மதிப்பெண்கள் இருக்கின்றது. தேவையானத் தேர்வுகளையும் எழுதியாயிற்று. இனி அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களிடம் இருந்து ஒரு சில கோப்புகளை (documents) எதிர்ப்பார்கின்றன. மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த கோப்புகளையும் சேர்த்தே அனுப்ப வேண்டும். அந்தக் கோப்புகள் என்ன என்னவென்று இனி நாம் விரிவாகப் பார்ப்போம்.

படிப்பிற்கான லட்சியக் கோப்பு : (Statement Of Purpose)

இந்தக் கோப்பினை சுருக்கமாக SOP என்றுக் கூறுவர். இந்தக் கோப்பினைப் பற்றி நாம் பார்க்கும் முன் ஒரு கேள்வி.

நீங்கள் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போகின்றீர்கள். அப்பொழுது அங்கே உங்களிடம் 'நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?' ' உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்' என்று கேள்விகள் கேட்டார்கள் என்றால் நீங்கள் நீண்ட விளக்கத்தினைக் கொடுப்பீர்கள் அல்லவா.

அந்த விளக்கத்தினை எழுத்து வடிவினில் எழுதுவதே இந்த படிப்பிற்கான லட்சியக் கோப்பு ஆகும். 

பொதுவாக பல்கலைக்கழகங்கள் ஒரு மாணவரைத் தேர்ந்து எடுக்கும் முன், அந்த மாணவரின் இலட்சியங்களைப் பற்றியும் கனவுகளைப் பற்றியும் அறிந்துக் கொள்ள ஓரளவு முயற்சி செய்யும். அதற்காகத் தான் இந்த கோப்பினை அவர்கள் மாணவர்களிடம் இருந்து எதிர்ப்பார்கின்றார்கள்.

இந்தக் கோப்பினில் மாணவர்கள் அவர்களின் முந்தையப் படிப்பினைப் பற்றியும் (இளநிலை பட்டத்திற்கு விண்ணப்பிக்கின்றார்கள் என்றால் பள்ளிப் படிப்பினைப் பற்றியும், முதுநிலைக்கு என்றால் கல்லூரி படிப்பினைப் பற்றியும்), ஏன் குறிப்பாக அந்த நாட்டினில், அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருப் படிப்பினை படிக்க விரும்புகின்றார் என்பதனைப் பற்றியும், எதற்காக விண்ணப்பிக்கும் அந்தப் படிப்பினை படிக்க விரும்புகின்றார் என்பதனைப் பற்றியும் விளக்கமாக கூற வேண்டும். கூடவே அந்த மாணவர் பெற்று இருக்கும் இதர தகுதிகள் அதுவும் குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்த பாடத்திற்கு ஏற்றார்ப் போல் இருக்கும் தகுதிகளைக் குறிப்பிட வேண்டும். அவரது கனவினை அடைய எப்படி அந்தக் கல்லூரியின் பாடத் திட்டம் அவருக்கு உதவும் என்று அவர் கருதுகின்றார் என்பதனைப் பற்றியும் அவர் இந்தக் கோப்பினில் குறிப்பிட வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் சில வருடங்கள் வேலைப் பார்த்து விட்டு முது நிலைப் பட்டத்திற்கு விண்ணபித்தீர்கள் என்றால் உங்களுடைய பணி அனுபவங்களைப் பற்றியும் குறிப்பிடுவது நல்லது. 

மேலும் நீங்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் உங்களுக்கு பண உதவி வேண்டி இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதையும் நீங்கள் இந்த கோப்பிலேயே குறிப்பிடலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மாணவர்களின் இலட்சியத்தினையும் செயல் திட்டத்தையும் அவர்களின் தகுதியோடு விவரிப்பதே படிப்பிற்கான லட்சியக் கோப்பு (SOP) ஆகும். 

இந்தக் கோப்பினை அனைத்து பல்கலைக்கழகங்களும் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கும். ஒரு வேளை இந்த கோப்பு அந்த பல்கலைக்கழகங்களை ஈர்த்து விட்டது என்றால், படிக்க வாய்ப்புடன் சேர்த்து மாணவருக்கு படிக்க உதவித் தொகையும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

சிபாரிசுக் கடிதங்கள்: (Reference Letters)

அந்தப் பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பார்க்கும் மற்றொரு முக்கியமான கோப்பு என்னவென்றால் சிபாரிசுக் கடிதங்கள்.

உங்களின் திறமைகளையும், நீங்கள் ஏன் அந்தப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு தகுதியானவர் என்று தாங்கள் கருதும் கருத்துகளையும் உங்கள் ஆசிரியர்களோ அல்லது பணியிடத்தில் உள்ள உயரதிகாரிகளோ அந்தப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கும் வண்ணம் எழுதும் கடிதமே சிபாரிசுக் கடிதங்கள் ஆகும்.
எல்லாப் பல்கலைக்கழகங்களும் இதைப் போன்ற இரண்டு சிபாரிசுக் கடிதங்களை எதிர்ப்பார்கின்றன. 

அந்த கடிதங்களை நீங்கள் உங்களுக்கு பாடம் எடுத்த எந்த ஆசிரியரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்... ஆனால் நீங்கள் எந்தப் பாடத்தில் சேர்வதாக இருக்கின்றீர்களோ அந்தப் பாடம் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் நீங்கள் இந்தக் கடிதத்தினைப் பெற்றுக் கொள்வது என்பது சற்று சிறப்பாக அமையும். அதேப போல் நீங்கள் பணி புரிந்து இருந்தீர்கள் என்றால், உங்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்தும் நீங்கள் உங்களின் திறமையினைப் பற்றிய கடிதத்தினைப் பெற்று கொள்ளலாம்.

அந்த கடிதம், எழுதும் ஆசிரியரின் கையொப்பத்துடன், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் (பள்ளியோ கல்லூரியோ அல்லது அலுவலகமோ) முத்திரையினையும் பெற்று இருக்க வேண்டும்.

சில சமயங்களில், இந்தக் கடிதங்களை வாங்குவதற்குப் பதிலாக, உங்களைப் பற்றி அந்த ஆசிரியர்களும் மேலாளர்களும் கொண்டுள்ள கருத்தினை அறிவதற்கு  சில இணையதள பக்கங்களை குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துவது உண்டு. அந்த நிலையில், உங்கள் ஆசிரியர்கள் அந்த இணையப் பக்கத்திற்குச் சென்று அந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். 

ஆனால், அநேக ஆசிரியர்கள் இந்தக் கடிதம் எழுதும் பொறுப்பினை ஏற்றுக் கொள்வது இல்லை. எனவே நாமே தான் கடிதத்தினை அவர்கள் எழுதியவாறு எழுதி அவர்களிடம் கையொப்பம் மட்டும் வாங்க வேண்டி இருக்கும். அப்படியே அந்த நிறுவனத்தின் முத்திரையையும் பெற்று விட்டால் சிபாரிசுக் கடிதம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஆயுத்தமாகி விடும்.

சான்றிதழ்கள் :(Transcripts)

சரி... சிபாரிசுக் கடிதங்களும் வாங்கியாயிற்று படிப்பிற்கான லட்சியக் கோப்பினையும் தயார் செய்தாயிற்று. அடுத்து நாம் செய்ய வேண்டியக் காரியம் நமது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) மற்றும் நமது இளநிலையர் சான்றிதழ் (Degree Certificate) ஆகிய இரண்டின் நகலையும் நாம் படித்த பல்கலைக்கழகத்தில் இருந்துப் பெற வேண்டும். பெற்ற பின் இந்த சான்றிதழ்களையும் மேலே குறிப்பிட்டு உள்ள அந்த இரண்டுக் கோப்புகளையும் உங்களது விண்ணப்பத்தோடு சேர்த்து அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் இறுதி ஆண்டு மாணவராக இருந்தால் உங்களது மதிப்பெண்கள் பட்டியல் மட்டும் போதும். அதேப் போல் நீங்கள் பணி அனுபவம் உள்ளவராக இருந்தால் உங்கள் அனுபவத்திற்கான சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டும்.

உங்களது மதிப்பெண் பட்டியலின் நகலையும், நீங்கள் பெற்றப் பட்டத்தின் நகலையும் நீங்கள் படித்த பல்கலைக்கழகத்தில் இருந்து வாங்க சில வழிமுறைகள் உள்ளன. அதைப் பற்றி உங்கள் பல்கலைகழகத்தின் இணையதளத்திலேயே செய்தியினை வெளி இட்டு இருப்பார்கள். உதாரணத்திற்கு, இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்கள் உங்கள் சான்றிதழ்களின் நகலினை வாங்க வேண்டும் என்றால் நகல் ஒன்றிற்கு 500 உருபாய் கட்டணம் செலுத்தி ஒருப் படிவத்தினை நிரப்பிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தீர்கள் என்றால் இரண்டு வாரங்களில் உங்களது நகல் தயாராகி விடும். அந்த நகலை நீங்கள் மற்ற கோப்புகளோடு இணைத்து வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் : (Application)

பொதுவாக ஒருப் பல்கலைக்கழகத்திற்கு உரிய விண்ணப்பங்கள் அதன் இணையத்தளங்களிலேயே கிடைக்கப் பெரும். நாம் அந்த விண்ணப்பங்களை நிரப்பி அனுப்புவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

௧) அந்த விண்ணப்பத்தை தரவிறக்கிக் கொண்டு அதனை நிரப்பிய பின்பு மற்ற கோப்புகளோடு இணைத்து அந்த விண்ணப்பத்தையும் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது.
௨) இணையதளத்திலேயே அந்த விண்ணப்பத்தினை நிரப்பி விட்டு, அந்த விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணை மற்றும் ஏனைய கோப்புகளில் குறித்து விட்டு அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது. 

இந்த இரண்டு முறைகளினில் நாம் எதனை வேண்டும் என்றாலும் பின்பற்றலாம். ஆனால் சிலப் பல்கலைக்கழகங்களில் இரண்டு விண்ணப்பிக்கும் முறைகள் இருப்பதில்லை என்பதினையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே விண்ணப்பிக்கும் முன்னர் அந்தப்  பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையினை உறுதி செய்து விட்டே நாம் விண்ணப்பிக்கத்தினை நிரப்ப ஆரம்பிக்க வேண்டும்.
அனைத்து கோப்புகளையும், உரிய சான்றிதழ்களையும் அந்த விண்ணப்பத்தோடு இணைத்தோ அல்லது அந்த விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணினோடு சேர்த்தோ அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பிய நமது விண்ணப்பத்தின் நிலையினை நாம் நமது குறியீட்டு எண்ணின் மூலம் அந்தப் பல்கலைக்கழக இணையதளத்திலேயே அறிந்துக் கொள்ளலாம். அந்தப் பல்கலைக்கழகம் நமது விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்டது என்றாலும் சரி அதனை ஏற்றுக் கொண்டது என்றாலும் சரி அல்லது அதனை நிராகரித்து விட்டது என்றாலும் சரி அந்த நிலவரத்தை நாம் நமது விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணின் மூலமே இணையதளத்தினில் அறிந்துக் கொள்ளலாம். மேலும் அந்த நிலவரத்தைப் பற்றி நமக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து மின் அஞ்சலும் அனுப்புவார்கள் என்பதினால் நம்முடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்துக் கொள்ள நாம் கடினப்படத் தேவை இல்லை.

வெளிநாடுகளுக்கு விண்ணப்பிப்பதனைப் பற்றி நாம் தெளிவாக பார்த்து விட்டோம். இனி அடுத்த பதிவில் எவ்வாறு அங்கு கல்விக் கற்க உதவித் தொகையினைப் பெறுவது என்பதினைப் பற்றிப் பார்ப்போம்.

தொடரும்....

பசி!!!
உலகிலேயே ஒரு மனிதனுக்கு வரக் கூடிய கொடிய நோய்!!!

இயந்தர மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் ஒரு வேளை உணவுக்கும் வழி இன்றி, அவர்களைக் கவனிக்கவும் எவரும் இன்றி இந்த நோயினால் மடியும் மனிதர்கள் தான் உலகில் அநேகம்.

மற்ற நோய்களைக் கூட காசினை வாங்கிக் கொண்டு குணமாக்கும் மருத்துவர்கள், இந்த நோயினை கவனிப்பதே இல்லை. காரணம் - அந்த நோயாளிகளிடம் பணம் இருப்பதில்லை. இக்காலத்தில் பணம் இல்லையெனில் மருத்துவச் சேவையும் இல்லை.

காலத்தின் கோலம், பணம் இருப்பவர்களிடம் அந்த நோயும் வருவதில்லை. 'பசி ஒரு ஏழ்மை நோய்'.

இவ்வாறே இன்றைய உலகினில் பெரும்பான்மையான மக்கள் கவனிப்பார் யாரும் இன்றி இந்த கொடிய நோயினால் அவதிப் பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவர்களைக் கவனிக்க வேண்டிய அரசாங்கமோ இவர்களை பாரமாகவே கருதிக் கொண்டு இருக்கின்றது.

இத்தகைய சுழலில் தான் நாம் பசிப்பிணி மருத்துவர்களைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

பசிப்பிணி மருத்துவர்களா? அவர்கள் யார் என்றுக் கேட்கின்றீர்களா...
அவர்கள் நாம் தான்...!!
நாம் என்றால் தமிழர்கள்!

பசியின் கொடுமையை நன்கு உணர்ந்த நமது மூதாதையர்கள் பசியினை ஒரு நோயாகவே கருதி வந்து இருக்கின்றனர். கருதியது மட்டுமன்றி அந்த நோயினை குணப்படுத்துவதை தங்களது கடமையாகவே கருதி வந்து இருக்கின்றனர்.

இப்பொழுது பசிப்பிணி மருத்துவன் என்னும் சொல்லை நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பசி 
பிணி --- > நோய் 
மருத்துவன் ---> நோய்களைக் குணப்படுத்துபவன்.

சரி, பசி என்னும் நோயினைக் குணப்படுத்துபவன் பசிப்பிணி மருத்துவன் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவன் எவ்வாறு பசியினைக் தீர்த்து வைப்பான் என்றக் கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னர் ஒருக் கேள்வி.

பசியினைப் போக்குவது எப்படி?
அட என்னங்க... சாப்பிட்டா பசி பறந்து போயிடப் போகுது. இத எல்லாம் ஒரு கேள்வின்னு கேட்குறீங்க அப்படின்னு சொல்றீங்களா!!! சரி தான். உணவினை உண்டால் பசி பறந்து விடும் தான்.

அதே வழிமுறையினைத் தான் நமது மூதாதையர்களும் கடைப்பிடித்தனர். பசி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாது அன்னமிட்டு அவர்களின் பசியினைத் தீர்த்தப் பின்னர் தான் தாங்கள் உண்ணுவதை வழக்கமாக அவர்கள் கொண்டு இருந்தனர். இதை ஒரு மாபெரும் அறச் செயலாகவே நம் முன்னோர் கருதி வந்தனர்.

பசியில் வாடிக் கொண்டு இருக்கும் ஒரு மனிதனுக்கு உணவு என்பது உயிர்க் கொடுப்பது போல் ஆகும். எனவே தான் ' உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோர்' என்றும் அவர்கள் கூறினர்.

அந்த உணவினைக் கொடுக்கும் உழவுத் தொழிலையும் அவர்கள் முதன்மையானத் தொழிலாக கருதி அதற்குரிய மரியாதையினைக் கொடுத்து வந்தனர்.

வள்ளுவரும் உழவினை சிறப்பித்து பத்துக் குறள்களை உழவு என்னும் தலைப்பில் வழங்கி உள்ளார்.

ஆனால் இன்றோ, உழவு நசுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. உலகிற்கே உணவினைக் கொடுக்கும் உழவர்கள் உண்ண உணவின்றி இந்தக் கொடிய பசிப்பிணியால் வாடிக் கொண்டு இருக்கின்றனர். அதைத் தீர்க்க வேண்டிய அரசாங்கமோ அவர்களை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றது.

எந்தப் பசியினைக் கண்டு நமது முன்னோர்கள் துடித்தார்களோ, அதே பசியினை இன்றுக் கண்டும் அதை தீர்க்க முயற்சிக்காது இன்று தன் வீட்டினில் மீதமான உணவினை பத்திரமாக குளிர் சாதனப் பெட்டியினில் வைத்து அதை அடுத்த நாளுக்கு பயன்படும் என்று அவர்களுக்காகவே பாதுக்காத்துக் கொள்கின்றனர். 

பரந்த மனப்பான்மையுடைய எனது சமுதாயத்தினரில் பலர் இன்று குறுகிய மனப்பான்மை உடைய மேற்கத்தியர் போல் மாறி விட்டனர்.

முன்பு எங்கள் இனத்தில் ஒழிக்கப்பட்ட பசிப்பிணியும் இன்று மீண்டும் தலை விரித்தாடுகின்றது.

விழிப்போம் மக்களே... பசிப்பிணி மருத்துவர்களாக நம் முன்னோர் வலம் வந்த இந்த நாட்டிலேயே தான் "கணக்கில் அடங்காத நெற்க் கதிர்கள் அழுகினாலும் சரி... அவற்றை பசியால் மடிந்துக் கொண்டு ஏழை மக்களுக்குத் இலவசமாக தர மாட்டேன்" என்றுக் கூறிய மன்மோகன் சிங்கும் இன்று பிரதமராக உலா வந்து கொண்டு இருக்கின்றார்.

உணவின் அருமையை அறிந்து நாம் செழிக்க வைத்த விவசாயம்... இன்று பணம் என்னும் மாயப் பொருளின் மேல் கயவர்கள் கொண்டுள்ள மோகத்தால் அழிந்துக் கொண்டு வருகின்றது...!!!

நோய் வந்தால் தான் அதனைத் தீர்க்க மருத்துவனின் தேவையும் வரும் . இதோ நாம் துரத்திய பசிப்பிணி மீண்டும் வந்து இருக்கின்றது  அதனைத் துரத்தி விட்டு மீட்டு எடுப்போம் நம் உழவினை... அதனுடனேயே நம் வாழ்வியல் முறைகளையும் தான்.  ஏன் எனில் நாம் மருத்துவர்கள்... பசிப்பிணி மருத்துவர்கள்!!!

தொடர்ந்து தமிழினைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் அறிவோம்...!!!

பி.கு:
இணையத்தில் உலாவிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு செய்தியினை நான் காண நேர்ந்தது. அந்தச் செய்தி நிச்சயம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. இணைப்பு கீழே.. மதிய உணவு-1 

இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது. 

                                                  7                    

"குழந்தைகளே, உங்கள் காலின் கீழே உள்ள மலர்களைப் பாருங்கள், அவற்றின் மீது நடந்து அவற்றை நசுக்காதீர்கள். அதேப போல் உங்களின் மத்தியில் இருக்கும் அன்பினைப் பாருங்கள்...அதைப் புறக்கணிக்காதீர்கள்." - கிருசுனர்

"அனைத்து மனிதர்களின் மனதிற்கு மேலேயும் ஒரு உயர்ந்த சிந்தனை வீற்று இருக்கின்றது. அது தொலைவாகவும் உள்ளது அருகாமையிலும் உள்ளது. அது எல்லா உலகங்களையும் நிரப்பி உள்ளது அதே நேரத்தில் அது அந்த எல்லா உலகங்களையும் விட கணக்கிட முடியாத அளவு பெரியதாக உள்ளது. எல்லாப் பொருட்களும் அந்த உயர்ந்த சக்தியினாலே இருப்பதைக் காணும் ஒருவனால் வேறு எவரையும் சற்றும் வெறுப்புடன் நடத்த முடியாது. அனைத்து சக்திகளும் அந்த உயர்ந்த சக்தியின் பகுதிகள் தான் என்று எவன் உணருகின்றானோ அவனது வாழ்வில் எமாற்றதிற்கோ அல்லது வருத்ததிற்கோ இடம் இருக்காது. அறியாமையினால் மதங்களின் செயல்பாடுகளுக்கே கட்டுப்பட்டு இருப்பவர்கள் காரிருளினுள் கிடக்கின்றனர். அதே நேரம் பலனில்லா மந்திரங்களையும் வேள்விகளையும் நம்பியே இருக்கும் மக்கள் இன்னும் பெரிய இருளினுள் மூழ்கிக் கிடக்கின்றனர். - உபநிடங்கள் (வேதங்களில் இருந்து)

ஆம்! மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட, இன்று மிகுந்த தீவீரமாக  வளர்ந்து நிற்கும் இந்த அழிவுகளில் இருந்து மனிதகுலம் பிழைக்க வேண்டும் என்றால் மேலே நாம் கண்ட அனைத்து வித மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துகளையும் நமது காலத்திலேயே நாம் ஒழித்து விட வேண்டும். ஒரு இந்தியன் ஆங்கிலேயரின் கீழ் இருந்து விடுதலைப் பெற முயற்சித்தாலும் அல்லது வேறு யாராவது தங்களை அடக்கி வைத்து இருக்கும் ஒரே இனத்தவருக்கு எதிர்த்தோ அல்லது வேற்று இனத்தவரை எதிர்த்தோ போராடினாலும்... அல்லது வட அமெரிக்கர்களிடம் இருந்துத் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு நீக்ரோவானாலும் சரி... அல்லது பெருசிய, ருசிய மற்றும் துருக்கி நாட்டின் அரசாங்கங்களுக்கு எதிராய் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பெருசிய, ருசிய மற்றும் துருக்கி நாட்டு மக்களானாலும் சரி... அல்லது ஒரு மாபெரும் நலனை தனக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ தேடும் ஒரு மனிதனானாலும் சரி.. அவர்களுக்கு, உங்கள் விவேகானந்தர்கள், பாபா பாரதிகள் மற்றும் அவர்களைப் போன்றே கிருத்துவ உலகில் இருக்கும் பலக் கருத்தாளர்களும் வகுத்த அந்தப் பழைய மத மூட நம்பிக்கைகள் கூறும் விளக்கங்களும் நியாங்களும் நிச்சயம் தேவைப்படாது. அதைப் போன்றே எண்ணிலடங்காத அறிவியல் கோட்பாடுகளும் அவர்களுக்குத் தேவைப்படாது என்பது மட்டும் அல்ல, பல நேரங்களில் அந்தக் கருத்துக்களே அவர்களுக்கு தீமையாகவும் அமைந்து விடுகின்றன.(இந்த ஆன்மீக உலகத்தில் எதுவும் நிராகரிக்கப்பட தக்கதல்ல... எது நமக்கு பயனாக இல்லையோ அது நமக்கு நிச்சயம் தீங்கான ஒன்றாகத் தான் இருக்கும்.)

இந்தியர்களுக்கும் சரி, ஆங்கிலேயர்கள், செர்மானியர்கள், பிரன்ச்சுகாரர்கள் மற்றும் ரசியர்களுக்கும் சரி தேவையானது அரசாங்க அமைப்புகளோ அல்லது புரட்சிகளோ அல்ல...;கட்சிகளோ அல்லது பல விதமான கருத்தரங்குகளோ அல்ல...; நீர்மூழ்கிக் கப்பலிலும், வானூர்தியின் செயல்பாட்டிலும் பயன்படும் பல கருவிகளும் அல்ல...; சக்தி வாய்ந்த வெடி குண்டுகளும் அல்ல...; பணக்கார ஆளும் வர்க்கத்தினரின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்படும் பல்வேறு வேடிக்கைகளும் அல்ல...; எண்ணிலடங்காத அறிவியல் கருவிகளைக் கொண்ட பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் அல்ல...; புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் எழுச்சியும் அல்ல...; கிராமாபோன்களோ அல்லது திரைப்படக் கருவிகளோ அல்ல...; மேலும் குழந்தைத்தனமானதும் மற்றும் முட்டாள்த்தனமானதுமான கலையும் அல்ல...; ஒன்றே ஒன்று தான் அவர்களுக்குத் தேவை. மத மற்றும் அறிவியல் மூட நம்பிக்கைகள் சிறிதும் கலக்கப் பெறாது எல்லா ஆன்மாக்களிலும் இயல்பாக இடம் பிடிக்க கூடியத் தெளிவும் மற்றும் எளிமையும் நிறைந்த ஒரு உண்மையைப் பற்றிய அறிவே அவர்களுக்குத் தேவை. அன்பின் விதியே நமது வாழ்விற்கு உகந்த ஒரே விதி என்பதும் அந்த விதி எல்லையில்லா மகிழ்ச்சியினை ஒவ்வொரு மனிதனுக்கும் அதன் மூலம் மனிதகுலத்திற்கும் வழங்குகின்றது என்பதே அந்த உண்மையாகும்.

இந்த உண்மையினை உங்களது மனது அறியா வண்ணம் மறைத்துக் கொண்டு இருக்கும் அந்த போலி மதக் கருத்துக்களில் இருந்து உங்களது மனதினை எப்பொழுது நீங்கள் விடுவிக்கின்றீர்களோ அப்பொழுது அந்த உண்மை அதுவாகவே உங்கள் முன் வெளிப்படும். மனிதனுள் இயல்பாகவே இருக்கும் இந்த உண்மையானது மறுக்க முடியாதது. உலகில் உள்ள மாபெரும் சமயங்களில் ஒன்றாக இருக்கும் ஒரேப் பொருளும் இந்த உண்மைதான்.

உரிய காலத்தில் இந்த உண்மையானது நிச்சயம் வெளிப்பட்டு பொதுவாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். அப்பொழுது, அந்த உண்மையினை மூடி இருந்த முட்டாள்தனங்கள் மறைந்து விடும். அவற்றுடனே மனிதக்குலத்தினை இப்பொழுது வாட்டிக் கொண்டு இருக்கும் தீமையும் மறைந்து விடும்.

"குழந்தைகளே, உங்களது மூடப்பட்டு இருக்கும் கண்களைத் திறந்து மேலே பாருங்கள்... என்னுடைய அறிவினால் உருவாக்கப்பட்ட ஒரு சமமான உலகம்...  முழுவதும் அன்பினை வைத்தும் மகிழ்ச்சியினை வைத்தும் நிரப்பப்பட்டு இருக்கும் ஒரு உலகம்... உங்களின் முன் வெளிப்படும்... அது ஒன்று தான் உண்மையான உலகம். அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்... அன்பு உங்களை வைத்து என்ன செய்து இருக்கின்றது என்றும்... அன்பு உங்களுக்கு எவற்றை வழங்கி இருக்கின்றது என்றும்... அன்பு உங்களிடம் இருந்து எவற்றை வேண்டுகின்றது என்றும்." - கிருசுனர்

                                                                                                                யாசானையா போல்யானா 
                                                                                                                          (Yasnaya Polyana)
                                                                                                                          டிசம்பர் 14, 1908



முற்றும். 

இத்துடன் லியோ டால்சுடாய் எழுதிய கடிதம் முடிந்தது. இந்தக் கடிதத்திற்கு மகாத்மா காந்தி எழுதிய பதில் கடிதத்தை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது. 
                              6                                            
"அடிமைத்தளையில் இருந்துக் கொண்டு தொடர்ந்து சுதந்திரத்திற்காக ஏங்கிக் கொண்டும் அதை தேடிக் கொண்டும் இருக்கும் மனிதனே, நீ அன்பினை மட்டுமே தேடு. அன்பே அமைதி... மேலும் அதுவே உனக்கு முழு மனநிறைவைத் தரும். நிம்மதி மட்டுமே நிறைந்து இருக்கும் ஒரு அரிய உலகத்திற்கு இட்டுச் செல்லும் நுழைவாயிலினை திறக்கும் கருவி நானே!" - கிருசுனர்

ஒருவன் தனது பாலப் பருவத்தில் இருந்து காளைப் பருவத்திற்குள் நுழையும் போதும், காளைப் பருவத்தில் இருந்து தலைவன் பருவத்திற்குள் நுழையும் பொழுதும் அவனைச் சுற்றி என்ன செயல்கள் நிகழுமோ அதேச் செயல்கள் தான் இப்பொழுது மேற்க்கத்திய மக்களுக்கும் கிழக்கத்திய மக்களுக்கும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த பருவ மாற்றக் காலத்தில் ஒருவன் தன் வாழ்வினை அதுவரை வழிநடத்தி வந்த கட்டுப்பாடுகளை இழந்துவிட்டு ,அவனின் காலத்திற்கு ஏற்ப புதிய கட்டுப்பாடுகளை அறிந்துக் கொள்ள இயலாது நிற்கின்றான். அந்த நிலையில் போகும் திசைகள் அறியாமலேயே  அவன் வாழ ஆரம்பிக்கின்றான். இலக்கினை அறியாமல் பயணிப்பதால் தோன்றும் கவலைகளில் இருந்தும் அர்த்தமில்லாத அவன் வாழ்க்கையினில் இருந்தும் தனது கவனத்தை திருப்புவதற்கு அவன் பல்வேறு தொழில்களையும், கவனச் சிதறல்களையும் முட்டாள்தனங்களையும் உருவாக்கிக் கொள்கின்றான். அத்தகைய ஒரு சுழல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம்.

ஒருவன் வாழ்க்கையின் ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்திற்குள் நுழையும் பொழுது அவன் அது வரை கடைப்பிடித்துக் கொண்டு இருந்த அர்த்தமில்லாத செயல்களை தொடர்ந்து செய்ய முடியாத ஒருக் காலமும் வருகின்றது. இது வரை அவனை வழிநடத்திக் கொண்டு வந்த அந்தச் செயல்களை விட உயர்ந்தக் கட்டத்திற்கு அவன் வந்து விட்டான் என்று அவன் புரிந்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த கட்டம் என்று சொல்வதால் அவன் எந்த ஒரு சரியான வழிமுறையும் இன்றி வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மாறாக அவனின் வயதிற்கு ஏற்ப வாழ்க்கையினைப் பற்றி அவன் புரிந்துக் கொண்டு சில வழிமுறைகளை அவனே உருவாக்கிக் கொள்ள வேண்டும்... உருவாக்கிக் கொண்டு அவற்றின் படியே அவன் வழிநடக்க வேண்டும்.

அந்த மனிதனைப் போலவே தான் மனிதக்குலத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒருக் காலம் வரும். அத்தகைய காலம் இப்பொழுது வந்து விட்டதாகவே நான் நம்புகின்றேன், இப்பொழுது என்றால் இது 1908 ஆம் வருடம் என்பதினால் அல்ல மாறாக மனித வாழ்க்கையின் முரண்பாடுகள் இப்பொழுது ஒரு உச்சக் கட்ட அழுத்த நிலையினை அடைந்து இருக்கும் காரணத்தினாலேயே அவ்வாறு நம்புகின்றேன். ஒருப் பக்கம் அன்பின் விதியினை பற்றிய விழிப்புணர்வு இருக்கின்றது, ஆனால் மறுப்பக்கமோ நூறாண்டுக்காலமாக நடைமுறையில் இருந்து வரும் நிம்மதியில்லாததும், பொருள் ஒன்றும் இல்லாமல் வன்முறையினால் உருவாக்கப்பட்ட ஒருக் குழப்பமான வாழ்க்கை முறை அந்த அன்பின் விதியோடு மாறுப்பட்டுக் கொண்டு நிற்கின்றது.
இந்த முரண்பாட்டினை நாம் எதிர்க் கொள்ளத் தான் வேண்டும். அப்படி எதிர்க்கொள்ளும் பொழுது ஏற்படும் முடிவு நிச்சயம் அந்தப் போலியான வன்முறையின் விதிக்கு சாதகமாக இருக்காது மாறாக பழையக் காலங்களில் இருந்தே மக்களின் மனதினில் அவர்களின் இயல்பாக வீற்று இருக்கும் அன்பின் விதி என்னும் உண்மைக்கே சாதகமாக இருக்கும்.

ஆனால் மக்கள் எப்பொழுது அவர்களை முழுதாக அனைத்து வித அறிவியல் மற்றும் மத மூட நம்பிக்கைகளில் இருந்தும் மற்றத் தவறான விளக்கங்களில் இருந்தும் விடுவித்துக் கொள்கின்றார்களோ அப்பொழுது தான் அந்த மூட நம்பிக்கைகளினால் அது வரை மறைக்கப்பட்டு இருந்த அந்த உண்மையினை அதன் முழு அளவில் அவர்கள் உணர்ந்துக் கொள்ள முடியும்.

முழ்கிக் கொண்டு இருக்கும் ஒருக் கப்பலைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அந்தக் கப்பலில் இருக்கும் எடைக் கூடியப் பொருட்களை அந்தக் கப்பலை விட்டு நீக்க வேண்டும். ஆனால் அந்தப் பொருட்கள் நமக்கு ஒரு காலத்தில் பயன் அளித்தன என்று பார்த்தோம் என்றால் அந்தப் பொருட்களே கப்பலினை மூழ்கடித்து விடும். அதைப் போன்று தான் மனிதக் குலத்தின் மேம்பாட்டுக்கான உண்மையினை மறைத்துக் கொண்டு இருக்கும் அறிவியல் மூட நம்பிக்கைகளும். 

மக்கள் உண்மையினை அவர்களின் மேலான விதியாக உணர்ந்து அரவணைத்துக் கொள்ள வேண்டுமே அன்றி, சிறு வயதில் அவர்கள் உண்மையினை அறிந்து இருந்த குழப்பமான நிலையிலோ அல்லது ஒருப் பக்கமாகவோ அல்லது அவர்களின் மத மற்றும் அறிவியல் ஆசிரியர்களால் தவறாகப் போற்றுவிக்கப் பட்டவாரோ அல்ல. எல்லாவிதமான மூட நம்பிக்கைகளில் இருந்தும், அது போலி மதமாகட்டும் அல்லது போலி அறிவியலாகட்டும், உண்மை முழுமையாக விடுதலைப் பெற வேண்டியது நிச்சயம் இன்றியமையாத ஒரு தேவையாகும். அத்தகைய விடுதலை முயற்சி பகுதிகளாகவோ அல்லது காலத்தால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கோ அல்லது மக்களின் பழக்க வழக்கங்களுக்கு இணங்கியோ இருக்கக் கூடாது. மத உலகினில் சீக்கியர் என்னும் பிரிவினை உருவாக்கிய குரு நானக்கின் தாக்கத்தைப் போலவோ அல்லது கிருத்துவ உலகினில் லூத்தரினைப் (Luther) போலவோ அல்லது மற்ற மதங்களில் இருக்கும் மற்ற சீர்திருத்தக்காரர்களைப் போலவோ அந்த முயற்சி இருக்க கூடாது. அந்த முயற்சியானது, பழைய மதம் மற்றும் புதிய அறிவியல் சார்ந்த அனைத்து மூட நம்பிக்கைகளில் இருந்தும் ஆன்மீகத் தெளிவினை அதன் உண்மை வடிவினிலேயே தூயதாக பிரித்து எடுப்பதை தனது அடிப்படைக் கொள்கையாக கொண்டு இருக்க வேண்டும்.

எப்பொழுது மக்கள், ஆர்முசுடுக்கள் (Ormuzds), பிரம்மாக்கள் மற்றும் சபாவ்துகளிலும் (Sabbaoth) இருந்தும், அவர்கள் தான் கிருசுனர் மற்றும் கிருத்துவின் மறுபிறவி என்ற நம்பிக்கைகளிலும் இருந்தும்... சொர்க்கம் மற்றும் நரகத்தில் இருக்கும் நம்பிக்கையில் இருந்தும்... மறுபிறவிகள் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய நம்பிக்கைகளில் இருந்தும்... உலகில் நிகழும் வெளிநிகழ்வுகளில் இறைவன் குறுக்கிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தும்... அனைத்திற்கும் மேலாக வேதங்கள், விவிலியம், சுவிசேசங்கள்(Gospels), திருபிடங்கள் (Tripitakas) , குரான் மற்றும் இவற்றைப் போன்ற மற்ற நூல்களின் இறவாத் தன்மையின் மீது இருக்கும் நம்பிக்கையில் இருந்தும்... அதேப் போன்று  எண்ணிலடங்காத உலகங்களில் இருக்கும் கணக்கில்லாத சிறிய அணுக்களைப் பற்றியும் அவற்றின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் கூற்றுகளின் மீது இருக்கும் குருட்டு நம்பிக்கையில் இருந்தும்... இப்பொழுது மனிதகுலம் ஏற்று இருக்கும் அந்த  அறிவியல் விதிகளின் இறவாத் தன்மையில் இருக்கும் நம்பிக்கையில் இருந்தும்... வரலாறு மற்றும் பொருளாதார விதிகள் மற்றும் போராட்டம் இருந்தால் மட்டுமே பிழைத்து இருக்க முடியும் என்ற நம்பிக்கைகளில் இருந்தும்...மனதின் அடித்தளத்திலும் நினைவுகளிலும் சேர்த்து வைத்து இருக்கும் 'அறிவியல்' எனப்படும் அனைத்து பயனில்லா செயல்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் எப்பொழுது  தங்களைத் தாமே விடுவித்துக் கொள்ளுகின்றனரோ... அப்பொழுது தான்  மனிதனுள் இயல்பாகவே இருந்துக் கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தரக் கூடிய மிகவும் எளிய அன்பின் விதியானது அவர்களுக்கு மிகவும் தெளிவாக புலப்பட ஆரம்பிக்கும்.

தொடரும்...   

பெரிய மீன்: (Big Fish)

கதை சொல்பவர்களைக் கண்டு இருக்கின்றீர்களா?. 
"ஒரு ராட்சசன் வந்தான்...இறுதியில் நான் அவனை வென்றேன்.." போன்றக் கதைகள் எல்லாம் அவர்களின் வாழ்வில் நடந்ததாக சிறுவர்கள் நம்பும்படி அழகாகக் கூறுவார்கள். ஆனால் காலங்கள் நகர நகர, சிறுவயதில் அந்தக் கதைகளை ஆவலுடன் பலமுறைக் கேட்ட அந்தச் சிறுவர்கள் தாங்கள் வளர்ந்தப் பின் அதேக் கதைகளைக் கேட்டு சலித்துப் போய்விடுகின்றார்கள்...ஏன், கதைகள் என்றாலே அவர்கள் சலித்துக் கொள்கிறார்கள்... உலகம் நகர்ந்துக் கொண்டு இருக்கும் வேகத்தில் இந்தக் கதைகளினால் என்ன பயன்... இவை நேரத்திற்குப் பிடித்த கேடு என்று எண்ணி அவர்கள் அந்தக் கதைகளில் இருந்து தங்களை முற்றிலும் துண்டித்துக் கொள்கின்றனர்... அப்படியே அந்த கதையினை சொல்பவரிடம் இருந்தும் தான்.

ஆனால் அந்தக் கதை சொல்பவரோ, காலங்கள் எவ்வளவு வேகமாக நகர்ந்தாலும் சரி... தன்னை மறந்து மற்றவர்கள் விலகி நடந்தாலும் சரி... அவரது கதையினை அவர் மாற்றுவதில்லை. அது அவருடைய கதை...!!! காலங்கள் பல மாறினாலும் அவர் இருக்கும் வரை அந்தக் கதைகள் இருக்கும்... அதேப் போல்... அந்தக் கதைகள் இருக்கும் வரை அவர் இருப்பார். இப்படிப்பட்ட மனிதர்களை பொதுவாக எவரும் முழுமையாக அறிந்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சிறுவயதில் இருந்த 'டினோசார் தாத்தா' வளர்ந்தப் பின்னும் 'டினோசார் தாத்தாவாகவே' இருக்கின்றார். அந்தக் கதைகளுக்கு பின்னால் இருக்கும் ஒரு மனிதரை நாம் பொதுவாக பார்ப்பதேயில்லை... அப்படிப் பார்க்கவும் நமக்கு என்றும் தேவை வந்ததே இல்லை.

ஆனால், அந்தக் கதைகளுக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தேவை வந்தது என்றால்?... அந்தக் கதைகளுக்குள்ளே மறைந்து இருப்பது நம்முடைய தந்தையாக இருந்தால்?...நிச்சயம் நாம் அந்தக் கதைகளையும் அந்தக் கதைகளை வைத்தே அவற்றினுள் இருக்கும் நமதுத் தந்தையின் உண்மைக் கதையையும் அறிய முயற்சிப்போம் அல்லவா ... அப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் இந்தத் திரைப்படம். 

மரணப்படுக்கையில் இருக்கும் தனது தந்தையை அவரின் கதைகள் மூலமாக மட்டுமே அறிந்து இருக்கும் ஒருவன் அவரின் உண்மைக் கதையை அறிய முயற்சிக்கும் ஒரு தேடல் தான் 'பெரிய மீன்' (Big Fish).

மரணப்படுக்கையில் தனது மகனிற்காக காத்து கிடக்கும் ஒருத் தந்தையும், தனது தந்தையைப் பற்றிய உண்மை எதுவுமே தனக்கு தெரியாது என்றக் குற்ற உணர்ச்சியுடன் அவரைப் பற்றி அறிய எத்தனிக்கும் அவரது மகனும் தான் இந்தக் கதையின் முக்கிய மாந்தர்கள்.

தனது தந்தை எட்வர்டு புளுமின் (Edward Bloom) சாகசக் கதைகளை சிறு வயதில் மிகவும் ஆர்வமாய் கேட்ட வில் புளும் (Will Bloom), நாளடைவில் அதேக் கற்பனைக் கதைகளைக் கேட்டுக் கேட்டு சலித்துப் பொய் விடுகின்றான். அவனைப் பொறுத்தவரை அவனது தந்தையின் கதைகள் அனைத்தும் பொய்... நேரத்திற்கு பிடித்தக் கேடு. ஆனால் அவனது தந்தைக்கோ அந்தக் கதைகள் தான் அவரது வாழ்க்கை. இவ்வாறு தனது தந்தையுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் என்றாவது அவர் மாறுவார் என்ற எண்ணத்தில் காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான் வில். ஆனால் அவனது திருமணத்தின் போதும் கூட அவனது தந்தை அங்கு கூடியிருந்தவர்களிடம் அதேக் கதையினைக் கூறிக் கொண்டு இருக்க வில் கோபம் அடைந்து "எனக்கு உங்களுடைய பொய்கள் சலித்து விட்டன அப்பா... நீங்கள் எப்பொழுது உண்மையினைக் கூற ஆரம்பிக்கின்றீர்களோ அப்பொழுது நான் உங்களை சந்திக்கின்றேன்" என்றுக் கூறி தனது மனைவி யோசெப்பினை (Josephine) அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளி ஏறுகின்றான்.

காலங்களும் நகர்கின்றன. ஆனால் எட்வர்டும் வில்லும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ள மறுக்கின்றனர். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரே தொடர்பு வில்லின் அன்னையான சாண்டிரா (Sandra). கணவனும் சரி மகனும் சரி பேசிக் கொள்ள மாட்டேன் என்கின்றார்களே என்ற எண்ணத்தில் அவள் வாடிக் கொண்டு இருக்கும் பொழுது தான் எட்வர்டின் உடல் நலம் குன்றுகின்றது. மருத்துவர்கள் அவர்களின் கையினை விரித்து விட, இறுதிக் காலத்தில் தனது தந்தையின் அருகிலேயும் தனது அன்னைக்கு துணையாகவும் இருக்க அவனது வீட்டினை நோக்கி யோசெப்பினுடன் கிளம்புகின்றான் வில்.

இறுதி வரை அவனது தந்தையினைப் பற்றிய உண்மையினை அறிந்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவனை வாட்டுகின்றது. அவன் அவனது தந்தையை பற்றி அறிந்து வைத்து இருந்தவை எல்லாம் அவரது கதைகளை மட்டுமே...!!! தனது தந்தையை கடைசியாகப் பார்க்க போகும் வில், அவர் கூறியக் கதைகளை நினைத்துப் பார்க்கத் தொடங்குகின்றான்.

அந்தக் கதைகளின்படி, பிறப்பில் இருந்தே மற்றவர்களை விட வித்தியாசமாக இருந்த எட்வர்டு மிகவும் துணிச்சல்காரனாகவும் இருந்து இருக்கின்றான். ஊரில் உள்ள அனைவரும்  காண பயப்படும் ஒரு சதுப்பு நில மந்திரக்காரப் பாட்டியை தனியாகப் இரவில் சென்றுப் பார்த்து அவரிடம் இருந்து அவன் இறப்பினைப் பற்றி அறிந்துக் கொண்டப் பின் துணிந்து ஊரில் உள்ள மக்களுக்கு உதவி செய்கின்றான். மிக விரைவில் தனது திறமைகளால் ஆசுடன் (Ashton) என்னும் அந்த ஊரின் நாயகன் ஆகின்றான் எட்வர்டு.

அந்த நிலையில் தான் அந்த ஊரின் ஆடுகளும் கோழிகளும் திடீர் என்று காணாமல் போக, அவற்றை திருடித் தின்பது ஒரு ராட்சசன் என்று அந்த ஊர் மக்கள் அறிய வருகின்றார்கள். அந்த ராட்சசனை அழிப்பவர்களுக்கு ஊரின் மிகச் சிறந்த மரியாதை வழங்கப்படும் என்று அந்த ஊரின் அதிபர் அறிவித்ததும், அந்த ராட்சசனை தான் அழிப்பதாகக் கூறிச் செல்கின்றான் எட்வர்டு. ஆனால் எதிர்ப்பாராவிதமாக அந்த ராட்சசன் நல்லவன் என்று அறிந்துக் கொண்ட எட்வர்ட், கார்ல் (Carl) என்னும் அந்த ராட்சசனை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு புதிய சாகசங்களைத் தேடிச் செல்ல ஆரம்பிக்கின்றான்.

ஆனால் போகும் வழியில் பாதை இரண்டாக பிரியவே, தாங்கள் முன்பு பேசியவாறு மற்றொரு ஊரில் கார்லை சந்திப்பதாக சொல்லி விட்டு கடினமான பாதையினைத் தான் தேர்ந்து எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடருகின்றான் எட்வர்டு. அந்தப் பாதையில் அவன் வழித் தொலைந்துப் போய் ஒரு அழகான இடத்தினை வந்து அடைகின்றான். அங்கு இருக்கும் மக்களும் அவனை எதிர்ப்பார்த்தே காத்து இருப்பதில் ஆச்சர்யம் அடைந்த எட்வர்ட் சிறிது நேரம் அங்கே தங்கி இருந்து விட்டே செல்லலாம் என்று முடிவு எடுக்கின்றான். ஆனால் சில நேரங்கள் சில நாட்களாகியும் அவனால் அந்த ஊரினை விட்டுப் போக முடியவில்லை. அவனது மனம் ஏனோ அந்த ஊரினை விட்டுப் போக அவனுக்கு இடம் கொடுக்க மறுக்கின்றது. ஆனால், அங்கு இருந்தால் அவனது கனவுகளை அடைய முடியாது என்றும் அவனுக்காக கார்ல் காத்துக் கொண்டு இருப்பான் என்றும் உணர்ந்த எட்வர்ட் மிகவும் கடினப்பட்டு அந்த ஊரினை விட்டு வெளி ஏறுகின்றான். கிளம்பும் முன் அந்த ஊரில் உள்ள சென்னி (Jenny) என்னும் சிறுமிக்கு தான் மீண்டும் அந்த ஊருக்கு ஒரு நாள் வருவேன் என்று உறுதிக் கூறி விட்டே கிளம்புகின்றான்.

தொடர்ந்து பயணிக்கும் எட்வர்டு, தனக்காக காத்துக் கொண்டு இருந்த கார்லையும் சேர்த்துக் கொண்டு ஒரு சாகச நிறுவனத்தை (Circus Company) வந்து அடைகின்றான். அங்கு கார்லைக் கண்டு அதிர்ச்சி அடையும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்லை அவரின் சாகச நிறுவனத்தில் பணிப்புரியும் படி கேட்டுக் கொள்ளவே அவனும் அதற்கு சம்மதிக்கின்றான். 

இந்த நிலையில் தான் எட்வர்டு சாண்டிராவினை முதல் முறையாக காண்கிறான். கண்டதும் காதலும் கொள்கின்றான். ஆனால் அவளிடம் பேச அவன் முயற்சிப்பதற்குள் அவள் எங்கோ போய் விடவே அவளைத் தேட ஆரம்பிக்கின்றான். அடையாளம் தெரியாத அவளைப் பற்றி அவன் அறிய வேண்டும் என்றால் தனக்கு கீழே வேலை செய்ய வேண்டும் என்று அந்த சாகச
நிறுவனத்தின் உரிமையாளர் சொல்ல, அந்த நிறுவனத்திற்கு வேலை செய்ய ஆரம்பிக்கின்றான் எட்வர்டு. ஒருக் கட்டத்தில் அவன் தேடும் அந்தப் பெண்ணினைப் பற்றிய தகவல் அவனுக்கு வந்து சேரவே அவளைத் தேடி புறப்படுகின்றான் எட்வர்டு. அவளைக் கண்டு கொண்டு, சிறிது பிரச்சனைகளுக்கு அப்புறம் சாண்டிராவினை மணமும் முடிக்கின்றான் எட்வர்டு. மணம் முடிந்த சில நாட்களிலேயே நாட்டுக்காக போரினில் அவன் பங்குக் கொள்ள வேண்டி வரவே சாண்டிராவினை விட்டுவிட்டு கொரியா யுத்தத்தில் பங்குப் பெற கிளம்புகின்றான் எட்வர்டு. போரினில் எட்வர்டு கொல்லப்பட்டு விட்டதாக சாண்டிராவிற்கு செய்தி வரவே அவள் மனம் உடைந்துப் போகின்றாள். ஆனால் சில நாட்களுக்கு பின் எட்வர்டு உயிருடன் அவளைத் தேடி வருகின்றான். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.

வில் அவனது தந்தையின் வரலாற்றினைப் பற்றி அறிந்து இருந்தது அவ்வளவு தான். இப்பொழுதாவது தனது தந்தை தன்னிடம் உண்மையினைச் சொல்வார் என்று எதிர்ப்பார்த்து வந்து இருந்த வில்லுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இம்முறையும், அந்தக் கதைகளைத் தவிர வேறு எதையும் எட்வர்டு கூறவில்லை. அந்தக் கதைகள் வில்லுக்கு கோபத்தினை உண்டாக்கிய போதும் யோசெப்பின் அந்தக் கதைகளைக் கேட்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். அவளைப் பொறுத்த வரை உண்மையோ அல்லது பொய்யோ கவலையில்லை... ஆனால் அந்தக் கதைகளில் இருந்த காதல், உணர்ச்சிகள் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

மனைவியும் சரி அன்னையும் சரி தனது தந்தையின் பொய்க் கதைகளுக்கு ஆதரவு தருகின்றார்களே என்று எண்ணிக் கொண்டே தனது வீட்டின் பொருட்களை அடுக்கி வைக்கும் பொழுதுதான் அந்தக் கடிதத்தை அவன் முதல் முறையாகப் பார்க்கின்றான். அவனது தந்தை இறந்துப் போய் விட்டதாக அவனுடைய அன்னைக்கு ராணுவத்தில் இருந்து வந்து இருந்த ஒரு கடிதம் அது. சற்று அதிர்ந்து தான் போகின்றான் வில். இது வரை அவனின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியதை வெறும் கதை என்றே நம்பி இருந்தான் அவன். அந்தக் கடிதத்தைப் பற்றி அவனின் அன்னையிடம் வில் கேட்க, "உன்னுடைய தந்தை சொல்லியக் கதைகள் அனைத்தும் பொய் என்றே நீ முடிவு செய்து விட்டாயா?" என்று பதில் சொல்லி விட்டு அதற்கு மேல் எதுவும் பேசாது கிளம்பி விடுகின்றார் சாண்டிரா. என்ன சொல்வது என்றுத் தெரியாமல் வில் மேலும் சிலப் பொருட்களை ஒதுக்கும் பொழுது அவனது தந்தை சொன்னக் கதைகளை மெய்யாக்கும் படி சில ஆவணங்களைப் பார்க்கின்றான். 

தந்தை சொன்ன கதைகள் அனைத்தும் உண்மையா?... நாம் தான் அவரைப் புரிந்துக் கொள்ள முடியாது போய்விட்டோமா?... உண்மையிலே எனது தந்தை யார்?... என்ற கேள்விகளுக்கு பதில் தேட கிளம்புகின்றான் வில். 

பதிலினை அவன் கண்டுக் கொண்டானா?... எட்வர்டின் கதைகள் அனைத்தும் உண்மையா?... அந்தச் சிறுமி சென்னிக்கு கொடுத்த வாக்கின் படி மீண்டும் அந்த நகரத்திற்கு எட்வர்டு சென்றானா?... தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டனரா?... என்பதே மீதிக் கதை.

உணர்ச்சிகரமான கதை... சந்தேகமில்லை!!! ஆனால் உண்மையான மந்திரம் இயக்குனர் டிம் பர்டனின் (Tim Burton) கற்பனையிலும் திரைக்கதையிலும் தான் அடங்கி உள்ளது. அந்த அற்புதமான கற்பனை உலகிற்கு பக்க பலமாய் இசை. எட்வர்டின் பயணத்தோடு நாமும் பயணிக்கும் உணர்வை ஏனோ மறுக்க முடியவில்லை.

அனைவரும் பார்க்கக் கூடிய ஒரு அருமையான திரைப்படம் இது. உறவுகளும் கனவுகளும் நிறைந்து இருக்கும் அந்த உலகத்தின் முடிவில், நம் கண்களின் ஓரம் தவிர்க்க முடியாது வந்து எட்டிப் பார்க்கும் ஒருச் சின்ன கண்ணீர்த் துளியே சாட்சி... படத்தின் தரத்திற்கு!!!

ஒருவன் சொல்லும் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு கதை இருக்கின்றது... அந்தக் கதைக்குள் அந்த ஒருவன் வீற்று இருக்கின்றான்.... அந்தக் கதையாய்!!!

பி.கு:

இந்தத் திரைப்படம் பெரிய மீன் என்ற பெயரிலேயே வந்த ஒரு புத்தகத்தை தழுவி எடுத்தத் திரைப்படம் ஆகும்.

61 ஆவது ஆசுகர் விருதுகள் வழங்கும் விழாவில் அதிக விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட படமும் இது தான். ஆனால் ஒரு விருதும் கிட்டவில்லை.

தமிழ் தனது முதல் எழுத்தான 'அ'கரத்தை எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதினை நாம் கண்டாயிற்று. அதேப் போல் தமிழ் தனது எழுத்துப் பிரிவுகளின் மூலம் உயிரும் உடலும் இயங்கும் விதத்தை எவ்வாறு விளக்குகின்றது என்பதனையும் நாம் கண்டாயிற்று.
 
இனி அந்த இரண்டு விடயங்களைக் கொண்டு தமிழ் எவ்வாறு உலகின் மிகச் சிறந்த உறவினை சிறப்பிக்கின்றது என்பதனைப் பார்க்கலாம்.

உலகின் மிகச் சிறந்த உறவா... சிறிதும் சந்தேகம் இன்றி எவரும் சொல்லிவிடுவார்கள் 'அம்மா' என்று. அப்பேர்ப்பட்ட உறவிற்கு தமிழ் தனது முதல் எழுத்தினைக் கொடுத்து சிறப்பித்து இருக்கின்றது என்றுக் கண்டோம். ஆனால் தமிழ் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

அந்த உயர்ந்த உறவினைக் குறிக்கும் சொல்லுக்குள் உயிரையும் உடலையும் விளக்கிக் கொண்டு இருக்கும் தனது தத்துவத்தையும் அது மறைத்து வைத்து இருக்கின்றது. அதைப் பற்றி நாம் இப்பொழுது விரிவாகப் பார்ப்போம்...

'அம்மா' என்றச் சொல்லை சற்று கவனித்துப் பார்த்தால் அச்சொல்லினுள் தமிழ் மொழியின் மூன்று எழுத்துப் பிரிவுகளும் அடங்கி இருப்பது தெரிய வரும். அதே போல், உயிர் இருந்தால் தான் உடல் இயங்கும் என்றக் கருத்தை விளக்கும்படி உயிரைத் தொடர்ந்து மெய்யும், இவை இரண்டும் இருந்தால் தான் உணர்ச்சி இருக்கும் என்பதனை விளக்கும்படி உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் தொடர்ந்து உயிர் மெய் எழுத்து வந்து இருப்பதையும் நாம் காணலாம்.

அ --> உயிர் எழுத்து.
ம் --> மெய் எழுத்து. (உயிரைத் தொடர்ந்து மெய் வருகின்றது)
மா--> உயிர் மெய் எழுத்து. (உயிரையும் மெய்யையும் தொடர்ந்து உணர்ச்சி வருகின்றது).

இந்த எழுத்து அமைப்பு முறையின் மூலம், உயிரும் உடலும் ஒன்றி இருக்கும் இடத்தில தான்  எவ்வாறு உணர்ச்சிகள் இருக்க முடியுமோ அதேப் போல உயிரும் உடலும் ஒருசேர இணைந்து இருக்கும் அன்னையிடம் அன்பின் உணர்ச்சிகள் இயல்பிலேயே அமைந்து இருக்கும் என்பதனை அறிந்துக் கொள்ளலாம்.

இந்த விதி 'அப்பா', 'அண்ணா', 'அக்கா' போன்ற வாழ்வின் ஒரு சில முக்கியமான உறவுகளுக்கும் பொருந்துவதை நாம் சற்று உணர்ந்துப் பார்த்தாலே புரியும். இப்படி நமது நெருங்கிய உறவுகளைச் சிறப்பிக்கும் விதியினை வேறு எந்த மொழியிலாவது காணக் கூடுமா?....

சரி... நமது இன்றியமையாத உறவுகளை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்த்தோம். இப்பொழுது தமிழ் என்னும் சொல்லையே நமது மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்ப்போம்.

நம் மொழியில், மெய் எழுத்துக்களை மூன்று இனமாக பிரிப்பார்கள்.

க் ச் ட் த் ப் ற் -  என்ற எழுத்துக்கள் வல்லினம் எனவும்

ங் ஞ் ண் ந் ம் ன் - என்ற எழுத்துக்கள் மெல்லினம் எனவும்

ய் ர் ல் வ் ழ் ள் - என்ற எழுத்துக்கள் இடையினம் எனவும் பிரிக்கப் பட்டு இருக்கின்றன.

இந்த மூன்று இனங்களும் நம் மொழிக்கு மிகவும் முக்கியமானவை. எனவே இந்த மூன்று இனங்களும் சேர்ந்து அமைந்து இனிதாய்... அழகாய்.. பொருள் தருமாறு, தமிழ் என்று நமது மொழி வழங்கப் பெறுகின்றது.

த --> வல்லின எழுத்து
மி --> மெல்லின எழுத்து
ழ் --> இடையின எழுத்து.

தமிழ் --->; அழகு (பொருள்)

இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் எழலாம், 'இடையினம் என்று சொல்லுகின்றோம், அப்படி என்றால் அந்த எழுத்துக்கள் ஒரு சொல்லின் இடையில் அல்லவா வர வேண்டும்... ஆனால் தமிழ் என்னும் சொல்லில், இடையினம் இறுதியில் அல்லவா வருகின்றது... இது சரியா...?'

இந்தக் கேள்விக்கு பதிலினை அறிய நாம் நம் மொழியின் இலக்கணத்தினை அறிய வேண்டும்.

நமது தமிழ் எழுத்துக்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் எழுத்துக்கள், வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற வரிசைப் படியே அமைந்து இருக்கின்றன.

இதே வரிசை தான் நன்னூலிலும் கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே வல்லினத்தையும் மெல்லினத்தையும் தொடர்ந்தே இடையினம் வரும் என்பது  நம் மொழியின் இலக்கணம் என்பது நமக்கு புலனாகின்றது.

எனவே தமிழ் என்ற சொல்லின் அமைப்பும் சரி தான்... அதுவும் நம் மொழியின்  சிறப்புத் தான்!!!

தமிழின் சிறப்புகளைத் தொடர்ந்து அறிவோம்....!!!!!

(நன்றி: தமிழ் எழுத்துக்களைப் பற்றிய இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய 'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' என்னும் நூலின் ஆசிரியர் மாத்தளை சோமுவிற்கு எனது நன்றிகள்).

இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது. 

                                                  5                           

"நான் யார்? உன்னுடைய கண்கள் இந்த உலகத்தினை ஆச்சர்யத்துடன் பார்க்க தொடங்கிய நாளில் இருந்து நீ தேடிக் கொண்டு இருப்பவனும், இந்த உலகத்தின் எல்லைகளால் உன்னிடம் இருந்து மறைக்கப்பட்டு இருப்பவனும் நான் தான். என்னவென்று அறியாமலேயே உன்னுடைய பிறப்புரிமை என்று நீ உரிமையாய் கோரியதும் உன்னுடைய இதயத்திலே நீ வேண்டியதும் என்னையே ஆகும். உன்னுடைய ஆன்மாவினில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வீற்று இருப்பவனும் நானே. சில நேரங்களில், என்னை நீ உணரவில்லை என்பதினால் உன்னுள்ளே சோகமாய் வீற்று இருப்பேன். சில நேரங்களில், என்னுடைய தலையை உயர்த்தியும், கண்களைத் திறந்தும், உன்னை நோக்கி கை நீட்டியும், இந்த உலகத்தில் உன்னை கட்டிப் போட்டு இருக்கும் அந்த இரும்புச் சங்கிலிகளை எதிர்த்துப் புரட்சி செய்யுமாறு அமைதியாகவோ அல்லது உறுதியாகவோ உன்னை அழைத்துக் கொண்டு இருப்பேன்."- கிருசுனர்

அறிவியலின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் செயல் தொடர்ந்து உலகில் நடந்துக் கொண்டே இருந்தது, ஏன்... இன்னமும் கிருத்துவ உலகத்தினில் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றது. ஆனால், பரந்து விரிந்த இந்து, பௌதம் மற்றும் கன்புசிய உலகங்களில் இந்தப் புதிய அறிவியல் மூட நம்பிக்கைகள் நிலைப் பெறாது போய் விடும் என்றே நாம் நம்பி இருப்போம். இந்துக்களும், சீனர்களும் சப்பானியர்களும் வன்முறையினை ஆதரித்த அந்த மதப் பித்தலாட்டங்களை உணர்த்த பின், கிழக்கு உலகின் மாபெரும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததும், மனிதர்களுள் இயல்பாகவே இருக்கும் அன்பின் விதியை உணர்ந்து அதை நோக்கியே பயணித்து இருப்பர் என்றே நாம் எண்ணி இருப்போம். ஆனால் என்ன நடந்தது என்றால், அந்த மதப் பித்தலாட்டங்களின் மாற்றாக வந்த இந்த அறிவியல் மூட நம்பிக்கைகள் அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கிழக்கிலும் வலுவாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டன.

உங்களது இதழில் நீங்கள்( சுதந்திர இந்தியா இதழின் ஆசிரியர்) "வன்முறையை எதிர்ப்பது என்பது வெறும் நியாயப்படுத்தக்கூடிய ஒன்று மட்டுமல்ல அது முக்கியமானதும் கூட. எதிர்க்காமல் இருப்பது நம்முடைய மனிதாபிமானத்தையும் சுய மரியாதையும் பாதிக்கும்" என்றக் கூற்றினை மக்கள் தங்களின் செயல்களுக்கு வழிக்காட்டும் அடிப்படைக் கொள்கையாக கொள்ள வேண்டும் என்றுக் கூறி உள்ளீர்.

மனிதக்குலத்தை எல்லாவகையான நோய்களில் இருந்தும் காப்பாற்றக் கூடிய ஒரே வழி அன்பேயாகும். உங்கள் மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க கூடிய ஒரே வழியும் அன்பிலேயே தான் இருக்கின்றது.பழையக் காலங்களில் மனித வாழ்கையின் ஆன்மீக அடிப்படையாக அன்பே தான் உறுதியாகவும் தெளிவாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. அன்பும், தீமை செய்தோரை வன்முறையின் மூலம் எதிர்ப்பதும் என்றக் கருத்துகளில் உள்ள முரண்பாடு அன்பின் உண்மையான அர்த்தத்தை முற்றிலுமாக அழித்து விடும். அதன் பின், நம்பிக்கை உள்ள ஆன்மீக மக்களான நீங்கள், அந்த அறிவியல் கருத்துக்களை நம்பியும், வன்முறையை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்று எண்ணியும், மெலிதான இதயத்துடன் இந்த இருபதாம் நூற்றாண்டில் அன்பின் விதியினை மறுப்பீர்கள். உண்மைக்கு எதிரிகளும், முதலில் மதத்திற்கும் பின்னர் அறிவியலுக்கும் அடிமையாகி வன்முறையின் பயன்பாட்டினை ஆதரிக்கும் உங்களது ஐரோப்பிய ஆசிரியர்களைப் போலவே நீங்களும் இந்த வியக்க வைக்கும் முட்டாள்தனத்தை தொடருவீர்கள்.

ஆங்கிலேயர்கள் உங்கள் மக்களை அடிமைப்படுத்தியதும், தொடர்ந்து அவர்களை அடிமைகளாகவே வைத்து இருப்பதும், உங்கள் மக்கள் அவர்களை திடமாக எதிர்க்காததினாலும், வன்முறையினை வன்முறையைக் கொண்டே சந்திக்காததினாலேயுமே தான் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் உண்மை நிலவரம் உங்கள் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது. ஆங்கிலேயர்கள் உங்கள் மக்களை அடிமைப்படுத்தி இருக்கின்றனர் என்றால் அதற்கு உங்கள் மக்கள், சமுதாயத்தின் அடிப்படையாக வன்முறையை கருதியதும், இன்றும் கருதிக் கொண்டு இருப்பதுவுமே காரணம் ஆகும். அந்தக் கொள்கைக்கேற்ப தான் அவர்கள் அவர்களது சிறிய ராசாக்களுக்கு முதலில் கட்டுப்பட்டு, அந்த ராசாக்களுக்கு ஏற்ப அவர்களுக்குள்ளேயே போராடிக் கொண்டும் ஐரோப்பியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் எதிராக சண்டையிட்டுக் கொண்டும் இருந்தனர். இப்பொழுது நீங்கள் மீண்டும் அவர்களுடன் சண்டை இட முயற்சி செய்கின்றீர்கள்.

ஒரு வணிக நிறுவனம், 20 கோடி பேர் கொண்ட ஒரு நாட்டினை அடிமைப்படுத்தி உள்ளது. இதை மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாத ஒரு மனிதனிடம் சொல்லுங்கள், அவன் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள கடினப்படுவான். அந்த வாக்கியத்தின் படி, 30,000 சாதாரண, வலுவில்லாத மக்கள், இருபது கோடி அறிவோடு உடற்வலுவும் அவற்றுடன்  சுதந்திர வேட்கையும் நிறைந்த மக்களை அடிமைப் படுத்தி உள்ளனர். இந்த எண்களே உங்களுக்கு புலப்படுத்த வில்லையா?... ஆங்கிலேயர்கள் அல்ல... இந்தியர்களே அவர்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறைக் கூறும் பொழுது, குடிகாரர்கள் தங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குறைக் கூறுவதைப் போன்றே உள்ளது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால், அந்தப் பழக்கத்தினை அவர்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து அவர்கள் விலக முடியாது என்றும் அவர்களது பலத்தினை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள அந்த மது மிகவும் அவசியம் என்றும் கூறுவர். கோடிக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான அல்லது வெறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கோ அல்லது ஒரே நாட்டவர்களுக்கோ கட்டுப்பட்டுக் கிடப்பது என்பதும் அந்த குடிகாரர்களை போன்ற ஒன்று தான் ... இல்லையா?

இந்திய மக்கள் வன்முறையினால் அடிமைகள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்குரிய ஒரே காரணம் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு  வாழ்ந்து வந்ததும் மனிதனுள் இயல்பாக இருக்கும் அன்பின் விதியினை அவர்கள் உணராததுவுமே காரணம் ஆகும்.

"தன்னிடம் ஏற்கனவே இருக்கும் ஒன்றை, அது தன்னிடமே இருக்கின்றது என்பதினை அறியாது வெளியில் தேடுபவன் பரிதாபத்துக்குரிய  ஒரு  முட்டாள் ஆவான். ஆம், ஒருவனைச் சூழ்ந்து இருக்குமாறு அன்பின் உலகத்தை நான் படைத்து இருந்தும் அந்த அன்பினை உணராத ஒருவன் பரிதாபத்துக்குரிய  ஒரு  முட்டாளே ஆவான்" - கிருசுனர்

வன்முறையின் முலம் ஒரு செயலை எதிர்ப்பதை முற்றிலுமாக துறந்த அன்பின் விதியானது மக்களின் இதயத்தில் இயல்பான ஒன்றாகும். அந்த  விதி இன்றும் மக்களுக்கு புலனாகிக் கொண்டு இருக்கின்றது. எப்பொழுது மக்கள் அனைவரும் வன்முறையினை முற்றிலுமாக துறந்து, இந்த அன்பின் விதிப் படி வாழ ஆரம்பிக்கின்றார்களோ அப்பொழுது, நூறு பேர் லட்சக்கணக்கான பேர்களை அடிமை செய்வது என்ன, லட்சக்கணக்கான பேர்களால் ஒரு தனிப்பட்ட மனிதனைக் கூட அடிமையாக்க முடியாது.

தீமை செய்பவனை வன்முறையால் எதிர்க்காதீர் அதே நேரம் அந்தத் தீய செயலில் எந்தப் பங்கும் கொள்ளாதீர். அது அரசாங்க நிர்வாகமாகட்டும் ,நீதி மன்றங்களாகட்டும், வரி வசூலிக்கும்  செயல்களாகட்டும், இவை அனைத்திற்கும் மேலே ராணுவப் பணியாகட்டும் எந்தப் பணியாக இருந்தாலும் அவை தீய செயல்களுக்கு உடந்தையாக இருக்குமானால் அதில் பங்குக் கொள்ளாதீர். அப்படி இருந்தால் இந்த உலகில் உங்களை வேறு  எவராலும் அடிமைப்படுத்த முடியாது.

தொடரும்...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு