராட்டததினை பின்னர் திராவிடர் கழகம் எடுக்க வேண்டிய தேவை யாது? தமிழர்களுக்காக தமிழர்களே வென்று இருப்போமே.

ஆனால் அதனை விடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் எடுக்கும் போராட்டததினை எதிர்த்து மட்டுமே என்ன பயன் கிட்டப் போகின்றது தமிழர்களுக்கு... கோவில் கருவறையுள் பார்ப்பனர்கள் மட்டுமே நுழையும் நிலையே தொடருமே?

அப்படி இருக்க இத்தகைய ஒரு முடிவினை, அதாவது "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" முன் எடுக்கும் போராட்டத்தினை எதிர்க்கும் முடிவினை, எடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு யாது ஒரு நன்மையும் கிட்டாது, இது "அவனும் போராடக் கூடாது...நானும் போராட மாட்டேன்" என்றுக் கூறி தமிழர்களுக்கு கோவில்களுள் அவர்களின் உரிமையை மறைமுகமாக மறுக்கும் ஒரு சதியாகத் தான் காண முடிகின்றது.

மாறாக இதில் தமிழர்களுக்கு இம்மி அளவும் நன்மை இருப்பதாகத் தெரியவில்லை.

செரோக்கே (cherokee) இன முதியவர் சுற்றியும் பார்த்தார்.


இருள் மெதுவாய் படரத் தொடங்கி இருந்தது. அதுவரை காற்றில் விளையாடிக்கொண்டிருந்த புல்வெளிகள் இருளெனும் போர்வையால் மூடப்பெற மெதுவாய் தலை நீட்டிப் பார்க்க ஆரம்பித்து இருந்தன சில நட்சத்திரங்கள்.

“ம்ம்ம்…நேரம் கனிந்து விட்டது” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே தனது குடிலின் அருகே மூட்டப்பட்டு இருந்த நெருப்புக் கோளத்தின் அருகே சென்று அமர்ந்து அவருடைய பேரனை அழைத்தார்.

“செரோக்கே இன இளைஞனே… வாழ்வினைப் பற்றி நீ அறிந்துக் கொள்ள வேண்டிய தருணம் இதோ வந்து விட்டது. வாராய்” என்றார்.

அவரின் அழைப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவாறே ஒரு இளைஞனும் அவரருகே வந்து அந்த நெருப்புக் கோளத்தின் அருகே அமர்ந்தான். இருவருக்கும் போதுமான வெப்பத்தை வழங்கியவாறு நெருப்பு எரிந்துக் கொண்டு இருக்க மௌனமாய் சில நொடிகள் கழிந்தன. மௌனம் அவனுக்கு புதிதல்ல…வார்த்தைகள் அவனுக்கு கற்றுத் தந்ததை விட மௌனமே அவனுக்கு அதிகமாக கற்றுத் தந்து இருக்கின்றது….இதோ இந்த மௌனத்திலும் நெருப்பில் உடையும் சருகுகளும், ஊளையிட்டுக் கொண்டே அவனைக் கடந்துச் செல்லும் தென்றலும் அவனுக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தந்துக் கொண்டு தான் இருந்தன. ஆனால் இன்று அவை அவனுக்கு முக்கியமில்லை. இன்று அவனுக்கு முன்னர் வாழ்க்கை அனுபவத்தின் பாடம் காத்துக் கொண்டு இருந்தது. அதற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அவன் காத்திருக்க தயாராக இருந்தான். அனுபவங்களின் பாடங்கள் அவ்வளவு முக்கியமானவை அவர்களின் இனத்தில்.

“என்னுள் ஒரு யுத்தம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றது….” செரோக்கே இன முதியவர் பேச ஆரம்பித்து இருந்தார்.

“அது ஒரு பயங்கரமான யுத்தம். என்னுள் இரு ஓநாய்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒன்று தீமையானது – கோபம், பொறாமை, பேராசை, துக்கம், வருத்தம், பொய், தாழ்வுமனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, போலிப் பெருமை போன்ற குணங்களின் வடிவாக அந்த ஓநாய் இருக்கின்றது. மற்றொன்று நன்மையானது – அன்பு, நன்றி, கருணை, மகிழ்ச்சி, அமைதி, கொடைத்தன்மை, இறக்கம், உண்மை, நம்பிக்கை, எளிமை போன்ற தன்மைகளின் வடிவாக இந்த ஓநாய் இருக்கின்றது.” முதியவர் மெதுவாக நிமிர்ந்து அவரது பேரனைப் பார்த்தார்.

“அந்த ஓநாய்களின் சண்டை உன்னுள்ளும் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றது இளைஞனே…உன்னுள் மட்டும் அல்ல மக்கள் அனைவருள்ளும் அவை சண்டையிட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.” என்றுக் கூறி விட்டு தனது பார்வையினை தனது பேரனிடம் இருந்து விலக்கி நெருப்பினை பார்க்க ஆரம்பித்தார்.

தனது தாத்தா தன்னிடம் கூறிய விடயத்தினை பற்றி சிந்திக்கலானான் அந்த இளைஞன். அவரின் கூற்றில் இருந்த உண்மையை அவன் அறிந்து
இருந்தான்… காரணம், அவனுடைய மனதினுள் பல நேரங்களில் சில கருத்துக்கள் மோதிக்கொள்வதை அவன் உணர்ந்து இருந்தான்.


“ஆம்…என்னுள் ஓநாய்கள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கின்றன…” அவ்வாறு எண்ணிக் கொண்டு மெதுவாய் புன்னகைத்துக் கொண்டு தனது தாத்தாவை நோக்கினான்… ஒரு கேள்வி அன்றுக் கேட்பதற்கு மீதம் இருந்தது.

“எந்த ஓநாய் வெல்லும் தாத்தா…?”

நெருப்பில் நிலைத்து நின்று இருந்த தனது பார்வையை நிமிர்த்தி தனது பேரனை நோக்கித் திருப்பினார்.


“எந்த ஓநாய்க்கு நீ உணவிடுகின்றாயோ…அந்த ஓநாயே வெல்லும் இளைஞனே…அந்த ஓநாயே வெல்லும்!!!” என்றுக் கூறி அன்றைய பாடம் முடிந்தது என்று சைகையால் தனது பேரனுக்கு அறிவித்து விட்டு தனது குடிலினுள் சென்றார்.

பி.கு:

இது ஒரு செரோக்கே இன செவ்விந்தியர்களின் கதையாகும்.

செவ்விந்தியர்கள் என்பவர்கள் இன்றைக்கு வட அமெரிக்கா என்று வழங்கப்படும் தேசத்தின் பூர்வீகக் குடியினர் ஆவர். இந்தியாவைத் தேடி பயணித்த ஐரோப்பியர்கள் தெரியாது அமெரிக்க கண்டத்திலே கால் வைத்தப் பொழுது அந்த தேசத்தையே இந்தியா என்று எண்ணலாயினர். அவ்வாறே அங்கு இருந்த சிவந்த நிற மனிதர்களை இந்தியர்கள் என்று எண்ணி செவ்விந்தியர்கள் என்று பெயரும் இட்டு விட்டனர். (செவ்விந்தியர் – சிகப்பு + இந்தியர்). ஆனால் தாங்கள் வந்த தேசம் இந்தியா அல்ல என்று அவர்கள் அறிய நேர்ந்ததும் வழக்கம் போல் அந்த இடத்தில் இருந்த மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி அவர்கள் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர் ஐரோப்பியர்கள்.

அவ்வாறு ஐரோப்பியர்கள் அமெரிக்காவை கைப்பற்றியதும் அங்கிருந்த பூர்வீகக் குடியினரைக் கொத்துக்கொத்தாக கொன்று போட்டதும் பலரும் அறியாத சோக வரலாற்றுப் பக்கங்களாகும். அந்த வரலாறு இப்பொழுது நமக்கு முக்கியமில்லை. ஆனால் அவ்வாறு அழிக்கப்பட்ட ஒரு இனம் தான் இந்த செரோக்கே செவ்விந்திய இனம் (முற்றிலுமாக அவர்கள் அழியவில்லை…இன்னும் சில மக்கள் அமெரிக்காவில் வாழ்ந்துக்  கொண்டு தான் இருக்கின்றனர்). அவர்களை அழித்த ஆங்கிலேயர்கள் தான் இன்று அமெரிக்கர்கள் என்று பெயரினைக் கொண்டு முன்னர் செவ்விந்தியர்கள் சுற்றிக் கொண்டு இருந்த இடங்களில் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோடு நில்லாமல் நல்லதொரு சமுகத்தையும் தோற்றுவிக்கின்றனர். நல்ல ஆசிரியர்கள் இல்லாத சமுகம் நிச்சயம் நல்லதொரு சமுகமாக இருத்தல் இயலாது. நல்ல கருத்துகளையும் பண்புகளையும் மாணவர்களுக்கு ஊட்டி அதன் வாயிலாக அவர்களை நெறிப்படுத்தி அவர்களின் வாயிலாகவே சமூகத்தினை சீர்படுத்தும் ஒரு அளப்பரிய பணியைச் செய்பவர்கள் தாம் ஆசிரியர்கள். அத்தகைய பணியினைச் செய்யும் ஆசிரியர்களைக் குறித்தும் அவர்கள் எவ்வாறு கற்பித்தல் பணியைச் செய்ய வேண்டும் என்பன குறித்தும் தமிழ் இலக்கியங்கள் சில விடயங்களைக் கூறுகின்றன. அவற்றைக் காணலாம்.
முதலில் ஆசிரியன் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது தமிழ் இலக்கண நூலான நன்னூல் என்ன கூறுகின்றது என்பதனை நாம் கண்டு விடலாம்.

ஒரு நல்ல ஆசிரியன் என்பவனைக் குறிக்க நான்கு பொருட்களை உவமையாக கூறுகின்றார் பவணந்தி முனிவர் (நன்னூலின் ஆசிரியர்- சமண சமயத்தினைச் சார்ந்தவர்). அவை முறையே நிலம், மலை, தராசு, மலர். இப்பொழுது அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

நன்னிலமும் நல்லாசிரியனும்:

தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவம் முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே


ஒரு நிலமானது தன்னில் கணக்கிடமுடியாத பொருட்களை கொண்டு விளங்கும். அவ்வாறே எவற்றையும் தாங்கும் உறுதியினையும் பெற்று விளங்கும்.
மேலும் தம்மை மக்கள் எவ்வளவு தோண்டினாலும் அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் அவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் பெற்று இருக்கும். அவ்வாறே மக்களின் முயற்சிகளுக்கேற்ப தக்க தருணத்தில் அவர்களுக்குரிய பலனையும் தரும் இயல்பையும் உடையதாகவும் இருக்கும்(உதா. விவசாயம்). இவையே நல்ல நிலத்தின் குணங்களாம்.

அவ்வாறே நல்ல ஆசிரியரும், நிலம் எவ்வாறு தன்னுள் பல பொருட்களை கொண்டு பெருமைப் பெற்று விளங்குகின்றதோ அதைப் போன்றே, தாம் பல்வேறு நூல்களின் வாயிலாக கற்றறிந்த பொருள்களை செம்மையாக தம்மில் கொண்டு இருக்க வேண்டும். பின்னர் அப்பொருட்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வாறே நல்ல ஆசிரியர் என்பவர் எந்த நிலை வந்தாலும் அதனைக் கண்டு வாடாத மனத் திண்மையையும் கொண்டு இருக்க வேண்டும். கூடவே மாணவர்கள் அறியாது செய்யும் தவறினை பொறுத்துக் கொள்ளும் தன்மையும், மாணவர்கள் கல்வியினை கற்கும் ஆர்வத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பலனினைத் தரும் தன்மையையும் உடையவராய் இருத்தல் வேண்டும்.

எவ்வாறு நாம் விதைத்த உழைப்பினை விளைச்சலாக ஒரு நல்ல நிலம் தருமோ அவ்வாறே மாணவர்கள் தாங்கள் கல்வியினைப் பெற மேற்கொள்ளும் முயற்சிக்குத் தகுந்த பலனைத் (அறிவினைத்) தருபவரே நல்ல ஆசிரியராவார்.

இவையே நிலத்தை உவமையாகக் கொண்டு ஒரு நல்லாசிரியனின் இயல்புகளை விளக்கும் நன்னூலின் கருத்தாகும்.

மாமலையும் நல்லாசிரியரும்:

அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே


இதன் அளவு இவ்வளவு தான் என்று அளந்துக் கூற இயலா வண்ணம் அளவும் பொருளும் ஒருங்கே பெற்று விளங்குவது மலையாகும். மேலும் எளிதில் துளையிடப்பட முடியாத உறுதியும், அத்தகைய உறுதியினை வெளிப்படுத்தும் தோற்றமும் ஒரு மலையின் தன்மைகளாகும். தொலைவில் இருந்து காண்பவர் வியக்கும் வண்ணம் ஓர் மலையின் தோற்றமும் உறுதியும் இருக்கப்பெறும். மேலும் வறுமையில் மக்கள் வாடுங்கால் அவர்களுக்கென்று வழங்க என்றும் வற்றாத கனிகளும் இன்ன பிற பொருட்களும் பெற்று விளங்குவதே மலையாகும். இத்தகைய இயல்புகளை உடைய மலையே சிறந்த மலையாக அறியப்படும்.

அவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், ‘இவரின் கல்வி அளவு இவ்வளவு தான்’ என்று மற்றவர்களால் அளந்துக் கூற இயலா வண்ணம் ஆழ்ந்த கல்வி அறிவினை நூல்கள் பல கற்றுப் பெற்று இருத்தல் வேண்டும். மேலும் விவாதம் என்று வரும் பொழுது தன்னை மற்றவர்கள் கேள்விகளால் துளைக்க இயலாத வண்ணம் அவர்களின் கேள்விகள் அனைத்தையும் சமாளிக்கும் உறுதியினை வழங்கும் கல்வி அறிவினைக் கொண்டு இருத்தல் வேண்டும். மேலும் மக்களால் ‘இவர் மிகுந்த கல்வி அறிவினை உடையவர்’ என்று கண்ட உடனேயே அறிந்துக் கொள்ளும் வண்ணம் தோற்றத்தையும் அறிவினால் பெற்று இருத்தல் வேண்டும். இந்த விடயங்களுடன் சேர்த்து மக்கள் அறியாமை இருளில் துயரப்படும் பொழுது தம்மிடம் இருக்கும் கல்விச் செல்வங்கள் மூலமாக மக்களின் அறியாமையை போக்கும் வண்ணம் ஆற்றலையும் அறிவையும் பெற்று இருத்தலும் நல்லாசிரியரான ஒருவரின் இயல்புகள் ஆகும் என்றே நன்னூல் கூறுகின்றது.

தராசுக்கோலும் நல்லாசிரியரும்:

ஐயந் தீரப் பொருளைப் யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே


தராசுகோலானது எவர் ஒருவர் பக்கமும் சாராது நடுநிலையாக உண்மையின் பக்கம் நிற்க கூடிய தன்மைப் பெற்றதாகும். மேலும் ஒரு பொருளின் அளவுக் குறித்து சந்தேகங்கள் தோன்றினால் அதனை ஆராய்ந்து அந்த சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் தன்மையும் தராசுக்கோலுக்கு உண்டு.

அவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், மாணவர்கள் சந்தேகங்களுடன் தம்மை அணுகினால் மாணவர்தம் ஐயங்களைத் தெளிவாகத் தீர்த்து வைக்கும் ஆற்றலையும், எந்த ஒரு சூழலிலும் மாணவர்களுள் வேற்றுமைகளைக் காணாது அனைவரையும் சமமாகக் கண்டு உண்மையின் வழியே நடுநிலையாக நிற்கும் பண்பினையும் கொண்டு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பவரே நல்ல ஆசிரியர் ஆவர்.

மலரும் நல்லாசிரியரும்:

மங்கல மாகி யின்றி யமையாது
யாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே


மலரானது அனைத்து நல்ல காரியங்களுக்கும் உரித்தான ஒன்றாக அறியப்பெறும். மலர்கள் இன்றி எந்த ஒரு நற்காரியமும் நிகழ்வதில்லை. மக்கள் அனைவரும் மலரினை விரும்பி ஏற்றுக்கொள்வர். மேலும் சரியான பொழுதில் மலர்ந்து இருக்கும் தன்மையையும் பெற்று இருப்பது மலராகும்.

அதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும், நல்ல செயல்கள் நடைப்பெறும் இடங்களில் தவறாது இடம்பெறுபவராய், அவரின்றி எந்த ஒரு நல்ல காரியமும் நடைபெற முடியாத வண்ணம் மக்கள் இடையே நற்பெயர் உடையவராய் இருத்தல் வேண்டும். மேலும் மலர்ந்து இருக்கும் மலரானது எவ்வாறு மக்கள் மனதிற்கு மகிழ்ச்சியினைத் தருமோ அதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும் எப்பொழுதும் முக மலர்ச்சியோடு (மகிழ்ச்சியாய் சிரித்த வண்ணம்) மாணவர்களுக்கு பாடத்தினை கற்றுத் தர வேண்டும்.

இத்தகைய இயல்புகளை உடையவரே நல்லாசிரியர் ஆவார் என்று நன்னூல் கூறுகின்றது.

சமயங்களைப் பற்றிய நமது ஆராய்ச்சிப் பயணத்தில் பல பதிவுகளைக் கடந்தாயிற்று...இந்த பயணத்தில் நாம் இன்னும் பயணிக்க சில தகவல்களை அறிந்துக் கொண்டால் நல்லது என்று எண்ணியே இந்தப் பதிவு.

முதலில் சைவ சமயத்தினையும் வைணவ சமயத்தினையும் பற்றி சைவரான திரு. கா.சு.பிள்ளை அவர்கள் என்ன சொல்கின்றார் என்றுக் கண்டு விடுவோம்.

1) "நம்மாழ்வார் காலத்தில் திருநீறே இருசமயத்திற்கும் (சைவம் வைணவம்) பொது அடையாளமாக இருந்தது. 'கரிய மேனி மிசை வெளிய நீறு', 'நீறு செவ்வே யிடக்காணில் நெடுமாலடி யார் என்றுத் துள்ளும்" முதலிய நம்மாழ்வார் வாக்கியங்களுள் நீறு என்பது திருநீற்றினைக் குறிப்பது போலும்." - (இதன் மூலம் திருநீறே முதலில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவான அடையாளமாக இருந்தது என்றக் கருத்து இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

2) ஒரு காலத்தில் ஆறு சமயங்களுக்கும் பொதுவாகக் கடவுளின் அருவுருவாகிய சிவலிங்க வழிபாடு விளங்கிற்று. தமிழர் கருத்தே தந்திரங்களில் உள்ளது. வடநாட்டுத் தந்திரங்களிளுள் ஒன்றாகிய லிங்கார்ச்சன தந்திரத்துள், ஒருவன் கணபதி மதத்தையாவது, கௌமார மதத்தையாவது சைவ சமயத்தையாவது வைணவ சமயத்தையாவது சாத்தேய மற்றும் செளர மதத்தையாவது தழுவி ஒழுகினாலும் முதலில் சிவலிங்க பூசை செய்து விட்டு தன் இட்ட தேவதையை வழிபட வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆதலில் ஒரு பெரும் சமயத்துள் ஆறு பகுதிகளாகவே ஆறு சமயங்களும் விளங்கின என்பது ஊகித்தற்பாலது.

3) "இப்பொழுதும் சிவன் கோவில்களில் திருமால், சக்தி, முருகன், பிள்ளையார், கதிரவன் முதலியோருக்கு உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவிலில் திருமால் சயனித்து இருக்கும் இடத்தில் சிவலிங்கம் காணப்படுகின்றது. பிற்காலத்தில் வைணவம் தனி மதம் ஆகி விடவே பெருமாள் கோவில்களில் சிவ வடிவங்களைக் காண்பது அரிதாயிற்று."

4) வங்காள நாட்டில் காளி கோவில்களில் எல்லாம் சிவலிங்கம் காணப்படுகின்றது.

(மேலே உள்ள வரிகள் மூலம் அனைத்து சமயங்களும் ஒரு சமயத்தில் இருந்து பிரிந்தனவையே என்றும் அவை அனைத்துக்கும் பொதுவாய் சிவலிங்க வழிபாடு இருக்கின்றது என்றக் கருத்தினை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. கூடுதலாக வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து சென்று இருக்கும் ஒரு சமயம் என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

சரி..இப்பொழுது சிவனைப் பற்றி அவர் என்ன கூறுகின்றார் என்றுக் காண்போம்...!!!

1) சிவலிங்க வழிபாடு தந்திரங்களில் முதல் இடம் பெற்று உள்ளது.

2) "கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று." "பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது." (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்...சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்)

3) "சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்ட போது எங்கும் நிறைத்து விளங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள் காரணமாம் என்றக் கொள்கை எழுந்தப் போது சிவசக்தி அருள் எனவும் தாய் எனவும் வழங்கப்பட்டது." (இதில் இருந்து சக்தி என்பது இறைவனின் ஆற்றலே என்றும் அவ்வாற்றலைத் தான் பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கின்றனர் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிய முடிகின்றது.)

4) "கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று."

5) வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க."

6) "கடவுளுடைய ஆற்றலே விஷ்ணு எனக் கொள்ளப்பட்டமையால் பெருமான் என்றச் சொல் சக்தியைக் குறிக்கும் ளகர முடிபோடமைந்து திருமாலைக் குறித்தல் காண்க." (அதாவது 'பெருமாள்' என்றப் பெயர் இறைவனின் சக்தியைக் ஆண் வடிவமாகக் குறிக்கும் பெயர் என்றே அவர் கூறுகின்றார்)

7) அம்மையின் ஆண்வடிவமே திருமால் என்று சிவ ஆகமங்கள் கூறும்.

(இதில் இருந்து பெருமாள்/விஷ்ணு/அம்மன் என்றப் பெயர்கள் இறைவனின் ஆற்றலையும் அருளையும் குறிக்கும் பெயர்களே அன்றி அவை தனிக் கடவுளர் அல்லர் என்றக் கருத்தும் இங்கே இருக்கின்றது என்று நாம் அறிகின்றோம். எனவே அம்மன் என்பது ஒரு உருவகமே என்றால் சிவனுக்கும் அம்மனுக்கும் பிறந்த குழந்தைகளாக அறியப்படும் முருகனும் பிள்ளையாரும் யார்? மேலும் விஷ்ணுவும் இறைவனின் ஆற்றலைக் ஆண்வடிவமாகக் குறிக்கும் உருவகம் தான் என்றால் விஷ்ணுவின் பிள்ளையான பிரமனும் ஐயப்பனும் யார்? ஏன் அந்தக் கதைகள்...உருவகங்கள் வந்தன என்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது தானே.)

சரி...திருமால்/விஷ்ணு என்பது இறைவனின் ஆற்றலின் உருவகமே என்றால் விஷ்ணுவின் அவதாரங்களாக அறியப்படும் கடவுளரைப் பற்றி திரு.கா.சு.பிள்ளை என்னும் சைவர் என்ன கூறுகின்றார் என்று நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

1) "கடவுளின் சக்தி உலகத்தைப் பரிபாலிப்பது போல அரசர்களும் தம்முடைய ஆற்றலால் உலகைப் பரிபாலித்தலின் கடவுட் சக்தியின் ஆண்வடிவமாகிய திருமாலின் இனம் என்று அரசர்களைச் சொல்லுதல் வழக்கமாயிற்று."

2) இராமன் வழிபாடு வீர வணக்கத்தைச் சார்ந்ததே ஆகும். இராமன் சிறந்த அரசனாய் விளங்கினமையால் அவன் திருமாலின் அவதாரமாகக் கருதப்பட்டான்.

3) இராமன் அரச குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த திருவாளர் ம.ச.இராமசாமி ஐயர் முதலியோர் அக்குடும்பம் தமிழ் அரசர் குடும்பம் என்றே துணிந்தனர். இராமனுக்கு கரு நிறம் கூறப்படுதல் அதற்கு ஒரு சான்றாம் என்ப.

(இதன் மூலம் அவதாரங்கள் என்பனவும் உருவகங்களே என்றக் கருத்து இருக்கின்றது என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

சரி இப்பொழுது அவர் இந்து மதத்தினைப் பற்றி என்ன கூறுகின்றார் என்றும் கண்டு விடலாம்..

௧) இந்துக்களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லாருக்கும் ஒரு மதம் இருப்பதாக எண்ணி இந்து மதம் என்ற பெயரைத் தோற்றுவித்தனர். தற்காலத்தில் வடமொழி வேதத்தை பிரமாணமாகக் கொண்ட வைதீகர்கள் தங்கள் மதமே இந்து மதம் என்று பேசுபவராய் அம்மதமே இந்திய நாட்டில் உள்ள எல்லா மதங்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன் வந்து உள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானிய மதம், அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்து மதம் என்று ஒன்று உண்டு எனலாம். ஆனால் அவ்வாறு மதங்கள் இல்லாதது போல இந்து மதம் என்ற ஒரு மதமும் கிடையாது.

௨) வேதத்தையும் சிமிருதியையும் பிரமாணமாகக் கொண்ட மதம் இந்து மதம் என்றால் அது இந்தியாவில் உள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமே அன்றி இந்தியர் அனைவருக்கும் பொதுவான ஒரு மதமாகாது.

௩) ஆதலால் வடமொழி வேதத்தின் வேறான சிறந்த பிரமாணங்களுடைய தமிழ் சைவ வைணவர்கள் தங்கள் சமயங்களை இந்து மதம் என்று கூறுதல் அறிவுக்குப் பொருந்துவதில்லை.

(இதன் மூலம் இந்து மதம் என்பது வேறு சைவ வைணவ சமயங்கள் என்பது வேறு என்றும் வேதங்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பில்லை என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

மேலும் இப்பொழுது கோவில்களில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு இருக்கின்றன என்றும் அவர் கூறுகின்றார். அவற்றைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

௧) இக்கோவில்களில் உள்ள (சைவ வைணவ கோவில்கள்) ஆரியச் சார்புகள் யாவை எனில் தமிழ் குருக்கள் தம்மை ஆரியராய் எண்ணிக் கொள்வதும் வருணவரம்புகள் பற்றி இன்னின்னார் இன்ன இடத்தில நிற்க வேண்டும் என்பதும் தாழ்த்தப்பட்டவருக்கு இடம் இல்லாமையும் பரிசாரகம் முதலிய தொண்டுகள் சுமார்தராற் செய்யப்படுவதும் வடமொழி வேதபாராயணம் முதலியவைகளும் வேதச் சார்பான ஓமச் சடங்கும் ஆம் என அறிக.

௨) 'பிற்போக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நாயனார் கொள்கைப்படி வருணவரம்புகள் ஒழிய வேண்டும்.

௩) தொண்டுகள் யாவற்றிக்கும் பூசனை செய்வதற்கும் பிறப்புத் தடை இருத்தல் கூடாது.

(இதன் மூலம் இன்று கோவில்களுள் பிறப்பின் காரணமாக பிரிவினைகள் இருப்பது வேதக் கொள்கைகளால் என்றும் அவை சைவ வைணவ கொள்கைகளுக்கு மாறான கொள்கைகள் என்றும்...வருணங்கள் எனப்படுபவை தமிழர்களுக்கு உரியன அல்ல என்றும் அவை சைவ வைணவத்திற்கு உரியன அல்ல என்றும் அவை ஒழிக்கப் பட வேண்டும் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

இக்கருத்துக்கள் திரு.கா.சு.பிள்ளை அவர்களின் கருத்துக்கள் மட்டுமே ஆகாது...இன்னும் பல அறிஞர்கள் இதே கருத்தினைக் கூறி இருக்கின்றனர். ஏற்றும் இருக்கின்றனர். மேலும் அனைத்திந்திய தமிழர் சமய மாநாட்டிலும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.

இப்பொழுது நாம் எவ்வாறு சைவ வைணவ சமயங்கள் வேத சமயத்தினால் (வைதீக சமம்) ஆட்கொள்ளப்பட்டன என்று மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுவதனைக் காண வேண்டி இருக்கின்றது.

1) குறுகிய நோக்கும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக சமயம் தென்னாட்டில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. ஒதுக்கப்பட்ட இந்த மதம் புத்த சமண சமயங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டு என்றால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் தமிழர் வழிபட்டு வரும் திராவிட சமயத்துடன் வைதீக சமயத்தையும் சேர்த்துக் கொண்டு பொது மக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. அதாவது வைதீக மதம் திராவிட மதத்தின் தெய்வங்கள் ஆகிய சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது.

2) ஏற்றுக் கொண்டதோடு நில்லாது திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது.

(இதன் மூலம் சைவ வைணவத்தில் தொடர்பு இல்லாத வைதீக சமயம் அது பிழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சைவ வைணவத்தோடு இணைந்துக் கொண்டு பின்னர் அச் சமயங்களையே மாற்றியது என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது)

எனவே சுருக்கமாகக் காண வேண்டும் என்றால்,

௧) சைவ வைணவ சமயங்களுக்கும், வேதங்களுக்கும் சரி வருணவரம்புகளுக்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை.

௨) இன்று கோவில்களில் சைவ வைணவ சமயங்களுக்கு மாறான வேதக் கொள்கைகள் பெருமளவுக் காணப்படுகின்றன. அதற்கு காரணம் வைதீக சமயம் சைவ வைணவ சமயங்களை தன் கட்டுக்குள் வைத்து இருப்பது தான்.

௩) அம்மன்/விஷ்ணு என்பது கடவுளின் ஆற்றலின் உருவகமே. அதேப் போல அவதாரங்களும் உருவகங்களே.

௪) சைவ சமயமே பின்னர் பல்வேறு சமயமாக பிரிந்துச் சென்று இருக்கின்றது. வைணவமும் சைவமும் ஒன்றே. வைணவர்களின் சின்னம் முதலில் திருநீராகத்தான் இருந்து இருக்கின்றது.

௫) சைவ வைணவ சமயங்களுள் சாதி ஏற்றத் தாழ்வுக்கும் தீண்டாமைக்கும் எந்த ஒரு இடமோ அல்லது தொடர்போ கிடையாது.

தொடரும்...!!!

இன்றைய தேதியில் இந்தியா ஒரு மாபெரும் சந்தை. கணக்கிடப்பட முடியாத அளவுக்கு பணம் கொழிக்கும் ஒரு மிகப் பெரிய சந்தை. அதனால் தான் இன்றைக்கு உலகின் பல்வேறு நிறுவனங்களும் இந்தச் சந்தையில் நுழைந்து பணம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு துடியாய் துடித்துக் கொண்டு இருக்கின்றன...அதற்காக அவை எந்தச் செயலை செய்வதற்கும் தயாராக இருக்கின்றன. ஆனால் இங்கேதான் சில பெரிய பிரச்சனைகள் அவர்களுக்குக் காத்து இருக்கின்றது.

௧) அவர்களின் பொருட்களுக்கு இங்கே உண்மையிலேயே தேவை கிடையாது.
௨) அவர்களின் பொருட்களை விட சிறந்த பொருட்கள் இங்கே ஏற்கனவே அனைவருக்கும் பொதுவாக கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் அவர்கள் என்ன தான் இந்தியச் சந்தையினுள் நுழைந்தாலும் அவர்களின் பொருட்களுக்கு இங்கே சந்தைக் கிடைக்குமா என்பது ஒரு மாபெரும் கேள்விக்குறியே? இந்நிலையில் தான் அந்த நிறுவனங்கள் மிகவும் கேவலமான வழிமுறையினை கையாள ஆரம்பிக்கின்றன...!!!

உதாரணத்துக்கு, கருப்பு என்பது ஒரு நிறம்...இந்தியர்களின் இயல்பான நிறமே கருப்பு தான்...நமது கடவுளர் அனைவரும் கருப்புத் தான். இந்த நிலையில் நமக்கு வெள்ளை நிறமாக வேண்டும் என்ற தேவையோ அல்லது எண்ணமோ எழ வாய்ப்புகளே இல்லை. ஆனால் அத்தைகைய எண்ணங்கள் நம்மிடம் இல்லை என்றால் பன்னாட்டு அழகுச் சாதனப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் எவ்வாறு இங்கே வந்து அவற்றின் கடையை விரித்து பணம் பார்க்க முடியும் ?...அவைகளின் பொருளுக்குத் தான் இங்கேத் தேவையே இல்லையே. இந்நிலையில் தான் அவை மனரீதியான தாக்குதலைத் தொடங்குகின்றன...அமைதியாய்...தெளிவாய்!!!

"கருப்பு என்பது நிறம் அல்ல...அது அவமானம்...வெள்ளை என்றால் தான் அழகு...!!! வெள்ளை உயர்ந்தது...கருப்புத் தாழ்ந்தது... நீங்கள் வெள்ளையாக இருந்தால் தான் மற்றவர்கள் உங்களைக் காண்பார்கள்...விரும்புவார்கள்...மேலும் அப்பொழுது தான் உலகமே உங்களைப் பார்க்கும்" என்றச் செயய்தியினைக் கொண்ட விளம்பரங்கள் மூலமாக கருப்பான மக்களிடம் முதலில் தாழ்வு மனப்பான்மைக்கான விதையை மெதுவாய் அவர்கள் விதைக்கின்றனர். பின்னர் அணைத்து விதமான ஊடகங்களிலும் வெள்ளை நிறம் கொண்டவர்களையே முன்னிலைப் படுத்தி விதைத்த அந்த விதையை மெதுவாக வளர்க்கின்றனர். ஒரு நிலையில் "ஐயோ நாம் கருப்பாக இருக்கின்றோமே" என்ற ஒரு எண்ணத்தை மக்களுள் வர வைத்தப் பின் "நீங்கள் கருப்பாக இருக்கின்றீர்களா...பிரச்சனை இல்லை...இதோ எங்கள் நிறுவனத்தின் களிம்பினை வாங்கி பூசிநீர்கள் என்றால் நான்கே வாரங்களின் சிகப்பழகு மிளிரும்...இதோ இதை அமெரிக்காவில் மைகேல் ஜாக்சன் பூசுகின்றார்கள்...சப்பானில் சாக்கிசான் பூசுகின்றார்கள்" என்றுக் கூறி மக்களின் அந்த தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டே தங்களின் வணிகத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஒருவனின் மனதினைப் பற்றிய எந்த ஒரு அக்கறையும் இல்லாது வெறும் பணத்தினை மட்டுமே குறியாகக் கொண்டே அவர்கள் இயங்குகின்றனர். இந்த ஈன செயலைச் செய்வதற்கு அவர்கள் தனியொரு அமைப்பையே வைத்துத் தான் செயல்லாற்றுகின்றனர். இன்றைய வியாபார நிர்வாகப் படிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் இத்தகைய செயல்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன.

1991 ஆண்டில் தான் அன்றைய நிதி அமைச்சராக இருந்த திரு.மண் மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் நுழையலாம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வருகின்றார். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அதுவரை இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண் தான் உலக அழகிப் பட்டத்தினைப் பெற்று இருக்கின்றார். ஆனால் திரு.மண் மோகன் சிங் அவர்கள் எப்பொழுது அந்தச் சட்டத்தினை இயற்றினாரோ, அடுத்த எட்டு வருடங்களுக்குள் இந்தியாவுக்கு ஆறு விருதுகள் உலக அழகிப் போட்டிகளில் கிடைத்து இருக்கின்றது. அசாத்தியமான சாதனை தான் அல்லவா. இந்தியா பன்னாட்டு அழகுச் சாதன நிறுவனங்களை இந்தியாவினுள் நுழைய அனுமதித் தந்து இருக்கின்றது...அதனைத் தொடர்ந்து அழகிப் போட்டிகளில் இந்திய பெண்கள் வரிசையாக வெற்றிப் பெற்று இருக்கின்றனர். இவ்விரண்டு சம்பவங்களும் எதேச்சையாக நிகழ்ந்த சம்பவங்களா அல்லது இவ்விரண்டுக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினுள் முதல் முறையாக அந்நிய அழகுச் சாதனப் பொருள்கள் நுழைகின்றன...அனால் அவற்றை வாங்க வேண்டியத் தேவை இங்கே யாருக்குமே கிடையாது. அந்நிலையில் அந்தப் பொருள்களை பயன்படுத்திய பெண்களை உலகமே கண்டு வியப்பது போலும் அவர்கள் அந்தப் பொருள்களை பயன்படுத்திய ஒரே காரணத்தினால் உலகப் புகழ் அடைந்து விட்டது போன்றும்...அவர்களையே ஆண்கள் அனைவரும் விரும்புவது போலும் தோற்றத்தினை உருவாக்கி, அக்கருத்தை 'உலகமே வியக்கும்' அந்தப் பெண்களின் வாயிலாகவே பரப்பினால், மற்றப் பெண்களின் மனம் சற்று அலைக்கழியுமா கழியாதா?...அலைபாயும் தானே... நம்மளும் அந்தப் 'உலகப் புகழ்' பெண்களைப் போல் ஆக மாட்டோமா என்றும் 'இப்படியே இருந்து விட்டோம் என்றால் ஆண்கள் யாரும் நம்மை விரும்ப மாட்டார்களோ?' என்ற எண்ணம் அவர்களுக்குள்ளும் வரும் தானே. அவ்வாறு வந்தால் அவர்களும் அந்த அழகுச் சாதனப் பொருட்களை வாங்க ஆரம்பிப்பர் தானே. அவ்வாறு அவர்கள் வாங்க ஆரம்பித்தால் யாருக்கு லாபம்...வாங்குபவர்களுக்கா அல்லது அந்த அழகுச் சாதன நிறுவனத்துக்கா? அழகுச் சாதன நிறுவனத்திற்குத் தானே.

 அவ்வாறே தான் நடந்தது. உலக அழகி பட்டம் பெற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட அழகுச் சாதனப் பொருட்களைச் சுமந்துக் கொண்டே இந்தியாவில் வலம் வரத் தொடங்கினர். அவர்களை மையமிட்டே அனைத்து ஊடகங்களும் நஞ்சை 'அதாவது வெள்ளை தான் அழகு என்றக் கருத்தை' மக்களிடம் பரப்ப ஆரம்பித்தன. இறுதியாக எந்த மக்கள் அழகுக்காக ஒரு நயா பைசாக் கூட செலவழிக்காது இருந்தனரோ அவர்களே செலவழித்தால் தான் அழகினைப் பெற முடியும் என்று எண்ணி அந்த அழகுப் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இன்றைக்கு எந்த ஒரு பெண்ணின் கைப்பையை எடுத்துப் பார்த்தாலும் அதில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையும் பொருட்களுமே சொல்லும் அந்த வணிக நிறுவனங்கள் பெற்ற வெற்றியை...அது தான் அவர்களுக்கு வேண்டும்...அது தான் அவர்களின் வணிகம். மனம் முக்கியமில்லை...பணமே முக்கியம். இந்தக் கேடுக் கேட்ட பிழைப்பிற்கு பெரிய பெரிய படிப்புகள் வேற!!!

மேலும் இவ்வாறு அந்த நிறுவனங்கள் இந்தியாவில் வேர் ஊன்ற ஆரம்பித்த காலத்தில் அவர்கள் சந்தடிச் சாக்கில் செய்த மற்றொரு முக்கியமானக் காரியம், அதுவரை இங்கே மக்கள் கொண்டு இருந்த அழகுப்படுத்திக் கொள்ளும் வழக்கங்களை மாற்றியது தான். அதையும் ஊடகங்களின் துணைக் கொண்டே செம்மையாக அந்த நிறுவனங்கள் சாதித்துக் கொண்டன. உதாரணத்துக்கு 20 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் மஞ்சள் பூசிக் கொள்வது வழக்கம். மஞ்சளில் பல்வேறு நலன்கள் இருக்கின்றன. ஆனால் மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்கள் எல்லாம் நாகரீகமற்றவர்கள் என்றும் பட்டிக்காடுகள் என்றும் எண்ணம் தோன்றுவதுப் போல செய்திகளையும் விளம்பரங்களையும் பரப்பி இன்றைக்கு மஞ்சள் என்றாலே ஒருவித இளக்காரமான பார்வையோடு மக்கள் காணும் வண்ணம் செய்து விட்டார்கள். அவ்வாறு கருத்தினையும் பார்வையையும் அவர்கள் விதைத்து விட்டதினால் நம் முன்னோர்கள் கொண்டு இருந்து முறைகள் மற்றும் ஞானம் ஆகியவற்றில் இருந்து நம்மை நாமே துண்டித்துக் கொள்ளுமாறு ஒரு நிலை இங்கே உருவாக்கி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களுக்கு பின்னர் நம்முடைய முன்னோர்கள் இம்முறையை இயல்பாகவே இலவசமாக பின் பற்றி வந்தனரோ அந்நிலையையே நாம் பெரும் காசினைக் கொடுத்து அந்நிய நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

இதுவே அவர்களின் தந்திரம்....!!! அது வரை இருந்த பழக்கங்கள் அனைத்தும் தவறானவை என்றும் அந்த நிறுவனங்களின் பொருள்கள் தான் சிறந்தவை என்ற எண்ணத்தினை மனரீதியான தாக்குதல்கள் மூலம் மக்களின் மனதினில் பதித்துவிட்டு அதன் மூலம் காசினைப் பார்ப்பது தான் அந்த நிறுவனங்களின் திட்டம். அப்பாவி மக்கள் அந்த நிறுவனங்களின் சதியினை உணர மாட்டார்கள். எனவே அவர்களைச் சொல்லிக் குறை இல்லை. ஆனால் இந்த அரசாங்கங்கள், அதற்குமா தெரியாது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடியே இந்த வணிக நிறுவனங்கள் காசு பார்கின்றன என்று? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் இப்படியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் தங்களின் மக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு அடுத்தவனின் லாப வெறிக்காக ஆட்படுவதை? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. ஆனால் நம்முடைய அரசாங்கங்கள் வேடிக்கைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றன...இல்லை இல்லை அவையும் அந்த வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களிடம் இருந்துக் கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கின்றன...காரணம் அவை தான் மக்களுக்கான அரசாங்கங்கள் இல்லையே...!!!

ஏற்கனவே நான் உயர்ந்தவன் நீ தாழ்த்தப்பட்டவன் என்று மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஊட்டி அதன் மூலம் அதிகாரத்தையும் செல்வதையும் பெற்று ஆண்டுக் கொண்டு இருக்கும் ஒரு அரசாங்கமான இந்திய அரசாங்கத்துக்கு, மற்றுமொரு நிறுவனம் வந்து ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருப்பவனை மேலும் தாழச் செய்வது என்பது லாபம் தானே...தாழ்ந்து இருக்கும் காரணங்கள் வேண்டும் என்றால் வேறாக இருக்கலாம்...ஆனால் முடிவு....தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவே இருக்கின்றான். இதுவே அவர்களுக்கு வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்களை எப்பொழுதும் எவரும் கேள்விக் கேட்க முடியாது. இந்நிலையிலேயே நமது அரசாங்கமும் அந்நிய நிறுவனங்களின் இந்த மனிதத் தன்மை அற்ற செயலை ஊக்குவிக்கத் தான் செய்கின்றன.

இந்நிலையில் தங்களிடம் இருக்கும் வைரத்தினை அறியாமையினால் வெறும் கல்லுக்கு மாற்றாக விற்று விட்டு பிழைப்பைத் தேடி அலையும் வணிகரைப் போலவே நம்முடைய மக்களும் அவர்கள் கொண்டு இருந்த நல்ல பழக்கங்களை சதிக்கு இரையாக்கி விட்டு இன்று மன அமைதி இன்றி அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் விரோத அரசாங்கமும் அமைதியாக அவர்களின் திண்டாட்டத்தில் குளிர் காய்ந்துக் கொண்டு இருக்கின்றது.

ஒரு கேள்வி?

உங்களுக்கு உங்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா அல்லது மற்றவர்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா? யாரை நீங்கள் அதிக அக்கறையுடன் பேணிக் காப்பீர்கள்?

"அட என்னங்க இது ஒரு கேள்வி? அவரவர்களுக்கு அவர் அவர் குழந்தைகள் தானே முக்கியம். அவர்களைத் தானே அவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் அன்பாக வளர்ப்பர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்கின்றீர்களா....ம்ம்ம்...சரி தான் நீங்கள் சொல்வது...ஆனால் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடக்காமல் தன்னுடைய குழந்தைகளை பசியோடு வீதியில் விட்டுவிட்டு மற்ற வீட்டுக் குழந்தைகளை அனைத்து வித ஊடச்சத்துக்களுடன் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றதே... அந்த நிகழ்வினைப் பார்க்கும் பொழுது தான் எனக்கு அந்த சந்தேகம் வருகின்றது. ஏன் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கின்றன?. இப்பொழுது இதனைப் பற்றி விரிவாகப் பார்க்க சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

சம்பவம் 1:

நண்பர் ஒருவருக்கு முதுகில் திடீரென்று கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏன் எதனால் அவை வந்தன என்றுத் தெரியவில்லை ஆனால் அவர் என்ன முயன்றும் அவை போன பாடில்லை. இறுதியில் ஒரு தோல் நிபுணரிடம் சென்றுக் காட்டலாம் என்றே முடிவு செய்து நிபுணர் ஒருவரிடம் சென்றுக் காட்டினார். அந்த நிபுணரும் அந்த கரும் புள்ளிகளை ஆராய்ந்து விட்டு 'இது ஒன்றும் இல்லை...சரியாகி விடும்...இந்த களிம்பினை மட்டும் போடுங்கள்' என்றுக் கூறி ஒரு களிம்பினையும் அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவனும் சிறிது நாட்கள் அந்தக் களிம்பினை பயன்படுத்திப் பார்த்தான்...களிம்பு தீர்ந்ததே தவிர அந்தக் கரும் புள்ளிகள் மட்டும் மறையவே இல்லை. மீண்டும் அவன் அந்த நிபுணரிடம் செல்ல இம்முறை வேறு ஒரு களிம்பினைக் கொடுத்து அனுப்பினார் அந்த நிபுணர். களிம்பு மாறியது...ஆனால் விளைவு மாறவே இல்லை. கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருந்தன. என்னடா இது என்று எண்ணியவாறே அவன் வேறொரு மருத்துவரை அணுக, மருந்தாக மற்றுமொரு களிம்பு கிட்டியது. அவ்வளவே... ஆனால் கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டேத் தான் இருந்தன. இந்நிலையில் என்ன செய்வதென்றே தெரியாது அவன் முழித்துக் கொண்டு இருந்த பொழுது தான் அவனுடைய பாட்டியிடம் பேசும் வாய்ப்பு அவனுக்கு ஒரு முறைக் கிட்டியது. அப்பொழுது அவனுடைய அந்தக் கரும் புள்ளிகளைப் பற்றி அவனுடைய பாட்டியிடம் அவன் கூற, உடனே அவனது பாட்டி "சில வேப்ப இலைகளை நன்றாக அரைத்து ஒரு பசை மாதிரி செய்து அதனை முதுகில் தேய்த்து வா...கரும் புள்ளிகள் சரியாகி விடும்...வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை" என்றே அறிவுரை வழங்கி இருக்கின்றார். அவனும் அவ்வாறே செய்ய மூன்றே தினங்களில் கரும் புள்ளிகள் மறைந்து விட்டன.


சம்பவம் 2:

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்காக நண்பர்களைக் காணச் சென்று இருந்தேன். அப்பொழுது நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக தனது வலது நெஞ்சுப் பகுதியில் வாயுத் தொல்லை இருந்துக் கொண்டே இருப்பதாகவும், மருத்துவர்கள் 'அது பலருக்கும் இருப்பது தான்...பிரச்சனை இல்லை' என்றே கூறி அனுப்பியதாகவும் மற்றொரு நண்பரிடம் கூறிக் கொண்டு இருந்தார். அதனைக் கேட்ட அந்த நண்பர் "அட.. இது தான் பிரச்சனையா...ஒரே நிமிசம் பொறு...எங்க அப்பா இத சரி செஞ்சிடுவாரு" என்றுக் கூறி விட்டு அவரின் தந்தையை அழைத்து வரச் சென்றார்.

"டேய்...என்னடா...!!! அவங்க அப்பா விவசாயி தானடா அப்புறம் எப்படிடா அவருக்கு மருத்துவம் தெரியும்?" என்றே நான் கேட்க..."தெரியும் மச்சி... விவசாயி தான் ஆனா வர்மக் கலையும் அவருக்குத் தெரியும்,,,ஏற்கனவே இப்படி பல பேருக்கு அவரு வைத்தியம் பார்த்து இருக்கார்" என்பதே விடையாக வந்தது. 'வர்மம்' என்றச் சொல் காதினில் விழவே ஆர்வமாக அடுத்து நடக்க இருந்த நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் வந்த நண்பரின் தந்தையார் வீட்டுக்கு முன்னர் ஒரு இருக்கையை கிழக்கே பார்க்கும்படி வைத்து விட்டு அந்த உடல் சரி இல்லாத நண்பரை அதிலே அமர வைத்தார். அந்த நண்பரும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது போல் அந்த இருக்கையிலே அமர்ந்து இருக்க மெதுவாக அந்த நண்பரின் கழுத்துப் பகுதியில் அழுத்த ஆரம்பித்தார் அவர். ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை...'அட வர்மம்னா இவ்வளவு தானா' என்று நான் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே திடீர் என்று நண்பரின் கழுத்துப் பகுதியில் ஓர் இடத்தில அவர் அழுத்தம் கொடுத்து அழுத்த அவ்வளவு தாங்க...'ஒரு நிமிசம் கண்ணு ரெண்டும் உள்ள போயி..கழுத்து தொங்கிடுச்சி....அப்படியே அவன் உடலும் ஒரு உலுக்கு உலுக்க...' பதறித் தான் போனேன் சற்று. ஆனால் அடுத்த நிமிசமே தலையை சற்று அசைத்தவாறு இயல்பான நிலைக்கு அந்த நண்பன் திரும்பி விட்டான்...ஆனால் அவன் கொடுத்த பாவனையை வைத்துப் பார்த்தால் ஏதோ மறு உலகைப் பார்த்து விட்டு வந்தவன் போலவே இருந்தது.

'இனிமே அந்த பிரச்சனை இருக்காது தம்பி...சரி பண்ணியாச்சி' என்றுக் கூறி விட்டு கிளம்ப ஆரம்பித்த அவரிடம் சற்று பேச்சிக் கொடுக்க ஆரம்பிக்க 'அவனின் இரத்தக் குழாயில் காற்று சிறிது இருந்தது என்றும், அதனால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயினை சிறிது நேரம் அடைத்துவிட்டு காற்றினை வெளியே எடுத்ததாகவும்...மூளைக்கு சென்ற இரத்த ஓட்டத்தினை அடைத்ததினால் தான் மூளைக்கு இரத்தம் செல்லாமல் அவனின் உடல் சற்று உலுக்கியதாக்கவுமே' அவர் கூறினார்...மேலும் இது ஆபத்தான வழிமுறை இல்லையா என்றதுக்கு 'இம்முறையினை தெளிவின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது...நன்கு பயிற்சிப் பெற்றவர்களே இதனை செய்ய வேண்டும்... எனக்கு பயிற்சி இருப்பதினால் நான் செய்தேன்...நான் அழுத்திய நரம்பிற்கு பதிலாக வேறு நரம்பினை அழுத்தி இருந்தால் உயிர் போயிருக்கும்... எனவே இம்முறைக்கு பயிற்சியும் கவனமும் மிக முக்கியம்..." என்றுக் கூறிவிட்டு அவர் புகைப் பிடித்துக் கொண்டே சென்று விட்டார்.

சம்பவம் 3:

கைதராபாதினில் நான் பணிக்கு சேர்ந்த புதிதில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவம். முதல் முறையாக பணிக்கு சேர்ந்து இரு வாரங்களே ஆகி இருந்தன. புதிய ஊர்...புதிய வகை உணவுகள் என்பதினால் உடல் ஒத்துழைக்காமல் காய்ச்சல் வந்து விட்டது. இருந்தும் அப்பொழுது பணிக்குரிய பயிற்சிகள் ஓடிக்கொண்டு இருந்தமையால் விடுப்பு எடுக்க முடியாத ஒரு நிலையில் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். காய்ச்சல் சற்று அதிகமாக, மதியவேளை உணவினையும் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ஏற்கனவே குன்றி இருந்த உடல் நலம் மேலும் குன்றலாயிற்று. அந்நிலையில் நிச்சயம் மருத்துவரைப் போய் பார்த்து தான் ஆக வேண்டும் என்ற நிலை வர "புதிய ஊரில்...எவர் எப்படிப்பட்ட மருத்துவர் என்று யாருக்குத் தெரியும்...எனவே பிரச்சனை இல்லாமல் இருக்க பெரிய மருத்துவமனைக்கே செல்லலாம்" என்று 'இமேஜ்' மருத்துவமனை என்ற ஒரு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர்(அது என்னவோ தெரியலைங்க பெரிய மருத்துவமனைனா நல்ல மருத்துவமனை அப்படினும் சின்ன மருத்துவமனைனா ஏதோ சராசரியா மருத்துவம் பார்க்கும் இடங்கள் அப்படினும் எண்ணங்கள் எப்படியோ நம்மில் பதிந்து தான் விடுகின்றன...). அதுவரை பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து பழக்கம் இல்லை ஆதலால் 'நம்ம ஊர்ல 30 ரூபா வாங்குவாங்க...இங்க மிஞ்சிப் போனா 100 ல இருந்து 150 ரூபாகுள்ளத் தான் வாங்குவாங்க என்று எண்ணியே சென்றேன். ஆனால் என்னுடைய அந்த எண்ணம் எவ்வளவு தவறான எண்ணம் என்று அடுத்த சில நொடிகளில் நான் உணர்ந்துக் கொண்டேன். உள்ள நுழைந்ததும் 'அங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே நமக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டும் என்றும் அதற்கு 400 ரூபாய் கட்டணம் என்றும் அவர்கள் கூற வாழ்க்கையிலேயே மருத்துவரைப் பார்க்காமலேயே மருத்துவத்திற்காக 400 ரூபாய் தண்டம் அழுதேன். சரி காச வாங்கிடானுங்க...மருத்துவமாவது ஒழுங்காப் பார்பானுங்க என்று எண்ணிக் கொண்டே மருத்துவரைக் காணச் சென்றேன்(நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் அந்த மருத்துவர் பெயர் என்னுடைய பெயராக இருந்ததே)...!!!

ஆனால் அந்த மருத்துவரும் சாதரணமாக அனைத்து மருத்துவரும் செய்யும் சோதனைகளைச் செய்து விட்டு 'உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் கம்மியான நிலையில் இருக்கின்றது...இரண்டு நாட்கள் நீங்கள் இங்கேயே சேர்ந்து மருத்துவம் பார்த்துக் கொண்டால் தான் நல்லது..." என்றுக் கூற அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது (பேரக் கெடுக்குரானுங்க மை லார்ட்..)..."ஏன்டா...எவனா இருந்தாலும் உடம்பும் சரியில்லாம சாப்பாடும் சாப்பிடாம இருந்தானா அவனுக்கு இரத்த அழுத்தம் கம்மியாத் தான்டா இருக்கும்...அதுக்கு என்னவோ அடுத்த நாளே சாவப் போற மாதிரி ஏத்தி விடுறீங்களேடா" என்று மனதினுள் எண்ணிக் கொண்டு "இல்லைங்க இருக்கட்டும்...மாத்திரை மட்டும் கொடுங்க" என்றுக் கூறி மாத்திரை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்(மாத்திரைக்கு தண்டம் 100 ரூபாய் ...). அதாவது எந்த ஒரு உருப்படியான மருத்துவமும் பார்க்காமல் வெறும் 50 ரூபாய் செலவழித்து இருக்க வேண்டிய இடத்தில நான் செலவழித்த தொகை 500. ஆனால் நான் பரவாஇல்லை....நீண்ட நாட்களுக்கு பின்னர் என்னுடைய தோழி ஒருவர் காய்ச்சலுக்காக அதே மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார்...அவரிடமும் இதேக் கதையினைக் கூறி மருத்துவமனையில் ஒரு நாள் சேரச் சொல்லி இருக்கின்றனர். அவரும் சேர்ந்து இருக்கின்றார். இறுதியில் அவர் கட்டியத் தொகை வெறும் 25000 ரூபாய் மட்டுமே!!! இதில் இருந்து நாம் அந்த மருத்துவமனை உண்மையில் எதன் மேல் அக்கறையோடு இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம் தானே. சரி இருக்கட்டும். இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம்.

மேலே நாம் கண்ட மூன்று சம்பவங்களும் உண்மைச் சம்பவங்களே. வெவ்வேறு சம்பவங்களாக இருப்பீனும் அவைகள் கூறும் செய்திகளை நாம் உற்று நோக்கத்தான் வேண்டி இருக்கின்றது இன்றைய சூழலில்.

முதல் சம்பவத்தில், எளிமையான மருத்துவமுறை நம்மை சுற்றியும் பரவிக் கிடக்கின்றது என்ற விடயம் இருக்கின்றது. வேப்ப மரம் இல்லாத ஊரினை நாம் தனியொரு படை அமைத்துத் தான் தேட வேண்டும் தமிழகத்தில். அவ்வளவு எளிதாக ஒரு மாபெரும் மருத்துவக் களஞ்சியம்/கருவூலம் நம்மிடையே காலம் காலமாக நின்றுக் கொண்டுத் தான் இருக்கின்றது. ஆனால் அதன் பயனைப் பற்றிய அறிவினை மட்டும் நாம் மறைந்துக் கொண்டு இருக்கின்றோம்...அல்லது சிலரால் மறக்கடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றோம். வேம்பு தான் என்றில்லை இன்னும் பல அறிய செல்வங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டே இன்று கிடக்கின்றன.
இரண்டாவது சம்பவத்தில், நாம் அழிந்தே விட்டது என்று என்னும் கலைகள் இன்னும் கிராமப் புறங்களில் இன்னும் உயிர் கொண்டு இருப்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. ஆனால் அவை அழிந்துக் கொண்டு வருகின்றன...வேகமாக!!! வர்மத்தின் சில கூறுகளை நண்பனின் தந்தை அவர்கள் அறிந்து வைத்து இருக்கின்றார். ஆனால் என்னுடைய நண்பனுக்கோ அதனைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஆவல் இருக்கின்றதா என்றும் தெரியவில்லை. மேலும் அத்தகைய கலைகளுக்கு மிக முக்கியம் முறையான பயிற்சியும் மேற்பார்வையும் கவனமுமே...அவை மூன்றும் இருந்தால் தான் அந்தக் கலை முறையாக வளரும்....காரணம் அவை நுண்ணியக் கலைகள்.

மூன்றாவது சம்பவத்தில் நாம் நம்முடைய நாட்டில் இன்று இருக்கும் மருத்துவர்களின் நிலையையும் மருத்துவமனைகளின் நிலையையுமே காணுகின்றோம். அனைத்தும் வியாபார நிறுவனங்களாக மாறி நீண்ட காலம் ஆகின்றன. அவற்றின் ஒரே குறி பணம்....பணம் மட்டுமே. உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் காசாக்கும் ஒரு மனிதாபிமானம் இல்லாத இயந்தரங்களாகி விட்டனர் அங்கே அனைவரும். அட உண்மைதாங்க, நாம் நேசிக்கும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் அந்நிலையில் 'அவரைக் காப்பாற்ற முடியாது என்று நன்கு அறிந்த நிலையிலும்' மருத்துவர்கள் "ஒரு 10 சதவீத வாய்ப்பு இருக்குங்க ஆனால் ரொம்ப செலவாகும்" என்றுக் கூறி விட்டால் நம்முடைய மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா அல்லது "ரொம்ப செலவாகும்" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா?


மனம் உள்ளவர்களின் மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற ஒன்றையே பிடித்துக் கொண்டு எதிர்பார்க்க ஆரம்பித்து விடும்....அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் பரவாஇல்லை "வாய்ப்பு இருக்கின்றது என்றுக் கூறிவிட்டார்கள்" என்றே ஒருவர் காத்து இருக்க ஆரம்பித்து விடுவார் (10 சதவீத வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியதற்காக 20 லட்சம் கடன்பட்டு நிற்பவர்களின் கதையினை நான் அறிந்து இருக்கின்றேன்). அவரின் அத்தகைய உன்னதமான உணர்ச்சியையும் நம்பிக்கையையும் வெறும் காசுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டத்தினையே இன்றைய மருத்துவ உலகில் நாம் பார்க்க முடிகின்றது. ஒன்று உணர்ச்சிகளின் மூலம் பணம் பார்கின்றது...இல்லையெனில் பயத்தின் மூலம் பணம் பார்கின்றது....இதுவே இன்றைய ஆங்கில மருத்துவ உலகின் கொள்கை..வழி எவ்வழியாக இருந்தாலும் பரவாஇல்லை...பணம் வந்தாக வேண்டும். அவ்வளவே அவைகளின் நீதி...அவ்வளவே அவற்றின் எண்ணம்!!! நிற்க.


 
சில வைத்திய முறைகள் செலவே இன்றி மேலும் பக்க விளைவுகள் ஏதுமின்றி எளிதான வகையில் இருக்கின்றன...ஆனால் அவை எல்லாம் மக்களின் மத்தியில் பரவலாக அறியப்பெறாமல் இருக்கின்றன...இன்னும் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால் அவை அழிந்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றிக்கு பதிலாய் மிகுந்த செலவுகளும் எதிர்பாராத பக்க விளைவுகளும் கிட்டப்பெரும் மருத்தவ முறைகள் பரவலாகப் பரவி இருக்கின்றன...அம்முறைகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் மழையில் தோன்றியக் காளான்கள் போல் அங்கங்கே முளைத்த வண்ணம் இருக்கின்றன. இன்று மருத்தவம் என்றாலே ஆங்கில மருத்துவம் தான் என்ற நிலை.

இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது....ஒரு வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு வைத்திய முறையோ செழித்து வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஏன் நிலைமை இவ்வாறு இருக்கின்றது என்பதனை அறிய நாம் இந்தக் கேள்விக்கு விடையினைக் காணத் தான் வேண்டி இருக்கின்றது...நம்முடைய வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருப்பதால் ஆங்கில வைத்திய முறை வளருகின்றதா...அல்லது நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு வளருகின்றதா?..இக்கேள்விக்கு நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு தான் ஆங்கில வைத்திய முறை வளருகின்றது என்பதே பதிலாக வரும்.

அது எவ்வாறு அழிக்கின்றது...அதனை தடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை அடுத்தப் பதிவில் காணலாம்...!!!

இன்று நாம் தீபாவளி என்றுச் சொன்னாலே அது ஒரு இந்துப் பண்டிகையாகத் தான் அறியப்படும். அப்பண்டிகையை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிருசுனர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை சிறப்பிப்பதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய நாளை சிறப்பிக்க தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இன்னும் பல காரணம் கூறுகின்றனர்...ஆயினும் கிருசுனர் நரகாசுரனை கொன்றதை சிறப்பிக்கவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்பதே பலரின் நம்பிக்கை.

ஆனால் நம்மில் பலர் அறியாத விடயம் என்னவென்றால் இந்து மக்கள் மட்டுமே கொண்டாடும் ஒரு பண்டிகை அல்ல தீபாவளி...மாறாக சமணர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே தீபாவளி ஆகும். ஆம்...சமணர்களும் தீபாவளியினைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்கள் அத்திருவிழாவை கொண்டாடுவதற்கு வேறு காரணங்கள் வைத்து இருக்கின்றனர். அக்காரணத்தை தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டு...!!!

சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் அவர்கள் பாவாபுரி நகரத்திலே அங்கு கூடி இருந்த மக்களுக்கு அறஉரை செய்துக் கொண்டு இருக்கின்றார். அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கூட்டமும் மெய் மறந்து அவரின் அருகேயே அமர்ந்து இருக்கின்றனர். இரவு முழுவதும் அவரின் உரை தொடர்கின்றது. மக்களும் அவரவர் தம் இல்லங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றனர். உரை முடிந்த உடன் அவ்விடத்திலேயே உறங்கியும் விடுகின்றனர். வர்த்தமான மகாவீரரும் தான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்தவாறே வீடு பேற்றினை அடைந்து விடுகின்றார் (சாதாரண வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் மரணம் அடைந்து விடுகின்றார் அல்லது முக்தி அடைந்து விடுகின்றார்). காலையில் விழித்து எழுந்து மக்கள் மகாவீரர் வீடு பேற்றினை எய்தியதைக் கண்ட உடன் அவர்களின் அரசனுக்குத் தெரிவிக்க, அவ்வரசன் மேலும் சில அரசர்களை அழைத்து ஆலோசனை நடத்தி இறுதியில் உலகிற்கே ஒளிவிளக்காய் திகழ்ந்த மகாவீரரை மக்கள் அனைவரும் நினைவுக் கொண்டு வழிபடுமாறு அவர் வீடு பெற்ற நாளில் (முக்தி அடைந்த நாளில்) மக்கள் அனைவரின் வீட்டிலும் விளக்கினை ஏற்றி வைத்து ஒரு சிறப்பான விழாவாக கொண்டாட வேண்டும் என்ற முடிவினைக் கொண்டு வருகின்றான். அன்று முதல் மக்கள் அனைவரும் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்த அந்த நாளில் வீடுகளில் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர். வரிசையாக தீபங்களை வைப்பதால் 'தீப ஆவலி' அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்றுப் பொருள் பட 'தீபாவளி' என்று அந்தத்தினம் பெயர் பெற ஆரம்பித்தது. மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்தப்படியால் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது. நிற்க.

இதுவே சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்குரிய காரணம் ஆகும்.

இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால் இரு வேறு சமயத்தினர் தீபாவளி என்னும் ஒரே பண்டிகையை வெவ்வேறுக் காரணத்திற்காக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சாரார் இறைவன் அசுரனை அழித்ததை நினைவில் கொள்வதற்காக கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மற்றொரு சாரார் எங்களின் இறுதி தீர்த்தங்கரர் அந்த தினத்தில் வீடு பேற்றினை அடைந்தார் அதனை நினைவில் கொள்ளும் வண்ணம் தான் நாங்கள் கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மேலும் இவ்விருசமயங்களுக்குள்ளே மாபெரும் சண்டைகள் வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றன. அந்நிலையில் தீபாவளி உண்மையிலேயே யாருடைய பண்டிகை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.

மகாவீரரைக் குறித்து நமக்குச் சான்றுகள் கி.மு காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் கி.மு வில் கிருசுனர் என்று ஒரு கடவுள் இருந்ததற்கோ அல்லது அசுரர்கள் என்றச் சாரார் இருந்தமைக்கோ எவ்வித சான்றுகளும் இதுவரைக் கிட்டப்பெற வில்லை. எனவே காலத்தில் சமணர்களின் கதை முந்தியதாக இருக்கின்றது. அப்படி இருக்க இந்து சமயத்தில் புதிதாய் தீபாவளியைக் கொண்டாட வேண்டியத் தேவை யாது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நம்முடைய உதவிக்கு வருகின்றார் ஆராய்ச்சியாளர் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள். அவரின் கூற்றுப்படி


"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!!!" (புத்தகம்: சமணமும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி)


மேலே உள்ள அவரின் கூற்றின் படி இந்து சமயத்தில் சேர்ந்த சமண மக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தம் இந்து சமயத்திற்கு வந்தமையால் அது தீபாவளி என்ற சமணப் பண்டிகையை தத்து எடுத்துக் கொண்டு வெவ்வேறு புராணக் கதைகளை அப்பண்டிகைக்கு கற்பித்துக் கொண்டது என்கின்ற கருத்து வருகின்றது. அக்கருத்து சற்று பொருந்தவும் செய்கின்றது. அதாவது,

சமணர்கள் மகாவீரரை வணங்குகின்றனர். மகாவீரர் இறந்த நாளை தீபாவளியாக அவர்கள் கொண்டாடுகின்றனர். இந்துமக்களுக்கு சமணர்கள் எதிரிகளாக இருந்தால் மகாவீரரும் எதிரியாகத் தான் இருப்பார். எதிரியினை அசுரனாக சித்தரிப்பது என்றுமே நிகழும் ஒன்று தான். எனவே இந்துக்கள் மகாவீரர் இறந்த நிகழ்வை 'கிருசுனர் அசுரனை வென்றார்...அதாவது அந்த தினம் அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான்" என்றுக் கூறி கொண்டாடுகின்றார்கள் என்றும் சிலர் கருதுகின்றனர். அதாவது சமணர்களை பொறுத்தவரையில் அந்த தினத்தில் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்து இருக்கின்றார்...இந்துக்களைப் பொறுத்த வர அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான். பொருத்தமாகத் தோணுகின்றது தானே.

ஆனால் நாம் இங்கே சிந்தித்துப்பார்க்க வேண்டியது என்னவென்றால் அக்காலத்தில் பல விடயங்கள் நல்ல எண்ணங்களுடனேயே செய்யப்பட்டு இருக்கின்றன. அத்தகைய விடயங்கள் பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் உண்மையிலேயே மகாவீரர் இறந்ததைத் தான் அசுரன் இறந்தான் என்று வைணவச் சமயம் கூறுகின்றதா அல்லது அதில் வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டித் தான் இருக்கின்றது.

ஆனால் தீபாவளி என்பது சமணப் பண்டிகை என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமயங்கள் என்றால் என்ன?

அவை கூறுகின்ற முழுமுதற் கடவுளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி, அவ்விறைவனின் கருத்துக்களை மக்கள் அனைவரிடத்தும் கொண்டு சேர்த்து, அம்மக்களை நல்வழியில் நடத்தி இறுதியில் அவர்கள் அனைவரும் அந்த முழுமுதற் இறைவனை சென்று அடையும் வழியினைக் காட்டும் ஒரு வழி...ஒரு நெறி. அது தான் ஒரு சமயமாக இருக்க முடியும். அப்படி இருக்க அப்பேற்பட்ட சமயத்தின் கருத்துக்களை பரப்புவதற்காக இருக்கும் சமய மடங்களின் கடமை என்னவாக இருக்க வேண்டும்?
அவை அந்த சமயத்தின் கருத்துக்களை மக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அச்சமய நெறியினை பின்பற்றுவோர் அனைவருக்கும் பொதுவாக இருந்து உண்மையான பொருளினை அனைவரும் உணர்ந்துக் கொள்ளும் வண்ணம் விளக்க வேண்டும்.

அதாவது இறைவன் இலக்காக இருக்கின்றான்...சமயங்கள் அவனை அடையும் வழியாக இருக்கின்றன...அப்பேற்பட்ட வழியில் மக்கள் தடங்கலின்றி பயணிக்க அங்கே அங்கே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகளாக இந்த மடங்கள் இருக்கின்றன. எந்த ஒரு வழியும் சரி வழிகாட்டிப் பலகைகளும் சரி எவ்வாறு அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டுமோ அதேப் போல் தானே இந்த சமயங்களும் சரி....சமய மடங்களும் சரி...மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்... அதனை விடுத்து ஒரு சிலர் மட்டுமே அச்சமயங்களுக்கும் சரி அந்த மடங்களுக்கும் சரி சொந்தம் கொண்டாடினால் என்ன அர்த்தம்?

இறைவன் அனைவருக்கும் பொதுவானவனாமாம்...ஆனால் அவனை அடையும் வழியினைக் கூறும் சமயங்களும் சரி சமயங்களைக் கட்டிக் காக்கும் மடங்களும் சரி ஒரு சிலருக்கு மட்டுமே சிறப்பாக உரியவனவாம்... அச்சிறப்பினை அவர்கள் பிறப்பிலேயே பெற்று விட்டார்களாம். எப்படி இருக்கின்றது கதை.

ஊரில் ஒரு கிணறு இருக்கின்றது. அதில் அனைவரும் தண்ணி எடுக்கலாம் என்று ஊர் பெரியவர் சட்டம் இயற்றி விட்டார்...ஆனால் ஒரு நிபந்தனை...அந்த கிணறில் அவருடைய வீட்டு வாளியை கொண்டு மட்டுமே தண்ணீரினை பிடிக்க வேண்டும்...அதுவும் அந்த வாளியினை அவருடைய வீட்டில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விடயம் வேறு. இந்நிலையில் அக்கிணறு மக்கள் அனைவருக்கும் உரிய கிணறாக விளங்குமா அல்லது அந்தப் பெரியவரின் வீட்டுக் கிணறாக மட்டுமே விளங்குமா? அவருடைய வீட்டுக் கிணறாகத் தானே விளங்கும். அந்த நிலை தான் இந்து மடங்களிலும். அனைத்து மடங்களும் ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப் பட்டு அந்த சாதியினரை மட்டும் சமயத்தின் பேரினைக் கூறிக் கொண்டு வளர்க்கும் பணியை செம்மையாகச் செய்துக் கொண்டு வருகின்றன.


உதாரணத்துக்கு, நித்யானந்தாவின் கதையையே எடுத்துக் கொள்வோமே. அட அதாங்க நம்ம நித்தியானந்தா மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக தேர்ந்து எடுக்கப்பட்ட கதை தான். வெகு நாட்களாக பத்திரிக்கைகளில் முக்கியமான இடத்தினைப் பிடித்து இருந்த இந்தச் செய்தியில் ஒரு விடயத்தினை நீங்கள் கவனித்து இருப்பீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை இருந்தும் இங்கே அதனைக் கூற நான் விரும்புகின்றேன்.





அதாவது மதுரை ஆதீனத்தில் 'சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ செட்டியார்' ஆகிய மூன்று சாதிகளில் இருந்து மட்டும் தான் அடுத்த ஆதீனம் வர வேண்டும் என்பதே அந்த ஆதீனங்களின் உள்ள விதி. அந்த சாதிகளைத் தவிர வேற சாதி மக்களால் அவர்கள் எவ்வளவு ஆன்மீகச் சிறப்பினைப் பெற்று இருப்பீனும் ஆதினமாக வர முடியாது. "தான் ஒரு சைவ வேளாளர் சமூகத்தினைச் சார்ந்தவன் தான்" என்று நித்தியானந்தா தனது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நிகழ்வை நியாயப்படுத்திய நிகழ்வும் இங்கே நடந்தும் இருக்கத் தான் செய்து இருக்கின்றது.

இந்நிலையில், அதாவது வேறு சமூகத்தினரால் உரிமைக் கொண்டாடப்பட முடியாத அந்த ஆதினங்களை எவ்வாறு அனைத்துச் சமூகத்தினருக்கும் பொதுவான சைவ வைணவ சமயங்களின் கொள்கைகளைக் கட்டிக் காக்கும் மடங்கள் என்று நாம் கூற முடியும்?... அவை சைவ பிள்ளை, முதலியார், செட்டியார் ஆகிய சாதிகளை கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்றன..இந்நிலையில் அந்த மடங்களை அந்த சமூகத்தினரின் மடங்கள் என்றுத் தானே கூற முடியும் அதனைத் தவிர்த்து எவ்வாறு அவை சைவ வைணவ சமய மடங்கள் என்று நாம் கருத முடியும்? இந்த மடங்கள் அனைத்தும் அவை சார்ந்து நிற்கும் சாதியினருக்காக மட்டுமே இயங்கும் அரசியல் நிறுவனங்களாகவே திகழ்கின்றன. மற்றவாறு சைவ சமயத்தின் மீதோ அல்லது இறைவனின் மீதோ உண்மையான பக்தி என்பது வெறும் பேச்சளவில் இவர்களிடையே நின்று விடுகின்றது.


அதனால் தான், சைவ சமயத்தினைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதாக கூறிக் கொள்ளும் இந்த மடங்கள்

௧) இன்று ஆதீனத் தலைமைப் பதவி ஒன்றுக்காக மடாதிபதிகள் கூட்டம் போடும் இவர்களுக்கு, இலங்கையில் இராசப்பக்சே அரசால் இந்துக்களாகிய தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டப் போதும் சரி இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்ட போதும் சரி, சொந்த இனம் அழிகின்றதே என்றும் சரி சொந்தச் சமயக் கோவில்கள் அழிகின்றனவே என்றும் சரி இரத்தம் துடிக்கவில்லை!!!

௨) மலையகத் தமிழர்களாகிய இந்துக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது அத்தமிழர்களுக்காக இவர்களுள் யாரும் குரல் கொடுக்கவில்லை!!!

௩) "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று சட்டம் போட்ட பிறகும் அனைத்து சாதியினரும் கோவில்களில் அருச்சகராக முடியாத நிலை இருக்கின்றது. அந்நிலையை நீக்க இப்படி ஒன்றுகூடி ஒரு தீர்மானம் கூட போடவில்லை"

௪) சாதிக்கலவரங்கள் ஏற்ப்படும் போது எல்லாம் பெரும்பாலும் இந்து மதத்தினைச் சார்ந்த ஏதோ ஒரு சாதிக்காரர் தாம் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே சாதிக் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க இவர்கள் களப்பணி ஆற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பட்ட வரலாறே இவர்களிடம் இல்லை!!!

௫) அண்ணல் அம்பேத்கரின் காலம் முதல் இன்று வரை பெரும்பாலும் சாதி ஏற்றத் தாழ்வு என்னும் கொடிய மன நோயின் தாக்கத்தினால் தான் இந்து சமயத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோர் பிற மதங்களுக்கு மாறுகின்றனர். அந்த மனநோயினைத் தீர்க்க இந்த மடாதிபதிகள் எந்த ஒரு தீர்வினையும் எடுக்க வில்லை.

உண்மையிலேயே இந்து சமயம் மீதும் மக்களின் மீதும் மதிப்பும் அக்கறையும் இருந்து இருக்கும் என்றால் அந்த மடங்கள் மேலே உள்ள விடயங்களுக்காக நிச்சயம் பாடுபட்டு இருந்து இருக்கும். ஆனால் அவ்வாறு அவை நடந்துக் கொள்ளவில்லை. காரணம் எளிது.

இந்த மடங்களுக்கு இந்து சமயங்களின் மீதும் சரி மக்களின் மீதும் சரி, யாதொரு உண்மையான பக்தியும் மரியாதையும் கிடையாது. அவற்றிக்கு அவைகள் சார்ந்து நிற்கும் சாதிகளும் அச்சாதியினரின் மேன்மையுமே முக்கியம். அதற்காகவே சைவ வைணவ சமயங்களை கருவிகளாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் கிட்டிய கணக்கில்லா செல்வத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அந்த மடங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதன் விளைவாகத் தான் இன்று மக்கள் அனைவருக்கும் பொதுவான சைவ சமயமும் வைணவ சமயமும் இன்று சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையான 'இந்துத்துவா (வருணாசிரம கொள்கை)' வை தாங்கிக் பிடிக்கும் சைவ மடாதிபதிகள், வைணவ மடாதிபதிகள், காஞ்சி சங்கர மடம் ஆகியவற்றின் கையில் சிக்கி சீர் அழிந்துக் கொண்டு வருகின்றன. அந்த மடாதிபதிகளுக்கு அவரவர்களின் சாதிகளே முக்கியமே தவிர இந்து மதம் அல்ல. அதனால் தான் அந்த மடங்களில் வேற்று சாதியினர் மடாதிபதிகளாக வர முடியாத நிலை இருக்கின்றது. சாதிகளை மட்டுமே இவர்கள் பார்பதனால் தான் பெரும்பாலான பிற சாதி இந்துக்கள் இன்னலுறும் போது இவர்கள் குரல் தருவதில்லை. அவ்வாறே மெல்ல மெல்ல உண்மையான இந்துச் சமயத்தினை இவர்கள் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே இன்றைய நிலையில் சமய மடங்கள் அனைத்தும் உண்மையிலேயே சமயத்திற்காக இல்லாது குறிப்பிட்ட சாதியினருக்காகவே செயல் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. அவை ஆன்மீக மடங்கள் அல்ல... அரசியல் மடங்கள்!!!

இந்நிலையில் உண்மையிலேயே இறை பக்தியும் சமயத்தின் மீது அக்கறையும் உடைய இந்துக்கள் இத்தகைய சதியினை கண்டுக் கொண்டு அச்சதியில் இருந்து இந்து சமயத்தினை விடுவித்தால் மட்டுமே உண்மையிலேயே ஆன்மீக ஒளி நம்முடைய தேசத்தில் ஒளி வீசும். இனியாவது விழிப்போம்...சாதி ஏற்றத்தாழ்வினை நிலை நிறுத்தி இந்துக்களை அழிக்கும் மடாதிபதிகளை அடையாளம் காண்போம்...!!!சாதி வெறிக் கொண்ட மடாதிபதிகளிடம் இருந்து சைவ சமயத்தினை மீட்டு எடுப்போம். இந்துக்கள் விழிப்படையாதவரை இந்தியா விழிக்காது...இந்துக்கள் வளராத வரை இந்தியா வளராது.

சில கேள்விகள்: ('சங்கர மடம் - தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்' - யாதுமாகி பதிப்பகம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது)

௧) மற்ற மடங்களுக்கும் சங்கர மடங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இந்தியாவில் ஏராளமான மடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மடமும் ஏதோ ஒரு இறைத் தத்துவத்தை முன்னிறுத்துகின்ற மடங்கள். ஜீயர் மடங்கள் இருக்கின்றன. திருவாடுதுறை மடம் திருப்பனந்தாள் மடம் என்று சைவ வைணவ மடங்கள் பல இருக்கின்றன. எல்லா மடத்துக்கும் ஒரு இறைக் கொள்கை உண்டு. அதாவது, முன் முதலாக "இறைவன் ஒருவன் உண்டு" என்பது தான் எல்லா மடத்துக்கும் உடன்பட்ட செய்தி! சங்கரமடத்துக்கு அப்படி கிடையாது. சங்கர மடத்துக்கு வேதம் தான் தெய்வம். உருவ வழிபாடே இல்லாத ஒரு மதம் இந்த சுமார்த மதம். எனவே தான் இவர்கள் யாரும் இன்றைக்கும் எந்தக் கோயிலிலும் அர்ச்சகராக இருக்க முடியாது. சங்கராச்சாரியாருக்கும் காமாட்சியம்மன் கோவிலில் கும்பிடத்தான் உரிமையே தவிர மூலத் திருமேனியைத் தொடுவதற்கோ அர்ச்சனை செய்வதற்கோ எந்த உரிமையும் கிடையாது.

௨) மடங்கள் எல்லாம் சாதி சார்ந்தனவா?

ஆம். தத்துவம் என்று பெயருக்கு வெளியிலே சொன்னாலும் எல்லா மடங்களின் பொருளாதார வளங்களும் ஏதோ ஒரு சாதிக்குரிய சொத்து தான். ஜீயர் மடங்கள் எல்லாம் வைணவப் பிராமணர்களுக்கு உரிய சொத்து. திருவாடுதுறை மடமும், தருமபுர மடமும் சைவ வேளாளர்களின் சொத்து. இது போன்ற வேறு சில சாதியார்கள்- விஸ்வகர்மா போன்றோர் - ஒன்றிரண்டு இடங்களில் மடம் வைத்து இருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் எல்லா சாதியினருக்கும் உள்ள மடம் என்று தமிழ்நாட்டிலே எதுவும் கிடையாது.




பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு