பிறவிக் கரை-
நீயோ ஆழ்கடல் மௌனம்!
மௌனத்தில் பிறப்பெடுத்து
ஆர்ப்பரித்துக் கரைச் சேர்ந்து
மீண்டும் மௌனத்திற்கே திரும்பும் அலையாய் நான்!!!
ஆர்ப்பரிப்பாய் மனம்...
மௌனமாய் நீ...
ஆர்ப்பரிக்கும் வரை மௌனம் புலப்படுவதில்லை -
மௌனமோ என்றும் ஆர்ப்பரிப்பதில்லை!!!




எம்பிரானே!
மௌனத்தின் சிறப்பு மௌனத்தால் அறியப்படுவதில்லை
இதோ
இவ்ஆர்பரிப்புகளுக்கு நடுவேயே அதன்  அர்த்தம் புரியும்
என்றோ
காலத்தால் அலையாய் இப்பயணம்?

உன் எண்ணப்படியே பயணிக்கின்றோம்
வழிகள் நீ தந்தவை...
பயணமும் நீ வகுத்தவை...
பயணிப்பது மட்டுமே நாங்கள் செய்பவை!!!

வழித்துணையாய் நீ இருக்கையில்
கவலைகள் எதற்கு இவ்வாழ்க்கையில்!!!   

இந்த உலகத்தில் அதிசயங்கள் பல நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, ஒவ்வொருவர் வாழ்விலும். அதிசயங்களில் நம்புகிறவர்கள் அவற்றை அதிசயம் என அறிந்து கொள்கின்றனர். நம்பாதவர்களோ அவற்றை எதேச்சையாக நடந்தது என்று எண்ணிக்கொள்கின்றார்கள். நம்புகிறோமோ இல்லையோ நம் வாழ்வில் ஒரு சில விஷயங்களுக்கு நம்மால் விளக்கம் கூற முடியாது. அவ்வாறு என் வாழ்வில் நடந்த ஒரு சில விஷயங்களை பற்றியே இந்த பதிவு...

அது ஒரு வெள்ளிக்கிழமை.
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய ஊருக்கு விடுமுறைக்கு சென்று இருந்தேன். காதலியுடன் செலவழிக்கும் நேரம் எவ்வாறு விரைவில் கரைந்து விடுமோ அவ்வாறு என்னுடைய ஒரு வார விடுமுறை விரைவாக கரைந்து இறுதி இரு நாட்களாக சுருங்கி நின்றிருந்தது. வழக்கமாக இருக்கும் வீட்டை விட்டு போகும் சோகத்தோடு இப்பொழுது ஒரு புது சோகம் சேர்ந்து இருந்தது. இன்னும் சரி ஆகவில்லை என்னுடைய கால் வலி.

ஒரு நாள் அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போது திடீர் என்று வலிக்க ஆரம்பித்த இடது முட்டியை முதலில் பெரிதாய் எண்ணவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் வலி போகாது இருந்த போது அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. போதாக்குறைக்கு 'பார்த்துடா! எழும்புறிக்கி(Bone Cancer) நோயாய் இருக்க போகுது' என்ற உயிர் நண்பனின் பயமுறுத்தல் வேறு. ஊருக்கு போய் மருத்துவரிடம் காட்டிக் கொள்ளலாம் என்று இருந்த என்னுடைய லட்சியத்தை கொஞ்சம் தளர்த்தி விட்டு அருகில் இருந்த ஒரு மருத்துவரிடம் சென்றேன்.

"எத்தனை நாட்களாய் கால் வலிக்கின்றது" என்றார்.
"இரண்டு வாரங்களாய்!" என்றேன்.
சரி என்று சொல்லி அவர் சில சோதனைகள் செய்தார். அப்புறம்,
"அநேகமாக பயப்பட ஒண்ணும் இல்லை, ஆனால் சில சமயம் இது வேற நோயாக இருக்கலாம். முதலில் இந்த மருந்துகளை அருந்திப்பாருங்கள். அதற்கு அப்புறமும் வலி இருந்தது என்றால் இன்னும் சில சோதனைகள் செய்ய வேண்டி இருக்கும்" என்று புதிதாய் ஒரு வியாதியின் பெயரையும் சேர்த்து சில மாத்திரைகளை கொடுத்தார்.
சரி என்று சொல்லி அந்த மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்டும் வலி தீர்ந்தப்பாடில்லை.
சரி, அடுத்த வாரம் தான் நம் ஊருக்கு போகிறோமே அங்கே போய் நம் மருத்துவரிடமே காட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

அதே போல் ஊருக்கு சென்றதும் மருத்துவரை அணுகினேன். அவர் என்னை பரிசோதித்துவிட்டு பயப்பட ஒன்றும் இல்லை காலில் எழும்புகளுக்கிடையில் தசை மாட்டிக் கொண்டு உள்ளது. கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள் அப்படியே இந்த மாத்திரைகளையும் சாப்பிடுங்கள் என்று சில மாத்திரைகளையும் கொடுத்தார்.
பயம் சற்று தணிந்தது. அனால் வலி இன்னும் தொடர்ந்ததால் முற்றிலுமாக பயம் நீங்கவில்லை. ஊரை விட்டு கிளம்பும் நாளும் அருகில் வந்து கொண்டே இருந்தது. அப்பொழுது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.
அது ஒரு வெள்ளிகிழமை.
ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி அந்த ரெய்கி  தியான மையத்திற்கு சென்று வந்திருப்பா என்ற அம்மாவின் வார்த்தையை கேட்டு அந்த தியான மையத்திற்கு கிளம்பினேன்.இதற்கு முன்னாடியும் ரெய்கி தியான நிலையத்திற்கு சென்று இருக்கின்றேன். மனஅமைதியும்  சற்று நிம்மதியையும் அந்த தியான முறை தருவதை உணர்ந்து இருக்கின்றேன். அதை எதிர்பார்த்தே இம்முறையும் சென்றேன்.
"அம்மா நல்லா இருக்காங்களாப்பா"  என்று அன்புடன் விசாரித்தார் அந்த தியான மையத்தில் சிகிச்சை அளிக்கும் அக்கா.
"நல்லா இருக்கங்கக்கா" என்றேன்.
"சரி ரெய்கி வாங்கிறதுக்கா வந்துருக்க" என்றார்.
"ஆமாம் அக்கா" என்றேன்.
"சரி போய் அந்த மேஜையில் படுத்துக்கோ" என்றார்.
நானும் வழக்கம் போல் அந்த மேஜையில் படுத்துக் கொண்டு தியானம் செய்வதற்கு ஏற்ப கண்களை மூடி கொண்டு கைகளை கால்களின் அருகில் வைத்துக்கொண்டேன்.
ரெய்கி சகிச்சை முறை நம் உடலை சுற்றி இருக்கும் சக்தி வளையத்தை பிரபஞ்ச சக்தியை கொண்டு வலிமை படுத்தும் ஒரு முறை ஆகும் (இந்த முறையை பற்றி நாம் மற்றொரு பதிவில் பார்ப்போம்).

இரு வினாடிகள் அவர்கள் என் உடலை சுற்றி இருக்கும் சக்தி அலைகளை சரி செய்வதை உணர்தேன். அந்த உணர்ச்சியை என்னால் சரியாய் விளக்க முடியவில்லை. மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்தேன். சிகிச்சை இரண்டு நிமிடங்கள் கழித்து முடிந்த போது,
"அக்கா! ரெய்கியால் நோய்கள் தீருமாமே" என்றேன்.
சிரித்தார்.
"ஆம்!" 
 "அப்படினா என் கால்ல..." என்று தொடங்கினேன்.
"உன் இடது கால் முட்டி வலிச்சிகிட்டு இருந்துச்சி தான. அது ஒன்னும் இல்லை, ரெண்டு எலும்புகளுக்கு நடுவுல தசை மாட்டிகிட்டு இருந்துச்சி. சரி பண்ணிட்டேன். இனிமே வலிக்காது" என்றார்.
அதிர்ந்து போனேன்.
என் கால் வலி தெரிந்தால் அம்மா வருந்துவார்களே என்று அவர்களிடம் கூட என் கால் வலியைப் பற்றி நான் சொல்லி இருக்கவில்லை. என்னையும் அந்த மருத்துவரையும் தவிர என் ஊரில் அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. இருந்தும் இவர் சரியாக கூறுகிறாரே. அதுவும் என் காலை தொட்டு கூட பார்க்காமல்!!!
"அக்கா!!! என்ன சொல்றீங்க...!" என்றேன்.
"ஆமாம்பா! சரி பண்ணிட்டேன்.. இனிமே வலிக்காது" என்றார்
காலை வேகமாய் நீட்டிப் பார்த்தேன் 3 நிமிடங்களுக்கு முன்னால் இருந்த வலி இப்பொழுது மாயமாய் மறைந்து இருந்தது.
"எப்படி...!!!" என்றேன்.
"உலகம் எங்கும் கடவுளின் சக்தி நிறைந்து இருக்கின்றது. நமக்குள்ளேயும் தான். அந்த சக்தி நம் உடலில் குறையும் போது பிரச்சனைகள் வருகின்றது. ரெய்கியின் மூலம் பிரபஞ்ச சக்தியை நம் உடலுக்குள் செலுத்தி நம் உடலில் குறைந்த சக்தியை சரி செய்து நம் உடலை சீராக வைத்துக்கொள்கிறோம்" என்றார்.
"ஆனால் எப்படி என் காலில் வலி இருந்தது என்பதை நீங்கள் அறிந்தீர்கள்" என்றேன்.
"அந்த சக்தி உன் உடலின் வழியாக பயணிக்கும் பொழுது அதுவே பிரச்சனைகளை அறிந்து கொண்டு குணப்படுத்தும். அந்த சக்தியை அளிப்பவர்களுக்கு அது என்ன பிரச்னை என்பதை அது காட்டும்." என்றார்.
"எப்படி எந்த சக்தியை செலுத்துகிறீர்கள்?" என்றேன்.
"அன்பினால்!!!" என்றார்.
"அப்படினா யார் வேணும்னாலும் அந்த சக்தியை பயன்படுத்த முடியுமா?" தொடர்ந்தேன்.
"ஆம்! அதுக்கு கொஞ்சம் நம்மளை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சில பயிற்சிகள் முறையாக எடுக்க வேண்டும். ஆனால் மிக முக்கியமான விஷயம் அன்பு தான். அது இருந்தால் தான் அந்த பிரபஞ்ச சக்தி நமக்குள் முதலில் புகும். அப்புறம் தான் அதை நாம் செலுத்த முடியும். அதே போல் இந்த சிகிச்சை பெறுபவர் மனதிலும் அன்பு நிறைந்து இருந்தால் இன்னும் எளிதாக குணமாகும். அன்பு தான் முக்கியம்!" என்று முடித்தார்.
"ரெய்கியால் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா?" என்றேன்.
"எல்லா நோய்களையும் குணப்படுத்த உதவும். ஆனால் மருத்துவத்திற்கு மாற்றாய் இதை கருத கூடாது. மருத்துவத்திற்கு இது பெரிதும் உதவும்." என்றார்
"அப்படினா இதை தனியாக பயன்படுத்த முடியாதா?"
புன்னகைத்தார்.
"பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் மிகவும் வலிமையானது. ஆனால் அதை நாம் பெற்றுக்கொள்வதும் செலுத்துவதும் நம்முடைய மனத் தூய்மையை பொறுத்தே இருக்கின்றது. எனவே அனைவராலும் இதை சரியாக செலுத்த முடியுமா என்பது அவர் அவர் மனதை பொருத்து அமைகின்றது. அந்த நிலையில் இதை மருத்துவத்திற்கு மாற்றாய் கருதுவது சரி ஆகாது!! அந்த நிலையில் பொதுவாக, அவர் அவர் மனதையும் நம்பிக்கையும் பொருத்து ரெய்கியை மருத்துவதுடனோ அல்லது மருத்துவத்தை ரெய்கி உடனோ பயன் படுத்தலாம் என்று சொல்வதே சரி என்று நினைக்கிறேன்" என்றார்.

நானும் சரி என்று கூறிக் கிளம்பினேன்.
இன்று வரை அந்த கால் வலி மீண்டும் வரவில்லை.

காமிக்ஸ்... இது கற்பனைகளின் சாம்ராஜ்யம்.
சித்திரங்களையும் கற்பனைகளையும் ஒருங்கிணைத்து கட்டப்பட்ட ஒரு மாய உலகம். நல்லவர்களுக்கு முடிவில் நல்லதே நடக்கும் ஒரு அதிசய உலகம். எனவே இதன் பால் நான் இயல்பாக ஈர்க்கப்பட்டதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இதோ நான் காமிக்ஸ் படிக்க தொடங்கி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்றும் நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்கும் போது வந்த அதே வியப்பும் பரவசமும், புதிதாய் ஒரு காமிக்ஸ் வாங்கி படிக்கும் போதும் தொடர்கின்றது. நான் மாறவில்லையா இல்லை அந்த காமிக்ஸ்கள் மாறவில்லையா...தெரியவில்லை! ஆனால் மாறாமல் இருப்பது நன்று தான் என்று தோணுகின்றது. இதோ இது வரை நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது என் வாழ்வில் ஒரு பாதியாய் அந்த புத்தகங்கள் வீற்று இருப்பதை காண்கின்றேன். அந்த புத்தகங்கள் இல்லை என்றால் என் வாழ்வில் ஒரு பாதி இல்லை என்ணுமாறு அவை இன்றியமையாது இருக்கின்றன. இந்த பதிவு அந்த புத்தகங்களை பற்றியே...

பொதுவாக காமிக்ஸ் என்றாலே அது சிறுவர்களுக்கு தான் என்ற ஒரு தவறான கருத்து நம் நாட்டில் இருந்து கொண்டு வருகின்றது. இது வருத்தம் அளிக்கும் ஒரு விஷயமாகும்.  இந்த புத்தகங்கள் சிறுவர்களுக்கு உரியவை தான்... அதில் சந்தேகமில்லை. ஆனால் வெறும் சிறுவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல அவை.... பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கும் அவை உரியவை. உண்மையை சொல்லுங்கள்! உங்களுக்குள் ஒரு சிறுவன் இல்லையா?... மழை பெய்யும் தருணங்களில் நனையும் பொழுதோ, நண்பர்களுடன் மனம் விட்டு சிரிக்கும் பொழுதோ இல்லை பழைய நினைவுகளை நினைக்கும் பொழுதோ உங்களுள் உள்ள அந்த சிறுவனை நீங்கள் உணரவில்லை என்று சொல்லுங்கள்.... என்ன உணர்ந்து இருக்கின்றீர்கள் தானே... இந்த புத்தகங்கள் அவனுக்காக... அவன் சிறுவனாய் இருப்பதற்காக!!! 

படிக்கிறதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கிறப்போ இது எதுக்கு நேரத்தை வீணடிக்க என்று நீங்கள் சொல்லாம். வாழ்வில் வெல்ல இவை தேவை இல்லை எனலாம். ஆம்! இவற்றை கொண்டு நாம் வாழ்வை வெல்லப் போவது இல்லை. ஆனால் வாழ்வை வாழ முடியும். மனம் நிறைய சோகம் நிறைந்து இருக்கும் போது நாளை நல்லதாய் விடியும் என்ற நம்பிக்கையும் ஒரு புன்னகையும் தான் வாழ்க்கை என்றால், அந்த புன்னகைகளை கொடுக்கும் வல்லமை இந்த புத்தகங்களுக்கு உண்டு.

நிச்சயமாய் இந்த புத்தகங்கள் இல்லாமல் வாழ்வை வாழ முடியும். ஆனால் இந்த புத்தகங்கள் இருந்தால் வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ முடியும். அவ்வளவே!!!

தமிழகத்தில் தென் பகுதியில் விருதுநகர் என்னும் ஊரில் இருந்த எனக்கு தென் அமெரிக்காவின் வனங்களையும், மாயன் இனத்தினரை பற்றியும்... வட அமெரிக்காவின் வரலாற்றையும் செவ்விந்தியர்களை பற்றியும்... அறிவியல், மதங்கள், உலக யுத்தங்கள், உலக கலாச்சாரம்  மற்றும் வரலாற்றை பற்றியும் எனக்கு அறிமுகம் செய்து வைத்த இந்த புத்தகங்களுக்கு நான் இறுதி வரை நன்றிக்கடன் பட்டவனாகவே இருப்பேன். இன்று இருக்கும் என்னை செதுக்கிய உளிகளுள் அவையும் முக்கியமானவை.

நான் கண்ட உலகை நீங்களும் காண வேண்டும் என்ற எனது ஆசையின் விளைவாகவே இந்த பதிவு...

கனவு காண்போம்... 


"கண்களை திறங்கள்".
இயற்கையின் அமைதியை குலைக்காதவாறு ஒலித்தது அந்த குரல்.
மெதுவாய் கண்களை திறந்தேன். கண் குளிர்ந்தது.
பசுமை.
சுற்றிலும் பசுமை.
காடுகள் எங்களுக்கு கீழே சுற்றி பரந்து விரிந்து கிடந்தன. கொடைக்கானலுக்கு 20கிமீ மேலே உள்ள மலையிலா நான் இப்போது இருக்கின்றேன்!, நினைக்கும் போதே சற்று பிரமிப்பாய் இருந்தது. 
"என்ன உணர்ந்தீர்கள்" தொடர்ந்தார் பேராசிரியர் கந்தசாமி, எங்களது இந்த பயணத்தின் வழிகாட்டி. இவர் இல்லை என்றால், நான்கு நாட்கள் நாங்கள் காட்டினுள் தங்கி இயற்கையை படிப்பதற்கு வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இருக்க வாய்ப்பே இல்லை.

"அமைதி". ஆச்சரியமாய் அங்கு இருந்த அனைவரும் ஒரே பதிலைக் கூறினோம்.


புன்னகைத்தார்.
"ஏன் இங்கு அமைதி நிலவுகிறது தெரியுமா?" என்றார்.
".... இங்கே மனிதர்கள் இல்லை.... அதனாலயா?" தயக்கத்துடன் பதிலளித்தான் ஒருவன்.
"ஆம்! அதனாலே தான்!!!. இங்கே நம்மையும் சில வன அதிகாரிகளையும் தவிர மிக நெருங்கிய ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி நமக்கு 25 கிமி கிழே. அதான் இங்கே அமைதி நிலவுகிறது. மிருகங்களும் நிம்மதியாய் உலவுகின்றன." என்றார் நிதானமாய். "சரி! நீங்கள் ஏன் இங்கு வந்து இருக்கின்றீர்கள் என்று தெரியுமா?" தொடர்ந்தார் பேராசிரியர்.

"இயற்கையை படிக்க..." என்றான் ஒருவன்.
"ஹ்ம்ம்ம்... சரி."
"இயற்கையை ரசிக்க..." என்றான் இன்னொருவன்.
"ஹ்ம்ம்ம்... இதுவும் சரி தான்.!! ஆனால் எப்படி இயற்கையை படிப்பீர்கள்?... சொல்லுங்கள்" என்றார்.
இம்முறை கூட்டத்தினுள் இருந்து பதில் வரவில்லை.
அவரே தொடர்ந்தார்,
"இயற்கையை புத்தகத்தை கொண்டு படிக்க முடியாது. இயற்கையுடன் வாழ்வதன் மூலமே அதனை படிக்கமுடியும். அதற்காகத்தான் நாம் இங்கே வந்து இருக்கின்றோம். இதோ மேற்குத் தொடர்ச்சி மலை உங்களை அன்போடு அரவணைத்துக் கொண்டு நிற்கின்றது. இந்த மலையில் தான் நாம் நான்கு நாட்கள் தங்கப்போகிறோம். தனிமையில் இயற்கையோடு!. கற்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் காலமோ வழக்கம் போல சிறிதே கிடைத்து இருக்கின்றது. எனவே உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. கவனமாய் கவனியுங்கள்." என்று கூறி முடித்து அவர் அமர்ந்திருந்த பாறையில் இருந்து எழுந்தார்.

"அதோ அங்கே அடர்த்தியாய் மரங்கள் தெரிகின்றதே. அவை என்ன என்று தெரியுமா" என்றவாறே தொலைவில் இருந்த ஒரு இடத்தை நோக்கி கை காட்டினார்.
அனைவரும் அவர் காட்டிய திசையை நோக்கி திரும்பினோம். அங்கே வித்தியாசமாய் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. மற்ற மலைகளில் இருந்ததை விட சற்று அடர்த்தி அதிகமாய் அந்த இடத்தில் மரங்கள் இருந்தன. அவ்வளவு தான்.

"அவைகளும் காடுகள் தானே" என்றான் ஒருவன்.
"காடுகளா... அவைகள் பொக்கிசங்கள். நம் வாழ்வின் ஆதாரங்கள்... அவைகள் சோலைகள்...!"
"சோலைகளா! அப்படி என்றால்?" என்றேன்.
நின்றார்.
"காடுகள் என்றால் என்ன?"
"ஹ்ம். மரங்கள் அடர்த்தியாய் இருக்கும் பகுதி." என்றேன்.
"சரி... ஆனால் நாம் மலை ஏறி வந்த பொழுது இருந்த மரங்கள் அடர்த்தியாய் இல்லையே. அவைகளையும் நாம் காடு என்று தானே சொல்கின்றோம்." என்றார்
இம்முறை யாரிடம் இருந்தும் பதிலில்லை. எனவே தொடர்ந்தார்
"காடுகள் பல வகைப்படும். சோலைகள் அவற்றில் ஒரு வகை.சோலைகள் நம் நாட்டின் ஆதி வனங்கள். இயற்கை நம் நாட்டிற்க்கு வழங்கிய செல்வம். சோலைகளும் புல்வெளிகளுமே நம் நாட்டின் இயற்கைச் சொத்துகள்.அவற்றை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் இன்று வருத்தப்பட வேண்டி இருக்கின்றது" என்றார்
"வருத்தமா!!!" என்றேன் சற்று குழப்பமாய்
"ஆம்!!! வருத்தம் தான்...இன்று அவை அழிந்து கொண்டு இருக்கின்றன." என்றார்
"அழிந்து கொண்டா!... ஏன்?" என்றான் ஒருவன்.
"நீ ஒரு நாளைக்கு எத்தனை முறை தேநீர் குடிப்பாய்?"என்றார்    
"மூன்று முறை"
"அதுவும் ஒரு காரணம் தான். நீங்கள் பருகும் தேநீர்க்காக சோலைகள் தேயிலைத் தோட்டங்களாக உருமாறிக் கொண்டு இருக்கின்றன" என்றார்.
"சோலைகள் அழிகின்றது என்று சொல்லுகின்றீர்கள்... இதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா" என்றேன்
"ம்ம்ம். ஆதாரங்கள் இல்லை என்றால் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் வெல்ல முடியுமா?" என்றார்.
"முடியாது"
"அதே போல தான்!! நம் வாழ்வின் ஆதாரங்கள் ஆன இந்த சோலைகள் இல்லை என்றால் நம் வாழ்வையும் வெல்ல முடியாது. நேரில் பார்த்தால் நீங்களே சோலையின் சிறப்பை அறிந்து கொள்வீர்கள். நாளை சோலையுள் செல்லலாம். இன்று நேரமாகி விட்டது. இருட்டுவதற்குள் நாம் நம் கூடாரங்களை அடைய வேண்டும். வன விலங்குகள் நடமாடும் பகுதி இது" என்று கூறி மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தார்.

நாங்களும் பின் தொடர்ந்து இறங்க ஆரம்பித்தோம்... மலையில் இருந்து காட்டை நோக்கி!!!

பயணிப்போம் .... சோலையினுள்...
மதி கெட்டான் சோலையினுள்!!!


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புல்வெளி. புல்வெளியை பிரித்துக் கொண்டு நடுவே ஓர் வழி. அதில் தனியாய் நான். சிறிது நேரத் துணையாய் மழை. மழை விட்டுச் சென்ற துளிகளை காதலோடு தாங்கியவாறு புதிதாய் மலர்ந்த பூக்கள். உடல் சிலிர்க்க தீண்டிச் செல்லும் தென்றல். மனம் சிலிர்க்க தீண்டும் உன் கூந்தல். இப்படியே நீள்கின்றதடி என் கனாக்கள்...ஒரு காதலோடு...ஒரு கவிதையாய்!!! கற்பனைகள் சிறகடித்து பறக்கும் நேரம் இது... நிச்சயமாய்!!! ஏனோ புரியவில்லை, மெய்யில்லா கற்பனை கூட உன்னை எண்ணும் போது மெய் சிலிர்க்கின்றததடி!!!
மாற்றமில்லை...
என் காதலுக்கு நீ வேண்டும்.
அக்காதலை சொல்ல, வேண்டும் கண்டிப்பாய் ஒரு மழைகாலம்!!!

"மழைக்காலம் வேண்டும்...
      துணையாய் நீயும் வேண்டும்...
மாலை நேரத் தென்றல் தீண்டும்
    யாருமில்லா பாதை வேண்டும்...


வயல்களின் வழியாய்
   குடையின்றி வாராய் பெண்ணே....
குடையாய் நானிருக்க
    ஒருசேர நடை பயில்வோம்!!!"


இதோ மிகக் குறைந்த காலத்தில் இரண்டாவது பிரிவு. காலங்கள் வேகமாகத்தான் ஓடுகின்றன. நட்சத்திர கூட்டத்தினுள் ஒன்றாய் இருந்த பரணி நட்சத்திரத்திற்கு மட்டும் இன்று தரணியை சுற்றி பார்க்க ஆசை வந்து விட்டது.
சுற்றாது சூரியன் என்றும் பூமியை. இது விதி. அதை போல் நட்சத்திரங்களின் பாதையும் அவைகளின் விதிப்படியே. மாறாது.எனவே சோகத்திலும் அமைதி காத்தன மற்ற நட்சத்திரங்கள். சென்று வா பரணியே. உலகை வென்று வா!!! உன் பாதை வேறு. உன் பயணம் வேறு. மீண்டும் ஒரு நாள் நம் வழிகள் சந்திக்கும். அன்று சந்திப்போம் புன்னகையோடு. இன்று பிரிவோம் கண்ணீரோடு . 





"அறிவுரை வழங்கும் தரணியில்
    நல்லுரை உதிர்த்த பரணியே - பொய்யல்ல
தோழர்களின் நலனுக்காக
   அன்பால் கட்டும் அரண் நீ- என்றால்!!!

நாம் பிரியும் தருணம்
    நெருங்கிவிட்டதை உணர்கின்றேன்
ஆம்,
நம் அர்த்தமில்லா வார்த்தைகளை
இதோ
அர்த்தமாய் மௌனங்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன!!!
இது பிரிவுக் காலம் தான்!!!

எதை நோக்கி உன் பயணம்,
இலக்கின்றி காற்றில் பயணிக்க
     நீ மரம் துறந்த இலை அல்லவே...
நீ பறவை
   அதுவும் அண்டங்கள் அளக்க எத்தனிக்கும் பறவை!!!
காலத்தால் கட்டுண்ட சிறகுகள்
    இன்று காலத்தாலே விடுவிக்கப்பட்டு விட்டன...

உனக்காக,
உள்ளங்கள் காத்திருக்கின்றன வெல்ல
  செல்வங்கள் காத்திருக்கின்றன அள்ள
நேரம் கனிந்து விட்டது தோழனே-
   சிறகை விரிக்க ... தொலை தூரம் பறக்க!!!

புறப்படு...
 எட்டுத் திசையும் உன் சிறகு எட்ட வேண்டும்
    நீ பறக்கையில் இமயமும் உன் கால் தட்ட வேண்டும்!!!
இருந்தது போதும்,
இரவை அலங்கரிக்கும் நட்சத்திரமாய்...
  ஓர் அறை ஓரச்சித்திரமாய்...
மாறி விடு ஓர் கதிரவனாய்
   ஒளி வீசும் பகலவனாய்!!!
நாளை சொல்கின்றோம்....
அதோ அந்த தரணியின்
    உதயசூரியன் எங்கள் பரணி என்று!!!
புறப்படு...
 உன் பயணங்கள் காத்து இருக்கின்றன!!!
நேசத்துடன் வாழ்த்துகள்!!!"
                                                  - வழிப்போக்கன்

மழை...
இதோ கொட்டி விட்டு அடங்கி இருக்கின்றது. உலகமே குளிர்ந்து போனது போல் உணருகின்றேன். உண்மையும் அது தான். நாணம் என்னும் முகில் தன்னை மறைக்காது இதோ வானமகள் நட்சத்திரங்கள் என்னும் நகைகளை சூட்டிக்கொண்டு தெளிவாய் புன்னகைக்கிறாள்.

நான் என்னை மறந்து கண்டு கொண்டு நிற்கின்றேன்.

மனிதன் பறப்பதில்லை என்று யார் சொன்னது?... இதோ இந்த குளிர்ந்த தென்றல் என்னை வந்து தீண்டும் போது சற்று விண்ணில் பறந்து சென்று அந்த நிலவை கண்டு கொண்டு தான் வருகின்றேன்... தென்றலோடு தென்றலாய்!!!

யாருக்கும் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் முளைக்கும் தருணம் இது. காதலர்களுக்கு அவர்களது காதலர்களை பற்றியும், காதலிக்க நினைப்பவர்களுக்கு காதலை பற்றியும் வார்த்தைகள் பொழியும் நேரம்!!!
நானோ மழைக்காதலன்... இல்லை இல்லை... இயற்கையின் காதலன்!!! நிச்சயமாய் கவிதைகள் கொட்ட வேண்டிய நேரம் தான். ஆனால் ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன.

என் அன்னை அழுது கொண்டு இருக்கின்றாள். ஆம்! இயற்கை அன்னை அழுது கொண்டு இருக்கின்றாள். அவளை நினைத்து அவள் அழவில்லை! "ஐயோ! நான் இன்றி என் செல்லங்கள் இல்லை என்பதை அறியாது என் பிள்ளைகளே என்னை அழித்துக் கொண்டு இருக்கிறார்களே!" என்று நம்மை எண்ணியே அவள் அழுது கொண்டு இருக்கின்றாள். மொழிப்பெயர்க்க பட முடியாத கவிதை அவள். அவளை காக்க வேண்டிய பொறுப்பை உணருகின்றேன்! இந்த பதிவுகள் அவளை பற்றியே!!!

வாருங்கள் தோழர்களே - இயற்கையை உணர்வோம்...காப்போம்...ரசிப்போம்...அவளுடன் வாழ்வோம் - இயற்கையாய்!!!

முதல் பதிவு - வைகையில் கிரிக்கெட் விளையாடி கண்டு இருப்போம்... தண்ணீர் ஓடி???. ஏன்?.... வைகையில் தண்ணீர் இல்லாததற்கு கொடைக்கானலில் சில சோலைகள் அழிந்ததும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவதற்கு எளிதாய் இருகின்றதா? உண்மை அது தான்.

ஆனால், முதலில் சோலைகள் என்றால் என்ன என்பதையும் கொடைகானலையும் சற்று தெரிந்து கொள்வோம்! இயற்கையை தேடி ஒரு பயணம்...தொடங்குகிறது கொடைகானலிற்கு 30  கிலோமீட்டர் மேல் ஒரு காட்டில்... பெயர் பேரிஜம்(Berijam)!!! பயணிப்போம்...!!!  

"இயற்கை நம் அனைவரின் தேவையை பூர்த்தி செய்ய வல்லமை பெற்று இருக்கின்றது. நம்முடைய பேராசைகளை பூர்த்தி செய்யும் வல்லமை அதற்கு இல்லை" - மகாத்மா காந்தி    


எங்க ஊர் பங்குனி பொங்கல்னா கண்டிப்பா பல பேர் சட்டி எடுப்பாங்கணு தெரியும். 21 நாள் விரதம் இருந்து ஒரு நேர்த்திக்கடனுக்காக எடுப்பாங்கன்னும் தெரியும். ஆனால் எப்படி எடுக்கிறாங்கனு தெரியாது. நெருப்பை கையில் சுமந்து கொண்டு பல மணி நேரம் நடக்கிறார்களே அவர்களுக்கு கை சுடாதா என்ற கேள்விகளுக்கும் பதில் தெரியாது. கோவிலுக்கு சென்று பல பூச்சட்டிகளை வேடிக்கை மட்டும் பார்த்து இருக்கின்றேன். இந்த பொங்கலுக்கு முன்னால் வரை.


"டேய்! இந்த பொங்கலுக்கு எங்க அப்பாவும் அம்மாவும் சட்டி எடுக்குறாங்கடா. கண்டிப்பா நீங்களும் கூட வரீங்கடா " என்ற நண்பனின் அழைப்பை மறுக்க முடியவில்லை.
"நிச்சயமா வர்றோம்டா... எத்தனை மணிக்கு அங்க இருக்கணும்னு சொல்லு சரியா  வந்திர்றோம்" என்றேன்.
"விடியக்காலைல 1:30 மணிக்குடா" என்றான் நண்பன்.
"சரி விடு... சரியா அந்த நேரத்திற்கு அங்க இருப்போம்" என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்.

சொல்லியவாறே அவனின் பெற்றோர் எடுத்த சட்டிக்கு துணையாக சென்றோம். அவன் வீடு கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அங்கே இருந்து கிளம்பி முதலில் மாரியம்மன் கோவிலை சுற்றி விட்டு பின் தெப்பம் வழியாக சென்று கருப்பசாமியை தரிசித்து விட்டு பின் மீண்டும் ஊரை சுற்றி மாரியம்மன் கோவிலை அடைந்து சட்டியை இறக்கி வைக்கும் வரை கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் வெறுங்காலில் சுற்றியும் நாங்கள் உணரவில்லை  தளர்ச்சியை. நாங்கள் உணராதது பெரிதல்ல. அவனின் பெற்றோர்கள் தளர்ச்சியை சற்றும் உணராது நின்றிருந்தார்கள். ஆச்சர்யம் தான். 21 நாள் விரதம் இருந்ததிற்கு அப்புறம், இவ்வளவு தூரம் சட்டியை எடுத்து கொண்டு நடந்தும் இவர்கள் தளரவில்லையே...அதிலும் நண்பனின் அம்மாவை நினைத்து தான் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது... தூரம் கூட கூட நண்பனின் தந்தையின் வேகம் சற்று குறைந்தது போல் இருந்தது. ஆனால் அவனின் தாயின் வேகமோ கோவிலை நெருங்க நெருங்க அதிகரித்து கொண்டே இருந்தது... பெண்களின் சக்தி ஆச்சர்யமானது தான்!!!.    

எல்லாம் முடிந்து கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு நண்பன் கையை உதறி கொண்டே வந்தான்.
"டேய்!! என்னடா ஆச்சி" என்றேன்
"ஒண்ணும் இல்லடா... அவங்க அப்பா கைல இருந்து சட்டி கொஞ்சம் நழுவுற மாதிரி இருந்துச்சி அதான் பிடிக்கலாம்னு போன்னேன்...பொசிக்கிருச்சி" என்றான்
"ஏன்யா சட்டிய மேலயா பிடிப்ப... அதுக்கு பதில்லா நெருப்புக்குள்ள கைய விட்டுருக்க வேண்டியது தான" என்றவாறே எங்களுடன் வந்து சேர்ந்தார் விக்கி அண்ணா.
"ஏன்னா!! சட்டி சுடும் தான" என்றேன்
"சுடலைனா அத எதுக்கு எடுக்குறாங்க" என்றார் அவர். 
"அப்புறம் எப்படினா இவ்வளவு தூரம் அத தூக்கிட்டு இவங்களால வர முடியுது" என்றேன்.
"அதுக்குதான்யா இந்த விரதம் இருக்கிறது எல்லாம். அருள் பெறணும் என்று மனசை பக்குவப்படுத்திகிறாங்க. அதனால தான் அவங்களால சூட்ட தாங்கிக்க முடியுது" என்று முடித்தார். 


அப்பொழுது இன்னொரு சட்டி எங்களை கடந்து சென்றது. ஒரு தாய் தன் கைக்குழந்தையை கழுத்தில் கட்டிய தூழியில் சுமந்து கொண்டு கையில் சட்டியை ஏந்தி சென்று கொண்டிருந்தார். அவர்கள் செல்வதையே சிறிது நேரம் கண்டு விட்டு மீண்டும் விக்கி அண்ணாவை நோக்கி திரும்பினேன்.

"அண்ணா அந்த குழந்தை அழாது தான" என்றேன்
"ஆமாம்" என்றார்
"பொதுவா சின்ன கொழந்தைங்க தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிருங்க தான " தொடர்ந்தேன்.
"ஆமாம்!!!"
"அப்புறம் எப்படினா இந்த குழந்தைகள் மட்டும் இவ்வளோ சத்தத்திற்கு நடுவிலேயும் அழாம இருக்குங்க. அதுவும் பக்கத்துலேயே நெருப்பும் இருக்கு. அம்மாவும் கவனிக்க முடியாத நிலையில இருக்காங்க. எப்படினே அழாம இருக்குங்க" என்றேன்
"அதுங்க அழாதுங்கையா" என்றார்.
"அதான் எப்படினே" என்றேன்
அவர் திரும்பி கோவிலை பார்த்தார்.
"அந்த குழந்தைகளோட அம்மா தான் அதுங்கள பார்த்துகிட்டு இருக்காங்கல்ல அப்புறம் எதுக்கு அதுங்க அழ போகுதுங்க... அந்த குழந்தைகள் அழாதுங்க" என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.

நானும் திரும்பி கோவிலை பார்த்தேன். அந்த சட்டியை எடுத்த தாய் கோவிலுள் சென்று கொண்டு இருந்தார். கோவிலுள் மாரி அன்னை வீற்றிருந்தாள். ஆம் குழந்தைகள் ஏன் அழ வேண்டும்?. அவற்றை தான் அவர்களின் அன்னை பார்த்து கொண்டு இருக்கின்றாளே!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

வாழ்வில் தவிர்க்க முடியாத சிலவற்றுள் பிரிவும் ஒன்று. இதோ, இந்த ஹைதராபாத் மாநகருக்கு வந்து கழிந்த இரண்டு வருடங்களில் என் சக பயணியாய், தோழனாய் பயணித்தவர் விடை பெரும் நேரம் வந்து விட்டது. பாதைகள் ஒன்றானாலும் பயணங்கள் ஒன்றல்லவே!!! இதோ பயணத்திற்கு ஏதுவாக பாதைகளும் பிரிகின்றன... அவர் பிரியும் தருணம் வந்துவிட்டது. உதட்டில் புன்னகையும் கண்ணில் கண்ணீரும் ஒரு சேர சுமக்கும் ஜீவன் மனிதன் மட்டுமே. சுமக்கின்றோம்...!!!!

இந்த கவிதை அவருக்காக... என் வழிப்பயணத்தில் அவர் சிந்திய மணித்துளிகளுக்காக!!! அந்த மணித்துளிகள் சிப்பியில் விழுந்த மழைத்துளிகள்... வீற்றிருக்கும் என்றும் முத்தாய்... அந்த முத்தை கொண்டே இந்த பாமாலை... அந்த முத்துக்காக!!!   


"கரைகின்றன காலங்கள்...
     நம்மையும் கரைத்துக்கொண்டே...
இதோ,
ஒரு வழி இரு வழிகளாய்
    பிரிந்து கிடக்கின்றது.....
இரு விழியோ ஒரு துளியால்
     நிறைந்து துடிக்கின்றது!!!
பிரிவு...
இத்தனை காலங்களாய் நிற்காது
  அத்தனை கண்ணீர்களை பருகியும்
இதோ புன்னகையோடு
   நம்மை நோக்கி வருகின்றது - தாகத்தோடு!!!
ஆம்!!!
   இது கண்ணீரின் நேரம் தான்!!!
சந்திப்பவர்கள் அனைவரும் பிரிவதுபோல்
   பிரிந்தவர்கள் அனைவரும் சந்திப்பதில்லை!!!

பயணம்,
ஒரே பாதையில் பயணித்தும்
    நம் பயணங்கள் ஒன்றல்ல!!!
இதோ,
   உன் வெற்றியை தேடி
        உன் பயணத்தை தொடங்கி விட்டாய்...
  நேசத்துடன் வாழ்த்துகள்!!!  

உன்னுடன் பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன்
     நீ உதிர்த்த வார்த்தைகளும் கரைத்த காலமுமா
அங்கே பூத்தோட்டங்கலாய் மாறி இருக்கின்றன?
     வாழ்த்துகள்- பிரிவை வீழ்த்தும் திறன் உன்னிடம் இருக்கின்றது!!!

ஆம்,
  வெல்ல நினைத்தவர்கள் எதையும் வென்றது கிடையாது
     வாழ்வையும் சரி...பிரிவையும் சரி...
  வாழ நினைத்தவர்களே வென்றிருகிறார்கள் அவற்றை!!!
  நீ வாழ்ந்து இருக்கிறாய்...
    அந்த தோட்டங்கலாய் வீற்று இருப்பாய்-என்றும்!!! 

பிரிவோம் தோழா!!!
காலங்களில் நாளை என்றும் அழிவதில்லை...
நாளை இருக்கும் வரை என் நம்பிக்கையும் குறைவதில்லை!!!
மீண்டும் சந்திப்போம்!!!   "


                                             - வழிப்போக்கன்     

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு