கனவுலகத்தை தேடி: (Finding Neverland)

சிறு வயதில் கனவுகள் கண்டு இருக்கின்றீர்களா?....

பூக்கள் சூழ்ந்தப் பாதைகள்...அவற்றில் கவலைகள் சிறிதும் இன்றி தொலை தூரப் பயணங்கள்... வழித்துணையாய் சிறு நீரோடை... கதைகள் பேசக் குருவிகள்... தூரத்தில் புல்வெளிகளின் மத்தியில் சிறிய வீடு...பாசமுள்ள அம்மா... நேசமுள்ள சகோதரர்கள்... புன்னகையுடன் அப்பா...!!! இப்படி அந்தக் கனவுகளில் உங்கள் உலகத்தை நீங்கள் செதுக்கிப் பார்த்து இருக்கின்றீர்களா?...

இல்லை என்று சொல்பவர்களை நிச்சயம் விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக நாம் சிறுவர்களாக இருந்த பொழுது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனி உலகம் இருந்து இருக்கும். அது நம் உலகம். நம்முடைய ரகசிய உலகம்...!!!

ஆனால், காலங்கள் நகர நகர நாமும் அந்த உலகங்களில் இருந்து விலகி நகர்ந்து விடுகின்றோம். வெளிஉலகத்தில் நாம் சந்திக்கும் சோதனைகள் நம்முள் இருக்கும் நம்முடைய கற்பனை உலகத்தை சிறிது சிறிதாக மறக்கடித்து விடுகின்றன. ஒரு காலத்தில், நம்முடைய ஆழ்மனம் அந்த உலகத்தையே நாடினாலும் நாம் நம்முடைய கற்பனை உலகத்தை தெரிந்தே இழந்து விடுகின்றோம். அந்த உலகத்தோடு நம்முள் இருக்கும் சிறுவனையும்!!!

ஆனால் அனைவரும் அந்த உலகத்தை இழப்பதில்லை. ஒரு சிலர் அந்த உலகத்திலேயே வாழ்ந்து அங்கேயே அவர்களைத் தேடிக் கொள்கின்றனர். அந்தக் கற்பனை உலகத்தில் அவர்கள் கண்டெடுத்த செல்வங்கள் வாயிலாகவே அவர்கள் அவர்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

அவர்கள் எழுத்தாளர்கள்... படைப்பாளிகள்!!! அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனை அடிப்படையாக வைத்தே இந்தக் கதை நகர்கின்றது.

தன்னுடைய கற்பனை உலகத்தினுள் தன்னையேத் தேடிக்கொண்டு இருக்கும்  ஒரு எழுத்தாளனும் தங்களது கற்பனை உலகத்தை முற்றிலுமாக தொலைத்த ஒருக் குடும்பமும் காலத்தின் ஒரு புள்ளியில் ஒன்றாகச் சந்திக்க நேருகின்றது. உண்மையின் ரணத்தையே கண்டு இருந்த அந்தக் குடும்பத்திற்கு மீண்டும் அவர்கள் தொலைத்த கற்பனை உலகத்திற்கு உரிய வழியினை காட்ட அவன் முயல்கிறான். அவனது முயற்சி என்ன ஆயிற்று?... உண்மையின் ரணத்தை  கற்பனை உலகம் மாற்றுமா? என்றக் கேள்விகளுக்கான பதிலே இந்தத் திரைப்படம்.

பரந்து விரிந்த தனது கற்பனை உலகத்தில் தன்னுடைய கனவுகளை அடைய ஒரு வழியினைத் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளன்.... தந்தையை இழந்த சோகத்தில் தங்களது கற்பனை உலகத்தை தொலைத்த மூன்று சிறுவர்கள்... சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து தனது குழந்தைகளுக்காகவே வாழும் அவர்களது அன்னை. இவர்கள் தான் இந்தக் கதையின் மாந்தர்கள்.

லண்டன் 1903...

தோல்விகள் பாரிக்கு (J.M.Barrie) புதிதல்ல. அவன் ஒரு படைப்பாளி. நிச்சயம் அவனது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு அடுத்த முறை இன்னும் சிறந்தப் படைப்பை அவனால் உருவாக்க முடியும். அதுவும் கூடுதலாக அவனது நாடகங்களை மேடையேற்ற எப்பொழுதும் தயாராகவே இருந்தது அவனது நண்பர் சார்லசுவின் (Charles) திரையரங்கம். இருந்தும் ஏதோ ஒன்று அவனை வாட்டிக் கொண்டு இருந்தது. அவனுக்கு தேவை ஒரு மாற்றம். அவனது உலகத்தினைப் புரிந்துக் கொள்ளாத மனைவியும், தங்களது இதயங்களுக்கு சமுக மதிப்பு என்றப் பெயரில் முகமூடிப் போட்டுக் கொண்டு அலையும் மனிதர்களும் சிறிது சிறிதாக சிதைத்துவிட்டிருந்த அவனது கற்பனை உலகத்தை அவன் மீட்டு எடுக்க அவனுக்கு நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தைத் தான் பாரி லண்டன் மாநகரில் தேடிக் கொண்டிருந்தான்.

அந்த சூழ்நிலையில் தான் ஒரு நாள் அவன் தற்செயலாக பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டு இருக்கும் 4 சிறுவர்களை சந்திக்க நேருகின்றது.  அருமையான சிறுவர்கள் தான்... பாரிக்கு அதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் ஒன்று தான் அவனுக்கு புரியவில்லை. ஏன் இந்த சிறுவர்களும் தங்களது இதயத்தினை முகமூடிப் போட்டு பூட்டி வைத்து இருக்கின்றனர்? ஏன் அவனது கற்பனைக் கதைகளை அவர்கள் நம்ப மறுக்கின்றனர்... எங்கே சென்றது அவர்களின் கற்பனை உலகம்?... இவ்வாறு அவன் வியந்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த சிறுவர்களின் தாயார் சில்வியாவின் (Sylvia) மூலம், அந்த சிறுவர்கள் அவர்களது தந்தையினை இழந்தக் காரணத்தினால் அவர்கள் எதையுமே நம்புவதில்லை என்ற உண்மையினை  அவன் அறிய வருகின்றான்.


தங்களது தந்தை எப்படியும் பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்த அந்தச் சிறுவர்கள் அவர்களின் தந்தையின் மரணத்தினோடு எதையும் நம்புவதையே விட்டுவிட்டனர். அதோடு அவர்களின் கற்பனை உலகங்களையும். இதனை உணர்ந்த பாரி அவர்களுக்கு உதவி புரிய ஆரம்பிக்கின்றான். எல்லா நாட்களும் அவர்களுடன் பூங்காவினில் விளையாடுவதும், அவனது கற்பனை உலகத்தினைப் பற்றி அவர்களுக்கு கதையினை சொல்வதும் என்று அவன் தன்னுடைய காலத்தை போக்க ஆரம்பிக்கின்றான். அவனுடன் பழகும் தருணங்களில் தன்னுடைய குழந்தைகள் மீண்டும் மகிழ்ச்சியாய் இருப்பதை உணர்ந்த சில்வியா பாரியை எப்பொழுது வேண்டும் என்றாலும் அவர்களது இல்லத்திற்கு சென்று சந்திக்கலாம் என்றும் சொல்கின்றாள்.

சமூகத்தினால் வாடிக் கொண்டு இருந்த அவனது கற்பனை உலகத்தில் அந்த சிறுவர்களின் வருகையால் புதுப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை உணர்ந்த அவன் சில்வியாவின் வேண்டுக்கோளுக்கு சம்மதிக்கின்றான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிறுவர்களின்றி தனது வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றே அவன் எண்ணத் தொடங்குகின்றான். அந்தச் சிறுவர்களை அடிப்படையாக வைத்தே  ஒரு புதுக் கதையையும் அவன் எழுதத் தொடங்குகின்றான். அந்தச் சிறுவர்களும் பாரியுடன் சேர்ந்து தங்களது தொலைந்த கற்பனை உலகத்தை தேடத் தொடங்குகின்றனர்.

ஆனால் அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டு இருக்கும் பொழுது பாரியும் சில்வியாவும் நட்பாய் பழகுவது பாரியின் மனைவிக்கும், சில்வியாவின் அன்னையான எம்மாவிற்கும் (Emma) பிடிக்காது போய் விடுகின்றது. ஒரு விதவை பெண்ணின் வீட்டிற்க்கு ஒரு ஆடவன் அடிக்கடி வந்து செல்வது சமுகத்தில் நல்ல செயலாக தெரியாது என்றுக் கூறி எம்மா பாரி சில்வியாவின் வீட்டிற்க்கு வருவதற்கு தடைப் போடுகிறார்.

ஆனால், அந்த சிறுவர்களின் மத்தியில் தனது புதிய உலகத்தை கண்ட பாரி அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, அவனது மனைவி அவனிடம் இருந்து பிரிந்து சென்று விடுகின்றாள். இருந்தும் அதைப் பொருட்படுத்தாது அவனது புதிய கதையையும், அந்த சிறுவர்களின் மகிழ்ச்சியையுமே தனது கருத்தில் கொண்டு பாரி அந்தச் சிறுவர்களுடன் பழகுவதைத் தொடருகின்றான். அவனது கதையும் ஒரு முற்றுப் பெற்று அதை  நாடகமாய்  மேடையில் அரங்கேற்றும் நேரமும் வருகின்றது.

இந்த நிலையில் தான் சில்வியாவிற்கு இனம் புரியாத ஒரு நோய் இருப்பது பாரிக்கும் அவளது குழந்தைகளுக்கும் தெரிய வருகின்றது. நாளுக்கு நாள் உடல் நலம் குன்றிக்கொண்டே இருக்கும் தங்களது தாயினைப் பார்த்து அந்த சிறுவர்கள் மீண்டும் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கின்றனர்.


சில்வியா பிழைத்தாளா?... அந்த குழந்தைகள் மீண்டும் அவர்களது கனவுலகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனரா?.. பாரியின் நாடகம் வெற்றிப் பெற்றதா... அவர்கள் அனைவரின் வாழ்கையும் என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.

ஒரு புல்வெளியில் தனியாக அமர்ந்து இருக்கும் பொழுது, காற்றில் வரும் ஒரு புல்லாங்குழலின் இசை நம்மை எவ்வாறு ஒரு தனி உலகத்திற்கு அழைத்து செல்லுமோ அதேப் போல் இந்த படமும் நம்மை ஒரு தனி உலகத்திற்கு  ஆர்ப்பாட்டம் இல்லாது தனியே அழைத்துச் செல்கின்றது.

படத்திற்கு பெரும் பலம் நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் (சானி டெப் (Johnny Depp) கட்டே வின்சுலேடு (Kate Winslet) - நடிப்பைக் கேட்கவா வேண்டும், அதுவும் சில்வியாவின் கடைசிப் பையனாக நடித்து இருக்கும் சிறுவனின் நடிப்பு மிகவும் சிறப்பு) அவர்களுடனே வாழ்ந்து இருக்கும் இசையும் தான். (இசைக்கு ஆசுசார் விருது). இவை இரண்டுமே படத்தின் அனைத்துக் காட்சிகளையுமே தூக்கிப் பிடித்து நிறுத்தி இருக்கின்றன.

நம்முடைய மனதின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் நம்முடைய கற்பனை உலகத்தை நாம் மீண்டும் உணர நிச்சயம் நாம் காண வேண்டிய ஒருப் படம் இது ... காண்போம்... கற்பனை உலகத்தின் மேல் நம்பிக்கையுடன்!!!   

பி.கு:

இது  ஒரு உண்மைக் கதை பேதுரு பேன் (Peter Pan) என்ற ஒரு புகழ்மிக்க கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் பாரியின் கதையே இதுவாகும். அந்தக் கதாபாத்திரத்தை அவர் உருவாக்குவதற்கு ஏதாக அமைந்த நிகழ்வுகளையே படமாக்கி இருக்கின்றார்கள்.

வெளிநாடுகளில் மேற்ப்படிப்பினை மேற்கொள்ள அந்த நாடுகளின் மொழியினை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்றும் நம்முடைய ஆங்கிலத் திறமையை அந்தப் பல்கலைக்கழகங்கள் அறிந்துக் கொள்ள நாம் எழுத வேண்டிய தேர்வுகளைப் பற்றியும் சென்றப் பதிவில் பார்த்தோம்.

சரி... மொழித் தேவையை நிறைவு செய்தாயிற்று. அடுத்ததாக அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கின்றன என்பதினை அறிந்துக் கொள்ள ஒருக் கேள்வி.

நம்முடைய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கு என்ன தகுதியினை எதிர்ப்பார்க்கின்றன?

மதிப்பெண்கள்...!!!
மேற்ப்படிப்புக்களுக்கு என தனியாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) ,பொதுத் திறமைத் தேர்வு (CAT) மற்றும் மேலாண்மைத் திறமைத் தேர்வு (MAT) போன்ற சில நுழைவுத் தேர்வுகளில் போதுமான மதிப்பெண்கள்...

அவ்வளவுத் தானே...!!! நம்முடைய பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த விசயத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் மாறுபடுவதில்லை.

உங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் மிகவும் கூர்மையாக கவனிக்கின்றன. மதிப்பெண்கள் அதிகமாக இல்லாவிடினும் பரவாயில்லை அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்து வைத்து இருக்கும் குறைந்தப்பட்ச மதிப்பெண் சதவீத அளவிற்கு உங்கள் மதிப்பெண்கள் இருந்தால் போதும். உங்களது விண்ணப்பங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அநேக பல்கலைக்கழகங்களில் அந்த குறைந்தப்பட்ச மதிப்பெண் அளவானது 65% முதல் 70% வரை இருக்கும் (இது ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்ப மாறுப்படும்).

ஆனால் நீங்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது பாடத்தில் தோற்று இருந்தாலோ அல்லது பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலோ (Arrears) உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதுவும் குறிப்பாக 3 பாடங்களுக்கு மேல் தோற்று இருந்தால் அநேக பல்கலைக்கழகங்களில் உங்களுடைய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், நம்முடைய மதிப்பெண்கள் அவர்கள் நம்முடைய விண்ணப்பத்தை தேர்வு செய்வதற்கு மட்டுமே உதவும். விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே நமக்கு இடம் கிடைத்துவிட்டது என்றுப் பொருள் கிடையாது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம்முடைய மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றார்களோ அதே அளவு நம்முடைய இதர செயல்களுக்கும், அதாவது விளையாட்டுச் சாதனைகள்... அறிவியல் சார்ந்த கருத்தரங்குகளில் பங்குப் பெற்றுக் கொள்வது... தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தும் செயல்கள் போன்றவற்றிற்கும் தருவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு உரிய செயல்களில் நாம் நாமாகவே ஈடுபாடு காட்டி இருக்கின்றோமா என்றும் அவர்கள் பார்ப்பார்கள். அதன் அடிப்படையிலேயும் நமது விண்ணப்பத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

உதாரணத்திற்கு, ஒருப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் மாணவர் படிப்பில் கெட்டி. 80% மதிப்பெண் வைத்து இருக்கின்றார். ஆனால் வேறு இதர செயல்கள் என்று அவர் எதுவும் செய்யவில்லை.

இரண்டாம் மாணவரோ 70% மதிப்பெண்கள் வைத்து இருக்கின்றார். அதனுடன் பலச் செயல்களை முன்னின்று கல்லூரியில் நடத்தி இருக்கின்றார். பல கருத்தரங்குகளில் பங்குப் பெற்று வென்று இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது, இவர்கள் இருவரின் விண்ணப்பங்களுமே ஏற்றுக் கொள்ளப் படும். ஆனால் அந்த இரண்டாம் மாணவருக்கு தான் முன்னுரிமை அளிக்கப் படும்.

அதேப் போல, ஒரு சில படிப்புகளுக்கு, குறிப்பாக பொறியியல் மற்றும் மேலாண்மைப் படிப்புக்களில் சேர ஒரு சிலத் தேர்வுக்களை மாணவர்கள் நிச்சயம் எழுத வேண்டி இருக்கின்றது. பட்டதாரிகளுக்கான மேலாண்மை நுழைவுத் தேர்வுகள் (GMAT) மற்றும் பட்டதாரிகளுக்கான சான்றுத் தேர்வுகள் (GRE) போன்றத் தேர்வுகளில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே உலகில் உள்ள தலைச் சிறந்த பல்கலைக்கழகங்கள் அவரைத் தேர்வு செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்கின்றன.

இந்தத் தேர்வுகள் முக்கியமான தேர்வுகள் தான், ஆனால் இந்தத் தேர்வுகள் எழுதாத மாணவர்களையும் தேர்வு செய்யும் நல்லப் பல்கலைக்கழகங்களும் இருக்கத் தான் செய்கின்றன. எனவே இந்தத் தேர்வுகளை எழுதினால் தான் வெளிநாட்டினில் படிக்க முடியும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. அதுவும் குறிப்பாக மாணவர்களைச் சேர்க்க இந்தத் தேர்வுகள் நிச்சயம் வேண்டுமா? என்றக் கேள்வி பலப் பல்கலைக்கழகங்களுக்கு எழுந்து உள்ளது. எனவே இந்தத் தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு நீங்கள் படிக்க விரும்பும் பாடத்திற்கான அடிப்படைத் தகுதிகளில் அந்தத் தேர்வுகள் குறியிடப்பட்டு உள்ளனவா என்று அந்தப் பல்கலைகழக இணையத்தளத்தில் சரிப் பார்த்துக் கொள்வது நல்லது.

ஆனால் இந்தத் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் நீங்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் கல்விப் பயில உதவித் தொகையைப் பெற முடியும் என்பதினால் இந்தத் தேர்வுகளை எழுதுவது நல்லது.

இந்தத் தேர்வுகளுக்கும் நமது நாட்டின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) மற்றும் பொதுத் திறமைத் தேர்வு (CAT) ஆகியத் தேர்வுகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது. இந்தத் தேர்வுகளைப் பற்றி நாம் விரிவாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

சரி... வேண்டியத் தேர்வுகளை எல்லாம் அறிந்தாயிற்று, போதிய மதிப்பெண்களும் கைவசம் உள்ளது, இதற்கு மேலும் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபிக்க நாம் வேறு ஏதாவது அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றதா? என்றால் ... ஆம் என்பதே பதிலாகும்.

ஒரு சிலக் கடிதங்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் இருந்து விண்ணப்பிக்கும் பொழுது எதிர்ப்பார்கின்றன. அந்தக் கோப்புக்களைப் பற்றியும் விண்ணப்பிக்கும் முறையினைப் பற்றியும் நாம் அடுத்த பதிவினில் பார்ப்போம்.

தொடரும்...

ஒருக் கேள்வி...!!!
உயிர் இன்றி உடல் தனித்து இயங்குமா?

"என்னங்க கேள்வி இது... அது எப்படி உயிர் இல்லாம உடல் மட்டும் தனித்து இயங்கும். சின்னப் புள்ளைய கேட்டாக் கூட உயிர் இல்லாம உடல் இருக்காதுன்னு தெளிவா சொல்லிடுமே" என்று நீங்கள் கூறலாம்.

உண்மையும் அதுதான். உயிர் இன்றி உடல் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இது பலருக்கும் தெரியும்.

ஆனால் இதே உண்மையை நமது மொழி மௌனமாய் பறைசாற்றிக் கொண்டு இருப்பதை நாம் அறிந்தும் அறியாமல் இருக்கின்றோம். நம் மொழி எவ்வாறு அந்த உண்மையைத் தன்னுள் அடிப்படையாகக் கொண்டு உள்ளது என்றுப் பார்ப்போம்.

தமிழ் எழுத்துக்கள் இரு வகைப்படும்.

௧) முதல் எழுத்துக்கள் - அ , ஆ என்று ஆரம்பிக்கும் 12 உயிர் எழுத்துக்களே முதல் எழுத்துக்கள் ஆகும்.

௨) சார்பு எழுத்துக்கள் - க், ங், என்று ஆரம்பிக்கும் 18 மெய் எழுத்துக்களே சார்பு எழுத்துக்கள் ஆகும்.

மெய் எழுத்துக்களால் தனித்து இயங்க முடியாது. அவை முதல் எழுத்துக்களான உயிர் எழுத்துக்களைச் சார்ந்தே இயங்குவன. எனவே தான் அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.

இப்பொழுது அந்த 'மெய்' என்னும் சொல்லை நாம் சற்று கூர்ந்துப் பார்ப்போம்.

தமிழில் 'மெய்' என்னும் சொல்லுக்கு 'உடல்' என்னும் அர்த்தமும் உண்டு.

மெய் = உடல்.

எனவே, மெய் எழுத்துக்களில் 'மெய்' என்பதற்கு பதிலாக 'உடல்' என்று வைத்துப் பார்த்தோமானால், உயிரைச் சார்ந்தே உடல் இருக்கும் என்பதே தமிழ் கூறும் எழுத்துக்களின் விதி என்று நாம் அறியலாம்.

இவ்வாறு மெய் எழுத்துக்களை உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இருக்கும் எழுத்துக்கள் என்றும் அவை தனித்து இயங்கும் தன்மையை பெற்றவை அல்ல என்றும் தனது அடிப்படை எழுத்துப் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருக்கும் தமிழ் , அதன் மூலம் 'உயிர் இன்றி மெய் (உடம்பு) இல்லை' என்ற அறிவியல் கருத்தினை அமைதியாக உரைத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் இந்த உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேருவதன் மூலம் நமக்கு உயிர்மெய் எழுத்துக்கள் என்னும் 216 எழுத்துக்கள் கிடைக்கின்றன.

இந்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் உணர்ச்சிகள் என்று வைத்துப் பார்த்தோம் என்றால் இன்னொரு உண்மை நமக்கு விளங்கும்.

உயிரும் உடலும் இணைந்து இருந்தால் தானே உணர்ச்சிகள் தோன்றும், அதேப் போல் தான் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உணர்ச்சியான உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. உயிரோ அல்லது மெய்யோ இல்லாது போனால் உயிர்மெய் எழுத்துக்கள் இருக்காது... அதேப்போல் உணர்ச்சியும் இருக்காது!!!

இதுவே நம் தமிழ் கூறும் உண்மை!!! அறிவியல் ஆராய்ந்துக் கூறும் ஒன்றை நம் மொழி அதன் ஆதாரமாகவே வைத்து இருக்கின்றது.

நினைக்கவே சிலிர்க்கின்றது....!!!

தமிழுள் பயணிப்போம்...!!!

தொடரும்....

(நன்றி: தமிழ் எழுத்துக்களைப் பற்றிய இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய 'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' என்னும் நூலின் ஆசிரியர் மாத்தளை சோமுவிற்கு எனது நன்றிகள்).

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
  பகவன் முதற்றே உலகு"

உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள்.

எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்துக் கொண்டேன்.

ஆம்!!! தற்போது உலகத்தில் அதிகமாக பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், மண்டாரின் (Mandarin) பிரன்ச்சு (French) ரசிய மொழி, செர்மன், சுபாநிசு (spanish) ஆகிய மொழிகளிலும் இந்த மொழிகளுக்கு எல்லாம் மூலமான இலத்தின் (Latin) மற்றும் கிரேக்க மொழிகளிலும் கூட அகரம் ('A') என்னும் எழுத்தே முதல் எழுத்தாக உள்ளது.

உலகின் மற்றப் பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கே அகரம் முதல் எழுத்தாக இருக்கும் பொழுது, இந்திய நாட்டு மொழிகளுக்கு மட்டும் அது வேறு படவா போகின்றது. இந்திய நாட்டு மொழிகள் அனைத்திற்கும் அகரமே முதல் எழுத்தாக திகழ்கின்றது.

எனவே 'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது சரி தான். இப்பொழுது அந்த அகரத்தை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பிக்கின்றது என்பதினைப் பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள் தமிழில் அகரத்தை முதன்மையாக வைத்தே அழைக்கப் பெறுகின்றன.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அத்தை, அம்மாயி, அம்மான் முதலிய பல உறவுகள் அகரத்தால் தொடங்கப்பெறும் வார்தைகளினாலையே அழைக்கப் பெறுகின்றன.

மேலும், ஒரு மனிதன் இந்த உலகினில் வாழும் பொழுது அவன் கடைப்பிடிக்க கூடிய தன்மைகள் மற்றும் அவனைச் சூழ்ந்து இருக்கும் முக்கியமான பொருட்கள் ஆகியவனவும் அகரத்தை முதன்மையாகக் கொண்டே அழைக்கப்பட்டன.

அண்டம், அன்பு, அடக்கம், அமைதி, அன்னம், அறிவு, அழகு, அரசு போன்ற வார்த்தைகளைக் கண்டாலே நாம் அதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள வேறு எந்த மொழியாவது தன்னுடைய முதல் எழுத்தை இவ்வளவு சிறப்பித்து இருக்குமா என்பது சந்தேகமே!!!

உலகில் மனிதன் தோன்றுவதற்கு அம்மா அப்பா எவ்வாறு முக்கியமோ, அதேப் போல் அகரமும் தமிழுக்கு முக்கியம்.

எனவே தான் குழந்தைகளுக்கு 'அ' என்றால் 'அம்மா' என்றே நமது தமிழ் மொழி கற்பிக்கின்றது. 

இவ்வாறு வாழ்க்கைக்கு இன்றியமையாத விசயங்களை ஒரு மொழியின் முதல் எழுத்தின் மூலமே பெயரிட்டு வழங்குவதும் ஒரு வகை அறிவியலே ஆகும்.

தொடர்ந்து பயணிப்போம்....

(நன்றி: அகரத்தினைப் பற்றிய இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய 'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' என்னும் நூலின் ஆசிரியர் மாத்தளை சோமுவிற்கு எனது நன்றிகள்).

இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது.

                             4                                                
குழந்தைகளே, உங்கள் இதயம் எதன்படி வழிநடத்தப்பட வேண்டும் என்று அறிந்துக் கொள்ள வேண்டுமா? அர்த்தம் ஒன்றும் இல்லாத உலகப் பொருட்களின் மேல் நீங்கள் கொண்டு இருக்கும் நாட்டத்தினை தூக்கி எறியுங்கள். மகிழ்ச்சியினையும் அறிவினையும் பற்றி நீங்கள் கொண்டுள்ள தவறான எண்ணங்களையும் உங்களது வெற்று ஆசைகளையும் களையுங்கள். இவை அனைத்தையும்  நீங்கள் நீக்கினால் உண்மையான அன்பினை நீங்கள் அறிவீர்கள் - கிருசுனர்.


உங்களை நீங்களே அழிப்பவர்களாக இராதீர்கள். உங்களது மெய்யான தன்மையினை உயர்ந்து அடையுங்கள். அதன் பின் நீங்கள் பயம் கொள்வதற்கு இவ்வுலகில் ஒன்றும் இராது. - கிருசுனர்

பழைய கொள்கைகள் என்று ஒழிக்கப்பட்ட அந்தப் போலி ஆன்மீக கருத்துக்களின் இடத்தில இப்பொழுது புதுக் கருத்துக்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்தப் புதுக் கருத்துக்களும் பழைய கருத்துக்களைப் போல் அரைகுறையாகத் தான் இருந்தன. ஆனால் இந்தக் கருத்துக்கள் புதியனவாக இருந்ததினால் அநேக மக்களால் அதன் குறையினை உடனடியாக அறிந்துக் கொள்ள முடியவில்லை. மேலும் இந்தப் புதிய போலிக் கருத்துக்களை அதிகாரத்தில் உள்ளோர் மிகவும் திறமையாக பிரசாரம் செய்யவே,மக்களின் மத்தியில் இந்தக் கருத்துக்கள் மறுக்கப்பட முடியாத கருத்துக்களாய் தோன்ற ஆரம்பித்தன. தாங்கள் ஒடுக்கப்படுவதையும் துயரப்படுவதையும் இந்தக் கருத்துக்கள் சரி என்று நியாயப்படுத்தினாலும் அந்தக் கருத்துக்களைப் பல மக்களுக்கு மறுக்க தோன்றவில்லை. இந்த புதுக் கருத்துக்கள் அறிவியல் என அழைக்கப்பட்டன. ஆனால் முன்பு மதம் என்று எதைப் புரிந்துக்கொண்டோமோ அதையேத் தான் இன்று அறிவியல் என்றுப் புரிந்துக் கொள்கின்றோம். முன்பு எப்படி மதம் என்றுக் கூறப்பட்டதை அது மதம் தொடர்புடையது என்பதனாலையே கேள்விக் கேட்கக்கூடாது என்று இருந்ததோ, அதே போல் இன்று அறிவியல் என்று சொல்லப்படுவதையும் எவரும் கேள்விக் கேட்கக்கூடாது. 'அரசன் - இறைவனின் பிரதிநிதி' என்றுக் கூறிக் கொண்டு வன்முறையை ஆதரித்து அழிந்துப் போன மதக் கருத்துக்களின் இடத்தை இந்த அறிவியல் கருத்துக்கள் நிரப்ப ஆரம்பித்தன.

அறிவியலின் கூற்றுப்படி, முதலில், மனிதனை மனிதன் ஒடுக்குவதும் கொடுமைப்படுத்துவதும் எல்லாக் காலங்களிலும் நடந்து வந்து இருப்பதினால் அத்தகைய ஒடுக்குமுறை தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். மனிதன் தன்னுடைய அறிவின் படியும் மனசாட்சியின் படியும் நடக்காது, இது வரைக் காலங்களில் அவன் எவ்வாறு வாழ்ந்து வந்தானோ அதே போல் தான் வாழ வேண்டும் என்ற இந்தக் கூற்றே 'அறிவியல்' கூறும் 'வரலாற்று விதி'.

அறிவியல் கூறும் இரண்டாவது கருத்து என்னவென்றால் ' விலங்குகளுக்குள்ளும் செடிகளுக்குள்ளும் உயிர் வாழ்வதற்கு எப்பொழுதும் ஒரு போராட்டம் நடந்து இறுதியில் எவை வலுவுடையதாக இருக்கின்றதோ அவையே பிழைப்பதைப் போல மனிதர்களுக்குள்ளும் அத்தகைய போராட்டங்கள் பிழைப்பதற்கு நிகழ வேண்டும். பிழைப்பிற்காக போராடும் அந்த மற்ற உயிரினங்களிடம் இல்லாத அறிவினையும் அன்பினையும் பெற்று மனிதன் உயர்ந்தவனாக இருந்தாலும் அவன் பிழைப்பதற்கு அவற்றினைப் போலவே போராட வேண்டும்.

அறிவியலின் மூன்றாவது கருத்தும் மிக முக்கியமானக் கருத்தும், எதிர்ப்பாராவிதமாக மக்களிடையே மிகவும் பெரிய அளவில் பரவியக் கருத்துமானது, சிறிது மாறுப்படுத்தப்பட்ட பழையக் காலத்து போலி மதக் கருத்தே ஆகும். பொது வாழ்வில் பெருன்பான்மையினரைக் காக்க ஒரு சிலரை ஒடுக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பதே அந்தக் கருத்து.

மனித உறவுகள் அன்பினை மட்டுமே சார்ந்து இருக்க விரும்பினாலும், இந்தக் கருத்து வன்முறையை தவிர்க்க முடியாத ஒன்றாக்கி விடுகின்றது.

இந்தப் புதிய போலி அறிவியல் கருத்திற்கும் அந்தப் பழைய போலி மதக் கருத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். "யாருக்கு எதிராய் வன்முறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய ஏன் ஒரு சிலருக்கு மட்டுமே உரிமை இருக்கின்றது, பிறருக்கு ஏன் அந்த உரிமை இல்லை?" என்ற கேள்விக்கு போலி மதக் கருத்தானது முடிவெடுக்கும் உரிமை அரசருக்கு உள்ளது ஏனெனில் அவர் இறைவனின் பிரதிநிதி என்று கூறியது. ஆனால் போலி அறிவியல் கருத்தோ அந்த முடிவுகள் மக்களின் எண்ணங்களுக்கு அரசாங்கம் என்ற அமைப்பின் தலைமையில் இருக்கும் ஒரு சிலரின் முடிவுகளாலும் செயல்களாலும் வடிவம் கொடுக்கப்பட்டு, அந்த மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப எடுக்கப் படுகின்றன என்று கூறுகின்றது. இந்தக் கூற்று மட்டுமே அந்தப் பழைய போலி மதக் கருத்திற்கும், இந்தப் புதியப் போலி அறிவியல் கருத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

இதுவே அடக்குமுறைக் கொள்கைக்கு அறிவியல் கொடுக்கும் விளக்கமாகும். இந்தக் கருத்துகள் பலவீனமாகவும் வாழ்க்கைக்கு முற்றிலும் ஒவ்வாததாக இருந்த போதிலும், அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பதவியில் தொடர்ந்து வீற்று இருக்க அந்தக் கருத்துக்கள் மிகவும் தேவையாக இருந்ததினால் கண்மூடித் தனமாக அந்தக் கருத்துகளை நம்பியும் அவற்றை நம்பிக்கையுடன் பரப்பியும் வந்தனர்.

எதிர்பாராவிதமாக, இந்தப் போலி அறிவியல் கருத்துகள் பரப்பப்பட்ட ஆடம்பர விதத்தில் மயங்கிய பெரும்பான்மையான மக்கள், எவ்வாறு முன்பு போலி மதக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்களோ அதே போல் இப்பொழுது இந்த அறிவியல் முட்டாள்தனங்களை புனித உண்மை என்று ஏற்றுக் கொண்டனர்.   

அந்த பாவப்பட்ட பெரும்பான்மையினரே தொடர்ந்து, கல்நெஞ்சமும் எண்ணிக்கையில் முன்பை விட அதிகமாக இருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கு கட்டுப்பட்டு இருக்கின்றனர்.

தொடரும்....

தமிழ்...!!!
இது வெறும் மொழி மட்டும் அல்ல... எங்கள் இனத்தின் தொன்மையையும் பெருமையையும் இளமையையும் இனிமையாக உலகிற்கு அறிவித்துக் கொண்டு இருக்கும் ஒருக் கலைக்களஞ்சியம்....!

எங்கள் இனத்தின் அடையாளம்!!!!

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல.

தமிழ், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழரசி என்றெல்லாம் தங்களின் உயிருக்கும் மேலான குழந்தைகளுக்கு தங்களின் மொழியின் பெயரையே வைத்து தமிழர்கள் அழகுப் பார்த்தது போல் உலகில் வேறு எந்த இனம் அழகுப் பார்த்து இருக்கின்றது?.
உலகில் வேறு எந்த மொழி இந்தப் பெருமையை அடைந்து இருக்கின்றது?. நான் அறிந்த வரையில் தமிழுக்கு மட்டுமே இந்தப் பெருமை உள்ளது.

ஆனால், தங்களது குழந்தைகளுக்கு தமிழையே பெயராக வைத்து மகிழ்ந்த தமிழினம் இன்று தங்களுக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் நிலை தமிழகத்திலேயே இருக்கின்றது.

வந்தோரை வாழ வைத்த தமிழகம் இன்று வந்தோரை நம்பி வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு அவநிலையில் இருக்கின்றது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் உலக மக்கள் அனைவரையும் சரி...உலக சமயங்கள் அனைத்தையும் சரி இரு கை விரித்து அரவணைத்துக் கொண்ட மொழி இன்று மழுங்கடிக்கப்பட்டுக் கிடக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றன.

ஆனால் எவ்வாறு 'ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையோ' அதே போல் தமிழின் செல்வங்கள் அவற்றின் தனித்துவத்தோடே இன்றும் நிலையாய், நம்மால் மீட்கப்படுவதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தான் தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கு சில கடமைகள் கூடுதலாக வந்து சேருகின்றன.

ஒன்று... தமிழை அறிவது... தமிழின் மூலம் தமிழினத்தை அறிவது!!!

இரண்டு... அறிந்ததை அறியாதவர்களிடத்து சேர்ப்பது... சேர்த்து, தமிழினத்தின் அறியாமையை நீக்குவது!!!

இந்தக் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது. இந்தப் பதிவினை என்னுடையக் கடமையாய் நான் தமிழினைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ளவும், நான் அறிந்துக் கொண்டதை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ளவுமே ஆரம்பிக்கின்றேன்.

என்னுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சி.

ஆந்திராவினில் நான் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் அலுவலுகத்தில் ஒரு நாள் திடீரென்று யானையைப் பற்றியத் தலைப்பில் ஒரு விவாதம் ஆரம்பம் ஆனது.

அப்போது குசராத்தினைச் சேர்ந்த எனது தோழி ஒருவர், குசராத்தி மொழியினில் ஆண் யானைக்கு 'காத்தி' (haathi) என்றும் பெண் யானைக்கு 'காத்தன்' (haathan) என்றும் தனித்தனி பெயர்கள் இருக்கின்றன என்றும் வேறு எந்த மொழியிலாவது அவ்வாறு தனிப் பெயர்கள் இருக்கின்றனவா என்று வினவினார்.

அணியில் உள்ள வேறு மொழியினர் எவரும் பதிலினைக் கூறவில்லை... நானும் தான்!!!

எவ்வளவு சிந்தித்தும் என்னுடைய சிந்தனைக்கு ஆண் யானை, பெண் யானை என்ற பெயர்களைத் தவிர வேறப் பெயர்கள் நினைவிற்கு வரவில்லை.

ஆனால் ஒரு நம்பிக்கை இருந்தது...!!!

மற்ற இந்திய மொழிகளில் இருக்கும் ஒரு விசயம் எங்கள் தமிழில் இல்லாது இருக்காது...நிச்சயம் எங்களுடைய தமிழ் மொழியில் யானைகளுக்கு வேறுப் பெயர்கள் இருக்கும்...!!!

அந்த நம்பிக்கையுடன் இணையத்தளங்களில் தேடும் பொழுது சற்று மலைத்து தான் போனேன். யானையைக் குறிக்க தமிழில் நாம் இதுவரை அறிந்த பெயர்களே மொத்தம் 170க்கும் மேல்.

களிறு, வேழம்,பிடி(பெண் யானை), வாரணம், அதவை என்று அந்தப் பெயர் பட்டியல் நீண்டுக் கொண்டே போகின்றது. யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்து இருக்கின்றோம் தமிழர்களாகிய நாம்!!!

"என்னயா... ஒரு யானைக்கு இத்தனை பேரு... இத போயி பெருசா சொல்ல வந்திட்டியே..." என்று சிலர் எண்ணலாம்.

பெயர்கள் சாதாரணமானவை அல்ல... பெயர்கள்-அடையாளங்கள்!!!

பயனும் தேவையும் இருக்கும் பொருட்களுக்குத் தான் தேவையைப் பொறுத்து மக்கள் பெயர் இட்டு வழங்குவர். பயனில்லாப் பொருட்களுக்கு மக்கள் பலப் பெயர்கள் இட வேண்டிய தேவை இருக்காது. நாம் நமக்கு அறியாத ஒரு நபரைப் பற்றிக் கண்டுகொள்ள மாட்டோம் ஆனால் நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களின் குணத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்றார்ப் போல் பலப் பெயர்களை உரிமையுடன் இட்டு வழங்குவோம்... அதே போல் தான் இதுவும்.

தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் இந்தப் பெயர்களை பார்த்தாலே நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

உலகின் மற்ற உயிரினங்களையும் மதித்து அதன் குணங்களை அறிந்து அவற்றினோடும் இயற்கையுடனும் ஒரு சேர வாழ்ந்த நாம், உலகம் தழைக்க பல்வேறு கருத்துக்களை காலத்தை வென்ற செம்மொழியாம் தமிழ் மொழியில் பதித்து வைத்து இருக்கின்றோம்.

இன்று நம் மொழியும் இனமும் தழைக்க அந்தக் கருத்துக்களை நாம் பரப்ப வேண்டி இருக்கின்றது. அதற்கு முதலில் நாம் அந்தக் கருத்துக்களை அறிய வேண்டியிருக்கின்றது.

வாருங்கள்... தமிழ் படைத்த அந்த மாபெரும் உலகினுள் பயணிப்போம்...


இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது.

                                           3      
என்னுடைய கை எல்லா இடங்களிலும் அன்பினை விதைத்து இருக்கின்றது. அந்த அன்பினைப் பெறுவதற்கு எவரெல்லாம் தயாராக இருக்கின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் என்னுடைய கை தவறாது அன்பினைக் கொடுத்தும் இருக்கின்றது. என்னுடைய எல்லாக் குழந்தைகளுக்கும் என்னுடைய ஆசிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அறியாமையினால் அந்த ஆசிகளை அவர்கள் காணாது பல முறை தோற்று விடுகின்றார்கள்.தங்களின் காலின் அடியில் கொட்டிக்கிடக்கும் பரிசுகளைக் கண்டுக்கொள்ளும் மனிதர்கள் உலகில் எவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் அந்தப் பரிசுகளை காணாதவாறு தங்கள் கண்களை விருப்பப்பட்டே கீழ்ப்படியாது திருப்பிக் கொண்டு, பின்னர் நான் அவர்களுக்காக தந்தப் பரிசுகள் அவர்களுக்குக் கிடைக்க வில்லை என்று அழுதும் குறைகூறியும் திரியும் மனிதர்கள் தான் எத்தனை அதிகம். அவர்களுள் பலர் கீழ்ப்படியாது என்னுடைய பரிசுகளை மறுப்பதுடன் இந்த உலகத்தில் உள்ள அனைத்து வாழ்த்துக்களுக்கும் மூலமும், அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமுமான என்னையே மறுக்கின்றனர். - கிருசுனர்

இந்த உலகினைச் சூழ்ந்து இருக்கும் பிரச்சனைகளையும் மோதல்களையும் விட்டு நான் விலகியே இருக்கின்றேன். உங்களது வாழ்வினை அன்பினாலும் மகிழ்ச்சியினாலும் நான் அழகாக்குவேன். ஏனெனில் ஆத்மாவின் ஒளி அன்பே ஆகும். அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே அமைதியும் நிம்மதியும் இருக்கும். நிம்மதியும் அமைதியும் எங்கே இருக்கின்றதோ, அந்த இடத்தில அவைகளின் மத்தியில் நானும் வீற்று இருப்பேன். - கிருசுனர்

பிறரின் உணர்ச்சிகளை மதிக்காது இருந்தால் தனக்குப் பெரும் செல்வம் வந்து சேரும் என்ற சூழ்நிலையிலும் பிறருக்கு தீங்கு விளைவிக்காது நடப்பதே குற்றமற்றவரின் செயல் ஆகும். தனக்கு தீங்கு விளைவித்தவற்கு கூட தீங்கு விளைவிக்காததே குற்றமற்றவரின் தன்மை ஆகும். தன்னை எந்தக் காரணமும் இன்றி வெறுக்கும் ஒருவருக்கு கூட, ஒருவன் துன்பத்தை ஏற்படுத்தி விட்டான் என்றால் அவனால் மீள முடியாத சோகத்தை அவனே அவன் செயலின் மூலம் ஏற்படுத்திக் கொள்வான். நமக்குத் தீங்கு செய்தவருக்கு சரியானத் தண்டனை என்பது அவர்கள் அவர்களை எண்ணியே வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு நன்மை செய்வதே ஆகும். தன்னைச் சுற்றி இருப்பவரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கருதி அந்த துன்பத்தை நீக்குவதற்கு ஒருவன் முயலவில்லை என்றால் அவன் கற்று அறிந்த அந்த மாபெரும் அறிவினால் என்ன பயன்?. காலையில் ஒரு மனிதன் மற்றொருவனுக்கு தீங்கு செய்ய எண்ணினான் என்றால் மாலையில் அந்த தீங்கு அவனிடமே திரும்பி வந்து சேரும். - இந்துக் குறள்( திருக்குறள்)


மனிதனுக்குள் இயல்பாகவே அன்பு வடிவத்தில் இருக்கும் ஒருப் புனித சக்தியின் வழிக்காட்டுதலின் படியே மனிதன் வாழ வேண்டும் என்ற உண்மையை அடக்கும் முயற்சி, வன்முறையின் மூலமும் அதனுடன் ஒவ்வாதக் கருத்துக்களைச் சேர்ப்பதன் மூலமும் உலகம் முழுவதிலும் நடைப்பெற்றது. அன்பே உலகில் உயர்ந்த தர்மமாகும் என்ற கருத்து எங்கேயும் மறுக்கப்படவும் இல்லை எதிர்க்கப்படவும் இல்லை. ஆனால் இந்தக் கருத்தோடு உலகம் முழுவதிலும் இணைந்துப் புனையப்பட்ட பல்வேறுத் தவறான கருத்துக்களால் இறுதியில் இந்த உண்மை வெறும் வார்த்தைகளாகவே நின்றுவிட்டது. மேலும், இந்த உயர்ந்த தர்மமானது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு, அதாவது ஒருவரது இல்லத்து வாழ்விற்கு மட்டுமே பொருந்தும் என்றும் பொது வாழ்கை என்று வரும் போது பெரும்பான்மையினரான மக்களை சிறும்பான்மையினரின் தீமைச் செயல்களில் இருந்து காப்பாற்ற வன்முறை வழிகளான யுத்தங்கள், சிறை மற்றும் மரண தண்டனைகள் போன்றவை நிச்சயம் தேவை என்றே போதிக்கப்பட்டது. அன்பின் வழிகளுக்கு அந்த வன்முறை வழிகள் முற்றிலும் எதிர்மறையாக இருந்தப் போதும் மக்களுக்கு அந்த இரண்டு முறைகளுமே தேவை என்றே போதிக்கப்பட்டது.

மேலும் எப்பொழுது ஒரு சில மனிதர்கள், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் எவரை வன்முறையால் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையைத் தாங்கள் பெற்று இருப்பதாக எண்ணிக் கொண்டு ஒரு சிலரைத் தண்டிகின்றார்களோ, அந்தத் தண்டனையைப் பெற்றவர்களும், தங்களின் நன்மைக்காக, அவர்களைத் தண்டித்த நபர்களுக்கு மேல் வன்முறையை பயன்படுத்தும் உரிமையைத் தாங்கள் பெற்று இருப்பதாக முடிவு செய்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்றது என்பதை நமது சுய அறிவே நமக்கு புலப்படுத்துகின்றது.

அன்பின் விதியானது இவ்வாறு திரிக்கப்படும் என்று முன்கூட்டியே உணர்ந்த இந்து மதம், பௌத்தம் மற்றும் கிருத்துவத்தை சார்ந்த ஆன்மீக ஞானிகள், மக்களின் கவனத்திற்கு 'வன்முறையைப் பொறுத்துக் கொள்வதும், தீமையை தீமையைக் கொண்டே எதிர்காததும், அவ்வழிகளின் மூலமாய் அன்பை வளர்ப்பதுமே அன்பின் மாறாத உண்மைத் தன்மையாகும்' என்ற கருத்தை தொடர்ந்து கொண்டு சேர்த்துக் கொண்டு இருந்தனர். இருந்தும், தங்களை மேம்படுத்தக் கூடியக் கருத்துக்களைப் பொருட்படுத்தாது, அன்பின் பெருமையையும் வன்முறையின் மூலம் தீமையை ஒடுக்குவதும் ஆகிய முற்றிலும் முரண்பட்ட இரண்டுக் கருத்துக்களை ஒன்றிணைக்க மக்கள் தொடர்ந்து முயன்று கொண்டு இருந்தனர். அடிப்படையே முரணாக இருந்தப் போதும் அந்தப் போதனை மக்களின் மத்தியில் மிகவும் பலமாக வேர் ஊன்றியது. அதனால், அன்பினை ஒரு சிறந்தத் தன்மையாக உணர்ந்து ஏற்றுக் கொண்ட மக்கள் அதே நேரத்தில் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையைச் சட்டம் என ஏற்றுக்கொண்டு மனிதனை மனிதன் கொல்லவும் கொடுமைப் படுத்தவும் அனுமதித்தனர்.

வெகு காலத்திற்கு மக்கள் அந்த போதனையின் முரண்பாட்டினைக் கவனிக்காமலேயே வாழ்ந்து வந்தனர்.ஆனால் பல்வேறு நாடுகளில் இருந்த சிந்தனையாளர்களின் கவனத்திற்கு இந்த முரண்பாடு தெளிவாகப் புலப்பட ஆரம்பித்தக் காலமும் வந்தது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக் கொள்வதும் நேசித்துக் கொள்வதும் தான் மனிதனின் இயல்பான குணமே தவிர மற்றவரை துன்புறுத்துவதும் கொலை செய்வதும் இல்லை என்ற அந்த எளிமையான பழைய உண்மை மக்களுக்கு இன்னும் தெளிவாயிற்று. இதனால் உண்மை என்று ஒரு சிலரால் திணிக்கப்பட்ட அந்த போலிக் கருத்தினை நம்பி ஏற்றுக் கொண்ட மக்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.

பழைய காலங்களில், வன்முறையை பயன்படுத்துவதும் அதன் மூலம் அன்பின் விதியை மீறுவதும் அரசர்களுக்கு, அதாவது சார் மன்னர்கள் (Czar), சுல்தான்கள் (sultan), ராசாக்கள் மற்றும் சாக்கள் (Shah) போன்றவர்களுக்கு மக்களை ஆள இறைவன் அளித்த புனித உரிமை என்ற கோட்பாட்டின் மூலமே நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் மனித இனம் வளர வளர அந்தக் கோட்பாட்டின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அந்த நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒரே விதமாக கிருத்துவம், இந்து, பௌதம் மற்றும் கன்புசிய உலகங்களில் நிலைகுலைய ஆரம்பித்தது. சமீப காலங்களில் அந்த நம்பிக்கை ஒரு மனிதனின் பகுத்தறிவிற்கும் உண்மையான ஆன்மீக எண்ணங்களுக்கும் முன்னால் நிற்க முடியாமல் மறைந்து விட்டது. மக்கள் மிகவும் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தனர். தங்களின் விருப்பங்களுக்கும் நேர்மையான எண்ணங்களுக்கும் முற்றிலும் மாறான செயல்களைத் தங்களைப் போலவே இருக்கும் வேறு சிலருக்குக் கட்டுப்பட்டு செய்வதின் முட்டாள்தனத்தை அவர்கள் உணர்ந்தனர்.அரசர்களின் தெய்வீக உரிமை என்னும் மதக் கோட்பாட்டில் நம்பிக்கை இழந்த மக்கள் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைப் பெற முயல்வார்கள் என்றே அந்த நிலையில் ஒருவர் கருதுவார்.

ஆனால் 'அரசர்கள் இறைவனின் பிரதிநிதிகள்' என்றுக் கூறி மக்களை அடக்கி ஆண்டதில் பயன் பெற்றவர்கள் எதிர்பாராவிதமாக அந்த அரசர்கள் மட்டுமே அல்ல. அந்தப் போலி இறைப் பிரதிநிதிகள் மக்களை ஆண்ட காலங்களில், அரசாள உதவி செய்கின்றோம் என்ற பெயரில் மிகப் பெரிய மக்கள் கூட்டங்கள் அந்த அரசர்களை சூழ்ந்துக் கொண்டு மக்கள் அடங்கி இருப்பதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.

எனவே எப்பொழுது அரசன் என்பவன் கடவுளின் பிரதிநிதி என்றப் பழைய ஏமாற்றுக் கருத்து மக்களிடையே சரிய ஆரம்பித்ததோ, அப்பொழுது அரசாண்ட அந்த மனிதர்களுக்கு, மக்களைத் தங்களுக்கு கீழே கட்டுப்படுத்தி வைத்து இருப்பதற்கு ஏதுவாக ஒரு புதிய ஏமாற்றுக் கருத்தை உருவாக்குவதே லட்சியமாய் ஆனது. 

தொடரும்... 

இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது.
                                       2                                          
"மனிதா, ஒரு குழந்தையைப் போல் பணிவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க நீ ஆரம்பிக்கும் வரை, உன்னை முழுதாய் சூழ்ந்து இருக்கும் குழப்பங்களால் சிதறடிக்கப்பட்டு உன்னை நீயே அறிந்துக் கொள்ள முடியாமல் உனக்கே நீ ஒரு முடியாப் புதிராய் இருப்பாய். எப்பொழுது ஒரு குழந்தையைப் போல் மாறுகின்றாயோ அப்பொழுது  நீ என்னை அறிந்து கொள்வாய். உன்னுள் இருக்கின்ற அந்த மாபெரும் உலகத்தை நீ அறிந்து கொண்ட பின் உனக்கு வெளியே இருக்கும் இந்தச் சிறிய உலகங்களைப் பார்க்கும் பொழுது, காலத்தோடும் உன்னோடும் அனைத்தும் நன்றாக இருப்பதை உணர்ந்து உலகத்தில் உள்ள அனைத்தையும் நீ வாழ்த்துவாய்!" - கிருசுனர்

என்னுடைய எண்ணங்களை உங்களுக்கு இன்னும் தெளிவாக விளக்க நான் சற்று காலத்தில் பின்னோக்கிப் போக வேண்டி இருக்கின்றது. பல லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன்னரோ அல்லது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரோ மனிதன் எவ்வாறு வாழ்ந்தான் என்பதைப் பற்றி நமக்கு தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் காலங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுமா என்பதும் சந்தேகமே. ஆனால், மனிதகுலத்தின் வரலாற்றைப் பற்றி நமது அறிவுக்கு எட்டிய வரை பார்த்தோமானால் ஒரு விசயம் நமக்கு நிச்சயமாக புலப்படுகிறது. எக்காலத்திலேயும் மனிதர்கள் ஒரு குடும்பமாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ அல்லது ஒரு தேசமாகவோ தான் சேர்ந்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர். அவ்வாறு சேர்ந்து வாழ்ந்த மக்களுள் பெரும்பான்மையானவர்கள் ஒரு சில சிறுபான்மையினரின் ஆட்சிக்கு அவர்கள் விரும்பியே கட்டுப்பட்டு வாழ்ந்து வந்து இருக்கின்றனர். அப்படி கட்டுப்பட்டு தான் வாழ்கை இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பியும் இருந்து இருக்கின்றனர். சூழ்நிலைகளும் மனித இயல்புகளும் இனத்திற்கு இனம் வேறுபட்டப் போதும் கூட பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் ஆளும் அந்த முறை மாறாது அனைத்து இன மக்களிடமும் ஒன்று போல் இருந்து வந்து இருக்கின்றது. இது நமக்கு தெரிந்த பல்வேறு இன மக்களின் வரலாற்றைப் பார்த்தாலே நமக்கு நன்கு விளங்கும். மக்கள் அனைவரும் அமைதியாக இணைந்து வாழ்வதற்கு இந்த அமைப்பு முறை நிச்சயம் தேவை என்றே அந்த மக்களும் அவர்களை ஆண்டவர்களும் கருதி இருக்கின்றனர் என்பது நாம் மேலும் வரலாற்றின் பக்கங்களுள் நுழைய நமக்கு தெரிய வருகின்றது.

எனவே இந்த முறை எல்லா இடங்களிலும் இருந்து இருக்கின்றது, ஏன் இன்னும் கூட இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இந்த வகையான வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக இருந்திருந்தாலும், அடக்குமுறையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த வாழ்க்கை முறையின் மத்தியில் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எல்லா நாடுகளிலேயும் ஒன்றுப் போல ஒருக் கருத்து எழ ஆரம்பித்தது.

 "உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் உயிர் கொடுத்து இயங்க வைக்கும் ஒரு புனித சக்தி அனைத்து மனிதனுக்குள்ளேயும் இருக்கின்றது. அந்த சக்தி, அன்பின் மூலமாக அதன் இயல்பை ஒத்து இருக்கும் எல்லாவற்றினுடையும் ஒருங்கிணைய முயல்கின்றது" என்பதே அந்தக் கருத்தாகும். இந்தக் கருத்து மாறுப்பட்ட தெளிவும் மாறுப்பட்ட முழுமையுடனும், உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தோன்றி இருக்கின்றது. இந்தக் கருத்து, பிராமணீயம் (Brahmanism), யூத சமயம், சோரோஆசுடரின் (Zoroaster) கருத்துக்களான மாசுடாயிசம் (Mazdaism), பௌதம், தாவோயிசம் (Taoism), கன்புசியாநிசம் (Confusianism), ரோம மற்றும் கிரேக்க துறவிகளின் எழுத்துக்கள், கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றால் ஒரு வடிவம் பெற்றது.

இந்தக் கருத்து இயல்பிலேயே மனிதனுள் இருக்கின்ற ஒன்று என்பதும் இந்தக் கருத்தில் உண்மை இருக்கின்றது என்பதும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் இதே கருத்து மாறாது எழுந்து இருக்கின்றது என்ற விசயமே நமக்கு புலப்படுத்துகின்றது.

ஆனால் மக்கள் சமுதாயம் ஒன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு சிலர் மற்றவர்களை அடக்கி ஆள்வதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் இந்தக் கருத்து வெளிவந்ததினால் அப்போது நடைமுறையில் இருந்த சமுதாயத்திற்கு அது ஒவ்வாதது போல காட்சியளித்தது. அதுவும் இந்தக் கருத்து முதலில் முழுமையாக வெளிவராது பகுதிப் பகுதியாக தெளிவில்லாமல் வெளிவந்ததால் அந்தக் கருத்தில் உள்ள உண்மையை ஒப்புக் கொண்ட மக்களால் அதேக் கருத்தை அவர்களின் நடத்தைக்கு வழிகாட்டும் ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 
கூடுதலாக, அடக்குமுறையை அடிப்படையாக கொண்டு இருக்கும் சமுதாயத்தில் ஒரு உண்மைக் கருத்தைப் பரப்பும் செயலுக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு வகையில் தடைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்கள், இந்த உண்மைக் கருத்தை மக்கள் உணர்ந்து கொண்டார்களானால் தங்களது ஆளும் நிலை மாறி விடும் என்பதனை உணர்ந்துக் கொண்டு அந்தக் கருத்தைத் தடுக்க அறிந்தோ அல்லது அறியாமலோ அந்த உண்மைக் கருத்துடன் ஒவ்வாத சில வேற்றுக் கருத்துக்களையும் அர்த்தங்களையும் கலந்தனர். மேலும் சில நேரங்களில் வெளிப்படையான வன்முறையின் மூலமும் அந்தக் கருத்தினை அவர்கள் எதிர்த்தனர்.

மனிதனின் வாழ்கையின் அடிப்படையாக அவனுக்குள் இயல்பாகவே அன்பு வடிவத்தில் இருக்கும் அந்த புனித சக்தியின் வழிக்காட்டுதலின் படியே மனிதன் வாழ வேண்டும் என்பதே அன்றும் சரி...இன்றும் சரி...உண்மையான ஒன்றாகும். ஆனால் இந்த உண்மையை ஒரு மனிதன் முழுமையாக உணர்ந்து கொள்வதற்காக அந்த உண்மை, அது வெளிப்பட்டு இருக்கும் அந்த தெளிவில்லாத வடிவினை எதிர்த்தும், அதனுடன் அறிந்தோ அறியாமலோ கலக்கப்பட்ட வேற்றுக் கருத்துக்களை எதிர்த்தும் பலப் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்ததுடன் அனைத்திற்கும் மேலாக வெளிப்படையாக அதன் மேல் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையுடனும் அது போராட வேண்டி இருந்தது. அந்த வன்முறைகள், தண்டனைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் வாயிலாக உண்மைக்கு புறம்பானதும், ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டதும் ஆன மதச் சட்டங்களுக்கு மனிதர்களை வலுக்கட்டாயமாக ஒப்புக் கொள்ள வைத்தன.

முழுமையான வடிவத்தை இன்னும் அடையாது இருந்த உண்மையை, தவறாக பரப்புவதும்...அந்த உண்மை வெளிப்பட தடையினை உருவாக்குவதும் எல்லா இடங்களிலும் நடந்து இருக்கின்றது. கன்புசியானிசத்தில் (Confusianism), தாவோயிசத்தில் (Taoism), புத்த மதத்தில், கிருத்துவத்தில், இசுலாம் மதத்தில்... ஏன் உங்கள் பிராமணியத்தில் கூட இது நடந்து இருக்கின்றது.

தொடரும்.... 

உலகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் நமக்காக கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டு நிற்கின்றன.... உண்மை தான்.ஆனால் அந்தக் கதவுகளோடு சில எதிர்பார்ப்புக்களையும் சேர்த்து வைத்தே அந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.


அந்தப் பல்கலைக்கழகங்கள் அப்படி என்னவற்றைத் தான் மாணவர்களிடம் இருந்து எதிர்ப்பார்கின்றன என்பதினைப் பற்றி நாம் சற்று விரிவாக பார்ப்போம்.

மொழி:

சொந்த நாட்டிலேயே வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு செல்லும் பொழுது அந்த மொழி தெரியாது நாம் சில சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டி இருக்கின்றது. இவ்வாறு உள்நாட்டிலேயே மொழியினால் பிரச்சனை உண்டாகும் பொழுது, படிப்பதற்காக கடல் கடந்து வெளிநாட்டிற்குச் சென்று, அங்கு அந்த நாட்டின் மொழியினை அறியாது திணறுவது அந்த மாணவர்களுக்கு எவ்வளவு சிரமங்களை கொடுக்கும் என்பதனை அறிந்தே பல பல்கலைக்கழகங்கள், விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது நாட்டின் மொழியை எழுதவும் பேசவும் அறிந்து இருக்க வேண்டும் என்ற விதியை இன்றியமையாததாய் வைத்து இருக்கின்றன.

அதுவும் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ள பொது மொழியாய் ஆங்கிலம் ஆகி விட்டதால், அந்த நாடுகளில் உள்ளப் பல்கலைக்கழகங்களில் எல்லாம் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்கின்றது. எனவே அந்தப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு மாணவர்கள் தங்களது ஆங்கிலத் திறமையை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

ஆங்கிலம் வேண்டும்.... சரி!!!
ஆங்கிலத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் .... அதுவும் சரி!!!!...

ஆனால் நான் ஆங்கிலத்தில் திறமையானவன் என்பதை அந்தப் பல்கலைக்கழகங்கள் அறிந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு நான் ஏதாவது தேர்வுகள் எழுத வேண்டுமா?...

இது தான் உங்கள் கேள்வியாக இருக்குமாயின் அந்தக் கேள்விக்கு உரிய பதில்...ஆம்!

உங்களின் ஆங்கிலத் திறமையை பறைசாற்ற நீங்கள் சிலத் தேர்வுகளை எழுத வேண்டும். அதுவும் நீங்கள் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளும் தேர்வாக அது இருக்க வேண்டும். அப்படி உலகில் உள்ள அநேக பல்கலைக்கழகங்கள் ஆங்கில மொழியில் ஒருவரது திறமையை அறிந்து கொள்ள அவைகள் ஏற்றுக் கொண்டு உள்ள முக்கியமான இரண்டு தேர்வு முறைகளைப் பற்றிப் பார்போம்.

1) அந்நிய மொழியாய் ஆங்கிலத்தை சோதிக்கும் தேர்வு (TOEFL)

2) ஆங்கில மொழியை சோதிக்கும் சர்வதேச முறைத் தேர்வு (IELTS)

இந்த இரண்டு தேர்வுகளுமே உலகம் முழுவதும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இந்த இரண்டுத் தேர்வு முறைகளுக்கும் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இல்லை.

அ) ஆங்கிலத்தில் சரளமாக பேசுதல்
ஆ) ஆங்கிலத்தில் சரளமாக எழுதுதல்
இ) ஆங்கிலத்தில் நன்றாக வாசித்தல்
ஈ) ஆங்கிலத்தில் நன்றாக கேட்டு புரிந்து கொள்ளுதல்.

மேலே குறிப்பிட்டு உள்ள இந்த நான்கு பிரிவுகளிலும் ஒரு மாணவர் எவ்வாறு தனது திறமையை வெளிப்படுத்துகிறாரோ அதை வைத்தே அவரது ஆங்கிலத் திறமையை அந்த இரண்டு தேர்வு முறைகளும் மதிப்பிட்டு முடிவு செய்கின்றன. அந்த மதிப்பீட்டை வைத்தே பல்கலைக்கழகங்கள் ஒரு மாணவரின் ஆங்கிலத் திறமையை கணித்துக் கொள்கின்றன.

இந்த இரண்டுத் தேர்வு முறைகளைப் பற்றியும் அவற்றிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அந்த தேர்வில் மதிப்பிடும் முறையினைப் பற்றியும் நாம் விரிவாக இன்னொரு பதிவில் பார்போம்.

"இந்தத் தேர்வுகள் முக்கியம் என்கின்றீர். அப்படி என்றால் இந்தத் தேர்வுகளை எழுதாமல் ஒரு பல்கலைக்கழகத்தினுள் நுழைய முடியாதா?" என்று நீங்கள் வினவலாம்.

இந்தத் தேர்வுகளை மட்டுமே வைத்து பலப் பல்கலைக்கழகங்கள் உங்களின் ஆங்கிலத் திறமையை மதிப்பிடுவதில்லை. நிச்சயம் இந்த தேர்வுகளை எழுதாமலும் நீங்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைய முடியும்.

அதுவும் குறிப்பாக, இந்தியாவில் தனது இளநிலை பட்டத்தை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிற்றுவிக்கப் பட்டு பெற்ற ஒருவர், தனது முதுநிலைக் கல்விக்காக சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அவருடைய ஆங்கில வழிக் கல்வி முறையில் பெற்ற பட்டமே அவருடைய ஆங்கில மொழித் திறமைக்கு சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அவர் தனியாக ஆங்கிலத் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று எந்த தேர்வையும் எழுத தேவை இல்லாது போகின்றது. (ஆனால் இந்த முறையை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் வேறுபடும்.)

ஆனால் பொதுவாக அவர் அந்த ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவது பயன் அளிக்க கூடிய ஒன்றாகும். ஏனெனில், அந்த தேர்வுகளின் மதிப்பெண்களை வைத்து சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி உதவி செய்கின்றன. மேலும், அவர் தனியாக சில உதவித் தொகைக்கு விண்ணபித்தாலும் அவருக்கு அந்த மதிப்பெண்கள் நிச்சயம் தேவைப் படும். எனவே வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர் TOEFL மற்றும் IELTS ஆகிய தேர்வுகளை எழுதுவது நன்றாகும்.

சரி... ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுள் நுழைய TOEFL மற்றும் IELTS ஆகிய தேர்வுகளை எழுத வேண்டும். ஆனால் உலகத்தில் ஆங்கிலம் பேசாத நாடுகள் பல இருக்கின்றன. செர்மன், பிரான்சு, ரசியா போன்ற பல நாடுகளில் அந்த நாட்டின் மொழியே பயிற்று மொழியாக உள்ளது. இந்த நிலையில், அந்த நாடுகளில் சென்று படிக்க ஆங்கிலம் பெருமளவு உதவாத பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் பொழுது தான் அந்த நாடுகளே இதற்குரிய தீர்வினை நமக்கு அளிக்கின்றன.
"எங்கள் நாட்டில் படிக்க வேண்டுமா... அப்படியானால் முதலில் எங்கள் மொழியைப் படி அப்புறம் அதன் வழியாக மற்றப் பாடங்களைப் படி" என்பதே அந்தத் தீர்வாகும். 

அதாவது, நீங்கள் அந்த நாட்டுப் பல்கலைக்கழங்கங்களில் பயில வேண்டுமானால் முதலில் ஒரு வருடமோ அல்லது 6 மாத காலத்திற்கோ அந்த நாட்டின் மொழியைப் படித்து அதில் தேர்ச்சி ஆக வேண்டும். (இந்த கால அளவுகள் நாட்டிற்க்கு நாடு வேறுபடும். இந்தத் தேர்வுகளைப் பற்றிய விவரங்களை அந்த அந்த கல்லூரி இணையத் தளங்களிலையே கண்டு அறிந்து கொள்ளலாம்). அதாவது நீங்கள் படிக்க விரும்பும் படிப்பின் கால வரம்பு 3 வருடம் என்று வைத்துக் கொண்டால் நீங்கள் முதலில் 1 வருடம் அந்த நாட்டின் மொழியைப் படிக்க வேண்டும் அதற்கு அப்புறம் தான் உங்களுடைய 3 வருட படிப்பு தொடங்கும். அதாவது நீங்கள் அந்த நாட்டில் தங்கி இருந்து படிக்கும் காலம் சராசரியாக 1 வருடம் கூடுகின்றது. 

சில நாடுகள் நீங்கள் அவற்றின் மொழியைப் படிக்க நிதி உதவி செய்வதும் உண்டு.

ஆனால் தற்சமயம் அனைத்து நாடுகளும் பல்வேறு நாடு மாணவர்களை கவர்வதற்காக ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாக வைக்க ஆரம்பித்து உள்ளனர். ஆனால் என்ன தான் ஆங்கிலத்தில் பாடங்களைப் படித்தாலும் அந்த நாடுகளில் வாழ்வதற்கு அந்த நாட்டின் மொழியை அறிந்து கொள்வது என்பது இன்றி அமையாத ஒன்றாகின்றது. இந்த விசயத்தை மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் தங்களது நினைவில் நிச்சயம் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடரும்....

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு