வலி…!!!

திடீரென்று பயங்கர வலி…!!!

உணவருந்திக் கொண்டு இருந்த ராகுல் உண்ண முடியாமல் தவித்தான்.

அதுவரை நன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த நண்பன் திடீரென்று நிறுத்தியதைக் கண்ட செல்வனும் உண்பதை நிறுத்தினான்.

“என்னடா ஆச்சி… ஏன் திடீர்னு ஒரு மாதிரி இருக்க?” என்றான் செல்வன்.

“என்னனு தெரியலடா… திடீர்னு சாப்பிடும் போது மட்டும் இடுப்புப் பக்கம் வலிக்குது… வலி பயங்கரமா இருக்குடா” என்று வலியுடனே பதில் அளித்தான் ராகுல்.

“இடுப்புப் பக்கமா?… எந்த இடத்திலேனு சரியா சொல்லு” என்றான் செல்வன் சற்று யோசித்தவாறே.

“இங்கடா..” என்று கூறியவாறே ராகுல் காட்டிய இடம் அவனின் சிறுநீரகம் இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்தது.

செல்வன் மேலும் யோசித்தான்… பின்னர் “சரி இது ஒண்ணும் பெருசா இருக்காது… நீ போயி எதுக்கும் நம்ம அலுவலகத்துல இருக்குற மருத்துவரைப் போய் பார்த்திட்டு வந்துடு” என்றுக் கூறிவிட்டு தனது உணவைத் தொடர்ந்தான்.

ராகுலும் செல்வனின் சொற்படியே சென்று மருத்துவரைச் சந்தித்தான். சில சோதனைகளும் கூடவே சில மணி நேரங்களும் கடந்தப் பின்பு அவன் வலியின் காரணம் அவனுக்கு தெரிய வந்தது.
வலிக்கு காரணம் சிறுநீரகத்தில் கல்(Kidney Stone)!!!

இதை செல்வனிடம் அவன் தெரிவித்தபோது அந்தச் செய்தியினை முன்னரே எதிர்ப்பார்த்து இருந்த மாதிரி தலையினை அசைத்து “நினைத்தேன்…!!!” என்றான் செல்வன்.

“என்னடா சொல்ற… இது கல்லாதான் இருக்கும்னு நெனச்சியா… எப்படிடா?” என்றான் ராகுல் ஆச்சர்யத்துடன்.

“சிறுநீரகக் கல்லைப் பற்றி எனக்கு கொஞ்சம் முன்னாடியே தெரியும்… நீ சொன்ன அறிகுறியும் அதுக்குரிய அறிகுறி மாதிரியே இருந்துச்சி… அதான் இது சிறுநீரக் கல்லா இருக்கலாம்னு நெனச்சேன்..” என்றான் செல்வன்.

“உனக்கு இதப் பத்தி தெரியுமா.. அப்படினா சொல்றா மச்சான்… இது ஒண்ணும் ஆபத்தானது இல்லைலே… சரியாயிடும்லே… சொல்றா” என்றான் ராகுல் சிறிது பயத்துடன்.

“ம்ம்ம்ம்…. சொல்றேன் கேள்…” என்று தொடங்கினான் செல்வன்.

சிறுநீரகக் கல்:

ஒருக் குடத்தினில் உப்புத் தண்ணீரை பிடித்து வைத்து கொள்ளுங்கள். பின்னர், அதை நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தாமலேயே விட்டு விடுங்கள். சில நாட்களுக்குப் பின்னர் அந்த நீரினை கீழே ஊற்றி விட்டு, அந்தக் குடத்தினைப் பாருங்கள். குடம் முன்னர் இருந்த நிலையிலேயேவா இருக்கும்???

இல்லை… குடத்தில் உப்பு படிந்து ஒரு கடின படிவநிலையாக உருவாகி இருக்கும். அந்த நிலையைக் கரைத்து குடத்தினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது சற்று கடினமான காரியம் தான்… ஆனால் முடியாதது அல்ல!!!

அதேப் போலத்தான் நம் சிறுநீரகமும். சிறுநீரகம் இரத்தத்தினை சுத்தப்படுத்தவும் கழிவுகளை அகற்றவும் செய்கின்றது. இந்தப் பணிக்கு அதற்கு இன்றியமையாதத் தேவை தொடர்ச்சியான நீரோட்டம் தான். அந்த நீரோட்டம் நின்று விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ அதன் பாடு திண்டாட்டம் தான்.

ஏனெனில், சிறுநீரகத்தில் இருக்கும் தண்ணீரில் தாதுப் பொருட்கள் உள்ளன. தேவை இல்லாத தாதுப் பொருட்கள் கழிவுகளாய் வெளி ஏற்றப்படுகின்றன. தேவை உள்ள தாதுப் பொருட்கள் இரத்தத்தின் மூலம் உடலுக்கு அளிக்கப் படுகின்றன.

அப்பேர்ப்பட்ட தாதுப் பொருட்கள், தக்க நேரத்தில் வெளி ஏற்றப் படாவிட்டாலோ, அல்லது சுழற்சி முறைக்காக தக்க நேரத்தில் வராவிட்டாலோ, அந்தத் தாதுப் பொருட்கள் கடினமாகி ஒரு படிவமாக உருவாகிவிடும். இதே நிலை தொடர்ந்தால் அந்தப் படிவத்தைக் கரைக்கும் தன்மையை அல்லது வலிமையினை சிறுநீரகம் இழந்து விடும். அந்தப் படிவமும் வலிமையான ஒன்றாக நிலைப் பெற்றுவிடும். அந்தப் படிவமே கல். சிறுநீரகத்தினில் அது உருவாவதால் அது சிறு நீரகக் கல்.

தண்ணீர்க் குடம் — > சிறுநீரகம்.
உப்புத் தண்ணீர் — > தாதுக்கள் கலந்த நீர்.
உப்புப் படிவம் — > சிறுநீரகக் கல்.

சரி இந்த கல் நம்முடைய உடம்பினில் உருவாகாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்???

பெரிதாய் ஒன்றும் இல்லை… நேரத்திற்கு தண்ணீர் குடியுங்கள்… அதிகமாக குடியுங்கள். அது போதும்!!! தேநீர் குடிப்பதினை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.உடம்பின் நீர் சுழற்சியினை சீராக வைத்துக் கொள்ளுங்கள்…!!! கல் உருவாக வாய்ப்பே இருக்காது.

சரி… கல் உருவாகிவிட்டது… இப்பொழுது என்ன செய்ய வேண்டும்…???

இப்பொழுதும் தண்ணீர் குடியுங்கள். அதிகமாக குடியுங்கள்… உருவாகிய கல்லினை அது கரைத்து விடும். அதற்கு என்ன, அது தான் உலகக் கரைப்பான் (universal solvent …  எப்படி எங்க மொழியாக்கம் !!!) ஆயிற்றே…

கூடுதலாக வாழைத் தண்டினை நன்றாக அரைத்து உண்டால், அது அந்தக் கல்லினைக் கரைத்து விடும். (பாட்டி மற்றும் சித்த மருத்துவ வழி). அவ்வளவே…!!! சரியான உணவுப் பக்குவம்… தண்ணீர் குடிக்கும் பழக்கம்… இவை இருந்தால் போதும்… கல் அதுவாய் கரையும்!!! மேலும் நீர் அதிகமாக பருகுவது உடலிற்கு எல்லாவிதத்திலும் நல்லது.

நண்பர்களே இந்தப் பேரண்டமே 75% நீர் இருப்பதினால் தான் இயங்குகின்றது என்றால்… நம்முடைய சிறிய உடல் இயங்க நீர் அவசியம் தானே.!!!

பி.கு:

இந்தப் பதிவு மென்பொறியாளர்களுக்கான ஒரு முக்கியப் பதிவு. எங்கோ விரைந்துக் கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் எதைத் தேடி அலைகிறோம் என்றுத் தெரியாமல் உடலினைத் தொலைத்துக் கொண்டு ஓடும் பலர் இங்கேத் தான் இருக்கின்றனர். ஏன்… நானும் அவர்களுள் ஒருவனே!!!

“உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேன்..” என்று உடலின்

முக்கியத்துவத்தினைக் கூறிச் சென்றுவிட்டார் திருமூலர்.
ஆனால் இன்றோ “உடல் தொலைத்தேன்… பணம் வளர்த்தேன்” என்றுக் கூறும் சமூகத்தினர் கூடி விட்டனர். எனவே நோய்களும் தான்.
அப்படிப்பட்ட நோய்களையும் வலிகளையும், அதற்குரிய நிவாரண வழிகளையும் பற்றி என்னால் இயன்ற அளவு மக்களுக்குத் தெரிவிக்கலாமே என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு. இந்தப் பதிவு ஒரு கையேடு… அவ்வளவே!!!
வாருங்கள் ‘உடல் வளர்ப்போம்… உயிர் வளர்ப்போம்…!!!!

5 கருத்துகள்:

நல்ல பகிர்வு. ஆனால் டீ குடித்தாலும் கல் வருமா?

அதிகமாக தேநீர் குடிப்பது உடலுக்கு தீங்கு தான் என்று சொல்லுகின்றார்கள் நண்பரே!!!

நல்ல பகிர்வு

“உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேன்..”
பயன் மிக்க பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

நல்ல பகிர்வு ,எளிய விளக்கம் .

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு