பக்தி இயக்கம்....!!!

சமணமும் பௌத்தமும் ஒருக் காலத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்த மண்ணில் இன்று அவற்றின் சுவடே இல்லா வண்ணம் இருக்கும் நிலைக்கு வழிவகுத்த ஓர் இயக்கம்...!!! உண்மையினைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இந்தியாவின் இன்றைய நிலைக்கு -இந்து மதம் என்று நாம் இன்று கொண்டாடும் மதத்திற்கு அடிப்படைக் காரணியாக ஒரு இயக்கம் அமைந்து இருக்கும் என்றால் அது இந்த இயக்கம் தான்.

இவ்வியக்கம் இல்லை என்றால் சைவமும் இல்லை... வைணவமும் இல்லை... இந்தியா இன்னும் ஒரு சமணத் தேசமாகவோ அல்லது புத்த தேசமாகவோ இருந்திருக்கக் கூடும். ஆனால் ஏனோ தெரியவில்லை, இன்று இந்து சமயத்தின் பெருமைகளைப் பற்றிப் பறைசாற்றுவோர், அச்சமயத்தினை போற்றிப் பாதுகாத்து வளர்த்த இந்த இயக்கத்தினைப் பற்றிப் பெரிதும் கண்டுக் கொள்வதில்லை. அதைக் கண்டுக் கொள்ள அவர்களுக்குத் தேவையும் இல்லை.

ஆனால் இந்தியாவினுள் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைகள் எவ்வாறு புகுந்தன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள, கவனிப்பாரின்றி இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டு இருக்கும் இந்த இயக்கத்தினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. ஏனெனில் மறைக்கப்பட்ட அந்தப் பக்கங்களில் தான் மறுக்கப்பட்ட நீதிகளும் உண்மைகளும் புதைந்துக் கிடக்கின்றன.

"கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை..." என்றுக் கூறிக் கொண்டு சமணத் துறவிகளும், கடவுளைப் பற்றி எதுவுமே சொல்லாது அன்பினை மட்டும் போதித்துக் கொண்டு புத்த துறவிகளும் சுற்றிக் கொண்டு இருந்த தமிழகத்தில் தான் "இறைவன் இல்லையா... என்னய்யா சொல்கின்றீர்... இதோ என் இறைவன் இங்கேயே இருக்கின்றானே... காணும் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிற்கின்றானே... அவ்வாறு இருக்கும் அவனை எவ்வாறையா இல்லை என்கின்றீர்" என்றவாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் புத்த சமணக் கருத்துக்களுக்கு மாற்றாக உருவான எழுச்சி தான் இந்த பக்தி இயக்கம் என்று நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

இறைவன் இல்லை என்று அதுவரை சொல்லி வந்த மண்ணில் திடீர் என்று "இறைவன் இருக்கின்றான்...அவன் யாதுமாகி நிற்கின்றான்" போன்றக் கருத்துக்கள் பரவ ஆரம்பிக்கின்றன. ஆங்காங்கே ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்ற ஆரம்பிக்கின்றனர். அவர்களின் கைப் பற்றி மெதுவாய் வைணவமும் சைவமும் வளர ஆரம்பிக்கின்றன.

தமிழ் மண்ணில் பக்தி மணம் கமிழ ஆரம்பிக்கின்றது. தெருவெங்கிலும் பக்திப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. மன்னர்கள் மாறுகின்றனர். மக்களும் மாறுகின்றனர். 'அன்பே சிவம்' என்று அன்பின் வழியில் மக்கள் இறைவனைக் காண முயல்கின்றனர். தமிழகம் சமணக் கோலத்தினைத் துறந்து சைவ வைணவக் கோலத்திற்கு மாற ஆரம்பிக்கின்றது.

நல்ல மாற்றம் தான்!!!.

ஆனால் அன்பினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் இறைவனை உணர வேண்டும்.... வாழ்வினை நல்வழியில் வாழ வேண்டும் என்பதற்காக ஆரம்பித்த இந்த எழுச்சியினை, சமணத்தினையும் புத்ததினையும் இந்த மண்ணை விட்டு நீக்குவதற்காகவும் மேலும் அச்சமயங்களால் தளர்ச்சி உற்றிருந்த தங்களது வேத நெறிக் கொள்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சில ஆரியர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்க, மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த மாற்றம் தடுமாற ஆரம்பிக்கின்றது.

அந்தத் தடுமாற்றம் ஆரம்பிக்கும் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. ஆரம்பித்து வைப்பவர் திருஞானசம்பந்தர்!!!

"என்ன திருஞானசம்பந்தரா?... தேவாரம் இசைத்த சம்பந்தரையா சொல்லுகின்றீர்... சைவம் வளர்த்த அவரைப் பற்றி எப்படி ஐயா இவ்வாறு உங்களால் கூற முடிகின்றது..." என்றுக் கேட்கின்றீர்களா... ஒரு கணம் பொறுங்கள்... இதோ அவர் எழுதிய தேவாரத்தின் சில வரிகளைப் படியுங்கள்.

"பெண்ணகத்து எழில்சாக்கியயப் பேய் அமன் தென்ணாற் கற்பழிக்கத் திருவுள்ளமே"

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.

"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும். இரண்டுக் கருத்துக்களும் முரண்பட்டு அல்லவா இருக்கின்றன. அப்படி என்றால் ஞானசம்பந்தர் வளர்த்தது என்ன?

"என்னங்க சொல்றீங்க... வரலாறு உங்களுக்குத் தெரியுமா... சமணர்கள் சைவர்களை என்னப்பாடு படுத்துனாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியுமா... திருநாவுக்கரசர் மீது மத யானையை ஏவி விட்டும், அவரை கடலில் தள்ளியும், மேலும் பல இன்னல்களும் தந்தனரே. அவர்கள் அச்செயல்களை சைவர்கள் மேல் புரிந்தப் பொழுது கோபத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பாடலைப் பாடி விட்டார். அதைப் போய் பெரிது படுத்துகின்றீர்களே" என்கின்றீர்களா. சரி அவ்வாறே வைத்துக் கொள்வோம்.

அப்படி சைவர்களை சமணர்கள் கொடுமைப்படுத்தியதால் திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடி விட்டார் என்றால் அவரின் பாடல்களில் அந்தச் செய்திகள் தான் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எதற்கு ஐயா அவர் சைவத்திற்கு துளியும் தொடர்பில்லாத வேள்விகளைப் பற்றியும் வேதங்களைப் பற்றியும் பாடி இருக்கின்றார்.

"
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."

மேலே உள்ள வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் சமணர்களை வெறுக்கின்றார் என்று தெரிய வருகின்றது. ஆனால் எதற்கு அவர்களை வெறுக்கின்றார் என்பதே நாம் அறிய வேண்டியது. சமணர்கள் வேத வேள்விகளை மதிப்பதில்லையாம்... அந்தணர்கள் சொல்லையும் கேட்பதில்லையாம்...அதனாலே திருஞானசம்பந்தர் அவர்களைச் சாடுகின்றார். அதனாலையே சாடுகின்றாரே தவிர அவர்கள் சைவத்தினை
மதிப்பதில்லை என்பதற்காக சாடவில்லை.

இதன் மூலம் திருஞானசம்பந்தர் சைவத்தினை வளர்க்கவில்லை என்றும் சைவத்தின் வாயிலாக வேத நெறிகளையே வளர்த்தார் என்றும் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தரின் இந்தச் செயல்பாடுகள் மூலம் சமணம் மற்றும் புத்தத்தினால் வீழ்ந்திருந்த வேத வேள்விக் கருத்துக்கள் சைவத்தின் கைப்பற்றிக் கொண்டு சமணத்தினையும் புத்தத்தினையும் வேரறுக்க கிளம்புகின்றன.

சைவ நெறி... சைவ வெறியாகின்றது...!!!

அன்பினைப் போதித்த மதம் 8000 சமணர்களை மதுரையில் கழுவில் ஏற்றுகின்றது. அன்பும் பக்தியும் பரவிய வீதிகளில் வெறியும் பயமும் பரவ ஆரம்பிக்கின்றது.

சைவமும் சரி... பக்தி இயக்கமும் சரி... திசை மாற ஆரம்பிக்கின்றன. இதனைக் கண்ட திருநாவுக்கரசர் போன்றோர்

"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்குஅரையன், நாளைப்போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,
கண்ணப்பன், கணம்புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு, நின் குரைகழல் அடைந்தேன்"

என்றுக் கூறிச் சென்றாலும் மதம் பிடித்த யானை எவ்வாறு கட்டுக்கடங்காது இருக்குமோ அதேப்போல் மக்களும் கட்டுக்கடங்காது இருக்கின்றனர். அவர்களுக்கு பிடித்து இருந்தது சைவம் மற்றும் வைணவ மதம்.

வேத நெறிகள் நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் பலம் பெற ஆரம்பித்தன...தமிழகத்தில். இது நடந்தக் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு.

கிட்டத்தட்ட இதேக் காலத்தில் தான் வடக்கில் ஆரியவர்த்தமும் அமைகின்றது. வேத நெறி மீண்டும் வளர நல்ல காலக்கட்டம். அதுவும் வளரத் தான் செய்தது சைவம் மற்றும் வைணவத்தின் நிழலில்.

நிலை இவ்வாறு இருக்கையில் தான் ஆதி சங்கரர் வருகின்றார்...சாதி ஏற்றத் தாழ்வுக் கருத்துக்களை தன்னுடன் அழைத்துக் கொண்டே வருகின்றார். அடுத்தப் பதிவில் அவரை சந்திப்போம்....

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14

பி.கு:

வேத வேள்விக் கருத்துக்களை திருஞானசம்பந்தர் வளர்த்ததற்கு காரணம்... அவர் ஒரு ஆரிய பிரோகிதர். 63 நாயன்மார்களில் அவர் ஒருவர் மட்டுமே ஆரியர்.சமயக் குரவர்களில் தமிழரான திருநாவுக்கரசர் முதன்மையானவராக இருந்தப் போதும் முதலிடம் திருஞானசம்பந்தருக்கு கொடுக்கப் பட்டு இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கி.பி!!!

கிருத்துவுக்கு முன்…. கிருத்துவுக்குப் பின் என காலம் இரண்டாகப் பிரிந்தக் காலம்.

“செய்தி கேட்டாயா சகோதரா…இறைவனின் மைந்தன் நமக்காக இன்னுயிர் துறந்தாராம்… பின் மீண்டும் உயிர்தெழுந்து விண்ணுலகம் சென்றாராம். கண்டவர்கள் சொல்கின்றனர். மேலும் அவர் கூறியதாக பல அறியக் கருத்துக்களையும் கூறுகின்றனர். கேட்பதற்கே இனிதாக இருக்கின்றது. நீயும் வா…போய் அவர்கள் கூறுவதை முழுவதுமாகக் கேட்போம்” என்று உலகின் மக்கள் தாங்கள் அது வரை தான் கொண்டிருந்த கொள்கைகளில் இருந்து புதுக் கொள்கைகளுக்கு மாற ஆரம்பித்தக் காலம்.

அந்த மாற்றம் இந்தியாவிற்கும் வருகின்றது…. தோமா என்னும் கிருத்துவின் சீடர் வாயிலாக.

 ’தோமா’ என்ற இந்தப் பெயர் நிச்சயம் தமிழர்களுக்கு பழக்கப்பட்ட ஒருப் பெயராக இருக்கும்… அதுவும் குறிப்பாக சென்னையில் வாழ்கின்ற மக்கள் நிச்சயம் இந்தப் பெயரினைக் கேள்விப்பட்டு இருப்பர்.

சாந்தோம்… பரங்கி மலை… போன்ற இடங்கள் இவரின் வரலாறினை இன்றும் சுமந்துக் கொண்டு இருக்கின்றன.

“தோமா இந்தியா வந்தது வரலாறா…??? சுத்த ஏமாற்றுத்தனம்…தோமா என்பது ஒருக் கட்டுக்கதை” என்றுக் கூறுவோரும் உளர்.

தோமாவின் கதை வரலாறா அல்லது கட்டுக்கதையா என்பது நாம் நிச்சயம் காண வேண்டிய ஒன்று. ஆனால் நாம் இப்பொழுது சமசுகிருதத்தை பின் பற்றிச் சென்றுக் கொண்டு இருப்பதனால் தோமாவின் கதையினை நாம் தற்சமயம் ஒதுக்கி வைத்து விட்டு பயணிக்க வேண்டி இருக்கின்றது.

ஏற்கனவே சமணம், புத்தம் போன்ற சமயங்களின் கருத்துக்களை பரப்புவதற்கு ஒரு புது மொழி தேவை என்று அரசர்கள் சிந்தித்து முடிவினை செய்தப் பொழுது கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் தோமாவின் வாயிலாக கிருத்துவின் கருத்துக்களும் இந்தியாவிற்கு வருகின்றன.

“கடவுள் இல்லை என்று சமணமும் கடவுளைப் பற்றியே ஒன்றும் சொல்லாது புத்தமும் இருக்கும் பொழுது, இவர் கடவுள் நமக்காக அவரின் புதல்வனை பலி கொடுத்தார் என்று சொல்கின்றாரே…மேலும் பல நல்லக் கருத்துக்களை கூறுகின்றாரே…இவரின் கருத்துகளையும் நாம் இந்த தேசம் முழுவதும் பரப்ப வேண்டும்.” என்று எண்ணிக் கொண்டு தோமாவின் கருத்துக்களை பரப்ப மன்னர்கள் ஆரம்பிக்கின்றனர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இக்காலக் கட்டத்தில் தான் கடவுளைப் பற்றி எதுவுமே பேசாத புத்த மதத்தில் கிருத்துவின் கொள்கையான ‘மூஒருமைக் கோட்பாட்டினை’ ஏற்றுக் கொண்டு ‘மகாயானம்’ என்னும் ஒரு பிரிவு தோன்றுகின்றது. கடவுள் மனிதராக வந்தார் என்னும் அவதாரக் கோட்பாடும் தோன்றுகின்றது. தமிழில் திருக்குறளும் தோன்றுகின்றது. நிற்க!!!

சமசுகிருதம் உருவாக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணம் அப்பொழுது இந்தியாவில் வந்து தங்கி இருந்த யவனர்கள் மற்றும் மற்ற மொழி பேசும் மக்களிடம் அந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்புவதற்கே.

“சரி மொழியினை உருவாக்கியாயிற்று…நல்லது…!!!ஆனால் இந்தக் கருத்துக்களை அதில் எப்படிப் பரப்புவது…???
ம்ம்ம்… சிறப்பு பள்ளிகள் அமைக்கலாம்…அந்தப் பள்ளிகளில் யவனர்களின் (இங்கே யவனர்கள் என்பது ஆரியர்களையும் குறிக்கின்றது) பழைய பாடல்கள்… வரலாறு…பழக்க வழக்கங்கள் முதலியவையை முதலில் சமசுகிருதத்தில் தொகுக்கலாம்… பின்னர் அவற்றில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதன் திருத்தங்களை தொகுக்கலாம்… அவர்களின் கதைகளை ஒட்டியக் கதைகளை உருவாக்கலாம்… அதில் இந்தச் சமயக் கருத்துக்களைப் புகுத்தி அவர்களைத் தெளிவு நிலைக்கு கொண்டு வரலாம்… ஆம் அது தான் சரியானதாக இருக்கும்.” என்று எண்ணி சமசுகிருதத்தில் நூல்களை உருவாக்கவும் தொகுக்கவும் பள்ளிகள் நிறுவப்படுகின்றன.

அப்பள்ளிகளில் தான் யவனர்களின் பாடல்களான வேதங்கள் தொகுக்கப்படுகின்றன. அவற்றின் திருத்தங்களாக உபநிடங்களும் உருவாக்கப்படுகின்றன.
மகாபாரதமும் தோன்றுகின்றது. அவற்றினைத் தொகுத்த வியாசர் என்னும் தமிழர் வேதவியாசர் எனப்படுகின்றார் (வியாசர் என்பது தனி மனிதனைக் குறித்தச் சொல் இல்லை என்றும் அந்தப் பள்ளிகளில் தொகுக்கும் பணியினைச் செய்த அனைவரையும் குறித்தச் சொல் என்றும் கருத்துக்கள் உண்டு. இவற்றினைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது).

இவ்வாறே காலங்கள் நகர்ந்துக் கொண்டு இருக்க தமிழகத்தின் இருண்டக் காலமும் வருகின்றது. சோழனும் பாண்டியனும் செல்வாக்கினை இழக்க தமிழகம் களப்பிரர்கள் வசம் போகின்றது. அத்துடன் கடைச் சங்கக் காலமும் முடிவிற்கு வருகின்றது. இது நடந்தது கி.பி மூன்றாம் நூற்றாண்டில்.

மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சியினைப் பிடித்த களப்பிரர்கள் கிட்டத்தட்ட கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சியில் வீற்று இருந்தார்கள். அவர்கள் யார்? தமிழர்களா?… எவ்வாறு ஆட்சியினைப் பிடித்தார்கள்….??? அவர்கள் காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? - தெரியவில்லை. இன்னும் யாரும் அதிகமாகப் படிக்காத பக்கங்களாகவே அந்தக் காலங்கள் இருந்துக் கொண்டு இருக்கின்றன. படிப்பதற்கும் தெளிவான விடயங்கள் இதுவரையும் கிட்டவில்லை.

இப்படிப்பட்ட களப்பிரர்களின் வரலாறு கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களின் எழுச்சியோடு முடிந்துப்போகின்றது. காஞ்சியினை தலைநகராகக் கொண்ட பல்லவப் பேரரசு தமிழகத்தினை ஆளத் தொடங்குகின்றது…. பிராகிருதத்தையும் சமசுகிருதத்தையும் ஆட்சிமொழியாக வைத்துக் கொண்டு. சமசுகிருதப் பள்ளிகள் பல காஞ்சி மாநகரத்தில் வளரத் தொடங்குகின்றன. கூடவே பல புத்த மடங்களும் தான். காஞ்சி மாநகரம் புத்தத்தையும் சமசுகிருதத்தையும் நன்கு வளர்க்கின்றது. (புத்தத்தினை வளர்க்க ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்ற போதிதர்மன் இங்கே உங்கள் நினைவிற்கு வரலாம்).

கி.பி ஆறாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் பல்லவர்கள் சிறப்புற்று இருக்கின்றார்கள்… புத்தமும் சமசுகிருதமும் அவர்களால் போற்றப்பட்டு இருக்கின்றன. நிற்க…. இப்பொழுது நாம் சற்று வட இந்தியாவினைக் கண்டு வந்து விட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

தென் இந்தியாவினைப் போலவே கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிட்டதட்ட வட இந்தியாவின் வரலாறும் ஒருக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சீனாவில் இருந்து புறப்பட்ட ஒரு நாடோடிக் குழுவினரான குசானர்கள் வட மேற்கு இந்தியாவினை கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆண்டுக் கொண்டு வருகின்றனர். இந்தியர்கள் அல்லாத அவர்களின் ஆட்சி பின்னர் குப்த பேரரசின் எழுச்சியினால் கி.பி நான்காம் நூற்றாண்டில் ஒரு முடிவிற்கு வருகின்றது. ஆனால் குப்த பேரரசும் நீண்டக் காலம் நிலைத்து நிற்கவில்லை. கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அப்பேரரசு ஒரு முடிவிற்கு வருகின்றது.

அதன் இறுதி மன்னர்… வட இந்தியாவின் இறுதி திராவிட பேரரசின் மன்னர் அரச வரதன் (Harshavardhan ) கொலை செய்யப்படுகின்றான். அவனின் குடும்பமும் கொலை செய்யப்படுகின்றது. அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல விடயங்களைப் போலவே இச்செயல்களும் மர்மமாகவே உள்ளன. அரச வரதன் கொலை செய்யப்படும் காலமும் வட இந்தியாவில் அன்நேர்கள் (Huns ) படையெடுத்து வரும் காலமும் ஒன்றாக இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அக்காலத்தில்,
குப்த பேரரசு வீழ்கின்றது.
வட இந்தியாவின் மீது அன்நேர்கள் படை எடுக்கின்றனர்.
வட இந்தியா பல சிறு பகுதிகளாக சிதறுகின்றது.

இதேக் காலத்தில் தான் வட இந்தியாவில் ‘ஆரியவர்தமும்’ ஆரம்பமாகின்றது. இந்தியாவின் மீது பல காலங்களில் படையெடுத்து வந்த பாரசீகர்கள்,கிரேக்கர்கள்,குசானர்கள்,அன்நேர்கள் மற்றும் வணிகத்திற்காக வந்த ரோமர்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஆரம்பித்ததே ‘ஆரிய வர்த்தம்’ என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். நிறத்தால் ஒன்றுப்பட்டு ’ஆரியவர்தத்தினை’ ஆரம்பித்த அவர்கள் தான் நாம் இன்றுக் கூறும் ஆரியர்கள் என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

அக்காலத்தில் தான் ஆரியர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொண்டு ஒரு பேரரசாக மாற சில பிரிவுகளையும் சட்டங்களையும் உருவாக்குகின்றனர். அந்தப் பிரிவுகளே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகும்.

பிற நாடுகளில் சென்று ஆன்மீகப் பொறுப்புகளை கவனிப்பவன் - பிராமணன்.
பிற நாடுகளுடன் போரிடச் செல்பவன் - சத்திரியன்.
பிற நாடுகளில் வணிகத்தினை மட்டும் பார்ப்பவன் - வைசியன்.
இவை எதையுமே செய்யாதவன் - சூத்திரன்.

இவர்களை எதிர்க்கும் எதிரிகள் அனைவரும் - பஞ்சமன்(திராவிடர்கள்).

இவர்களுக்காக எழுதிய அந்தச் சட்டமே மனு நீதி நூல் ஆகும்!!! இந்த நூல் பின்னர் பல மாற்றங்களைக் கண்டது மேலே உள்ளப் பிரிவுகளைப் போலவே!!!

தென் இந்தியாவிலும் சமசுகிருதம் இருக்கின்றது. வடக்கேயும் இருக்கின்றது. ஆரியர்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பினை வடக்கே அடைந்து இருக்கின்றனர். திராவிடர்கள் தெற்கில் இருக்கின்றனர். புத்தம் இந்தியா முழுவதும் இருக்கின்றது. இக்காலத்திலே தான் பக்தி இயக்கமும் ஆரம்பம் ஆகின்றது. இந்நிலையில் என்ன நடந்தது வரலாற்றில்….

காண்போம்… வரலாற்று ஆராய்ச்சி முயற்சி தொடரும்…!!!

பி.கு:

கி.பி முதல் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வரலாறு இன்னும் புதிராகவே இருக்கின்றது… அது வட இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும்… அல்லது தென் இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும். வட இந்தியாவின் மேல் பல படையெடுப்புகள் நிகழ்ந்த அதேக் காலக்கட்டத்தில் தென் இந்தியாவிலும் ஆட்சிகள் மாறி உள்ளன. சமசுகிருதம் வளர்ந்த இக்காலக் கட்டம் தெளிவில்லாத சூழல்களால் சூழப்பட்டு உள்ளது. இக்காலத்தின் வரலாற்றினைப் பற்றிய ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு